Saturday, April 12, 2008

யாத்ரியான் க்ருப்யான் ஜாந் தீஜியே...

சென்னை செல்லும் மெயில் சாந்தமாக நின்று கொண்டிருந்தது.

அவரவரின் அவசரங்களோடும், பதட்டங்களோடும், விடைபெறல்களோடும் ஜனக்களின் கூட்டம் இரயிலின் ஜன்னல்களிலும், வாசல்களிலும் அப்பிக் கிடந்தது. விதவிதமான ஜனங்கள். ஸ்டேஷனின் நிரந்தர ஜீவராசிகளாகிப் போன ஸ்டேஷன் மாஸ்டர், சிவப்புப் போர்ட்டர்கள், ஆர்.பி.எஃப்., அறிவிப்பாளர், நோட்டீஸ் போர்டின் எல்.ஈ.டி.க்களை மாற்றி மாற்றி ஒளிரச் செய்து காத்திருப்போரின் இதய்த் துடிப்பைக் கையாள்பவர்.

சுற்றுலா வந்த மார்வாடிக் குடும்பம், பறக்கின்ற தலைமுடியோடு பெண்கள், வேட்டிகளை மடித்தும் தாழ்த்தியும் அணிந்து கொண்ட நடை போடும் சேட்டன்கள், காதில் மாட்டிய ஐ-பாட், கையோடு இழுத்துக் கொண்டே வரும் ஸாம்சோனைட் என்று எதிலும் கலந்து கொள்ள விரும்பாத பார்வையை பழுப்பு ரேபானில் புதைத்துக் கொண்ட இளைஞர் கூட்டம்...

TVC இரயில் நிலையம் அதன் வழக்கமான பரபரப்போடு இருந்தது.

அவன் அவ்வளவாக அவசரப்பட்டது போல் தோன்றவில்லை. பொறுமையாக, மிகப் பொறுமையாக தயிர் கடைகையில் மெதுவாக திரண்டு வருமே, அது போல் நடந்து வந்தான். ஸ்டேஷன் வாசலில் நுழைந்தான். இடது புறம் நின்றிருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட் வரிசையைக் கண்டான். ஒவ்வொருவரும் வரிசையின் நீளத்தைச் சபித்தவாறும், தங்கள் கைக் கடிகாரங்களைப் பார்த்துக் கொண்டும், மேலே தெரிந்த சிகப்பு எலெக்ட்ரானிக் போர்டில் சறுக்கிக் கொண்டிருந்த கால ரயில்களின் கால அட்டவணையைப் பார்த்துக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

வலது புறம் திறந்திருந்த பழச்சாறு கடையில் நின்றிருந்த சில மாணவிகளைப் பார்த்தான். அதில் குதிரை வால் போட்டிருந்த, மஞ்சள் சுடியும், ஓரங்களில் எம்ப்ராய்ட்ரி கொண்ட துப்பட்டாவை பேருக்கு அணிந்திருந்த பெண்ணின் வலது கன்னத்தின் மேல் பூனை முடியாய்ச் சுருண்டிருந்த காதோரம் ஒரு சின்ன மச்சம் இருந்தால் இன்னும் வசீகரமாய் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் அவன் இதற்கெல்லாம் வரவில்லை. அவனுக்கு சில அவசர வேலைகள் ஆக வேண்டி இருந்தன. TVC - Chennai Mail கிளம்புவதற்குள் அவன் செய்தாக வேண்டிய காரியங்கள்.

இப்போது விட்டால் வேறு எப்போதும் செய்ய முடியாத வேலைகள்.

இடது புறம் திரும்பி, குழுமியும் வரிசையிலும் நெருக்கிக் கொண்டிருந்த கூட்டத்தின் இடையில் புகுந்து, நுழைந்து படிக்கட்டுகளில் ஏறினான். நுழைவாயிலில் நுழைந்து பார்க்க இரயில் தன் நீண்ட உடலை நீட்டி நின்று கொண்டிருந்தது. குளிர்பானக் கடையில் 'ஆஃபிஸ் கவர், ஒயிட் பேப்பர் இருக்குமா?' என்று அகஸ்மத்தாக கேட்க அவர் இவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு அருகின் கஸ்டமரைக் கேட்டார். 'எந்தா..?'

கம்பிக் கூண்டுக்குள் மைக்கின் முன் தலை நீட்டி எல்லா மொழிகளிலும் பதில் சொல்லிக் கொண்டிருந்த வெள்ளைச் சீருடை அலுவலரை கேட்க, அவர் சலித்துக் கொண்டே சற்று தொலைவில் இருந்த கடையைக் காட்டினார்.அங்கு சென்று ஒயிட் ஷீட் வாங்கிக் கொண்டான். S8 கோச்சை அடைந்தான். 41 - 48 எண்களை ஒட்டிக் கொண்ட சீட்டுகளை அடைந்தான்.

மிடில் பெர்த் இன்னும் விரிக்கப்படாமல் இருக்க ஜன்னலைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். எதிர் ஜன்னலில் வெள்ளை டீசர்ட், நீல ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் யுவதி, இரண்டு குழந்தைகள், வெளிர் பச்சை சுடிதார் அணிந்த இளம் தாய், தொப்பை பிதுங்க இறுக்க கட்டம் போட்ட சட்டை அணிந்த, சொட்டை மினுமினுத்த, கண்களில் குடும்ப கருமை இருக்க, பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

கொண்டு வந்திருந்த தோல் பேக்கை மடியில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான். மூளையின் அணுக்களில் தேக்கி இருந்த Charlie the Manன் பாடலை பேப்பரில் கொண்டு வந்து முடிக்க, இரயில் நகரத் தொடங்கியது.

வேர்த்து விறுவிறுத்து அவன் அருகில் 'தொப்'பென்று கேன்வாஸ் பேக்கை தூக்கி எறிந்து அமர்ந்த அவனைப் பார்த்தான்.

ரயில் வார்கலை தாண்டி கொல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்து கொண்டு கீழே பார்க்கலானான்.

"எக்ஸ்க்யூஸ் மீ..! நீன்களும் சென்னைக்கு தான் வர்றீங்களா..?" ஆங்கிலத்தில் கேட்டான்.

வெளியிலேயே முழு கவனமும் பதித்திருந்த அந்த யுவதி திடுக்கிட்டு, "பர்டன்..?" என்றாள்.

"இல்ல.. நீங்களும் சென்னை தானே வர்றீங்க..?"

"இல்ல. எதுக்கு கேக்கறீங்க..?"

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஐ.டி.ல தான ஒர்க் பண்றீங்க? டி.சி.எஸ்? ஐ.பி.எஸ்..?"

"இல்லையே. நான் CETல காம்ப்.ஸி. படிக்கறேன். செகண்ட் இயர். இப்ப ஊருக்குப் போய்ட்டு இருக்கேன். ட்ரிஸூர் பக்கத்தில காலடி. உங்களுக்கு இதுக்கு மேல ஏதாவ்து டீடெயில்ஸ் வேணுமா..?"

"இட்ஸ் எனஃப். ஃபைன். நீங்க ஸ்டூடண்டா..? குட்..."

"எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் வேணும் உங்களுக்கு...?"

"ஒண்ணும் இல்லை. நான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன். அதுவரைக்கும் என் பேக்கை பாத்துக்கறீங்களா..? மேல ஒருத்தன் ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டே வர்றான். சோ அது தான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு..."

பலமாகச் சிரித்தாள். "கோ அஹெட்...!"

"வெரி தேங்க்ஸ்...!"

குடும்பம் அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த மாமா குடும்பத்தைக் காண சென்று விட்டது. சீட்டில் அப்பர் பெர்த்தில் அவன் மட்டுமே இருந்தான். கீழே ஜன்னலோரமாக அவள்.

ஒரு முடிவோடு எழுந்தான். தோல் பையை பெர்த்திலேயே வைத்தான். சைடு கம்பிகளைப் பிடித்து கீழே இறங்கினான். அவள் ஒரு மாதிரி பார்த்தாள். சர்ட் பாக்கெட்டில் இருந்து எட்டாய் மடித்து வைக்கப்பட்டு இருந்த பேப்பரை எடுத்தான்.

"மேடம்.. இப்ப போனாரே அவர்கிட்ட குடுத்திடறீங்களா. ப்ளீஸ். நான் கொஞ்சம் பக்கத்துல போய்ட்டு வந்துடறேன்...!" ஆங்கிலத்தில் அவளிடம் நீட்டினான்.

சற்று தயங்கிக் கொண்டே அவள் வாங்கிக் கொண்டாள்.

அவன் நடந்து போனான்.

ஒரு க்யூரியாசிட்டியில் அவள் அந்த காகிதத்தைப் பிரித்து படிக்கத் தொடங்கினாள்.

அதிர்ந்தாள்.

Don't try to save me
Just leave me be
I've got no reason to live
But I've got reason to die
Nobody ever cared
No one was ever there

Every night and day I cry
My cries fall upon deaf ears
I've got no reason to go on
I want it all to stop
I want to end the pain
I want to end the hurt
Theres no purpose for my life
I've got reason to die

I've tried to do what I can
I tried to find reason to live
But nobody cares, they never did
Just let me die, let me die

I want it all to stop
I want to end the pain
I want to end the hurt
Theres no purpose for my life
I've got reason to die

Oh don't you see
I've no purpose to live
All I would like
Is if you'd let me die
Don't call 911, don't call anyone
Just let me bleed, let me die

அவசரமாக எழுந்து இருபுறமும் பார்த்தாள்.

படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தான் அவன். விரைந்து வீசிய காற்றில் தலைமுடி சிலுசிலுத்து துடித்துக் கொண்டிருந்தது. வாயில் புகைந்து கொண்டிருந்த வெள்ளைச் சுருள் வேகமாக புகையாகக் கலைந்து கொண்டிருந்தது. இடது கை வெளிக்காற்றைத் துழாவிய படி இருக்க, வலது கை லக்கேஜ் கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருக்க, இடது கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்க.. அவளைப் பார்த்தான்.

நடுங்கிக் கொண்டே அவள் தலையாட்ட...

அவளைப் பார்த்து சிரித்தான். பிடித்துக் கொண்டிருந்த புகையை தூர வீசி எறிந்தான். அது காற்றின் வேகக்கரங்களில் அடிபட்டு, ஏரிக்கரைப் பாலத்தின் கம்பங்களில் பேயடி பட்டது. சிதறியது. அதன் சிவந்த முனைகள் காற்றின் அணுக்களில் தெறித்தன.

அவள் குரலெழுப்ப முயல...

வலது கையை கம்பிகளில் இருந்து விடுவித்தான். இரு கால்களையும் காற்றில் மிதக்க விட்டு வெளியில் பாய்ந்தான்.

தடக்... தடக்... தடக்... Back Waters கடந்து கொண்டிருந்த ஆற்றுப் பாலத்தின் பார்வை எல்லைகளில் இருந்து கண நேரத்தில் காணாமல் போனான்.

வர்றேண்டா சென்னைக்கு...!



மாலை 5:30க்கு TVCயில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் கிளம்புகின்றது. டிக்கெட் பதிவு செய்தாகி விட்டது. கண்டிப்பாக கிளம்பியாக வேண்டும். ஒரு வாரமாக அவ்வப்போது PNR Status பார்த்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை தான் S4 - 47 என்று உறுதி ஆனது. அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியாது.

4 மணிக்கு டெக்னோபார்க்கில் இருந்து கிளம்பினேன். திடீரென்று ஒரு சந்தேகம். இரயில் 17:30க்கா இல்லை 17:25க்கா என்று. வீட்டுக்கு ஆட்டோவைப் பிடித்து வந்து அவசர அவசரமாக பெட்டியை அடைத்து, நடை வேகமாக நடந்து கழக்குட்டம் பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

தம்பானூர் செல்லும் பேருந்து வரவே 16:30 ஆகி விட்டிருந்தது. ஏறி டிக்கெட் எடுத்து, செல்லில் நெட் தொடர்பி, செக் செய்யப் பார்க்க பைசா காலி ஆகி இருந்தது தெரிய வந்தது. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலானேன்.

பேருந்து ஓட்டுநர் Relativity Theoryயை நிரூபித்துக் கொண்டே ஓட்டினார்.

காரியவட்டம், காரியம், கேசவதாசபுரம், உல்லூர், பட்டம், பேக்கரி ஜங்ஷன் என்று திரும்பி மிகப் பொறுமையாக ஓட்டிக் கொண்டே வந்தார். அவரையும் ரொம்பவும் குறை சொல்ல முடியாது. மாலை நேர நெரிசல், வார விடுமுறை, திங்கட்கிழமை வருகின்ற விஷூ கொண்டட்ட ஷாப்பிங் என்று நகரம் கொஞ்சம் பரபரப்பாகத் தான் இருந்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஊருக்குச் செல்லும் அலுவலக மக்கள், மாணவர்கள் என்று கையில் பைகளுடனும், கண்களில் ஆர்வத்தோடும் , மகிழ்வோடும் பேருந்துகளில் ஏறினர்; இறங்கினர்.

தம்பானூர் வந்து சேர்கையில் 17:20 ஆகி இருந்தது. விரைவாக இறங்கி, பேருந்து நிலையத்தைக் கடந்து, (அந்த கேப்பிலும் கேட்க இல்லையென சொல்லப்பட்டு நாளைக்குத் தான் வரும் என்று சொல்லப்பட, கிடைத்த துக்ளக், ஜூ.வி. என்று வாங்கிக் கொண்டு) சாலையைத் தாண்டி, இரயில் நிலையத்தை அடைந்தேன். சரியான கோச்சைக் கண்டுபிடித்து உள்ளே சென்று இருக்கையைப் பிடித்த பின் தான் 'அப்பாடா...' என்ற பெருமூச்சு வந்தது.

அமர்ந்த இரண்டு நொடிகளில் கிளம்பியது சென்னையை நோக்கி...!

இதற்காகத் தான் முன்பதிவு எல்லாம் செய்ய மாட்டேன். கிடைத்த பேருந்துகளில் தாவித் தாவிப் போனோமா, இரவில் என்காவது பேருந்து நிலையத்தில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடித்தோமா என்று இருந்திருக்கலாம், அதை விடுத்து, முன்பதிவு செய்து ,அதைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அடித்துப் பிடித்துக் கிளம்பி... சல்லைடா...!

ப்பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு.

எலெக்ட்ரீஷியன் வேலை பார்க்கும் க்ரேடு 'பி'யில் பணியாற்றும் ஒரு சதர்ன் ரெயில்வே எம்ப்ளாயீ கூட சாலக்குடி வரை பயணித்தார். அவர் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டே வந்தார்.

கேரளா ஆண்கள் பலர் கல்ஃப் நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவதால், பணியாளர் பற்றாக்குறை என்பதால் கேரளா கோட்டம் முழுதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக் இருக்கிறார்கள். இப்போது லல்லு வந்த பின்பு, பாதிக்கு பாதி வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாகி விட்டதாம். ப்ரொமோட் ஆகி இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றதாம். பயங்கர போர். அட்லீஸ்ட் டீப்ரொமோட் செய்து மீண்டும் சென்னைக்கே அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

எப்படித்தான் லல்லு இலாபம் காட்டுகிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது என்றார். தினமலரில் வந்த ஆர்டிக்கிள் படித்தீர்களா என்று கேட்டேன். குறித்து வைத்துக் கொண்டார்.

கலாச்சாரமே இங்கு ஃபாரின் கல்ச்சர் போல் இருக்கிறது. எனவே உஷாராக இரு என்றார். அவர்கள் கொஞ்சம் அழகாக வேறு இருந்து தொலைப்பது பேச்சிலர்களுக்கு எஞ்சாய் தான்! ஆனால், குடும்பமாக செட்டில் ஆவது சிரமமான வேலை என்றார்.

காலை 10 மணிக்கு சென்னை வந்தது. சென்ட்ரல் பழகிப் போன வெயிலோடும், குப்பைகளோடும், இரைச்சல்களோடும் வரவேற்றது.

Wednesday, April 09, 2008

மொகல் - இ - ஆஸம்.



ழகிய அனார்கலியாக மதுபாலா.... அக்பர் பேரரசராக ப்ரித்விராஜ் கபூர், சலீமாக திலீப் குமார், இசை நெளஷாத்....!

பொலிவான இந்த மெளன அழகிற்கு இணையேது...? இமைக்காமல் கண்ணோடு கண் நோக்கின் வாய்ச்சொல் எந்த பயனும் இல அல்லவா..?



இழந்த காதலின் வலியாக அனாரின் கண்ணீர் நடனமாக பிரவாகிக்கிறது.



'காதல் இருக்கும் போது அச்சம் எதற்கு....'


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இப்பட சிறு ஒளிப்படங்கள் பார்க்கையில் எனக்கென்னவோ 'சிவகாமியின் சபதம்' தான் நினைவுக்கு வருகின்றது.

Monday, April 07, 2008

பனி விழும் மலர்வனம்...



சிவந்த ரோஜாக்கள் பூத்திருக்கும் சாலை அது.

முந்தின இரவின் மழையில் நனைந்திருந்தது. இருளின் குறுக்கே சால் ஓட்டி வெளிச்ச அரிவாள்களால் ஒளியை அறுவடை செய்து லாரிகள் நடத்திய தொடர் விவசாயத்தால், அழுக்குச் சாயம் கலைந்து புத்தம் புதிதாய்ப் பூத்திருந்தன பகலில்!

யாரோ ஒருவர் தான் நட்டிருக்க வேண்டும். ஏழா, ஐந்தா என்ற எண்ணிக்கைகளில் குழப்பம் அடையாமல், சைவக் குழந்தையாய் வளர்க்காமல் முட்டைக் கூடுகளைத் தொப்பியாக்கி, சாணித் துளிகளை எருவாக்கி, தினமும் நீரூற்றி யாரோ ஒருவர் தான் இத்தனை கவனமாய் பார்த்து வந்திருக்க வேண்டும்.

மொட்டு விட்டிருக்கும் போது எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள்? மெல்ல, மெல்ல இதழ்கள் திறக்கையில் எப்படி கைகொட்டிச் சிரித்திருப்பார்கள்? இன்று ஈரமான துளிகளைத் தாங்கி நிற்கையில் எத்தகைய ஆனந்தம் கொண்டிருப்பார்கள்?

யாராயிருக்கும்?

ஒற்றைக் கம்பிகளைக் கைக் கொண்டு, சற்று பெரிய கறுப்புக் குல்லாயில் தன்னை நுழைத்துக் கொண்டு, நடைபாதைகளில் நடக்கும் இவர்களில் யாரோ ஒருவரா? மலர்ப் படங்கள் பதித்த சின்ன கலர்க்குடையை தலையோடு பொருத்தி, நூற்பையைச் சுமந்து சாலைகளில் தேங்கி இருக்கும் மழைக் குட்டைகளில் குதித்து குதித்து ஓடும் இந்தச் சின்னப் பட்டாம்பூச்சிகளில் ஒன்றா?

இன்னும் பெய்து கொண்டே இருக்கின்ற மழையின் தாக்குதல்களில் இருந்து தற்காலிகத் தப்பித்தல்களுக்காக பேருந்துக் கூடைக்குள் ஒளிந்து கொண்ட கூட்டத்தில் ஒருவனாய் நின்று பார்த்துக் கொண்டே நிற்கிறேன்.

'உனது பேருந்து நிற்கிறதே, போகவில்லையா?' ஊமைக் கேள்வியைத் தொடுத்து என் மேல் எறிய, தினம் காசு போடும் நான் இன்று மெளனத்தையே அவனுக்கு இடுகிறேன். மெல்ல மெல்ல கூட்டம் கரைய, நானும் அவனும் மட்டும் தனித்து விடப்படுகிறோம்.

பகல் பொழுது புலர்ந்தாலும் இன்னும் ஈரத் தோடு அணிந்த இலைகளில் இருந்து ஈரத்தோடு சொட்டிக் கொண்டே இருக்கின்ற மரங்கள் சப்தித்தன. 'பட பட'என எங்கிருந்தோ பறந்து வந்த வெண் புறாக்கள் ஒரு வட்டமிட்டு மீண்டும் வேறு திசையில் மிதந்தன. மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது.'சட சட'என ஷட்டர்கள் பூமியை முத்தமிட்டன.

கொலுசொலி கேட்டது.

ஒரு மஞ்சள் நிலா போல் மிதந்து வருகிறாய். நீ கால் வைத்து நடக்க நடக்க தெறித்த மழைத் துளிகள் உன்னைப் பிரிய மனமின்றி, உன் கொலுசு மொட்டுகளோடு ஒட்டிக் கொள்கின்றன. நடக்கையில் கையில் பிடித்திருக்கும் வெண் குடையின் விளிம்புகளில் இருந்து தெறிக்கின்ற துளிகள் உன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை உற்பத்தி செய்கின்றன. மழை மெதுவாக கனிய, சில்லென்று எங்கிருந்தோ காற்று வந்து அப்பிக் கொள்கின்றது. மேகக் கூட்டங்கள் பறக்கின்ற தினுசில் கரிய கூந்தல் பறபறக்க, ஈரம் பூத்திருந்த காற்றில் இன்னும் குளிர் ஏறுகின்றது.

சாலையோரம் பதிந்திருந்த ரோஜாக் கூட்டங்கள் சுறுசுறுப்பு கொள்கின்றன.

மெல்ல அவற்றின் அருகில் குனிகிறாய். கொத்தான ரோஜா மலர்களை செடிக்கு வலிக்காமல் ,கிள்ளாமல் அள்ளிக் கொள்கிறாய். ரோஜாக்கள் மேல் சிரித்திருந்த மழைத்துளிகள் 'நீ முட்கள் தொட மிளிருமோ ரத்தத்துளி என்ற பயத்தில் கலங்கிய கண்ணீராகவே' எனக்குப் பட்டது. மெள்ள அவற்றை முத்தமிடுகிறாய்.

எது அதிக சிவப்பு, பூவிதழ்களா, பெண்ணிதழ்களா என்ற குழப்பத்தில் திணறியது என் மூளையெனும் கீறல்களின் கூடல். ஏதோ கூறினாய் அவற்றின் காதுகளில், என்னவாய் இருக்கும்?

'குளிர்கிறதா உங்களுக்கு? பாவம், இரவு முழுதும் மழையின் மயக்கத்தில் நனைந்து நனைந்து உங்களுக்கு ஜலதோஷமா என்ன? காற்றின் அலையாடலுக்கு அசைந்து அசைந்து தும்முகிறீர்களா? பகலின் இந்த மழை உங்களுக்கு பிடிக்கவில்லையா? பாதுகாப்பான தோட்டங்களில் உங்களை வைக்கவில்லையென்ற கவலையா? எவரேனும் பறிப்பர் என்ற பயமா? சிவப்புக் குழந்தைகளே!..'

கையோடு கொண்டு வந்திருந்த வெண் குடையை ரோஜாச் செடிகளின் மேல் மூடினாய். இனி நான் நம்புவேன், முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரியென..! மலருக்கு குடை கொடுத்தது இப்பூவென..!

குடையின் கீழ் கும்பலாய் நின்றிருந்தன மலர்கள். வைத்து விட்டு நீ மழையில் நனைய நனைய நகர்ந்து செல்கிறாய்.

நகரா மலர்களுக்கு குடை கொடுத்து, நகர்ந்து செல்லும் நகர மலராய் உன்னைக் காண்கிறேன்.

திருப்பத்தில் நீ திரும்பி நடந்து மறைந்து விடுகிறாய். காற்றோடு ஆடிக் கொண்டே இருக்கின்ற குடையின் அடியில் சிரித்துக் கொண்டே இருக்கின்ற சிவந்த ரோஜாக்களையும், காதலின் அடியில் ஆச்சரியமாய் நிற்கும் என்னையும், கடைசித் துண்டு பீடியை வலிக்கின்ற ஊமைப் பிச்சைக்காரனையும் தவிர்த்து இங்கே மழையும் பெய்து கொண்டிருக்கின்றது.....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: http://gallery.photo.net/photo/5690317-lg.jpg

ஒரு குழப்பம்.

பாரதத்துல ஒரு கத வருது.

ஒரு தபா நம்ம கிஸ்னனை பாக்க துரியோதனனும், தர்மராசாவும் போயிருக்காங்கோ. கிஸ்னன் குஜாலா பெட்டுல படுத்துக்கினுகீறாரு. ரெண்டு பேரும் வர்றாங்கோ. 'வாங்க ப்ரெண்ட்சு.வணக்கம்' அப்டீனு நூஸுல சொல்ற மாரி சொல்றாரு.'வணக்கம் அல்லாம் அப்பால சொல்லிக்கலாம். கிஸ்னா, சண்டயில நீ எந்த சைடு இருக்கப் போற? அத்த சொல்லு மொதல்ல..' அப்டீனு கேக்கறாரு துரியோதனர். தருமராசாவும் அத்தயே
கேக்கறாரு.

இப்டி கேட்டு ரெண்டு பேரும் கிஸ்னனை மெர்சல்ல வுட்டுட்டாங்கோ.

கிஸ்னனுக்கு சங்கடமாப் போச்சு. 'இன்னாடா, ரெண்டு பேரும் நம்ம பங்காளிப் பசங்க ஆயிடுச்சே. இப்ப ஒர்த்தன் பக்கமா போனா, இன்னொருத்தம் மூஞ்சியை தூக்கி வெச்சுக்குவானே. இன்னா பண்றது..?' அப்டினு கொஞ்ச நேரம் திங்க் பண்றாரு. 'டபார்'னு ஒரு ரோசன.

'இன்னா பசங்களா.. நீங்க ரெண்டு பேரும் எனிக்கு க்ளோஸ் தோஸ்து. நான் யாரு பக்கமா போனாலும் இன்னொருத்தனுக்கு கஷ்டமா தான் இருக்கும். அதுனால ஒரு சின்ன டெஸ்டு.
ஊருல இருக்கற சனமெல்லாம் எப்படிப்பட்டவனுங்க அப்டினு கண்டுகினு வாங்க. அப்பால என்னோட முடிவ சொல்றன். இன்னா சேலஞ்சுக்கு ரெடியா?' அப்டினு கேக்கறாரு.

கிஸ்னனே சொன்னப்புறம் ஏதாவது மறுவார்த்த பேச முடியுமா?

ரெண்டு பேரும் ஆளுக்கொரு தெசயா போறாங்கோ.

ஆஃப் அவரு போச்சு. ரெண்டு பேரும் ரிடர்ன் ஆகறாங்கோ.

கிஸ்னன் கேக்கறாரு. 'ஃபர்ஸ்ட் மூத்தவரு. இன்னா தருமா, ஊருல இருக்கறவனெல்லாம் எப்டிப்பட்டவனா இருக்கான்..?'

தர்மர் ரிப்ள பண்றாரு..' கிஸ்னா இன்னா இப்டி கேக்கற..? அல்லா ஆளுங்களும் சொக்கத் தங்கமா இல்ல இருக்காங்கோ? ட்வென்டி ஃபோர் காரட் கோல்ட் தான் அல்லாரும்..' அப்டின்றாரு.

'நீ இன்னாபா சொல்ற..?' அப்டினு துரியோதனர பாத்த்து கேக்க..

'அத்த ஏன் கேக்கற கிஸ்னா. அல்லா பேரும் சுத்த பொறுக்கிங்க. பேமானி, கசுமாலம், கலிசட, அத்தன மாரி, இப்டித்தான் இருக்கானுங்க. அல்லா பேரும் சுத்த கயவாணிப் பயலுக. வாட்சிங்கா இருக்கணும் கிஸ்னா. அல்லாங்காட்டி அண்ட்ராயர் வரிக்கும் உருவிக்கினு போய்க்கினே இருப்பானுங்க...' அப்டினு கிஸ்னனையே உசாரா இருக்கச் சொல்றாரு.

'அப்டி வாங்க. தருமர் ரொம்ப நல்லவரு. அதால ஊருல இருக்கறவன் எல்லாம் நல்லவனா தெரியுது அவருக்கு. துரியோதனன் கெட்ட பய. அதனால அவனுக்கு... எல்லாப் பயலையும் கெட்டவனா பாக்கறான். நான் என்னிக்கும் நல்லவங்க பக்கமா தான் இருப்பேன்னு சனங்களுக்கு தெர்யணும். அதுக்காண்டி நானே உங்க ரெண்டு பேர்ல ஆரு நல்லவன்னு டிசைட் பண்ணுனா அப்பால என்கிட்டயே சண்டைக்கு வருவாங்கோ! எத்த வெச்சு நீயே டிசை பண்ற பவர் எடுத்துக்கினே? அப்டினு.. அதுனால் இப்டி ஒரு டெஸ்ட் வெச்சேன். அதுனால நான் ஃபைட்ல தருமர் பக்கம் தான் இருப்பேன். அர்ஜுனுக்கு ட்ரைவரா இருப்பேன். அதுக்காண்டி துர்யோதனா ஃபீலாகாத.. உனிக்கு என்னோட படை, குருத, ஆன அல்லாமே உனக்கு தான்..!

இன்ன ஹேப்பி தான ரெண்டு பேருக்கும்..? குஜாலா போய்ட்டு வாங்க.

நல்லவன் கண்ணுக்கு அல்லாமே நல்லதா தெர்யும். அல்லாங்காட்டி கெட்டவன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தான் தெர்யும். இது தான் இந்த சீன்ல நான் சொல்ற மெஸேஜ். இன்னா எல்லாரும் நோட் பண்ணிட்டீங்களா..? அப்பால ஆரும் வந்து நோட்ஸ் எடுக்கல, ஒரு ரீப்ளே காட்டுனு எல்லாம் சொல்லக் கூடாது. எனக்கு கோபம் வந்தா இன்னா செய்வேன் தெர்யுமில்ல..? தீவாளிக்கு வுடற சங்கு சக்கரம் அப்டியே சுத்தி சுத்தி வந்து தொரத்தற மாரி பண்ணிடுவேன்...'

துரியோதனர் கெட்ட செயல்களைச் செய்பவன் என்பதால் அவருக்கு மக்களிடம் இருக்கின்ற கெட்ட குணங்களே கண்ணில் பட, அனைவரும் கெட்டவர்கள் என்று முடிவு செய்கிறார் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

அப்படி தான் செய்கின்ற செயல்களைக் கொண்டு பிற மக்கள் அதைச் செய்கையில் அவர்கள் கெட்டவர்கள் என்று துரியோதனர் முடிவு செய்தால், தான் கெட்டதே செய்து கொண்டிருக்கிறோம் என்பது துரியோதனருக்கு தெரிந்திருக்கின்றது என்று தானே பொருள்? தான் செய்வது தவறு என்று தெரிந்தே அவர் செய்து கொண்டிருந்தாரா?

'நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்' என்று நடிகர்கள் பஞ்ச் சொல்லி முகத்தின் மேலேயே குத்துகிறார்களே, அவர்களது டயலாக்கில் இந்த லாஜிக் முரண்படுகின்றதே..!

'நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவவனுக்கும் நல்லவன்' அப்படித் தானே சொல்ல வேண்டும்.

நல்லவனுக்கு நல்லவனாய் இருப்பது, கெட்டவனுக்கு கெட்டவனாய் இருப்பது சரியா? இல்லை நல்லவனுக்கு கெட்டவனாய், கெட்டவனுக்கு நல்லவனாய் இருப்பதும் சரியா? இல்லை நல்லவனுக்கு நல்லவனாய், கெட்டவனுக்கு நல்லவனாய் இருப்ப்பதும் சரியா?
இல்லை நல்லவனுக்கும் நல்லவனாய், கெட்டவனுக்கும் நல்லவனாய் இருப்பது தான் சரியா..?

'உங்களுக்கெல்லாம் ஒரே கொழப்பமா இருக்குமே...!'

'Delicate Position....'

'whos the disturbance...?'

Sunday, April 06, 2008

இரு நிலைப்பாடுகள்.

ரு எதிரெதிர் நிலைகளில் உள்ளவர்கள் மற்றவருக்கு ஆதரவாக எடுத்திருக்கும் நிலைகள் பற்றி.

மிழக முதல்வர் 'கர்நாடகத்தில் தேர்தல் வருவதால் இப்போதைக்கு ஒகேனக்கல் திட்டம் ஒத்தி வைக்கப் படுகின்றது. அங்கு தேர்தல் முடிந்து நிலையான அரசாங்கம் அமைந்த பின் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை மேற்கொள்வோம்' என்று கூறி உள்ளார். கிருஷ்ணாவும் 'தமிழக முதல்வர் எடுத்துள்ள நிலை மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது' என்கிறார்.

இது சில கேள்விகளை எழுப்புகிறது.

*ஒரு மாநிலத்தில் தேர்தல் வரும் போது அங்கு நடத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படும். பின் தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பு ஏற்கப்பட்டவுடன், திட்டம் தொடரும் என்பது நிலையாக இருந்து வருகிறது. இப்போது கர்நாடகத்தில் தேர்தல் வருவதன் காரணமாக ஒகேனக்கல் திட்டம் நிறுத்தி வைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பால் என்ன சொல்ல வருகிறார்? ஒகேனக்கல் கர்நாடகத்தைச் சேர்ந்தது தான் என்று உறுதிப்படுத்துகிறாரா? இது அங்குள்ள அமைப்புகளுக்கு சாதகமான ஒரு பாய்ண்ட் ஆக அல்லவா ஆகி விடும்?

*இனி ஒரு வளர்ச்சிப் பணி மேற்கொள்ளப்படும் போது அண்டை மாநிலங்களின் நிலையையும் அவற்றின் அனுமதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையை அல்லவா இது ஏற்படுத்தி விடுகின்றது?

*காவிரிப் பிரச்னையில் ஏற்படுத்திய விவகாரத்தைப் போலவே இப்பிரச்னையிலும் ஏற்படுத்துகிறார். இனி இதுவும் ஒரு தீராத உயிர்வலியாக இருக்கப் போகின்றது.

*சரி, அங்கு தேர்தல் முடிந்து ஆட்சி ஏற்கப் போவது யார்? எல்லை தாண்டி வந்து ஊதி விட்டுப் போன எட்டியூரப்பா, பிரச்னையை மாற்றிப் போட்டு பெரிதாக்கிய கிருஷ்ணா, தமிழர்களை அடித்து நொறுக்குங்கள் என்று ஆணையிட்ட குமாரசாமி, இவர்களிள் யாரேனும் ஒருவர் தானே? சும்மா இருக்கும் போதே இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனில், ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மட்டும் வேறு மாதிரி நடந்து கொள்ளுவார்கள் என்பது என்ன நிச்சயம்?

*ஒன்று மட்டும் உறுதி! ஒற்றுமையாய் இருந்து இந்தப் பிரச்னையில் உறுதியான நிலையை எடுத்திருக்கும் தமிழர்களை குலைத்துப் போட்டு, காங்கிரசுக்கு பல்லிளித்திருக்கிறார், கூட்டணி தயவால் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதல்வர். இவர்களது பேச்சுவார்த்தை எந்த இலட்சணத்தில் நடக்கும் என்று தெரியாதா? ஒகேனக்கலையும் மறந்து விட வேண்டியது தான். அடுத்து ஈரோடு வரை கேட்டிருக்கிறார்கள். எல்லோரும் தயாராய் இருக்கவும். எதற்கு? கன்னடம் கற்றுக் கொள்ளத்தான். பின் கர்நாடகத்தோடு இணைந்து விட்ட பின் ஆட்சி மொழி தெரியாமல் தடுமாறக் கூடாதல்லவா?

சென்ற வாரம் குமுதத்தில் , விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் 'சிவா மனதில் சக்தி' என்ற படத்தைப் பற்றி விலாவரியாக மூன்று பக்கங்களில் எழுதி இருக்கிறார்கள். அதிலும் முக்கால்வாசிப் பக்கங்களை குமுதத்தின் பாரம்பரியப்படி நாயகியின் போஸ்களே அடைத்துக் கொண்டன.

இவ்வார விகடனில் குமுதம் குழுமத்தால் நடத்தப்படும் 'ஆஹா எஃப்.எம்' பற்றி இரண்டு பக்கங்களில் ,அதன் 'சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து' வாழ்த்தி எழுதி இருக்கிறார்கள்.

இது போன்று இப்போது தான் முதன்முதலில் பார்க்கின்ற நிலை? இதற்கு காரணம் என்னவாய் இருக்கும்? பத்திரிக்கைகளின் விற்பனை குறைந்து கொண்டு வருகின்றதா? சீரியல்கள், திரைப்படங்கள், வலைப்பதிவுகள், விளையாட்டு என்று கவனம் திருப்பும் துரைகள் அதிகரித்ததால் இது போன்ற கூட்டணி அவசியமாகின்றதா? பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் சொந்த வலைப்பதிவு வைத்துக் கொண்டு விட்டதால் கூட்டணி ஏற்படுகின்றதா?

புரியவில்லையே.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்.



லசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது யமுனை நதி.

வெளிச்சம் மெல்ல மங்கிக் கொண்டு வருகின்றது. தன் அன்றைய தினத்தின் பயணத்தை முடித்துக் கொன்டு மேற்றிசையில் மறைகிறான், கதிரவன். வல்லினங்களும், மெல்லினங்களும், இடையினங்களும் தத்தம் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ குளிர்க்காற்று வீசத் தொடங்கி இருப்பதை கானகத்தின் மெல்லிய இலைகள் அசைந்து அசைந்து பரப்பிக் கொண்டிருந்தன.

கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே சின்னப் பறவைகள் வானின் கூரை மேல் சிதறிக் கொண்டு பறந்தன. மேகங்கள் பூத்திருந்த பூமியின் நீலப் போர்வையில் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு முத்து முத்தாய் மின்னத் தொடங்கின மீன்கள். அவற்றின் வெண் நிழல்களைப் போல் நதியின் அலைகள் மேல் துள்ளித் துள்ளி விலையாடிக் கொண்டிருந்தன மீன்கள்.

நதிக்கரையின் ஒரு பாறை மேல் நந்தனும், அவன் திருப்பாதங்களின் அருகில் இராதையும்!

ஓராயிரம் தீப்பொறிகள் தெறித்து நீரில் விழுகையில் 'ஸ்...' என்ற ஒலியை எழுப்பி அணையுமே, அந்த ஒலியை எழுப்பி அக்காட்சியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன ஆவினங்கள். பகல் முழுதும் காட்டின் பச்சைப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தாலும், அவற்றின் அடிமனதில் இந்த மாயன் குழல் நாதம் தரும் தருணத்தை எண்ணித் தானோ காத்திருக்கும்? வள்ளுவரின் 'செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்ற குறளை அறிந்திருக்குமோ?

நதிக்கரையோர மரங்கள் எல்லாம் வானளாவ பரந்து விரிந்திருந்தாலும் கண்ணன் குழல் இசையைக் கேட்க , தம் பெரிய உடலை வளைத்து தம் செவிகளை கூர்ப்படுத்தி, அவன் இருக்கும் இடத்தில் குவித்திருந்தன. அவ்ற்றின் கவனத்தைக் குறும்பாய் காற்று கலைத்து, இலைகளை அசைத்துப் போக, தம் இலைகள் கொண்டு காற்றைத் திருப்பி அடிக்க, சலசலப்பாய் இருந்தது. நதியின் சலசலப்பிற்குப் போட்டியாக, இவற்றின் சலசல விளையாட்டு இருக்க, 'ஸ்...' என்று சொல்லிக் கொண்டு ஆநிரைகள் மீண்டும் குரல் கொடுத்தன.

சின்னச் சின்ன பூக்கள் தம் இதழ்களை ஆவலாய்த் திறந்து வைத்திருந்தன. தம் பொட்டுத் தேன் துளிகளுக்கு அவை இசை வர்ணம் பூச காத்திருந்தன.தத்தம் மகரந்தத் துகள்களுக்கு சொல்லிக் கொண்டன. ' துகள்களே! தூவானத்தின் துளிகள் போல் சிறிது சிறிதாய் சிரிப்பவர்களே! நன்றாய் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த கான மழையில் நனைந்து செல்லும் வழி எல்லாம் நமது கண்ணனின் குழலின்பத்தைக் கூறிக் கொண்டே இருங்கள்.'

இராதையின் கிறக்கத்தைத் தான் என்னவென்று சொல்லுவது?

யமுனா நதிக்கரையின் அலைகள் தம் நுரைகளை கரையெங்கும் பரப்பிக் கொண்டே செல்லும். அனத்த நுரைகளை அள்ளி, அவற்றில் மாலைகள் செய்து அணிய அவை முத்து மாலைகள் ஆயின. கதிரவனின் கிரணங்களை வடிகட்டி, பரிபூரண சுத்தமான பொன்னிறக் கதிகளை மட்டும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஸ்வர்ண நகைகளை அணிந்திருந்தாள். வண்ண வண்ண பூக்களைக் கிள்ளி அவற்றின் இதழ்களைக் கோர்த்து தம் வளையல்களாக்கி கொண்டாள். கண்ணாடியின் முன் போய் நின்று, 'கண்ணா..! கண்ணா..!' என்று மொழிய அது அப்பேர் இன்பத்தில் சொக்கி, தன் கடினம் இழந்து, இளகி, உருகி வர, அந்த ஜொலிக்கும் கண்ணாடிக் கரைசலை அள்ளி ஆடை நெய்து கொண்டாள்.

கிக வைகறைப் பொழுதில் விழித்துக் கொள்வாள். இரவு இன்னும் முழுதாகப் பிரியாத அந்த குளிர்வேளையில் வானம் நீலப் பட்டாடை உடுத்தி இருக்கும். அது அந்த நீலமேகவர்ணனின் மேனியை ஒத்திருக்கும். பிரம்மாணடமாய் தன்னை மாற்றி வானை அமைத்தானோ அவன் என்ற எண்ணம் பூக்க யமுனை நதி வருவாள் இராதா.

வெட்கம் கொண்ட நதி, நீலவானை அள்ளி தன் மேனி முழுதும் ஆடையாய் அணிந்திருக்கும். அந்த நீல நீரலைகளை அள்ளி தன் மென் சூட்டின் இதழ்களால் இனிக்க முத்தமிடுவாள். கேட்கவும் வேண்டுமா? குழைந்த நதியலைகள் இறுகி நீலப் பட்டாடையாய் மாறி இருக்கும். அதை அணிந்து கொள்ளுவாள்.

இத்தனை அழகோடு இருந்தாலும், இராதையின் மனத்தில் குறை இருக்கும். யாருக்காக அவள் இத்தனை அழகணிகிறாளோ, அந்த மாயக் கள்ளன் கண்களுக்கு தட்டுப்படவே மாட்டான். நாள் பொழுதுகளில் கானகத்தில் இருப்பான்; இரா நேரத்திலோ அன்னை யசோதையின் மாளிகைகுள் சென்று மறைந்திருப்பான். மாலைப் பொழுதுகளில் மட்டுமே அவன் நதிக்கரைகளில் இசை நர்த்தனமிடுவான்.

இன்று வந்து விட்டாள்.

ஆஹா...! அந்த நாயகனின் எழிலை எப்படித் தான் எடுத்துச் சொல்லி இயம்புவதோ?

மாலை நேர வெயில், அலையாடும் நதியின் மேல் ஆனந்த நர்த்தனம் இடும் அல்லவா, அப்போது அந்த அலைத்துளிகள் உல்லாசப் பரவசத்தில் குதித்துக் கூத்தாடுமே அந்த பொன்னிறச் சிதறல்கள் அவனது பாதங்களில் வர்ணம் பூசி இருந்தன. அந்தி மயங்கி வருகையில் அடிவானெங்கும் செந்தூர நிறத்தில் ஜரிகை போட்டிருக்குமே, அது போல் அவனது திருப்பாதங்களின் ஓரங்கள் எங்கும் சிவந்த நிறம் கரை கட்டி இருந்தது.

அதிகாலைப் பொழுதில் கதிரவன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கையில் அலையாடும் பெருங்கடல் ஆர்ப்பரிக்கும் போது, அதன் பேரலைகள் முழுதும் கதிரின் மஞ்சள் வர்ணத்தை வாரி இறைத்திருக்கும். அந்த அழகில் அவந்து இடையைச் சுற்றிலும் மஞ்சள் நிற ஆடை அலங்கரித்திருக்கிறது. கதிரவன் வானில் வலம் வருகிறான். அப்போது கருமேகத்தின் பின் பதுங்கி, பின் வெளிப்படுகையில் மேகத்தின் எல்லைகள் முழுதும் பொன்னிறத்தில் ஜொலிக்கின்றது அல்லவா, அதை அவனது கருநிறத்தை மூடிச் செல்லும் மஞ்சள் நிறவாடை நினைவூட்டுகின்றது.

காடுகளில் முளைத்த அந்த சின்னப் பூக்களும் என்ன தான் புண்ணியம் செய்தனவோ? இவன் மார்போடு ஒட்டி உறவாடுகின்றதே? குழலெடுத்துச் சிரிக்கின்ற விரல்களில் கனிந்திருக்கும் அன்பை எல்லாம் அவன் இசையெனும் அமுதத்தில் அள்ளித் தர யாவரும் மயங்குகின்றனர் அல்லவா?


Get Your Own Hindi Songs Player at Music Plugin