Thursday, November 24, 2016

நீலாம்பல் நெடுமலர்.3.


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

நேற்று முகில்கொண்டோம் இன்று மழைகொண்டோம்
ஊற்றுடல் தின்றோம் உதிரருசி ஓநாயைக்
கொண்ட விரல்கள் நமது.

மொட்டாய் மலராகி மெட்டாய் இசையாகி
தொட்டாய் விழைவாகிச் சிட்டாய் விரைதலில்
நட்டாய், அடைந்தேன் நலன்.

வாசமலர் வீசிடு வர்ணமஞ்சள் பூசிடு
நேசமொழி பேசிடு நெஞ்சில் முகிழ்த்த
நினைவெலாம் நின்றெழெட் டும்.

எடுக்கையில் கொண்டது எண்ணிய ஒன்றே
தொடுக்கையில் சென்றது ஒன்றே பலவாய்
விடுக்கையில் பல்லா யிரம்.


நேரிசைச் சிந்தியல் வெண்பா::

வாட்டுதல் உன்னிருப்பு வன்கனலோ உன்னின்மை
மூட்டுதல் உன்விழிகள் முட்சரம் பூட்டுவதோ
வேட்டுவனை வெல்லும் விலங்கு.

ஆழ்ந்த ஒருபார்வை வீசினாய் ஆண்டுபல
வாழ்ந்தது போன்ற நினைவினில் - போழ்ந்தாய்
மனதை உனதாக் கியே.

உலாவும் இடமெலாம் உன்முகம் எண்ணம்
துழாவும் பொழுதெலாம் உன்சொல் - விழாதே,
விழுந்தாய் மனமே விழி.

தொட்டணை தூறும் உடற்கேணி மேனியைப்
பட்டணை பெண்ணினை அஞ்சுதல் - விட்டணை
வில்லவன் தேரில் விரைந்து.

தந்தது புன்னகை கொண்டது காதலை
உந்தியது சொல்லென உன்னிடம்  - முந்தியது
”பஸ்பாஸ் புதுப்பிச்சாச் சா?”


Wednesday, November 23, 2016

நீலாம்பல் நெடுமலர்.2.


முற்றத்து மென்மணலில் கட்டிய சிற்றிலைச்
சுற்றத்துத் தோழியர் சூழ்ந்திருக்க - முற்றாய்க்
குறுங்கை அளைந்து குலைத்துப் பறந்த
சிறுவனைக் கண்டாயோ நீ.

"ஏனடி யாரிவன்? கூறடி யார்மகன்?
நானடி தேடினேன் தேய்ந்திட" - "வீணடி,
நீலனோ பாலனோ நீள்தடி ஆயனோ
காலனோ கண்ணனோ பேர்".

கதிரெழும் போதில் நதியலை மீதில்
குதித்துக் களித்து வெளுப்பின் - அதிரூப
மைந்தன் உடையோடு செல்ல இடையினைப்
பைந்தார் மலரால் மறை.

சத்தமின்றிச் சாய்த்தபின் முத்தமிட்டு மீட்டெடுத்தான்
எத்தனவன் எந்தலைவன் எண்ணத்தைப் - பித்தாக்கித்
தித்திக்கும் நாவாலே திக்கெட்டும் தீப்பரவ
வித்தைகள் செய்தான் அவன்.

வெண்கழுத்தில் கண்புதைத்து மென்குரலில் என்னுடலைத்
தண்ணிலவோ தாமரையோ தானொளிரும் - பொன்மணியோ
மின்னொளியோ மீன்விழியோ மீட்பில்லை என்றவனைப்
பெண்ணென்று சூழ்ந்தேன் இனித்து.

கண்ணுண்டான் கள்ளூறும் கன்னியிதழ்க் கொண்டபின்
பெண்ணுண்டான் பொன்முலையில் சொல்புதைத்து - என்னுண்டான்
ஏதுண்டான் என்றறியேன் மண்ணுண்ட வாயாலே
மீதுண்பான் நாளும் இனி.

"நாணிலையோ?" என்றதற்கு "நங்கையிட மன்றென"
"ஏனிலையோ?" என்றதற்கு "ஏடிநீ - நானிலையோ?
தன்னுடலைத் தானறியத் தேவையன்று நாணமே
உன்னுடலில் உள்ளாதல் நான்".


Tuesday, November 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.1.


சிறகுகளில் பூமுளைக்கும் சில தருணங்களை நீ அளிக்கிறாய்.

எதிர்வரும் ரயிலை முத்தமிடுவதன் முன்னம் உன் புன்னகையை எண்ணிக் கொள்கிறேன்.

வருடல் என வாரும் இளங்குளிரே! வெம்மை என்று கொந்தளித்துக் கிடக்கின்றது ஒருமனம்.

வெளியில் நிழல் தளும்பும் இரவில், வழியில் நில்லாது புரண்டு செல்வது எவ்விலையோ?

மண் நோக்கிய பார்வைகளில் மடித்துவைத்த சொற்களை எப்போது விழிமாற்றப் போகிறாய்?

சூழ்ந்திருப்பவற்றின் அலைகளுக்கு மேலே தனிமலரென மிதக்கிறேன். இரு விரல்களுக்கு இடையே என்னை ஏந்துவது என்று?

நீலாம்பல் நெடுமலரென சாய்ந்து நிற்கிறாய். இலை நுனிகளில் பனித்துளிகள் சொட்டுகின்றன.

வானோக்கி இறைஞ்சும் கணங்களில் இன்னும் மண்ணுடன் பிணைத்துக் கொண்டிருக்கின்றது ஒரு சுடர்முகம்.

மொட்டுகளைக் கதற விட்ட மெட்டுகளைத் தந்தவன் பெயர் ராஜா என்றால் நம்புதல் இயல்பே.

பெருமழைக்குப் பிறகு வரும் பின் சாரல் போல் கடந்தபின் திரும்பிப் பார்ப்பதில் துளி குளுமை.

சிறகுகள் முளைக்கும் பூனைகளை இருளில் காண்கையில், அள்ளி அணைத்து அன்பில் புதைத்து, வாசம் நுகர்கிறேன்.

நீராலானது என்னுலகு. உப்புநீரால்.

தருணமிது தவறிது.

சருகென சாலையோரம் சறுக்கிச் செல்கையில், இரவின் மழை என நீ நிலை செய்கிறாய்.

விண்ணிலிருந்து தவறி விழுந்த வெண்மலர், கண்ணிலிருந்து நழுவிச் சரிந்த அனல்துளி.