Tuesday, December 27, 2016

நீலாம்பல் நெடுமலர்.9.


சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.

உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.

நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.

குருதி பூக்கும்
முட்செடிகளை
மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.

நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.

நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.

வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.

மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.

அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.

வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.

இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்
நினைவின் பாரம்.

பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.


Thursday, December 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.8.



மேற்கண்ட படத்திற்குத் தொடர்பாக 'படத்திற்கு வெண்பா படை' என்று கேட்கப்பட்டிருக்க, எழுதியவை கீழே.

ஒருநதியில் ஓடிடும் ஓடத்தில் நாமே
ஒருபுறம் ஓட்டை எனினும் - வருந்தா
தெனக்கென்ன வென்றிருப்பின் மூழ்கி மரித்தல்
அனைவர்க்கும் ஆமே அறி.

இருவர் உழைக்க ஒருவர் சிரிக்க
இருநிலை ஏனோ இயம்பின் - வருத்தம்
வருமே வருநிலை யாவர்க்கு மன்றோ
வருமுன் உணர்தல் நலம்

நீரள்ளி நீரள்ளி நீரிறைக்கும் வாளியில்
நீரறியா நீர்வழி உண்டாயின் - நீரது
நீங்காது நீந்துவோர் நின்றிட நீந்தாதோர்
நீங்குவர் நீத்தார் என.

 படகில் புகுநீர் மெதுவாய்க் கவிழ்க்கும்
உடனே கவனித்தல் நன்றாம் - கடமையோ
என்றிருப்பின் கண்டோரும் காணோரும் ஆவாரே
இன்றிருப்பர் நாளையோ இல்.

மேலே அமர்தல் சுகமே என்றாலும்
கீழே உழைப்பவர் நீரிலே - வாழேன்
எனவமைதல் என்றும் புகழ்.

வடத்திற்குத் தேர்போலே வாழ்வுக்கு நீரே
தடத்திற்குத் தார்போலே தாழ்வுக்குச் சோம்பல்
குடத்திற்குள் சிற்றலையாய்த் தந்தேன் உமது
படத்திற்கு வெண்பாப் படை.

Tuesday, December 20, 2016

நீலாம்பல் நெடுமலர்.7.

'வியத்தகு வெண்பா விருந்து' என்ற ஈற்றடிக்கு எழுதியது.

ருவிழி துள்ளும் துவளும் துடிக்கும்
கருவிழி சொல்லும் குழற்றும் பிதற்றும்
இருகரம் தீண்டும் தழுவும் தடவும்
இருபுறம் கேட்கும் கொடுக்கும் பிடிக்கும்
இருமார்கள் வேண்டும் திமுறும் குமுறும்
இருகூர்மை கொல்லும் குழையும் குவியும்
இருகால்கள் தாங்கும் தடுக்கும் தவழும்
இருந்தாழ்கள் வாங்கும் வருடும் வணங்கும்
இருப்பாளே என்றும் குறளடி தேனாய்
இறுக்கும் சிவந்த இதழ்.

கண்வழி அன்பென என்மீது சிந்தடி
முன்வழி பெண்ணென மெய்மீது சிந்தடி
சொல்வழி செல்வதைச் சொல்லுமுன் சிந்தடி
வில்விழி கொல்வதை நீராலே சிந்தடி
கைவழிக் காதலைக் கண்டதும் சிந்தடி
தையலின் மோகமே தைத்தபின் சிந்தடி
கள்ளுள மாரினைக் கவ்வுமுன் சிந்தடி
உள்ளுளப் பிள்ளையை உண்மையாய்ச் சிந்தடி
மெல்லுணர் வாழ்விலே மெய்யெனச் சிந்தடி
மெல்லிடை ஆள்வதை மெத்தைமேல் சிந்தடி
கள்ளியே கள்வனைக் காத்தபின் சிந்தடி
கள்வனோ சென்றபின் நீர்.

நெய்யகல் தீமுகம் நீலாம்பல் தேன்மலர்
பொய்யகல் தீஞ்சொல் புகழுடை பொன்தளிர்
மெய்யுணர் மெல்லுடல் மேற்றிசை மென்னொளி
கையனல் கொல்மணம் கள்ளிதழ் முள்தனம்
வேல்விழி கூர்முடி நீள்விரல் நெற்கதிர்
பால்நிறம் பன்னீர்த் துளிகுரல் வான்குளிர்
ஆலிடை நெய்த்தொடை அல்குலை ஆள்பவன்
கோலின் அளவடி நீ.

இயங்கிடும் போதுகளில் இன்மைக் கணத்தில்
முயங்கிடும் முன்மாலைப் பின்னால் - தயங்கா
மயக்குறு மங்கைநீ மன்னன் படிக்கும்
வியத்தகு வெண்பா விருந்து.


டியும் முடியும் ஒரே சொல் கொண்டு அமையும் குறள் வெண்பாக்கள்.

முயலாமை முந்திய வித்தை அறிவீர்
தயங்கினால் நீயே முயல்.

கிழித்துக் களம்படா நீங்கல் மறவர்
பழிப்பினும் வீரர்க் கிழி.

கண்ணேநீ என்றால் இமைப்பின் மறைவனோ
என்றாள் அவளுமென் கண்.

தொடவாநான் என்றாய் தொடுவது போதா
படவாநீ கூர்வில் தொடு.

மதுரமே உன்சொல் உதிருமே உண்ணா
அதரமே தேக்கும் மது.

Saturday, December 10, 2016

நீலாம்பல் நெடுமலர்.6.

ன்பமாய் வெண்பா எழுது என்ற ஈற்றடிக்கு:

எரிகனல் எம்ப எழுந்தழல் உண்ணும்
கரியுடல் எங்கிலும் கூற்று - வரும்வரை
அன்பரே, அன்றிலை இன்றிலை அன்றிலின்
இன்பமாய் வெண்பா எழுது.

ழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு:

கூரை புதுக்கிக் குளிர்மண் குவித்திட்டு
காரைத் தரையில் களிமண் பரப்பிட்டு
ஊரை அழைத்து உவப்பின் விருந்திட்டு
மாரை நிமிர்த்தி மலர்ந்த மனையினைச்
சாரை அரவென சீறிடும் - கோரப்பல்
பாழலை பாய்ந்திறங்கிப் பாழாக்கல் போலான
ஊழலை ஒப்பலாமோ சொல்.

ன்னடம், கன்னடர் என்பதே வெறுப்பு என்றவருக்குப் பதில்:

வழியென்ன செய்யும் விடமுள் விளையின்
கழியென்ன செய்யும் களவோர் பிடிப்பின்
விழியென்ன செய்யும் விரலால் குடையின்
மொழியென்ன செய்யும் மொழிந்தார்ப் பிழைப்பின்.

கழியால் கலயத்தைத் தாக்கி உடைத்தால்
பழிப்பீரா பாலைப் பகர்.

தேன்நிறைக் கூட்டினைத் தேடியே போவோரும்
தேனீயைக் கண்டதும் தேங்கியே நிற்பரோ
ஊன்நிறை உண்டாட்டில் அல்லதை நீக்கியே
உள்ளதை உண்ணுவோர் நாம்.

தன்மொழி தின்போன் பிறமொழி தீண்டானா
என்மொழி மென்மொழி உன்மொழி - வன்மொழி
என்பானா எம்மொழி என்றாலும் எச்சுவை
என்றாலும் சொட்டிடும் கள்.

பிழைப்பிற்குக் கற்றதோ பின்வந்தோர் சொல்லை
உழைப்பிற்குக் கற்றல் கணிமென் மொழியை
களைப்பிற்கு உள்ளதோ அன்னை மொழியே
களிப்பிற்குக் கற்போம் பிற.

கற்கையில் தோன்றிடும் கன்னடம் கற்கண்டு
பொற்கரம் சூடிய பொன்வளை - பெற்றவள்
நந்தமிழ் பெற்றதனால் சிற்றன்னை ஆகிய
பந்தமோ பாகின் சுவை.

Wednesday, November 30, 2016

நீலாம்பல் நெடுமலர்.5.


செம்மண்ணைச் சேறாக்கி வண்டல்மண் சீராக்கி
தம்முடலில் தார்ப்பாய்ச்சித் தானுழைக்கும் - பெம்மானே,

உம்முடனே கூடவரும் உம்முயிரே போலான
வெம்புனலை ஊற்றெடுக்கும் வெள்ளெருது - அம்மானே,

ஏரோட்டி எத்தனையோ ஏற்றத்தில் நீராட்டி
வேரோட்ட வேர்வையில் வெந்தவும் - போராட்ட

வாழ்விதிலே கண்டதென்ன கொண்டதென்ன உண்டதென்ன
தாழ்நிலையில் நின்றதென்ன வென்றதென்ன சென்றதென்ன

குப்பைகள் கோனாகும் உப்புத்தாள் ஊராளும்
இப்பொழுதில் இட்டதெல்லாம் தொட்டதெல்லாம் காய

நிழலுண்டா நீரமரத் துன்பம்போய் இன்ப
விழவுண்டா வீணம்போய் வீரர்போல் உள்ளத்
தழலுண்டா தன்னையே தானறியா வாழும்
விழலான நெஞ்சுள் விழலாகா தாசொல்
உழவின்றி உய்யா துலகு.


ற்றிலே நீரிலை வானிலே காரிலை
சேற்றிலே பூவிலை ஈரமிலை - காற்றில்
கழலிணை வைத்து மழைதேவி வாராய்
உழவின்றி உய்யா துலகு.


ழமுறை நீக்கு; புதுமுறை நோக்கு;
கழனியைக் காத்துக் கதிரை முழுதெடு;
புண்ணாக்கு சேர்த்துப் புதுப்பால் மணநுகர்;
மண்ணாக்கும் பொன்னின் மதிப்பை உயர்த்து;

வெளிவாங்கல் குன்றிட உள்விளைச்சல் ஏற்று;
கழிச்சலை மீள்பயன்செய்;
வீணை சலிசெய்;
விழவன்று கூறு கதிரவனே நன்றி;
உழவின்றி உய்யா துலகு.


காஞ்சுபோச்சு எச்சயெல்லாம் தீஞ்சுபோச்சு பச்சயெல்லாம்
ஓஞ்சுபோயி மிச்சமுள்ள ஒத்தசொட்டும் - மூஞ்சுபோயி

வாடுதையா வந்தசெடி நோகுதையா வெச்சமனம்
மூடுபனி முந்துதையா - தேடும்
மழராசா வாரோணும் மத்தவனும் சொல்ற
உழவின்றி உய்யா துலகு.

பிழையாகச் செய்க; பிசிறின்றி நெய்க;
மழையாகப் பெய்க; மயங்கித் - தழைந்து
முழவொலி முற்ற முயங்கிப் புணரும்
உழவின்றி உய்யா துலகு.

Monday, November 28, 2016

நீலாம்பல் நெடுமலர்.4.

போதுமே என்கிறாய் போதுமா என்கிறேன்
வேண்டாமே என்கிறாய் வேண்டிய மட்டும்
பொறுமையாய் என்கிறாய் போதையே என்கிறேன்
போகட்டும் என்கிறாய் போகாதே என்றால்
இருக்கிறேன் என்கிறாய் போல்.

வருகிறாய் வந்தபின் வேனிலில் நீர்போல்
தருகிறாய் தண்மைக் கருணை - கருக்கலில்
பொற்கதிர் போலநீ தோன்றிடும் வேளையில்
சொற்களைத் தேடுவேன் நான்.

அழகே அமுதே அணியே அருளே
தழலே தனியே வருக - சுழலே
சுகமே தருமே முழுமை முகமே
அகமே அணைப்பின் இதம்.

வானமே கானமே நாணமேன் நேரிலே
பானமே பௌர்ணமி மேகமே - தானமே
தந்திடும் முத்தமே தங்கமே தாமரை
முந்திட முன்வரும் நாம்.

கடல்சூழ் கியூபா கடமைசூழ் கோவாய்
திடம்சூழ் திறத்தில் வலியை - இடத்தின்
இடம்நிறுத்தி எல்லார்க்கும் எல்லாமும் என்றார்
தடம்சூழ் நடப்பார் தவறாது வாழ்த்தும்
பிடல்காஸ் டிரோவைப் புகழ்.

மொட்டாகிப் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகி
எட்டாத செங்கனியாய் காயாகும் - கிட்டாத
தென்றான தேதுமில்லை நில்லாமல் எய்தாலே
வென்றாக வேண்டுங்கூர் வில்.

Thursday, November 24, 2016

நீலாம்பல் நெடுமலர்.3.


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

நேற்று முகில்கொண்டோம் இன்று மழைகொண்டோம்
ஊற்றுடல் தின்றோம் உதிரருசி ஓநாயைக்
கொண்ட விரல்கள் நமது.

மொட்டாய் மலராகி மெட்டாய் இசையாகி
தொட்டாய் விழைவாகிச் சிட்டாய் விரைதலில்
நட்டாய், அடைந்தேன் நலன்.

வாசமலர் வீசிடு வர்ணமஞ்சள் பூசிடு
நேசமொழி பேசிடு நெஞ்சில் முகிழ்த்த
நினைவெலாம் நின்றெழெட் டும்.

எடுக்கையில் கொண்டது எண்ணிய ஒன்றே
தொடுக்கையில் சென்றது ஒன்றே பலவாய்
விடுக்கையில் பல்லா யிரம்.


நேரிசைச் சிந்தியல் வெண்பா::

வாட்டுதல் உன்னிருப்பு வன்கனலோ உன்னின்மை
மூட்டுதல் உன்விழிகள் முட்சரம் பூட்டுவதோ
வேட்டுவனை வெல்லும் விலங்கு.

ஆழ்ந்த ஒருபார்வை வீசினாய் ஆண்டுபல
வாழ்ந்தது போன்ற நினைவினில் - போழ்ந்தாய்
மனதை உனதாக் கியே.

உலாவும் இடமெலாம் உன்முகம் எண்ணம்
துழாவும் பொழுதெலாம் உன்சொல் - விழாதே,
விழுந்தாய் மனமே விழி.

தொட்டணை தூறும் உடற்கேணி மேனியைப்
பட்டணை பெண்ணினை அஞ்சுதல் - விட்டணை
வில்லவன் தேரில் விரைந்து.

தந்தது புன்னகை கொண்டது காதலை
உந்தியது சொல்லென உன்னிடம்  - முந்தியது
”பஸ்பாஸ் புதுப்பிச்சாச் சா?”


Wednesday, November 23, 2016

நீலாம்பல் நெடுமலர்.2.


முற்றத்து மென்மணலில் கட்டிய சிற்றிலைச்
சுற்றத்துத் தோழியர் சூழ்ந்திருக்க - முற்றாய்க்
குறுங்கை அளைந்து குலைத்துப் பறந்த
சிறுவனைக் கண்டாயோ நீ.

"ஏனடி யாரிவன்? கூறடி யார்மகன்?
நானடி தேடினேன் தேய்ந்திட" - "வீணடி,
நீலனோ பாலனோ நீள்தடி ஆயனோ
காலனோ கண்ணனோ பேர்".

கதிரெழும் போதில் நதியலை மீதில்
குதித்துக் களித்து வெளுப்பின் - அதிரூப
மைந்தன் உடையோடு செல்ல இடையினைப்
பைந்தார் மலரால் மறை.

சத்தமின்றிச் சாய்த்தபின் முத்தமிட்டு மீட்டெடுத்தான்
எத்தனவன் எந்தலைவன் எண்ணத்தைப் - பித்தாக்கித்
தித்திக்கும் நாவாலே திக்கெட்டும் தீப்பரவ
வித்தைகள் செய்தான் அவன்.

வெண்கழுத்தில் கண்புதைத்து மென்குரலில் என்னுடலைத்
தண்ணிலவோ தாமரையோ தானொளிரும் - பொன்மணியோ
மின்னொளியோ மீன்விழியோ மீட்பில்லை என்றவனைப்
பெண்ணென்று சூழ்ந்தேன் இனித்து.

கண்ணுண்டான் கள்ளூறும் கன்னியிதழ்க் கொண்டபின்
பெண்ணுண்டான் பொன்முலையில் சொல்புதைத்து - என்னுண்டான்
ஏதுண்டான் என்றறியேன் மண்ணுண்ட வாயாலே
மீதுண்பான் நாளும் இனி.

"நாணிலையோ?" என்றதற்கு "நங்கையிட மன்றென"
"ஏனிலையோ?" என்றதற்கு "ஏடிநீ - நானிலையோ?
தன்னுடலைத் தானறியத் தேவையன்று நாணமே
உன்னுடலில் உள்ளாதல் நான்".


Tuesday, November 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.1.


சிறகுகளில் பூமுளைக்கும் சில தருணங்களை நீ அளிக்கிறாய்.

எதிர்வரும் ரயிலை முத்தமிடுவதன் முன்னம் உன் புன்னகையை எண்ணிக் கொள்கிறேன்.

வருடல் என வாரும் இளங்குளிரே! வெம்மை என்று கொந்தளித்துக் கிடக்கின்றது ஒருமனம்.

வெளியில் நிழல் தளும்பும் இரவில், வழியில் நில்லாது புரண்டு செல்வது எவ்விலையோ?

மண் நோக்கிய பார்வைகளில் மடித்துவைத்த சொற்களை எப்போது விழிமாற்றப் போகிறாய்?

சூழ்ந்திருப்பவற்றின் அலைகளுக்கு மேலே தனிமலரென மிதக்கிறேன். இரு விரல்களுக்கு இடையே என்னை ஏந்துவது என்று?

நீலாம்பல் நெடுமலரென சாய்ந்து நிற்கிறாய். இலை நுனிகளில் பனித்துளிகள் சொட்டுகின்றன.

வானோக்கி இறைஞ்சும் கணங்களில் இன்னும் மண்ணுடன் பிணைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு சுடர்முகம்.

மொட்டுகளைக் கதற விட்ட மெட்டுகளைத் தந்தவன் பெயர் ராஜா என்றால் நம்புதல் இயல்பே.

பெருமழைக்குப் பிறகு வரும் பின் சாரல் போல் கடந்தபின் திரும்பிப் பார்ப்பதில் துளி குளுமை.

சிறகுகள் முளைக்கும் பூனைகளை இருளில் காண்கையில், அள்ளி அணைத்து அன்பில் புதைத்து, வாசம் நுகர்கிறேன்.

நீராலானது என்னுலகு. உப்புநீரால்.

தருணமிது தவறிது.

சருகென சாலையோரம் சறுக்கிச் செல்கையில், இரவின் மழை என நீ நிலை செய்கிறாய்.

விண்ணிலிருந்து தவறி விழுந்த வெண்மலர், கண்ணிலிருந்து நழுவிச் சரிந்த அனல்துளி.

Tuesday, July 19, 2016

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...ப்ரியே.... மனதில் அமரும் சின்னக் குருவியே... கிளை நழுவும் நிழலே... இரவில் நகரும் மெளனமே....

முகம் தூக்கி நீ கொள்ளும் சினமென்ன..? விரல்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும் கோலமென்ன? புறங்கழுத்தில் அலையாடும் சிறுமென்மயிர்களைக் காட்டி நீ புறங்காட்டும் பொழுதென்ன? ப்ரியே...ப்ரியே...

குழலென எழும் என் தவிப்பை நீ அறியமாட்டாயா? என் விரல்கள் தடவும் நீள்குழலை நீ விரவிப் பரந்திருக்கும் நதிக்கரையில் ஊறும் சிற்றெறும்பு என என் மேல் கனிய மாட்டாயா..? குளத்தில் விரிந்திருக்கும் கமலம் மேல் சுற்றி வரும் வண்டென உன் நினைவு மேல் வட்டமிடும் என் உளம் நீ அறியாததா?

ப்ரியே...ப்ரியே... மோதி உடையும் செம்மலர் மணமென நீ வருகையில் என் பீலி திரும்பும் திசையே... மதுவே... மலரிடைத் துகளே... மழையென எழும் கருணையே... பட்டென தழுவும் முகிலே...முகில் கொழுத்த குளிரே...

எழிலே... தழலே... நறுந்தளிர் முகையே... கறந்த வெம்பால் நுரையே... நுரைகெழு சுவையே... பனியே... பனிநனை புடவியே... ப்ரியே...

படர்க்கொடி நுனியாய்த் தத்தளிக்கும் என்னை அறியாயா... கருமையே கனிந்த வெம்மையே... என் விழிக்கெனவெழும் விழிக்கெனவழும் விழிக்கனவெழும் விழிக்கனவழும் ராக்காலங்களில் உலா வரும் புகைத்திரளே... ப்ரியே...


Wednesday, June 29, 2016

மனசின் நடையில் விரியா நீயும்... (A)

டிக்கட்டுகளில் மெளனமாக இறங்குகின்றது இரவு. வழியும் தென்றலில் உலவுகின்றது காதல். முகில் திரளில் கோடுகளாய் மின்னல். தொலைவுக் காற்றில் ஈரம்.

தோட்டத்தில் உறங்கும் குறும்பாடு. மதில் மேல் மதுக்குடுவை. இலைகளில் நழுவும் வெண்ணொளி. பனிச்சரங்கள் விளிம்பில் அரவம். வேர்களில் ஊடுறுவும் இளநீர். உறக்கத்தில் ஊர். வழி தவறும் மொழி. புலர்பொழுது யுகம். தடுக்கும் கிளை. கூர் கரை உடைப்பு.

ராக்கனவு. ரத்தம் சுவைக்கும் நடுக்கம். முதலை உண்ணும் இளம் கன்று. சிறை புகும் சிறுகுழல். பறை முழக்கம். பதியன் போடும் குருத்து.

விண் நிறை உயிர். சுருள் சுருள் அவிழ் தென்னை. இறைக்க ஊறும் கேணி. மறைந்தே கரையும் குயில். தூவும் மழைப்பன்னீர். குழையும் மண். குளிரும் இமை. மலை கிளரும் நிழல். பிணை கேட்கும் இணை.

புதிதாய் பூக்கும் புழு.

அசை. இசை. அசைக்கும் இசை. இசைக்கும் அசை. இசைக்கும் அசைக்கும் விழைவு.

பழைய விளக்கு. புதிய தீ. எரி குரல்.

புதரில் ஒளியும் மான்.  சிறகடிக்கும் கிளி. நடுங்கும் தொழுவம்.  தலைகீழ் பேரருவி. கடும்பாறை நனையும் கருமழை.  முழுநிலா நிழல்.

பொன் ஊறும் பழங்கள். தேன் விரவும் ரசம். காணா பயம். விழி ஒதுக்கும் நாணம். நாண் அதிரும் ஒலி. வினை நுட்பம். விருந்தில் பொங்கு தணல். மேல்மாட அன்னம். நுனி படர்க் கொடி.

மிகை நடத்தையில் மிளிரும் கர்வம். புனல் வழியில் நகரும் ஓடம். மிருதுவான முகத்தில் பதியும் முத்தம். மென்சூட்டில் பூக்கும் நாணம். நெற்றிக் கோட்டில் சொட்டும் வியர்வை. செவிமடல் சூட்டில் புருபுருக்கும்மென்மயிர். அனல் தீட்டும் ஓவியம்.

திரி கருக்கும் அகல் சுடர். சுடர் உமிழ் செம்மலர். மலர் நிறை ததும்பும் நுரை. நுரைத்துப் பொங்கும் வெண்பனி. பனி கரந்த நீள்விரல். விரல் தடவும் நாசி. நாசி நகரும் இருள். இருள் கொள்ளும் ஈருடல்.

பெருமூச்சு.

Thursday, June 23, 2016

விடுதளை நாள் விழா.










வெம்பாலை வாழ்வு.

பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?

***

வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!

***

பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!

***

வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.

Thursday, March 31, 2016

கண்ணாடிச் சிறுமணிகள்.

கொஞ்சம் கவிழ்க்கப்பட்ட சதுரங்களாய் வெட்டப்பட்டுக் கோர்த்த சிறு கண்ணாடிச் சரங்களின் கீழே நிர்வாணமாய்க் காத்திருக்கிறாள் அவள். சிறு நெருப்புத் துண்டங்களாய் ஜ்வலிக்கும் அவற்றைத் தடவிக் கொண்டு செல்கின்றன வானப் பேரரசனின் ஒளிநகங்கள். அவளுடைய திரண்ட வனப்புகளின் மேல் பற்றியெரிகின்றன பார்வைகள். அவளை அணுகுகையில் தம் வேட்கையை, வெப்பத்தை, வியர்வையை தாமே காணும் யாரும் வியந்து பயந்து உடன் விலகுகின்றனர்.

அவள் நகங்களின் மேல் அரைத்துப் பூசியிருந்த கண்ணாடித் துகள்களைத் தம் கழுத்தின் அடிப்பாகத்தில் செருகிக் கொண்டு செந்நீரை வடிக்கத் துணிபவன் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் அவள். வளைந்திளகும் செழித்திடையைச் சுழற்றிக் கோர்த்திருந்த கூர்நுனி மாவிலைத் தோரணங்களில் தம் சிலிர்த்துச் சீறும் நாகத்தை சிவப்பித்துக் கொள்ளும் முடிவினனைக் காணக் காத்திருக்கிறாள் அவள். இமை நுனிகளில் செருகி வைத்த துளிக் கூர்மைகளை மூச்சுக் காற்றில் உருக்கி வீழ்த்தி வீழ்பவனை, அனலாடிய ஓர் இரவின் மையத்தில் கண்ட கனவின் நினைவில் காத்திருக்கிறாள் அவள். தன்னை இறுக்கிச் சுழன்றிருக்கும் கண்ணாடி மணிகளைக் கவ்விக் கவ்விக் களைந்து, தன் மின்மேனி மேல் நில்லா நெடும்பயணம் செல்லும் பெரும்பயணியைத் தொலை வானின் பின்புறம் இருந்து வரும் நிறைந்த கருமுகில் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறாள் அவள்.

தற்கொலைக் குருவி.


ரு சிட்டுக்குருவி தன்னைத் தானே இழப்பதற்கு முன் என்ன சிந்திக்கும்? தன் துளி அலகால் நெடும் பனையைக் கொத்திக் கொத்தி அலகுடைந்து சுழன்று வீழும் போது, மண்ணில் அது தின்ற நெளியும் புழுக்களை நினையுமா? சிறு தலையை, எதில் கொண்டு போய் மோதிச் சிதறடிக்கும்? பனித்தூவல்களாலான செம்பழுப்புச் சிறகுகளை எந்த நெருப்பின் பசியில் எரித்தடக்கும்? தனித்திருக்கையில் திரும்பித் திரும்பி நீவிக்கொண்ட முதுகை எக்கூர்முனை கிழித்துப் பின் பிளக்கும் என்பதை என்றேனும் ஒரு கனவில் கண்டிருக்குமா? சிறு குருவியின் சுற்றம் மென்புழுதி வயலில் அதற்கென ஒரு குறுநிலம் கணடு வைத்திருப்பரா?

'எடுத்ததொரு கோலம்; கொண்டதொரு வாழ்வு; தின்றதொரு தீ' என்று பாடிக் கலைந்த பின் அந்த வெறும் வெளியில் விளையும் மாயக்கனிகளில் ஒன்றென அக்குருவி மீண்டும் உயிர்த்து, தன் பொய்க்கூட்டைக் களைந்த திசையிலிருந்து விடுபட்டுத் திரும்புமா தன் மெய்யிடம்?

தோழியரும் தோழர்களும் உதிரத்தின் வெம்மைத்துளி வழி உறவில் தொடர்ந்தவரும் தீண்டாத் திக்கில் நிழல் சிறகுகளை உதறிக் கொண்டு, மணிக்கண்களை மின்னிக் கொண்டு பறந்து சென்று மறையுமா இச்சிறுகுருவி?

Tuesday, March 15, 2016

சிவப்புக் கோடு.

ரு
மெல்லிய
அழுத்தமான
ஆழமான
சிவப்புக் கோடு போதும்,
அனைத்திலிருந்தும் விடுபட.
எழுதத்தான்
தைரியம்
இன்னும் கொஞ்சம்
தேவைப்படுகின்றது,
கொஞ்சமே
கொஞ்சம்..!