Friday, January 13, 2017

பொங்கல் வெண்பா.

'கரம் வெண்பா அரங்கம்'  ஃபேஸ்புக்கில் முதன்முறையாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெண்பா இயற்றும் போட்டியை அறிவித்தது.
அதற்கு எழுதிய வெண்பாக்கள் ::

முதல்வன் துதி!
**********
முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கலைமகள் காப்பு.
************
வெண்கமல வேதவல்லி! நல்வீணை நாதமல்லி!
பெண்ணுருவில் பேரறிவே! பெற்றுனைநான் - எண்ணியசொல்
இங்கிவனே சொல்வதன்முன் இன்றென்று மெப்பொழுதுந்
தங்கிடுவாய்த் தாயேயென் னுள்.

குரு வணக்கம்.
**********
எங்குமிருப் பேரொலியை எண்ணென்றும் சொல்லென்றும்
எங்களுக்குக் கற்பிக்கும் எல்லோர்க்கும் - எங்கெங்கும்
தாழ்பணிந்துக் கீழமர்ந்துத் தானிறங்கிக் கும்பிட்டால்
தாழ்வில்லை வாழ்வினிலே பார்.

கண்ணன் முத்தம்.
****************
மதுரநாத வேய்ங்குழல் மாலைநேரக் காற்றில்
மதுக்குடம் வீழ்ந்த எறும்பா - யதுவுமூறித்
தேனாடும் மாய்வது போலாகும் காதலி
நானாடும் கண்ணன் இதழ்.


பழம்பொருள் அகற்று நாள்.
******************
இல்லத்தின் உள்நிறைத் தூசடைத் தொல்பொருள்
உள்ளத்தின் உள்ளுறைத் துர்க்குணங்கள் - வெள்ளத்
தழுக்கென நீங்க புதுப்பொருள் தேங்க
செழுந்தீ துடிக்கின்ற நாள்.

தைத்திருநாள்.
*********
வானிலிருள் போகுமுன்னே வீசுபனி தீருமுன்னே
கேணிநீரைச் சேந்தியெடுத் தூற்றிமேலுன் - மேனிமுழு
நீராட்டிப் புத்தாடைத் தானணிந்துப் பெற்றோரைப்
பாராட்டிப் பாதத்தில் சேர்.

தெய்வந் தொழுது மலர்தூவிக் கும்பிட்டுப்
பெய்கப் பெறுக திருவாழ்த்து - செய்க
புதுப்பானை செங்கரும்பு பொன்னரிசி வெல்லம்
எதுவேண்டு மென்றறிந் தால்.

கதிருக்குத் தீகாட்டி வெம்பானை நீரில்
கதிரள்ளி இட்டுக் கலக்கி - அதிசுவை
எங்கும் பரவ இனிப்பிட்டுக் கூவுக
பொங்கலோ பொங்கல் என.

கீழ்வானில் செவ்வாடை மேலுறையும் வெண்ணிலவு
தாழ்வாரப் பூவாடை தாவணிப்பூ - வாழ்வூறும்
பொற்பானைப் பொங்கலிட செங்கரும்புச் சாறுடனே
நற்பாடல் கூவிக் களி.

நற்சொல் வளருதல் நண்பர்க்கும் சொல்வதால்
நற்பேர் வருதலோ உற்றாரால் - உற்றநற்
பொங்கலைப் புத்துணவை எல்லோர்க்கும் தந்திட
பொங்குமாம் இன்பமே நாள்.

அன்னைக்கைப் பொங்கலில் அக்காக்கைச் சட்னியில்
கன்னல்நீர்ச் செங்கரும்பில் சேற்றுக்கை - நன்றாய்ச்
சுவைத்து மகிழ்ந்து இனிப்பூறுஞ் சொல்லால்
அவையில் இயம்பு "நலம்!"

கரும்பைக் கடித்து வழிசாற்றை உண்டு
அரும்பும் அனைவரோடும் அன்னைப் - பெருமூத்தோர்
சேர்த்து உரையாடு! பேசு மகிழ்வோடு!
தீர்த்து கசப்பை மற.

வீதியெலாம் கொண்டாட்டம் ஊரிலெலாம் உற்சாகம்
ஆதிநாள் ஆர்ப்பாட்டம் ஆட்டத்தில் - மோதிநீ
சேர்ந்தாடு வென்றாடு தோற்றாடு வெள்ளமாய்
வேர்த்தாடு ஆண்டிலிந் நாள்.

ஏறு தழுவுதல்
**********
துடுக்கான பிள்ளையைத் தாமடக்கல் போலே
விடுக்கின்ற காளையரை வீழா - தடுத்திடும்
பாய்வீரம் கொண்டு தழுவி அணைத்துப்பின்
சேய்போலே கட்டியணை வோம்.

Thursday, January 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.12.


குறுவாளின் நுனிநாணும் விழிகொண்டு வந்தாய்!
குறுந்தோகை நனிகாணும் நிறம்கொண்டு வந்தாய்!

சிறுமுருங்கை மரம்போலே தோள்கொண்டு வந்தாய்!
சிவப்பான பழம்போலே முகம்கொண்டு வந்தாய்!

வளைந்தாடும் மலைபோலே இருபுருவம் கொண்டாய்!
வளையாத வாள்போலே ஒருநாசி கொண்டாய்!

கலையாத கனிபோலே இருகன்னம் கொண்டாய்!
களியூறும் செழிப்பாலே இருவிதழ்கள் கொண்டாய்!

சறுக்காத வழிபோலே பனிக்கழுத்து கொண்டாய்!
சலிக்காத மதயானை இருமார்பு கொண்டாய்!

முளைக்காத கொழுந்தாக இருகூர்மை கொண்டாய்!
முழுதாகச் சுவைக்காத இருவமுது கொண்டாய்!

(வேறு)

சரியாத பெரும்பாறைச் சிலையொட்டி நிற்க
சரியாகக் குறும்பாறை அதன்மேலே நிற்க
வரையாத இருவட்டக் குமிழ்நுனியோ நிற்க
வனையாத தழல்மூச்சு அதைச்சுற்றி நிற்க

இணையாத ஒருபாதை இடையினிலே ஓட
இணையான இருமதலை இறுக்கங்கள் கூட
இனிமைத்தீ அனலோடு அருகினிலே வாட
இனிக்காத எச்சில்நதி தீராது நாட

(தொடர்)



பிறக்காத நிழல்களுக்குள் பதுங்கி வந்த இருள் நீ!
பிதற்றாத மொழிகளுக்குள் மிதந்து வந்த பொருள் நீ!

திறக்காத கதவுகளைத் திறக்க வந்த கரம் நீ!
திகட்டாத உதடுகளைச் சுரக்க வந்த சுரம் நீ!

இமையாத இரவுகளில் இணைக்க வந்து படர் நீ!
அமையாத உறவுகளில் அணைக்க வந்த சுடர் நீ!

மதுப்பார்வை உருக்க வந்த ஒரு கள்ளிமலர் நீ! என்
மனப்பாறை பிளக்க வந்த சிறு மல்லிச்செடி நீ!