Friday, May 04, 2007

ஐந்து புள்ளிக் கோலங்களாய்.


ன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.

சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.

ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.

வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?

நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.

அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....

கொம்பு முளைத்த வறுமை - வெறுமை.



மெளனமாய் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னை வானம் இன்னும் கருமை பூத்திருந்தது. நேரம் மதியத்தைத் தொட ஓடிக் கொண்டிருந்தது.


இரு தலையணைகளைஅடுக்கிச் சுவரில் சாய்த்து, போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டிருக்கிறேன். எழுந்து என்ன செய்வது? ஓய்வறியா பண்பலை ஒன்று பழைய பாடல்களை ஓட்டிக் கோன்டிருக்கிறது.

கலைந்து போன அறைகள். அழுக்குத் துணிகளும், அயர்ன் ஆடைகளும் , பழைய செய்தித் தாள்களும், புதிய புத்தகங்களும், கழுவிய பாத்திரங்களும், கழுவாத பாத்ரூமும் இரைந்த வீட்டில் நான், தனிமையில்..!

நகர்த்த முடியாத மெளனம் மட்டும் நிறைந்து இருக்கின்ற தனியர்கள் அறையில், நான் மட்டும் தனியாக..!

வானம் மேலும் கருக்கிக் கொண்டு வரும் போல் இருக்கிறது.
இன்னும் எத்தனை காலம் தான் தேடுவது? இரையும் கடலில் உப்பாய்க் கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன என் காலங்கள்.

மடித்த லுங்கியும், மடியாத தலையுமாய் வெளியே எட்டிப் பார்க்கிறேன். சாலையோர நதிகள், சகதியாய் நிறைந்து, சாக்கடையோடு கலந்து....

கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள், நகராப் பகல் பொழுதின் கனத்தை என் மேல் அழுத்துகின்றன.

மூச்சுத் திணறி, முனகி, தத்தளித்து, தான் தவித்து இயல்பிற்குத் திரும்புகையில், வெல்ல முடியாத அரக்கனின் நிழலாய் என்னைச் சூழ்கின்றன, காலியான வயிறும், காற்றில் படபடக்கும் வெற்றுப் பாக்கெட்டும்..!

காலையின் நீர்த்துளிகள், நிறைத்த வயிற்றின், காலிப் பகுதிகளை மதியத்தின் அகோரப்பசி கொல்கின்றது.

மிஞ்சிப்போன ஊறுகாய்ப் பாக்கெடுகள், ஆடைப் பூண்ட காலைச் சூட்டுப் பால், நண்பர்களின் சிதறிய சிதறல்களிலான சில்லறைகள்... எடுத்துக் கொண்டேன், போதும். இன்று மதியத்திற்கான, மிக்சர் பாக்கெட்டுடன் முடிக்க நினைக்கின்றேன், நான் தீர்க்க முடியாத என் அகோரப் பசியின் வெறுப்பு.
வியர்வை வழிய, முட்டி, முனகிப் போராடி, கை வழுக்கி, எழுந்து, விடாமுயற்சியுடன் நகர்த்தியதில், காலத்தின் முள்கள் நான்கைத் தொட்டன.

விரைந்து செல்கிறேன், அருகு நூலகத்திற்கு. என் பசியைக் கொல்லும் மாத்திரைகள், புத்தக வடிவிலாய்..! அரக்கப் பரக்கப் படிக்கிறேன். மறக நினைத்தும் முடியாமல் ஒளிந்து நின்று பார்க்கிறது, காய்ந்த வயிற்றைக் கிள்ளும் பெரும்பசி.

நிழல் கண்டு பயந்து ஓடும் சிறுவனாய், பசியிலிருந்து தப்பிக்க ஓடுகின்றேன், புத்தகங்களின் பக்கங்களில் என் முகத்தைப் புதைத்துக் கொள்ள..!

தாண்டி விட்ட நேரத்தைச் சொல்லி, நூலகம் பூட்டப்படுகையில், ஏளனச் சிரிப்புடன் எட்டிப் பார்க்கின்றது, நான் ஏமாற்றி விட்டதாய் ஏமாந்து கொண்ட பசி.

நண்பர்களின் ஏளனப் பார்வையோடு, என்னை வரவேற்கின்றது, அறை. வயிறு முட்ட நீர் அருந்தி விட்டு, இறுக்கிப் போர்த்திக் கொண்டு எண்ணுகிறேன்...

' மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது...'

எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.

உணர்ந்து கொண்டேன்.. வெறுமை என்பது வேறு ஏதுமல்ல.


கொம்பு முளைத்த வறுமை - 'வெறுமை'.

இந்த வரிகள், நான் வறுமையின் பிடியில், வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கையில் எழுதியன.

என் காலம் வருகையில், ஆணவம் என்னைப் பற்றக் கூடாதென்று சேர்த்து வைத்திருந்தேன். வானம் அளவு நான் விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கால்கள் பூமியோடு புதையச் செய்ய நான் நினைவு வைத்திருக்கும் வரிகள்.



Wednesday, May 02, 2007

சில துளிக் காதல்கள்.


கர்ந்து
நீ வலம் வரும்
நகர்வலத்தால்
இடம் பெயர்ந்து
சுழல்கிறது
பூமி
இடமிருந்து
வலமாய்.

பிரிந்து செல்கையில்
என் கண்களையும்
உன்னோடு எடுத்துச் செல்.
நீ வரும்வரை
எதையும்
பார்க்க விரும்பாதவனாய்
இருப்பதை விட,
கண்கள் அற்ற
குருடனாய்
இருப்பது
மேல் அல்லவா..?

ழிப்பயணியாய் என்னை
ஏற்றிக் கொண்டது
காதல்.
பயணம் முழுதும்
உறங்கி விட்டு,
திடீர் நிறுத்தத்தில்
அழுகின்ற
குழந்தையாய்
நான்.

கோலம்.


ங்கோலி நாட்களில்

உன் ஊர்

கோலம் போடுகையில்,

ஊர்கோலம் போகாமல்,

ஒருக்கோலமாய்

அமர்ந்து,

நீ

ஒரு கோலம் போடும்

திருக்கோலம்

கோலாகலம்.

பயணம் - 3.


நெடுங்கனல் பொழிந்து கொண்டிருந்த நேரம். வெம்மை நிரம்பிய காற்று வீசாதிருக்கும் மதியப் பொழுது. கருந்தார்ச் சாலையின் மீது நடனமிடும் கானல் நீர்த் துளிகள்.

ஆங்காங்கே வழிப்புளிய மர இலைகளின் விளிம்புகளைப் பொசுக்கி வழிகின்ற வெயிலில் நனைந்து கொண்டே நடக்கிறேன்.

வெயிலில் கருகிய தூரத்து மொட்டை மரங்களின் மேலிருந்து கசியும் உலர் நாற்றமும், சாலையோரப் பழங்காலப் பாழ் கோயிலின் இருள் நிறை உயர் சுவர்களின் மேல் முனைகளில் இருந்து சுரக்கின்ற வெளவால்களின் அசுத்த நெடியும், அந்த வறட்டு வெப்பக் காற்றுக்கு ஒரு வர்ணத்தைப் பூசின.
நிழல் தேடி அலைகையில் நீள்கின்ற மதியப் பொழுதுகளின் மந்த வெயில் படிந்த சாலையோர மணலில் புதையப் புதைய நடக்கிறேன்.

மதிய நேரங்களின் நகராக் கணங்களை விழுங்கியவாறு விரைந்து வந்து கொண்டிருந்தது, மாலை நேரம்.

மஞ்சள் பருக்களைப் போல் நகரப் பெண்ணின் முகமெங்கும் புள்ளிகளாயின் தெரு விளக்குகள். அப்புள்ளிகளைச் சுற்றியவாறு கரும்புகையுமிழ் வாகனங்கள் போடும் கோலங்கள், அலங்கோலங்கள்.
பெருவாய் திறந்து வரும் கரும்பூதம் போல் வரும் இருள் போர்வையால் போர்த்திய பின்னும், ஆங்காங்கே மினுமினுத்துக் கொண்டிருக்கும், நெடிதுயர்ந்த மின் கம்பத்தின் உச்சிப் புள்ளிகளும், பனி பொழியும் அகண்ட வெளியின் கருந்துணியில் பதித்த வைரத்துளிகளும்..!

இலாதொரு நிலா..!


ல்லாது
என்று
இன்னும்
தோன்றச் செய்யவில்லை,
நீ
இல்லாது
நகர்ந்து போகின்ற
என்
வாழ்க்கையை,
வானில்
இலாத
ஒரு நிலா..!

Monday, April 30, 2007

அன்பே சிவம். வேறென்ன..?

ன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், கமலின் நினைவு கூறத்தக்க, கமலை நினைவு கூறத்தக்க அவரது படைப்பு என்றால், அது 'அன்பே சிவம்'-ஆகத் தான் இருக்க முடியும்.

கமல் மட்டுமல்ல, நாசர், மாதவன், சந்தானபாரதி ஆகியோரின் அருமையான பங்களிப்புகளோடு ஒரு உறைந்த புகைப்படம் போல, இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் இருக்கப் போகிறது. பெரும்பாலானோருக்கும் நம்பிக்கை ஏற்படாதவகையில் சுந்தர்.சி-க்கும் இப்படம், வாழ்வின் மைற்கல்.

இப்படம் பற்றி ,அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால், படத்தின் இரு காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.



இப்பாடற்கோவையில் நான் கண்டு இரசித்த, சில பகுதிகள்:


  • கமலின் முகத்தில் கத்தி வைக்கின்ற போது, எப்படி குருதி, சைடுவாக்கில் காமிராவைப் பார்த்து விழுகின்றது? இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்பது இன்றுவரை எனது தீராத சந்தேகம்.
  • தனது அழகான, கம்பீரமான முகம், தையல்களால் விரிசல் கண்ட நிலம் போல் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியாகின்ற கமலின் புருவங்களின் உயருதலும், இறுக்கமாகின்ற உதடுகளும், கண்ணீர் கொப்பளிக்கின்ற கண்களும், 'இப்படியாகி விட்டதே' என்ற சுயபரிதாபத்தில் தோய்கின்ற முக உணர்வுகளும், அற்புதம்.
  • எழுத்துக்கள் தெரியாமல், 'தெரியவில்லை' என்று மருத்துவரிடம் தலையசைப்பதும், கண்ணாடி போட்டபின் எழுத்துக்கள் தெரியும் போது, அந்த ஆனந்தத்தில், லேசாகத் தோள்கள் உயர்த்தியும், மகிழ்வில் அதிர்கின்ற தலையும், கண்கள் வழி வழிகின்ற கண்ணீரும்..!
  • உணவு நேரத்தில், சிஸ்டர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கையில், கம்யூனிஸ்டான, கமல், அவ்வாறு செய்யாமல், அவர்களது அன்புக்கு நெகிழ்ந்து, கண்ணீர் பிரார்த்தனை செய்வதும் படத்தின் தலைப்பை ஞாபகப்படுத்தும்.

அடுத்த காட்சியில் :

  • வாழ்வின் சுகபோகங்களை மட்டுமே கண்டறிந்து வந்த மாதவன், எமோஷனல் சீன்களை எல்லாம் பார்த்திராத அவர், வழியில் சந்திக்கும் ஏதோ ஒரு பையன் மரணத்திற்குக் கலங்குவதும், அவனது பெற்றோர், மாதவன் தான் இரத்தம் கொடுத்தார் என்று அறிந்ததும், அவரது காலில் விழுகையில், அதிர்வுறும் அவரது உடல். மரணத்தின் வாயிலுக்கே சென்று மீண்டு வந்த கமல், இதுவும் வாழ்வின் அங்கம் தான் என்பது போல் அதிக உணர்வற்று நிற்பதும்..!

அடுத்த காட்சியில் :

  • தன்னைக் கொல்லவரும் சந்தான பாரதியைத் தான் 'பொழச்சுப் போங்க' என்று சொல்கையில், ஏற்படுகின்ற முரணை நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கிறார் கமல். அட்டகாசம்.
  • கமலைக் கொன்று விட்டதாகக் கூறியதும், நாசர் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கடவுளை நினைத்துக் கொள்ளும்போது, சந்தானபாரதி 'சட்'டென்று திரும்பி அவரைப் பார்க்கும் காட்சி, அவரது முகத்தில் தெரிகின்ற தவிப்பும், குற்றவுணர்வும்.

இப்பாடல் ஒலிக்கும் நேரங்களில் எல்லாம் பெய்கின்ற மழை, வீசுகின்ற காற்று, மெதுவான நடை எல்லாம் பாடலுக்கும், கதைக்களத்திற்குள் தாமும் ஒரு கதாபாத்திரமாக மாறி விடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வித்யாசாகர் என்ற இசைஞரின் உள்ளுக்குள் பொதிந்து கிடக்கும் மெலோடி என்ற புதையலின் ஒரு மணியாகக் கிளம்பி ஒளிக்கீற்றாய் வீசுகின்ற இசை.

தம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த நாயை (சங்கு) - தம்மைப் போல ஊனமடைந்த நாயை - தாம் போகும் இடமெல்லாம் கூட்டிச் செல்லுகின்ற இறுதிக் காட்சி, 'எதிரிகளிடமும் அன்பு காட்டுங்கள்' என்ற மேன்மொழியை நினைவூட்டுகின்றது.

தலைப்பையும் நினைவுபடுத்துகின்றது.

உங்களுக்காக மற்றுமொரு நல்ல காட்சி :





இப்படி ஒரு படம் இயக்கியது திரு. சுந்தர்.சி என்பதை நம்புவது மிகக் கடினம், அவரது முந்தைய, பிந்தைய படைப்புகளைக் காண்கையில். யார் இயக்கி இருந்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகவே இருக்கட்டும்.

பெரும்பாலான நல்ல படைப்புகளை அதன் காலத்தில் மக்கள் மதித்ததில்லை என்ற சரித்திரம் காட்டுகின்ற உண்மையை, இப்படம் வெளிவந்த போது நன்றாக ஓடாதது மெய்ப்பிக்கிறது.

இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து நினைவு கூர்கையில் இப்படத்தின் அவசியத்தையும், இது போதிக்கின்ற கருத்துக்களின் அவசர அவசியமும் ,'அன்பே சிவத்தை' அப்போது உறுதிப்படுத்தும்.

அன்பு தான் சிவம்.... வேறென்ன...?

மாயக்கயிறு.


யாரோ
விரும்பிய
பாடலை
நானும் ஏன்
கேட்க வேண்டும்?
யாரோ
இறக்க
என் வானொலி
ஏன்
கதற வேண்டும்?
யாரோ
ஒருவருக்காக
நான் ஏன்
சேமிக்க வேண்டும்?
எங்கோ
பெய்யும் மழைக்காக
என் வீட்டுக் கிணறு
ஏன்
ஆவியாக வேண்டும்?
யாரோ
கூந்தலில் சூட்ட
என் தோட்டம்
ஏன்
பூக்க வேண்டும்?
தனித்திருப்பதில்ல,
நீயும், நானும்!
தள்ளி நிற்பதில்லை
நாமும், உலகும்!
வலைப்பின்னலின்
இரு முனைகளில்
நாமிருப்பினும்,
இணைத்து இறுக்குகிறது
ஒரு
மாயக்கயிறு!

Sunday, April 29, 2007

வேறென்ன?



ருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இயக்கங்களில்
இருப்பதென்ன, இழப்பதென்ன?

ஒருவரும் அறியாத உள்மன இருளில்
ஒளிந்ததென்ன, ஒளித்ததென்ன?

விருப்போடு விளையாடிக் கழிக்கின்ற வாழ்வில்
விளைந்ததென்ன, விலகியதென்ன?

உருமாறிக் கூத்தாடும் பொழுதுகளில்
உறுத்துவதென்ன, உள்வாங்கியதென்ன?

தொலைதூரம் ஓடிவந்து தேடுகின்ற நேரங்களில்
தொலைந்ததென்ன, தொலைத்ததென்ன?

சூடான மணல் ஒதுங்க, சுட்டெரிக்கும் நிழலில் பதுங்க,
சுட்டதென்ன, விட்டதென்ன?

ஊர் வந்து உலையிலிட்டு, உதறிவிட்டுப் போன பின்பு,
உனக்கென்ன, எனக்கென்ன?

ஏதோ ஒரு புகையாகி ஏகாந்தம் ஏகிய பின்,
ஏற்றிவந்த ஓடமென்ன,
எடுத்தெறிந்த வேடமென்ன?