தலைவர் ஒருமுறை ஒரு கடைக்குப் போனார். அங்கே ஆறு ரூபாய் எம்.ஆர்.பி. உள்ள ஒரு சாக்லேட் பட்டையை வாங்க முயற்சித்தார். கடைக்கார அம்மாவிடம் பத்து நிமிடம் பேரம் பேசினார். அவருக்கு தலைவரைப் பற்றி நான்கு வருடங்களாக நன்றாகத் தெரிந்திருந்ததால், அமைதியாக நின்றார். களைத்துப் போன தலைவர், 'சந்தர்ப்பம் கிடைக்கட்டும், பழி வாங்குகிறேன்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு, பத்து ரூபாய் நோட்டை நீட்டி அந்தப் பட்டையை வாங்கிக் கொண்டார்.
அந்த அம்மா சில்லரைப் பெட்டியைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து விட்டு, 'ஏப்பா, ஒரு ருபா இருந்தாக் குடு' என்று கேட்டார். தலைவர் பாக்கெட்டில் இருபது பைசாவில் இருந்து ஐநூறு ரூபாய் வரை எப்போதும் இருக்கும். ஆனால் வேண்டுமென்றே, 'ஒரு ருபா இல்லையே..' என்று சோகமாகச் சொன்னார்.
அந்த அம்மா பிறகு சில்லறைப் பெட்டியைத் திரட்டி, நான்கு ஒரு ரூபா காயின்களைக் கொடுத்தார். வந்ததே கோபம் தலைவருக்கு..!
'ஏங்க...! அதான் உங்ககிட்டயே இவ்ளோ ஒரு ரூபா காயின் இருக்கே..! என்கிட்ட ஏன் கேட்டீங்க..!' என்று கோபமாகச் சொல்லி விட்டு திரும்பி நடந்தார்.
அந்த அம்மா திகைத்துப் போய் நின்றார்.
Welcome to Thalaivar's Comedy Ground - EZoo...!!!!
தலைவர் எங்களுடன் நான்காண்டுகள் கல்லூரியில் படித்தார். அல்லது அவருடன் நாங்கள் நான்காண்டுகள் இருந்தோம். தலைவரின் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது, திணறிப் போயிருக்கிறோம். தலைவர் செய்யும் பல% காரியங்கள் மெகா காமெடியாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை வெகு சீரியஸாகச் செய்வார்.
தலைவருக்கு நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்; நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் எப்போதும் இருந்தது. நாங்களும் தலைவரை கலாய்க்கவே கூடாது என்று முடிவு செய்து ஒரு நாளைத் துவக்கினால், தலைவர் அன்றைக்கு நான்கு பேரிடமாவது வாய் விட்டு மாட்டிக் கொள்வார்.
தலைவரைக் கலாய்த்தலை நாங்களே செய்ததை விட, ஒரு ப்ரொஃபஸர் செய்ததைச் சொல்லி, தலைவரின் திருவிளையாடல்களை அவ்வப்போது பார்ப்போம்.
தலைவர் காலேஜ் முடித்து விட்டு, கனடாவிற்குச் சென்று
எம்.எஸ். எம்.பி.ஏ., (updated) செய்வது என்ற சீரிய முடிவிற்கு வந்தார். கனடா பல்கலைகழகங்கள் மட்டுமே அந்தத் தகுதியைப் பெற்றுள்ளன என்பது தலைவரின் உறுதியான, இறுதியான அபிப்ராயம். நன்றாகப் படித்து, மிக அதிக சி.ஜி.பி.ஏ., எடுத்து ஜி.ஆர்.இ., டோஃபல் போன்ற கொடுமைகளை எல்லாம் சந்தித்து, பின் ப்ரொஃபஸர்களிடம் ரெக்கோவிற்காக மக்கள் அலைவதைக் கண்டு, தலைவர் யோசித்து, பிள்ளையார் போல் முதலில் ரெக்கோ ஒன்று வாங்கி வைத்துக் கொள்வோம்; எக்ஸாம்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ரொம்ப நாட்கள் சிந்தித்து ஒரு ப்ரொஃபஸரைப் 'போக்கிரி'யுடன் சென்று சந்தித்தார்.
ரெக்கோவை இவர்களே தயார் செய்து விட்டார்கள். அதில் அவர் சைன் மட்டும் போட்டால் போதும். அடுத்த ஃப்ளைட் பிடித்து விடலாம்.
ப்ரொஃபஸர் தலைவரின் ரெக்கோ ஷீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் தலைவர் மானாவாரியாகப் புகுந்து விளையாடி இருந்தார்.
'மேற்கண்ட மாணவன் நல்லவன்; வல்லவன்; நாலும் தெரிந்தவன்; வகுப்பு மணியடிப்பதற்கு முன் பெஞ்சில் இருப்பான்; டிப்பார்ட்மெண்ட் மெயின் கேட் சாவி ஒரு டூப்ளிகேட் இவனிடம் இருக்கும்; லேபில் முதல் ரிசல்ட் இவன் தான் காட்டுவான்; ராத்திரி ரொம்ப நேரம் ஆன பின்னாலும் போன் செய்து சந்தேகம் கேட்பான்; அஸைன்மெண்டுகளை சொன்ன தேதியில் முதலில் சப்மிட் செய்வான்; இவனுக்கு ஆராய்ச்சியில் மிக ஆர்வம்; வெர்னியர் ஸ்கேலை வைத்து வெப்பம் அளக்க முடியுமா என்று ஒரு நாள் ஆராய்ந்தான்; மொத்தத்தில் தலைவர் ஒரு சூப்பர் மாணவர்; எனவே To whomsoever it may concern' என்று ஆரம்பித்து தலைவரைச் சேர்த்துக் கொண்டால் உங்கள் பல்கலைக்கழகம் எங்கேயோ போய் விடும்; தலைவரைச் சேர்த்துக் கொள்வது நீங்கள் போன பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்' என்று முடித்திருந்தது.
ப்ரொபஸர் முழு பக்கத்தையும் படித்து விட்டு, தலைவரைப் பார்த்தார். தலைவர் வெகு ஆர்வமாய் அவர் முகத்தையே பார்த்தார்.
ப்ரொபஸர் மீண்டும் அந்தப் பக்கத்தைப் படித்து விட்டு, பேப்பரை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார். தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன சார் தேடறீங்க..?"
"இல்ல... எல்லாம் எழுதி இருக்கு..! ஒரு வரி மிஸ் ஆகுதே..!"
தலைவருக்குப் புல்லரித்தது. ஆஹா..! இவ்வளவு அக்கறையா நம் மேல் என்று எண்ணிக் கொண்டு,
"என்ன லைன் சார்..?"
அப்போது ஜெயம் படம் வந்து வெகு ஹிட்!
"கடைசியா இதுவரை 'விட்டதெல்லாம் ரீலு..' ங்கற லைனைக் காணோமே..!" என்று கேட்டார்.
தலைவர் இருக்கின்றார்...!!!!!!