Saturday, August 23, 2008

ஸாரி ஆன்ட்டி - நவீனத் தமிழ்ப் படம்.

முன்குறிப்பு :: http://www.tamil.net/லிருந்து திரைப்படம் பகுப்பிலிருந்து வந்தீர்கள் எனில் மன்னிக்க வேண்டுகிறேன். காரணம் பதிவின் கடைசியில்!

சுதந்திர நாளன்று நானும், ஒரு நண்பரும் கொல்லம் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

காலை 10 மணி அளவில் ஸ்ரீகார்யத்தில் கொல்லம் செல்லும் பேருந்தைப் பிடித்து, வழியெங்கும் மரம், செடிகளுக்குள் மறைந்திருக்கும் வீடுகளையும், கல்ஃப் பைசாவில் கிளைத்திருக்கும் பங்களாக்களையும், காலின் அடியில் நழுவும் சிற்றாறுகளையும், பிங்க் ரோஸ், மென் பச்சை, மஞ்சள், வெண் நிறங்களில் அழகாக கட்டப்பட்டிருக்கும் மசூதிகளையும், லேசான புகை வெயிலாய் கூடவே பயணம் வரும் சாம்பல் மேகங்களையும் பார்த்துக் கொண்டே, பயணக் கடைசியில் கொஞ்சம் கண்ணசந்து (இரண்டு இட்லி, இரண்டு வடை!), டெர்மினஸில் 'திடுக்'கென எழுப்பப்பட்டேன்.

முன்னிரவு பெய்த மழையில் பழுப்பு ஈரம் உயிர்த்திருந்த சேறுகள் செருப்புகளை முத்தமிட்டன. பஸ் ஸ்டேஷனில் லீவுக்கு ஊருக்குப் போகும் மஞ்சள் அழகிகள் பேருந்துகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். சிவந்த ரோஸ் நிறத் தோலில் புள்ளிகள் கொண்ட பேரிளம்பெண்ணும், பேரிளம் ஆணும் வெறும் பனியனில், தொங்கிப் போயிருந்தார்கள். ஸ்நாக்ஸ் கடைப் பையன் நெற்றி கட்டை விரல் தடிம சந்தனம், குங்குமத்தில் பளிச்சென்றிருந்தது. ஸ்பீக்கரில் அறிவுப்புகள் வழிந்தன. ஆட்டோ பாட்ஷாக்கள் சவாரிக்கு கூவிக் கூவி அழைத்தனர். பஸ் ஸ்டேண்டில் இருக்கும் ஒரே தமிழ் ஓட்டலில் ஊதுவத்தி மணந்தது. சிவப்புக் கொடிகள் பளீரிட்டன. பாலத்தின் கரங்களில் காவிக் கொடிகள், நடுச் சூலாயுதத்துடன் பறந்தன.

பஸ் ஸ்டேண்டின் பின்புறமாகவே ஒரு பெரிய நீர்நிலை இருக்கிறது. அதன் கரைகளில் அரசாக படகுகள் அலையாடிக் கொண்டிருந்தன. அவற்றிலும் சிலர். டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டரில் விசாரிக்கையில், அடுத்த ட்ரிப் 12:30 என்றார்கள். காத்திருக்காமல், வேறொரு தனியார் டூரிஸ்ட் ஆஃபிஸில் கேட்க, அவர்கள் உடனடியாக ஒரு ரிக்ஷாவில் (ஆட்டோ தான் இங்கே ரிக்ஷா என்று அழைக்கப்படுகின்றது!) எங்களை பேக் செய்து ஊர் கடத்தினார்கள்.

செங்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் ஓட்டல் ஆரியபவனில் மீல்ஸ் வெட்டி விட்டு, ஆட்டோ பயணத்தை தொடர்ந்தோம். சாலிடாக ஒரு மணி நேரம் ஆட்டோவிலேயே சென்று கொண்டே இருந்தோம். ஒரு வேளை இந்த ஆட்டோ சவாரியை தான் இங்கே வாட்டர் சவாரி என்று சொல்கிறார்கள் போலும் என்று ஐயம் வரும் அளவிற்கு!

மேடு, பள்ளம், மலை, குண்டு, குழி, ஈரம், சூடு, வீடுகள், கடைகள், வயல்கள், தென்னந் தோப்புகள்.... ஜியோக்ராஃபியின் அனைத்து அம்சங்களையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, களைத்து, கடைசியில் மன்றோ ஐலண்டை அடைந்தோம்.



அங்கே ஆட்டோக்காரர் வெயிட்டிங் போட்டு விட்டார். அவரே ஒரு டாப்லெஸ் படகை புக் செய்து கொடுத்து தம்ஸ் அப் காட்டினார்.

படகு மெதுவாக நகர்ந்தது.

கொஞ்ச தூரம் கிழக்காக சென்று, டக்கென்று ஒரு லெஃப்ட் டர்ன் செய்து, ஊருக்குள் போக ஆரம்பித்தது. சில பாலங்களின் அடியில் நகர்ந்தோம். வீடுகள் அனைத்ட்யும் நீரால் சூழப்பட்ட தரைப் பகுதிகளில் இருக்கின்றன. இதே நீரிலேயே குளித்து, துவைத்து, பாத்திரங்கள் கழுவி, படகோட்டி... வாழ்கிறார்கள்.

குடிப்பதற்கு தனியாக அண்டர் வாட்டர் பைப்லைன்கள் போகின்றன.

ஒரு டீக்கடையில் வண்டி ஹால்ட் செய்தது. (வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி குடிக்கலாம்.) சாயா, நேந்திரம்பழம், சில வாசனைப் பாக்கெட்டுகள், வில்ஸ் வாங்கிக் கொண்டோம். சாயா குடிக்கும் போது, செய்தித் தாள்களில் ஒரு பார்வையை வீச, நயன் தாராவின் பளீர் முதுகு, ஓணம் விழாக்கோல விளம்பரங்கள், கிரிக்கெட் சீரிஸின் கலவர நிலவரங்களின் அனலிஸிஸ், சிவப்பு போராட்ட அறைகூவல்கள்.

அருகிலேயே கய்று முடைதல் எப்படி என்று காட்டுவதாகவும் விஜு - படகு ஓட்டுநர் - அழைத்துச் சென்றார்.

முன்னாள் பொலிட்டிஷியன்ஸா என்று கேட்கத் தோன்றியது. அவ்வளவு அருமையாக கயிறு திரிக்கிறார்கள். கூடையில் தேங்காய் நார்களைக் கொட்டி, அடைத்து, ஓர் ஆணியில் லேசாக இழுத்துக் கட்ட, காந்தி ராட்டினம் போல் ஒருவர் சக்கரத்தை சுழற்ற, கூடை அம்மணிகள் பின்னோக்கி நகர, நகர, கூடையிலிருந்து மாயக்கயிறு கிளம்பி வருகின்றது.

முண்டு அணிந்த பாட்டிமார்கள் நமஸ்காரம் என்றார்கள். நாம் வணக்கம் வைத்தோம். பெரும்பாலும் காயிர் பவனுக்கு போகும். சிறுபாலும் இதர வீட்டு உபயோகப் பொருட்களாக மாறும் என்றார்கள். பாத்திரம் தேய்க்கவும், குளிக்கையில் உடல் அழுக்கு போக அழுந்தித் தேய்க்கவும் தவிர தேங்காய் நாருக்கு இப்படி ஓர் உபயோகம் இருப்பதை நேரில் அறிந்து கொண்டோம்.

போட்டோ எடுக்கையில் கொஞ்சம் போல் வெட்கினார்கள். சக்கரம் சுழற்றும் தாத்தா சிரித்தார்.

தாழ படர்ந்த மரங்களை விலக்கிக் கொண்டும், திருப்பங்களில் இலாவகமாக திரும்பியும், கரைக்கோயிலில் இருந்து கரைந்து வந்த மலையாள மந்திரங்களைக் கேட்டும், ஆங்காங்கே பாத்தி கட்டிப் பிரிக்கப்பட்டிருந்த தண்ணீர்க் காடுகளைக் கண்டும் (மீன் வெளியே போகாமல் இருக்க!), தாமரைக் குளங்களைப் பார்த்தும் தொடர்ந்தோம்.



ஒரு ஸ்டாப்பில் நிறுத்தி, பல செடிகளைக் காட்டினார். கற்பூரத் துளசி, மஞ்சள், சில கீரைகள், எள்.

ஒரு ஜங்ஷனில் எதிரில் ஒரு படகு வந்தது. இரு சிறுவர்கள் ஓட்டினார்கள். கேட்டதற்கு அவர்கள் படகோட்ட கற்கிறார்களாம். எப்படி குரங்கு பெடல் அடிப்பார்கள் என்று தோன்றியது.

ஒரு டர்ன் அடிக்கும் போது, கரை வீட்டின் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த வாண்டுகள், 'நமஸ்காரம்' என்றார்கள். 'நமஸ்காரம்' என்றோம். அடுத்து 'Welcome to India. Welcome to Kerala' என்றார்கள். அடப்பாவிகளா, 'வெள்ளைக்கரன் என்றே முடிவு செய்து விட்டார்களா?' என்று கேட்டேன். நண்பர், 'அப்படி அல்ல. அடிக்கிற வெயிலில் அரை இஞ்சுக்கு மேல் தோல் கருத்து விட்டது. அதனால் ஆப்ரிக்கர்கள் என்று நினைத்திருப்பர்' என்றான்.

அப்படி ஒரு வெயில்! டாப்லெஸ் போட் வேறேயா! கலர் காம்ப்ளெக்ஷன், ரொம்ப காம்ப்ளக்ஸ் ஆக போய்க் கொண்டிருந்தது.

சில வீடுகளின் கரையில் உடைந்த போட்டுகள் கோணமாக நீரில் சரிந்து கிடந்தன. அவற்றுள் மஞ்சள் கலந்த பழைய நீர். தலைப்பிரட்டைகள், மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. அந்த உடைந்த, கறுத்த வயதான படகுகளைப் பார்க்கையில் ஊரில் இருக்கும் யாரும் பயன்படுத்தாத, காற்று போன, தூசு மண்டிக் கிடக்கும் அப்பாவின் சைக்கிள் நினைவுக்கு வந்தது.



படகுப் போக்குவரத்து எவ்வளவு இலகுவானது?

பெட்ரோல் போட வேண்டியதில்லை; சைடு லாக், மெய்ன் லாக் தொந்தரவில்லை; காற்றடிக்க வேண்டியதில்லை; படகு வலிக்க, வலிக்க தோள் முட்டுகள் இறுகுவதை உணர முடிகின்றது. ஏறிப் படுத்துக் கொண்டால், படகே தாலாட்டும். ட்ராஃபிக் சிக்னல்கள் இல்லை. என்ன, திருப்பங்களில் வளையும் போது மட்டும் கொஞ்சம் நியூட்டன் மூன்றாம் விதியை நம்பி அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

படகுகள் இவர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு முக்கியமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால்,

'டேய் இவனே, ஓட்டிப் போய் அச்சுதன் கடையில மஞ்ஞ கால் கிலோவும், தேங்ஙா எண்ணெய் அரை லிட்டரும் வாங்கிட்டு வாடா..'

'போம்மா, நான் வாட்டர் போலோ விளையாடப் போறேன். சைலேஷும், பிஜுவும் வந்துட்டாங்க. நானும் கிருஷ்ணன் வீட்டுக்கு போகப் போறேன்.'

'இத வாங்கி குடுத்திட்டு போயேண்டா. இல்லாட்டி போட்டை கட்டி வெச்சிடுவேன்'

'என்னம்மா..! உன்னோட உபத்திரவமாப் போச்சு! நீயே போய் வாங்கிக்க மாட்டியா?'

'எனக்கு போட் வலிக்க தெரியாதேடா! இப்ப நீ வாங்கிட்டு வந்தயினா வர்ற ஓணத்துக்கு உனக்கு குட்டி போட் வாங்கித் தர சொல்லி அச்சன்ட்ட சொல்லுவேன். இல்லாட்டி, கிடையாது. என்ன சொல்ற?'

'ஹை! எனக்கு குட்டி போட். அம்மே! காசு குடு. நான் போய்ட்டு வர்றேன். பெரிய போட் அச்சனுக்கு. குட்டி போட் அக்குவுக்கு! சீக்கிரம் கொண்டா! நான் பிஜுவுக்கு கால் பண்ணி சொல்லிடறேன். என் செல்போனை பெட்ரூம்ல சார்ஜ் போட்டிருக்கேன் பார். அதையும் எடுத்திட்டு வா..!'

இங்கிருப்பவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். விஜு, எல்லாம் குவைத் காசு என்றார். அங்கிருந்து மகன் பணம் அனுப்ப, இங்கே ஏஷியாநெட் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இன்னும் மீன் பிடித்து வாழ்வதாகவும் கூறினார்.



மீண்டும் பல டர்ன்கள் எடுத்து, கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். அவருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து மீண்டும் ஆட்டோவில் ஒரு மணி நேரப் பயணம்.

கொல்லம் பஸ் ஸ்டேண்ட் வந்து மீண்டும் திருவனந்தபுரம் செல்ல கிளம்புகையில், ரோட் ப்ளாக்.

ஐ.யு.டி.ஸி.யின் ஊர்வலம். எதற்காக என்று தெரியவில்லை. பல பஸ்கள் ஆங்காங்கே கூட்டத்தில் சிக்கி, இஞ்சினை ஆஃப் செய்திருந்தன.

எங்கள் பஸ் ட்ரைவர் சாமர்த்தியமாக, வேறொரு பாதையைப் பிடித்து, கொஞ்சம் சுற்றி, மீண்டும் மெய்ன் ட்ராக்கைப் பிடித்து, சல்....!

வழியில் தசாவதாரம் பற்றி, 'புரியவில்லை' என்று நண்பர் கேட்க, நானும் எனக்குத் தெரிந்த 'Schrodinger's Cat, Fractals, Chaos Theory, Butterfly Effect' என்று எடுத்து விட்டேன். ரிலேட்டிவிட்டி படி, நான் சொன்னதை விட, தசாவதாரம் எளிதாக இருந்திருக்க வேண்டும். புரிந்தது என்றார். இன்னும் தெளிவாக வேண்டும் என்றால், தமிழ் ப்ளாகோஸ்பியரில் 'தசாவதாரம் விமர்சனம்' என்று தேடிப் பார். சுத்தமாகப் புரிந்து விடும் என்றேன். தலையாட்டினார்.

ஐயோ பாவம்...!

ன்று இரவே, பத்து மணிக்கு ஸ்ரீகார்யத்தில் பஸ் பிடித்து, சும்மா பறந்து பறந்து நான்கே மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம். (வழமையாக ஸ்ரீகார்யத்தில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகும் என்பதறிக!)

நெல்லையில் ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. சில குறிப்புகள் மட்டும்.

* சென்ட்ரலில் 'ஆசைமுகம்'. எம்.ஜி.ஆர். மற்றும் சரோஜா தேவி நடித்த படம் என்று தெரிந்தது. ஆனால் பேர் இதுவரை கேள்விப்படாத மாதிரியே இருந்தது. அடர் நிறங்களில் இருவர் மட்டும். வேறு முகங்களே போஸ்டர்களில் இல்லை.

*சிவசக்தியில் 'ஸாரி ஆன்ட்டி'. இளம் மீசை இளைஞன், பெருத்த பெண்ணின் இடையில் கை கோர்த்திருக்க, விலகிய முந்தானை பெண் சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர்.

இப்படங்கள் நவீன தமிழ்ப் படங்கள் என்றால், நான் ஒத்துக் கொள்வேன்.

வாசகர் இடைவெளி வேண்டும் என்று இலக்கியவாதிகள் கூறுவது இது போன்ற படங்களுக்கு பொருந்தும். முற்றிலுமாக, கடைசி வரை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆங்கில, வசனம் அற்ற, வெறும் ஆக்ஷன் படங்களில் பார்ப்பவரின் சிந்தனைக்கு என்ன வேலை இருக்கின்றது?

ஆனால், 'ஸாரி ஆன்ட்டி', 'ட்யூஷன் டீச்சர்' படங்களில் ஒரு புள்ளியில் காட்சி முடிந்து, பிறகு இருவரும் வெட்கத்தோடு வெளியேறும் போது, விளக்கை அணைத்து கறுப்பாய் திரையை நிறைக்கும் போது, திறந்த கதவுகள் தாமாக சாத்திக் கொள்ளும் போது, என்ன நடக்கும் என்று பார்ப்பவரின் சிந்தனை வேலை செய்ய வைக்கப்படுகின்றது அல்லவா?

இந்த ரசிகர் இடைவெளியைக் கொடுப்பதால், இந்த மினி பட்ஜெட் படங்களை நவீனத்துவப் படங்கள் என்று யாரேனும் சொன்னால், கண்டிப்பாக என்பேன்.

*ஜங்ஷன் பஸ் ஸ்டேண்டில், இரண்டு பழைய புத்தக ப்ளாட்பார விரிப்புகளைப் பார்த்து வைத்திருந்தேன், முன்பே! இந்த முறை அங்கே தேடுதல் நடத்திய போது, 95% பாட புத்தகங்கள். நம்ப மாட்டீர்கள், வான் நீலம் மற்றும் அடர் பழுப்பு நிற அட்டைகளில் Log Books (நினைவிருக்கிறதா?) நான்கைந்து வரிசைகளில் இருந்தன.

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமாக, எலெக்ட்ரிக்கல், ஜூனியர் நாவல், சூப்பர் நாவல், ரோமியோ - ஜூலியட், தமிழ் இளங்கலை, திருக்குறள் - பரிமேலழகர், இளமை விருந்து, அட்லஸ், சுவிசேஷ அழைப்பு, The American Literature - I and II, விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் என்று கலப்படமாக இருந்தன.

தேடிப் பார்த்து, கலைத்து சில புத்தகங்கள் வாங்கினேன்.

$ இலக்கியமும், பண்பாட்டு மரபுகளும் - பா.ஆனந்தகுமார். ஆர்.ஷோபனா, IInd B.Sc. முதல் பக்க நடுவில் Showbana என்று எழுதி இருக்கிறது. விஷமம்.

$ Rabindranath Tagore Gitanjali (A Critical Study) - Dr.Raghukul Tilak. - Jayalakshmi Book Shop, 6, Pudumandapam, Madurai - 1 என்று ரப்பர் ஸ்டாம்ப் உள்ளது.

$ The Adventures of Tom Sawyer - Mark Twain. தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

$ முன்னட்டை, பின்னட்டைப் படங்கள் உருவப்பட்டு வெள்ளையாய் இருந்த ஒரு புத்தகத்தை விரித்துப் பார்க்க வாங்கினேன், 'கிரிக்கெட் சிங்கம் கபில்தேவ்'. வாழ்க்கை வரலாற்று நூல்.

$ ஆய்வுக் கட்டுரைகள் - டாக்டர்.அ.கா.பெருமாள். நல்ல கட்டுரைகள் இதில் இருக்கின்றன. இதிலும் ரகம், ரகமாய் எழுதுபொருட்கள். நந்தனார் கதையின் வேறுவேறு (வெவ்வேறு என்று சொல்லக் கூடாதா?) வடிவங்கள், கவிஞர் ந.பிச்சமூர்த்தி, தெருக்கூத்து, செண்பகராமன் பள்ளு, ஒரு யதார்த்த நாவல், வையாபுரிப் பிள்ளையின் தமிழ்ப்பணி என்று!

$ 1966-ல் MIR Publishers-ஆல் பதிக்கப்பட்ட PHYSICS AND MUSIC. Gleb Anfilov ருஷ்ய மொழியில் எழுதி, Boris Kuznetsov-ஆல் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது.

$ Anton Chekov, O'Henry, Guy De Maupassant, Leo Tolstoy, Oscar Wilde, R.K.Narayan, Issac Asimov, Munshi Premchand, D.H.Lawrence, Somerset Maugham ஆகியோரின் சிறந்த கதைகள் என்று தாம் கருதுபவற்றை தொகுத்து, கூட தனது Most Beautiful என்ற கதையையும் இணைத்து ஒரு 168 (13*13 - 1) பக்க நூலாக இருந்த, Ruskin Bondன் Immortal Stories, நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டேண்டில் எனக்கு கிடைக்க காரணமாக இருந்த C.N.Kalyan, IX-C என்ற மாணவரின் வாழ்க்கையில் இக்கதைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்?

$ அனைத்திலும் சுவாரஸ்யமான புத்தகம் அடுத்தது.

வேரும் விழுதும். தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் இருந்து டாக்டர் ஆர்.மரியசெல்வம் எம்.பி.பி.எஸ்., டி.சி.சி.பி., எப்,சி.ஐ.பி., எழுதி இருக்கிறார். நிஜமாலும் டாக்டர். (டாக்டர் விஜய் போன்று அல்ல!) இத்தனை எழுத்துக்களில் மருத்துவம் படித்து, எல்லோர்க்கும் ஊசி போட்டுக் கொண்டிருப்பவர், தமிழ்த் திரைப்படங்களில் சங்ககாலப் பாடல்கள் எப்படி எல்லாம் 'எடுத்தாளப் பட்டிருக்கின்றன' என்று எக்கச்சக்க உதாரணங்களுடன் எழுதி இருக்கிறார்.

என்னுரையில், '... பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும் தழுவித் திரைப்படப் பாடலாசிரியர்கள் படைக்கும் பாடல்களைப் பற்றி பலவகையான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன என்பதை பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அன்றாடம் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. நமது தமிழ்ப் பண்பாட்டை, பழமையின் பெருமையை உணர்ந்து கொள்ள திரையுலகக் கவிஞர்களின் இத்தகைய முயற்சி வித்தாக அமைந்து சிறப்புச் செய்கின்றது என்ற சீரிய எண்ணம் நம் உள்ளங்களில் மலர்ந்தால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்கலாம்..' என்று சொல்லி விடுகிறார்.

அணிந்துரையில் வைரமுத்து உஷாராக '... திரையிசைப்பாடல்களில் ஆங்காங்கே தெறித்து விழுந்திருக்கிற சங்க இலக்கியத்தின் தேந்துளிகளைத் திரட்டித் தந்திருக்கிற ...' என்று எஸ்கேப்பாகி விடுகிறார்.

இறைவன், வாழ்க்கைத் துணைவி, திருமணம்,நட்பாராய்தல், நாணமும் காமமும் - கேட்டகிரி வரிசையாக போட்டு எல்லோரையும் நன்றாக வாரி இருக்கிறார்.

உதா ::

1. மாட்டுப்பால் போட்டா மறுவழிஞ்சு போகுமின்னு
ஆட்டுபால் போட்டா அறிவழிஞ்சு போகுமின்னு
கலையம் கழுவி காராம் பசுக்கறந்து
அடுப்பு மெழுகி அரும்பரும்பாக் கோலமிட்டு
செம்பு விளக்கி சிறுஉமி பரப்பி
தங்க வெறகொடிச்சி வெங்கலத்தால் பால்காச்சி
பொன்னு சங்கெடுத்து போட்டாராம் உன்மாமன்

-நாட்டுப் பாடல்.

2. இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகிற்கெல்லாம்
உய்வண்ணமன்றி மற்றோர் துயர்வண்ணம் வருவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே நின்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

- கம்பர்.

3.அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல் வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவங்களே
- பட்டினத்தார்.

4. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்து வகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை எழுதிவச்சு படிக்கவில்லை
வாயிலே வந்தபடி வகையுடன் நான் படிப்பேன்
-நாட்டுப் பாடல்.

5. இஞ்சி இடுப்பழகா எலுமிச்சங்காய் மாரழகா
மஞ்சச் சிவப்பழகா மறக்க மனம் கூடுதில்லை.
-நாட்டுப் பாடல்.

இவற்றுக்கான திரைப் பாடல்கள் உங்களுக்கே தெரிந்திருக்கும் என்பதால் அவற்றை எழுதவில்லை.

குறை சொல்ல முடியாத பணி இது. ஒவ்வொரு பாடலுக்கும் கீழே எந்த இலக்கியம், எந்த சங்க நூல் தொகுப்பு என்று மீத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் டாக்டர்.

செமத்தியான ஊசி!

க.க.ப.வின் முதல் கட்டுரை, தமிழ் சினிமா. அதில் வாத்தியார் கூறியதில் இருந்து சில வரிகள் ::

'... கண்ணதாசனின் ஆழ்வார், கம்பர் இவர்களிலிருந்து முழுதாக எடுத்து தமிழ் தேசிய உருவம் கொடுத்து, மெட்டுக்குள் திணிக்கப்பட்ட பாடல்கள். வாலி! கேட்க வேண்டாம். காப்பி அடிப்பவரைக் காப்பி அடித்து அரைகுறை யாப்பிலக்கணப்படி அசிங்கமான எதுகை, மோனைகள் அமைந்த பாடல்கள்...'

டுத்த நாள் திருச்செந்தூர் சென்றோம்.

சில இடங்களில் காய்ந்தும் சில இடங்களில் வயல்களுமாக (இந்த வயல்கள் எல்லாம் வீடானால், புவ்வாவுக்கு?) இருந்தது. மொட்டை வெயில் காய்ச்சி எடுத்தது.

கோயில் சுற்றுப்புறம் அத்தனை குப்பை முதல் அதிர்ச்சி. முடி எடுக்கும் இடத்தைக் க்டந்து தான் கோயிலுக்குப் போக வேண்டும் என்பது இரண்டாவது. அலைகள் மிகக் குறைவான கடலில் குளியல் பலர்.



கோயிலில் சட்டையைக் கழட்டி உள் செல்ல, வியர்வை பொங்கியது. சதைகள் உரசி, எரிய, பேனின் மூன்று கரங்கள் போதவில்லை. திடீரென கரண்ட் கட்டானவுடன் 'ஓஓ...' என்று -கத்தல். கோயிலா, ஹாஸ்டலா என்ற சந்தேகம். ஒரு மாதிரி உள்ளே சென்று இராஜ அலங்காரத்தில் சுப்ரமணிய ஸ்வாமியைப் பார்த்த பின்... ஹப்பாடா...!

செந்தூரில் கவனத்தைக் கவர்ந்த ஒரு விஷயம், ஊரின் பஸ் ஸ்டேண்ட் நுழைவாயில் ஆர்க்கில், 'தியாகி பகத்சிங் பேருந்து நிலையம்'. ஜலந்தர் பஸ் ஸ்டேண்டில் 'வீரன் வ.உ.சி. பேருந்து நிலையம்' என்று இருக்குமா என்ற ஓர் அனாவசிய சந்தேகம் வந்தது.



மீண்டும் மாலை ஐந்து மணிக்கு கிளம்பி, ஸ்ரீகார்யம் வர இரவு பதினொன்று ஆகி இருந்தது. வீட்டுக்கு அருகில் படுத்திருந்த நிர்வாண நாய்கள் நிமிர்ந்து பார்த்து, மீண்டும் கவிழ்ந்து கொண்டன.

குரைக்கவே இல்லை.

Richard Marx - Repeat Offender - Right Here Waiting ::




Oceans apart day after day
And I slowly go insane
I hear your voice on the line
But it doesn't stop the pain

If I see you next to never
How can we say forever

Wherever you go
Whatever you do
I will be right here waiting for you
Whatever it takes
Or how my heart breaks
I will be right here waiting for you

I took for granted, all the times
That I though would last somehow
I hear the laughter, I taste the tears
But I can't get near you now

Oh, can't you see it baby
You've got me goin' CrAzY

Wherever you go
Whatever you do
I will be right here waiting for you
Whatever it takes
Or how my heart breaks
I will be right here waiting for you

I wonder how we can survive
This romance
But in the end if I'm with you
I'll take the chance

Oh, can't you see it baby
You've got me goin' cRaZy

Wherever you go
Whatever you do
I will be right here waiting for you
Whatever it takes
Or how my heart breaks
I will be right here waiting for you


பாடல் வரிகள் நன்றி :: http://www.lyrics007.com/

பாடலின் துவக்க இசை உங்களுக்கு யுவனை நினைவுறுத்தினால், நான் பொறுப்பல்ல.

****

பின்குறிப்பு :: எக்கச்சக்கமான பேர் http://www.tamil.net/லிருந்து வந்திருப்பதாக எனது வருகைப் பதிவேடு சொல்கிறது. வழக்கமாக 10 பேர் பார்ப்பதாக காட்டும். அதில் 7 என்னுடைய அட்டெண்டன்ஸ். மற்றபடி வெறும் ஈ ஓடிக் கொண்டிருக்கும்.

இன்று 175-ஐத் தாண்டி ஓடுகிறது. எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள், அப்படி எதையும் காணாமல் வெறுத்துப் போயிருப்பின் மிகவும் வருந்துகிறேன். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேல் இது போன்ற தலைப்பு கொடுப்பதற்கு முன் பலமுறை யோசிக்கிறேன். மறுபடியும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, August 21, 2008

யாரோ தனிமையாய்...!



குன்றின் முகட்டில் முட்டி விட்டுப் போகின்றன சில முகில்கள். தொட்டவுடன் மெல்ல விலகிச் செல்லும் போது நீ சிந்திச் செல்லும் குரல் போல், சில குளிர்த் துளிகள் மேலே தெறிக்கின்றன. குளிர்கின்றது. உச்சி மரங்கள் தலையாட்டுகின்றன. இன்னும் கொஞ்சம் சிதறுகின்றன.

கீழே இறங்கத் தொடங்குகிறோம்.

பாதைகளில் மஞ்சள் நிறப் பூக்கள் கொட்டி இருக்கின்றன. ஈரக் காற்று குளிர் பாய்ச்சுகிறது. சரம் சரமாய் நீர்த் துளிகள் தூளி கட்டி இதம் தூவுகின்றன. ரசமான ஒரு ஓசை காட்டின் தீவிர மையத்தில் இருந்து எல்லாப் பக்கமும் பரவிக் களிப்பேற்படுத்துகின்றது.

நிஜம் போல் ஒரு தோற்ற நெருக்கத்தில் கைகள் கோர்த்துக் கொண்ட போது, கிளர்ந்தது ஒரு மின்னல் வானில்!

ரிதம் இசைக்கச் சென்ற சில குயில்கள் கூடுகள் அற்ற கிளைகளில் அமர்ந்து தங்கள் குரல்களில் செழுமையான இன்பம் அளிக்க முயல்கையில், முயக்கம் தரும் வகையில் உதடுகள் பின்னிப் பிணைய இடைவெளிகள் இன்மையாகின்றன.

காற்றும் நுழையப் பார்த்து, தோற்று, விரக்தியுற்று, விசையுடன் விலகி, விழைந்து பின் நகர்ந்து சென்ற பின், நம் காதல் இடையூறின்றி இதழூறுகின்றது.

சிலிர்ப்பூட்டும் கணங்கள் மெல்லென்று நழுவி, விழிகளின் இழைகள் தம் இடங்களில் இணைந்து, பிற பகல்களில் நிரந்தரத் துகள்களாய் நின்ற ப்ரதேசங்கள் உயிர்ப்பு பொழுதுக்கு வழுவி, வெம்மைக்குப் பழுதென்று இருள் மூடிக் கொள்ளத் தொடங்கும் கானகத்தின் புற்கூண்டுகளில், புதைகின்றோம் சில முத்த நேரங்களை உடன் கொண்டு, உடல் கொண்டு!

ரகஸ்ய சொற்கள் தடம் மாறுகின்றன. முழுதாக பொருள் புரியாவிடினும், ஏனென்று கேட்க முடிகின்ற நேரத்தில் இன்னும் சில துளிகளில் இடப் பெயர்ச்சி, இதழ்ப் பெயர்ச்சி மூலம்!

பாத விரல்கள் குனிதலும், நிமிர்தலும், சாய்தலும், ஓய்தலும், காய்தலுமாய் தத்தம் கணங்களில் திளைக்கின்றன.

இதயத் துடிப்புகள் முகம் வழியாக ஊடுறுவிக் கேட்கின்றன. விரல்களின் இடைவெளிகளில் ரேகைகள் ஒத்த தடங்களில் ஒன்றிப் போகும் கீத காலத்தில் மற்றும் ஒரு முறை மழை பிரவாகிக்கின்றன.

வானகம் எங்கும் வசந்தம் துளிகள் வழிகின்ற உயிர்க் காட்டின் இடைவெளிகளில், இடைஞ்சல் இன்றி நகர்கின்ற பொருத்தக் காலத்தின் கால்கள் கட்டிப் போட்ட பின், செவி வழி உள் நுழைகின்ற வியர்வை வெப்பம் துளிர்க்கின்றது,

பொட்டு போதை!

படம் நன்றி :: http://i137.photobucket.com/albums/q222/gerardperales/TheKiss-11Blacklightview.jpg

Wednesday, August 20, 2008

சென்னை - நல்லா இரு கண்ணு!

கஸ்ட் 22 - சென்னை மாநகரின் 369-வது (3 + 6 = 9!) பிறந்த நாள். ஆகவே கொண்டாட ஒரு கவிதை...!

ஐஸு ஹவுஸு ட்ராக்காண்ட நிக்குற ஃபிகரு கில்மா வய்ஸு!
பாக்க சொல்ல பளக சொல்ல அது பாடி ரொம்ப நைஸு!

டாவடிக்குற பொண்ணுக்கெல்லாம் டைசன் மாரி அப்பன்! அது
பாவம் போல பாக்க சொல்ல பத்திக்குறானே குப்பன்!

தள்ளினு வர பொண்ணிருந்தா ஜில்லுங்குது பீச்சு வெயிலு!
அள்ளினு போ ஆத்து தண்ணினு அசத்துது அந்த குயிலு!

ஈ.ஸி.ஆரு தோப்புக்குள்ள ஒதுங்கும் ஜோடி வேஸ்டு!
ஏ.ஸி. போட்ட தேட்டருக்குள்ள இருக்குது நம்ம டேஸ்டு!

ஸ்பென்ஸரு, சிட்டி சென்டருக்குள்ள லுங்கி கட்டினு போனா,
பாக்கறதில்ல, பாயா ஊத்தற ஆயா போலி ருக்கற மீனா!

கோயம்பேட்டுக்கு போனதால கொறயுது கார்னர் மவுஸு!
கோலி தண்டு காலந் தொட்டு கொறயல எங்க ரவுஸு!

ட்ரிப்ளிகேன் மெட்ரோ ட்ரூப்பு, ஐலண்ட் குப்பம் கானா க்ரூப்பு மோதிக்கிட்டா வாடா!
க்ரிப்பில்லாம பாட சொல்லோ காது கிளிஞ்சு போனா, எறியலான்டா சோடா!

மோதிப் புட்ச்ச கறுத்த மீன வறுத்து விக்கப் பாத்தா,
பாதி வெலைக்கு கேக்க றான்டா, சொல்லு 'போடாங் ***'!

ரிச்சா, ஆட்டோ, டாக்ஸி, ட்ரெயினு எத்து வேணா உண்டு!
ரிச்சா போக ஆசப்பட்டா இருக்கு ஏர்போர்ட் ரெண்டு!

கானா, டிஸ்கோ, பாப்பு, ராப்பு, சல்ஸா, ஜிம்மு, தாச்சி,
போனா ஃபிட்டாகும், அல்லாம் துட்டாகும், பர்ஸு பணமா காச்சி!

கூவமிருக்கு கோட்டயிருக்கு தில்லிருந்தா போலாம் மன்சா!
பாவம் செய்ய பயமில்லனா எப்பயும் வாளலாம் குன்ஸா!

சப்பாத்தி எட்த்து சால்னா தொட்டு நாஷ்டா துன்னா போதும்!
அப்பால பாக்கலாம், டயர்டானேன், ஹாயா தூங்கப் போணும்!

Advanced Birthday Wishes, Chennai...!!!