Friday, February 03, 2017

நீலாம்பல் நெடுமலர்.14.



மீண்டும் ஒரு மழைக்காலத்தில் சந்திப்போம்.

மென்மலராய் நீ விலகிச் செல்கிறாய். நதியின் மேலிருந்து வீசிக் கொண்டிருக்கும் மாலைக் காற்றில் கரையோர நாணல் செடியிலிருந்து பறந்து செல்லும் வெண்பிசிறிலை போல. மடிப்புள்ள மலைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் காட்டின் மணம் போல, நீ நகர்ந்து கொண்டிருக்கின்றாய்.

நேற்று நாமிருந்தோம் சொர்க்க வெளியில். இன்று நாம் பிரிந்தோம் தர்க்க வெளியில்.

பெய்யு மழை அறிவதில்லை, செம்மண் பூமியிலா, செங்காந்தள் மலர்மேலே, கருங்கல் பாறையிலா, காதல் மனதிலா என்று.

எதிர் நோக்குகையில் கடக்கின்ற இரண்டு நொடிகளுக்குள் புன்னகைப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்குமுன் துளியினும் துளியாகச் சின்னஞ்சிறு இதழ் அசைப்பாய். காலப் பிரம்மாண்டம்.

நெய்நிறை சுடர்முகம் சொட்டுகின்ற பார்வை ஒளி மனவிருளை ஒருகணம் விலக்கி அணைகின்றது.

நீள்விரல்கள் நீள் திசைகளில் எல்லாம் நீர் போல் நீயே குளிர்ந்திருக்கிறாய்.

கண்களைக் கற்று கொண்டு விட்டாய் எளிதில். நடிக்க முடியாத நொடிகளைத் தருகின்றாய்.

மனக்கோட்டை இடையில் நிற்கின்றது. கடக்கவியலா அகழியில் கொடுமுதலைகள். மென்புற்களாலான பரிசலை ஏந்திக் கொண்டு, நாணல் துடுப்பால் கடக்கத் தெரியாமல் அக்கரையில் நிற்கின்றேன்.