Saturday, December 27, 2008

கிடைத்து விடுகின்றது!

ப்போதும்
ஒரு சம்பவம்
கிடைத்து விடுகின்றது.!

அதிகாலைத்
தேநீர்க்கடையில்
வடையில்
செருகியிருக்கும்
ஊதுவத்திச்
சாம்பல்!

தெருவில்,
குப்பைத் தொட்டியில்
கத்தும்
நாய்க்குட்டிக்
குரல்கள்!

மதில் சுவர் மேல்
பாயத்
தயாராயிருக்கும்
வெண் மென்
பூனை!

யாரும்
கவனிக்காது
பெய்யும்
இராமழை!

ஓடும் பேருந்தில்
கிழிந்த
தகரக்கூரையில்
இருந்து
சொட்டும்
வெயில் துளி!



ராட்டினத்தில்
வேகமாகக்
கீழ் இறங்கும் போது
அடிவயிற்றில்
அழுத்தும்
பய கனம்!

வயல் நடுவே
கைகள் நீட்டிய
வைக்கோல்
பொம்மைத்
தலையின் மேல்
அமர்ந்த
கருங் காகம்!

ஆய்வுத் தவளை
போல்
அடிபட்டு
சாலையில்
குழப்பமாய்ப்
பிளந்து கிடக்கும்
ரத்த நாய்!

பிச்சை கேட்கும்
குரல்
தொடாத
திசை நோக்கி
நகர்ந்து செல்பவன்
கைத்
தங்க ப்ரேஸ்லெட்!

ஒவ்வொரு இருக்கையிலும்
மஞ்சள் கார்டு
வைக்கும்
பழுப்புச் சிகை
சிறுமி
கோர்த்திருக்கும்,
வற்றிய குழந்தையின்
புன்னகை!

ஒரு கவிதை
எழுதத் துவங்க
எப்படியோ
காரணங்கள்
கிடைத்து விடுகின்றன.

முடிப்பதற்குத் தான்
நிரம்பவும்
திணற வேண்டியதாக
இருக்கின்றது!

இந்தக்
கவிதைக்கு
நேர்வதைப்
போலவே!

Friday, December 26, 2008

IFFK - 2K8 :: My Marlon and Brando.

My Marlon and Brando
Gitmek
Turkey/2008/35mm/Colour/92'/Turkish,English

Direction:Huseyin Karabey
Producers:Huseyin Karabey, Lucinda Englehart, Sophie Lorant
Screeplay:Huseyin Karabey, Ayca Damgaci
Cinematography:A.Emre Tanyildiz
Editing:Mary Stephen
Sound:Mohammed Mokhtari
Cast:Ayca Damgaci, Hamali Khan, Emrah Ozdemir, Mahir Gunsiray, Volga Tekinoglu, Ani Ipekkaya, Cengiz Bozkurt Nesrin Cavadzade


ன்றைய தினமே மதியம் கைரளி தியேட்டரில் இப்படம். போட்டிக்கென வந்த படங்களில் இதுவும் ஒன்று. அந்த வரிசையில் முதலில் திரையிடப்படும் படம் இது என்பதால், கூட்டம் அள்ளியது. சுந்தர் வரத் தாமதம் ஆகும் என்பதால், முன்னதாகவே சென்று, சீட் பிடித்து வைத்திருந்தேன். அவர் வந்து படம் துவங்கும் போது, எல்லா சீட்டும் நிரம்பி, நடைபாதைகளில் எல்லாம் குந்திக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஹுஸைன் வந்திருந்தார். 'இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு கூட்டம்' என்று ஆச்சரியக் கேள்வியிட்டார். பால்கனியில் சிறிது சலம்பல் சத்தம் கேட்டது. பின் வரிசைகளில் ஏதோ சண்டை கேட்டு, பின் சிரிப்புச் சத்தம் கிளம்பியது.

படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே மெளனம் ஆக்ரமித்துக் கொள்ள, எனக்கு இடது பக்கம் அமர்ந்து கொண்டிருந்த ஒரு மத்திய வயது மனிதர் சாய்வாகச் சரிந்து விட்ட குறட்டை சப்தத்தின் மெல்லிய இடையூறின் பின்புலத்தில் படம் பார்க்கத் தொடங்கினேன்.

ய்ச்சா ஒரு துருக்கிய தியேட்டர் நடிகை. கொஞ்சம் குண்டானவள். அவளுடன் நடிக்கும் மற்றோர் இளம் நடிகை (Nesrin Cavadzade) இண்டர்நெட்டில் தன்னை விட இரண்டு வயது இளையவனுடன் டேட்டிங் செய்பவள். ஆய்ச்சாவின் காதலரும் ஒரு நடிகர். அவர் வடக்கு ஈராக்கில் இருக்கின்ற ஒரு குர்திஷ் இனத்தவர். ஏதோ ஒரு சந்திப்பில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விரும்புகிறார்கள். இருவரும் பரஸ்பரம் வீடியோக்கள் அனுப்பித் தங்கள் காதலைச் சொல்கிறார்கள். ஹமா அலி தான் பயணிக்கும் ராட்டினத்தில் அமர்ந்து கொண்டு, நாட்டைச் சூழ்ந்திருக்கும் அமெரிக்க ஆக்ரமிப்புப் போர் பயத்தைச் சொல்கிறார். தான் சூப்பர்மேன் போல் பறக்கும் காமெடி வீடியோக்கள் அனுப்புகிறார்.

நாடகத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாத வகையில், பயம் அவளுள் பரவி விடுகின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற போர்ச் செய்திகளும், வதந்திகளும் அவளை பீதி அடையச் செய்து விடுகின்றன. அவள் ஒரு முடிவெடுக்கிறாள். எல்லையைக் கடந்து, ஈராக் சென்று காதலருடன் சேர!

அமெரிக்க ஆக்ரமிப்பு ஆரம்பித்துள்ளதால், ஈராக்கின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. செக் போஸ்டுகளில் பாதுகாப்பு தீவிரம் செய்யப்படுகின்றது. எனவே நேரடியாகச் செல்லாமல் ஈரான் வழியாக, ஈராக் செல்ல நினைக்கிறாள்.

ஈராக்கில் இருந்து கள்ளத்தனமாகத் தப்பி வந்த ஒருவன் உதவி செய்வதாகக் கூறுகிறான். அவன் அதற்குப் பதிலாகத் தனது ஓவியங்களைப் பாதுகாத்து வைக்குமாறு கூறி, அவளது வீடு வரை வந்து வைத்து விட்டுப் போக, அவளது நடத்தை மேல் சந்தேகப்பட்டு ஒரு கிழவர் கத்துகிறார். இஅவளும் திருப்பிக் கத்தி அவரைத் துரத்தி விடுகிறாள். இதனாலும் ஊரை விட்டுக் கிளம்பும் அவள் எண்ணம் உறுதியாகிறது.

துருக்கியில் இருந்து ஈரான் சென்று, அங்கு டாக்ஸிகள், பஸ்கள் வழியாக பல தொலைவு கடக்கிறாள். ஓர் இடத்தில் செக் போஸ்ட்டில் காத்திருக்கச் செய்ய, அங்கு எதேச்சையாக ஒரு நாடக ஆதரவாளரைக் கண்டு, அவரது சிபாரிசில், ஈரானில் நுழைகிறாள். லஞ்சம் புழங்கும் எல்லைகளில், ஒரு டாக்ஸி வழியாக நகருக்குள் சென்று விடுகிறாள். அங்கு மகா இரவு நேரத்தில் ஒருவன் பின் தொடர, பயந்து கொண்டே ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறாள்.

மீண்டும் பஸ் பயணம் செய்து, ஈராக்கில் நுழைந்து விடுகிறாள். அங்கே ஒரு சின்ன கடை. அதன் வாசலில் ஒரு கிழவர் குந்தி இருக்கிறார். பனி பெய்யும் மலைகள். ஒரு நாய். இவள் வரும் முன்பாக இருந்த இரு பர்தாப் பெண்கள் கொஞ்ச நேரத்தில் சென்று விடுகிறார்கள். இவள் மட்டும் தனியாக! மாலை மயங்கி வருகிறது. அந்தக் கிழவர் மட்டும் இவளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கொஞ்ச ஏரத்தில் அவளை உள்ளே கூப்பிடுகிறார். பனி பெரியதாகப் பெய்யத் தொடங்குகிறது. உள்ளே சென்ற அவளுக்குச் சூடாக குடிக்கத் தருகிறார். குடிக்கிறாள். மீண்டும் காத்திருக்கத் தொடங்குகிறாள்.

தூரத்தில் இருக்கின்ற பனிமலைகளுக்கு காமிரா மாறுகிறது. காமிராவின் பார்வை ஹமா அலியின் பார்வை ஆகிறது. காமிரா நடக்கின்றது. வெகு தூரத்தில், ஆய்ச்சா இருக்கும் வீடு புள்ளியாகத் தெரிகின்றது. காமிரா சொல்கிறது,'இன்னும் இரண்டு மணி நேரம் தான். ஆய்ச்சா, நான் வந்து விடுவேன்.ஐ லவ் யூ. ஐ மிஸ் யூ... ஐ கிஸ் யூ...!' காமிரா ஒரு மலையில் ஏறுகின்றது. வெகு அருகில் ஒரு தோட்டா வெடித்துப் பாயும் சத்தம் கேட்கின்றது. காமிரா அப்படியே சுற்றி விழுகின்றது. காமிரா இப்போது வானம் பார்க்கின்றது. கூட வரும் நண்பர் ஒருவர், 'அலி...அலி..' என்று காமிராவை உலுக்குகின்றார். காமிரா மெல்ல மெல்ல இருள்கின்றது.

திரையை இருள் கவ்விக் கொள்ள.... சுருள் சுருளாக அரபி இசை அவிழத் தொடங்க... எழுத்துக்கள் மெல்ல மெல்ல மேலேறுகின்றன.

யணம்...பயணம்...பயணம்..! படம் முழுக்கப் பயணம் தான். ஈரான், ஈராக்கின் எல்லைகளில் படர்ந்திருக்கும் பனிமலைகளின் முன் சின்னதாக பஸ் செல்கின்றது. வழியில் காணும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தில் ஆய்ச்சா கலந்து கொண்டு, நடனமாடும் போது, வேன்களில் கடக்கின்றனர் அமெரிக்க இராணுவ வீரர்கள். எல்லோரும் பர்தா அணிந்து கொண்டிருக்க, ஹோட்டலில் இவள் மட்டும் ஜீன்ஸ், சல்வார் போட்டிருக்க, வெய்ட்டர் வந்து மான் போல் சைகை காட்டுகிறான். கொஞ்சம் குழம்பி, பின் புரிந்து கொண்டு, தலை வரை இழுத்துக் கொள்கிறாள். ஈரானுக்கும், துருக்கிக்கும் இடையில் இருக்கும் கலாச்சார வேறுபாட்டைச் சொல்கிறது.

எல்லையில் அமர்ந்து புலம்பும் கிழவியின் வார்த்தைகள் உண்மை பூண்டிருக்கின்றன. லஞ்சம் புழங்கும் பார்டர்கள், டி.வி.ஷோக்கள், சி.என்.என்., தெரிவிக்கும் போர்க்களக் காட்சிகள், காத்திருத்தலின் வலிகள், கள்ள இம்மிகிரண்ட்களின் சிறைபிடிப்பு, பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற இரவு....!!!

டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தைப் பிறாண்டியதில், இது படம் அல்ல என்பதும், ஆய்ச்சாவின் உண்மைக் கதை என்பதும், ஹமா அலி காட்டும் வீடியோக்கள் உண்மையாகவே அவர் அனுப்பி வைத்தவை என்பதும், இப்போது அவர் இல்லை என்பதும்...படத்தின் மேல் வைத்திருந்த பிரமிப்பை முற்றிலும் வேறொரு தளத்திற்கு நகர்த்தி விட்டது.

Wednesday, December 24, 2008

குற்றம் - The Wrong Thing.

மூன்று தினங்களாகப் பதிவுகளாகப் பார்த்துக் களைத்துப் போனவர்களுக்காக, எனது முதல் நாடக முயற்சி.

ஒரே ஓர் ஆள் மட்டும் வைத்து ஒரு நாடகம் எழுத முயன்றிருக்கிறேன். எனது தனி வலைப்பதிவில் இட்டால், என்னையும், என் அம்மாவையும் தவிர இன்னும் மூன்று பேர் (மட்டும்) பார்ப்பார்கள். 'வலைச்சரம்' பொது இடத்தில் வைத்தால், பலர் வந்து பார்த்து கருத்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

***

(மேடை முழுதிலும் இருள். மையத்தை நோக்கி மெல்ல ஒரு ஒளிக் கற்றை பாய்ச்சப்படுகிறது. அதில் ஒரு முகம் தெரிகின்றது. முகம் மட்டும், மற்றபடி மேடை இருளாக இருக்கின்றது. வயதான முகம். ரிட்டையர்ட் ஏஜ். ஆனாலும் கம்பீரமான முகம். அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ஆசாமி : நான் ரங்கராஜன். ரிட்டையர்ட் போலீஸ். பொள்ளாச்சி, நெல்லை, பாபநாசம், அந்தியூர், நாகர்கோவில் என்றெல்லாம் மாறி விட்டு செங்கல்பட்டில் கடைசியாக உதிர்ந்த போது, என்ன போஸ்ட் என்பது முக்கியமில்லாத ஒன்று. பேரன்களோடு விளையாடும் வயதிலும் சில கேஸ்கள் என்னைத் தேடி வரும். கெளரவக் காரணத்தால் வெளியே சொல்லக் கூடாத பிரச்னைகளை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையில் தரப்படுபவை. நானும் முடிந்த வரை முயல்வேன்...வெளியே சொல்லாமல் இருக்க! இப்போது சொல்லப் போகும் கேஸ் அப்படி மூடி மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட பெயர்கள் மாறி இருக்கும். ஆனால் சம்பவம் நம் தினவாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் மற்றொரு வடிவம்.

போகலாமா..?

(மெல்ல மெல்ல மேடை வெளிச்சம் ஆக்கப்படுகின்றது. முகத்திற்குச் சொந்தக்காரர் பேப்பர் குனிந்து பேப்பர் படிக்கத் தொடங்குகிறார். அவர் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு சின்ன மேஜை. அதில் செல்போன். சில பேப்பர்கள். பேப்பர்களின் மேல் வெய்ட்டுக்காக
ஒரு பேனா. வலது பக்கம் ஒரு அறைக்குச் செல்லும் திறப்பு. இடது பக்கம் பின்புறமாக ஓர் அறை. இரண்டு அறைகளின் முகங்களிலும் ஸ்க்ரீன்கள். ஒன்றில் பூக்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றொன்றில் இரண்டு யானைகள், பூத்தூவ, நின்ற கோலத்தில் சரஸ்வதியின் ஓவியம். ஒரு மூலையில் ஒரு மேஜை. அதில் ஒரு ப்ளாஸ்டிக் பூஜாடி. சுவரில் ஒரு காலண்டர். பின்புற அறை சமையலறை போல், குக்கர் விசில் சத்தம் கேட்கின்றது. வலது புற அறையில் இருந்து விதம் விதமான சேனல் சத்தங்கள் வருகின்றன. ஓர் இயல்பான குடும்பச் சூழல். ஆசாமி ஆர்வமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.)

ரங்கராஜன் : ஓஹோ..! அடடே..! அப்படியா..? ம்ம்ம்...! (பக்கத்தைப் புரட்டுகிறார்..!) இப்படி வேற நடக்குதா..? கலி காலம் தான்.

(அப்போது பக்கத்தில் வைத்திருக்கும் செல்போன் அடிக்கிறது. பேப்பரை மடித்து வைத்து விட்டு செல்போனை எடுத்து நம்பரைப் பார்க்கிறார்.)

ர : அட, நம்ம விசு..!

(காதருகில் வைத்து பேசத் தொடங்குகிறார். மைக் அவர் காலரில் இருந்தால் நல்லது. பார்வையாளர்களுக்கு அவர் பேசுவது மீத் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையே மூன்று, நான்கு வினாடிகள் இ டை வெ ளி விட வேண்டும்.)

ர : ஹலோ..! ரங்கராஜன் ஸ்பீக்கிங்..! யாரு, விசுவா..?

...

ர : நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..? உன் பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..?

...

ர : சந்தோஷம். கடைசியா எங்க பார்த்தோம்..? பாலனோட பொண்ணு மேரேஜ்ல, இல்லியா..? ஒரு மாசம் முன்னாடி..! ஆமா, இப்ப என்ன விஷயம் சொல்லு..! காரணம் இல்லாம போன் பண்ண மாட்டியே நீ!

...

ர : பின்ன, பிஸ்னெஸ்மேன் ஆச்சே..! ஏதாவது ஒரு காரணம் இருக்கணுமே..! ஒரு நிமிஷம் இரு..!

(இடது பக்கம் திரும்பி, கிச்சனைப் பார்த்து)

சாந்தி, கொஞ்சம் அந்த பால் குக்கரை அடக்கும்மா..! ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்.

(பால் குக்கர் விசில் நிறுத்தப்பட வேண்டும்.)

இப்ப சொல்லுடா. என்ன விஷயம்..?

...

ர : ஓ..! அப்படியா..? எவ்ளோ பவுன்..?

...

ர : எவ்ளோ நாள் ஆச்சு? போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுத்தியா...?

...

ர : ஏண்டா... திருட்டுப் போய்... ஸாரி...உன் வார்த்தைகள்ல காணாமப் போய் ஒரு வாரம் ஆகி இருக்கு..? இன்னும் கம்ப்ளிய்ண்ட் பண்ணாம இருக்கறது நல்லதில்ல.

...

ர : சரி. உன் பிரச்னை புரியுது. வெளியே தெரிஞ்சு போனா, பேர் பாதிக்கும்னு சொல்ற. நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கற..?

...

ர : குடும்பத்திலேயே யாரோ எடுத்திருக்கலாம்னு சொல்ற. நீயே எல்லாரையும் கூப்பிட்டு வெளிப்படையா பேசலாமே! 'த பாருங்கப்பா..! எனக்கு நகை போனது முக்கியம் இல்லை. பட், நம்ம ஃபேமிலிக்குள்ளயே ஒரு திருட்டு நடக்குதுனு வெளிய தெரிஞ்சா எல்லார்க்கும் அவமானம். நீங்களே சொல்லிடுங்க. யாரு எதுக்கு செலவு பண்ணிணீங்கனு சொல்லிடுங்க'னு கேட்டுப் பாரு.

...

ர : சரி, விடு! என் கிட்ட குடுத்திட்ட இல்ல, கவலைப்படாத, நான் பாத்துக்கறேன்.

...

ர : அட, தேங்ஸ் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்குள்ள எதுக்கு! சரி, என்கொயரியை ஆரம்பிச்சுடறேன். உனக்கு யார் மேல சந்தேகம்?

...

ர : போப்பா..! என்ன இருந்தாலும் பெத்த பையன் மேல போய் யாராச்சும் சந்தேகப்படுவாங்களா..?

...

ர : உனக்கும், அவனுக்கும் ரிலேஷன்ஸ் சரி இல்லைனு நினைக்கறேன். அதான் இவ்ளோ காட்டமா பேசற. நான் முன்னாள் போலீஸ்காரன். எல்லார் மேலயும் எனக்குத் தான் சந்தேகம் வரணும். உன் பையன் விஜய், பொண்ணு அனிதா, வொய்ஃப் லக்ஷ்மி... வீட்டு வேலைக்காரி பேரென்ன...(கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.) அஞ்சலை... எல்லோரையும் என்கொயரி பண்ணப் போறேன். டோண்ட் வொரி மேன். கண்டுபிடிச்சரலாம்.

...

ரா : எனக்குத் தெரியாதா..? உங்க ரிலேஷன்ஸை கெடுத்திடற மாதிரி என் விசாரணை இருக்காது. ஐ ஏம் ஷ்யூர் எபவுட் திஸ். ஓ.கே..? டன். நீ என்ன செய்ற..? இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லாரோட மொபைல் நம்பரையும் எனக்கு மெஸேஜ் பண்ணிடு. அஞ்சலைகிட்ட செல் இருக்கா..?

...

ரா : நல்லது. ஏழைக்கேத்த எலிஃபெண்ட். வெச்சிடறேன்.

(மொபைலை வைத்து விடுகிறார். முகவாயைத் தடவிக் கொண்டு யோசிக்கிறார். பேப்பரைப் புரட்டுகிறார்.)

ர : ஓ..! பவுன் இவ்ளோக்கு வந்திடுச்சா...?

(மனதுக்குள் கணக்கு போடும் பாவனையை முகத்தில் காட்டுகிறார். மொபைலை எடுத்து ஒரு கால் செய்கிறார். காத்திருந்து பின்...)

ர : ஹலோ, குமரனா..? நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : குட்மார்னிங்..குட்மார்னிங்..! ஸ்டேஷனுக்குப் போய்ட்டீங்களா..? இல்லை எங்கயாவது ட்யூட்டி போட்டிருக்கா..?

...

ர : ஜாக்கிரதையா இருங்க. அந்த ஏரியால மைன் பாம்ஸ் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். ஜமுனா எப்படி இருக்கா? பொண்ணு என்ன சொல்றா..?

...

ர : ஓ.கே. எனக்கு ஒரு சின்ன வேலை பண்ணனும் நீங்க..?

...

ர : ஒண்ணும் பெரிசா இல்ல. போன ஒரு வாரத்துக்குள்ள சிட்டிக்குள்ள எந்த நகைக் கடையிலயாவது எழுபத்தஞ்சு பவுன் நகை விற்கப்பட்டிருக்கா இல்ல அடகு வெச்சிருக்காங்களானு ஒரு தகவல் வேணும். ஒரு சின்ன விசாரணைக்கு.

...

ர : இல்ல, அவங்க கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுக்கல. ஃபேமிலிக்குள்ள டவுட் பண்றார். அதனால் போலீஸ் வரைக்கும் போக வேணாம்னு இருக்கார். நான் சைலண்டா இதை டீல் பண்றேன். நீங்க இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு சொன்னா சந்தோஷம்.

...

ர : அவ்ளோ நேரம் ஆக வேண்டியதில்லைனு நினைக்கறேன். சிட்டிக்குள்ள இவ்ளோ பெரிய அளவுக்கு நகைகளை டீல் பண்றவங்க ரொம்ப கம்மி. செளகார்பேட் சேட்களை எல்லாம் விடுங்க. என்கொயர் டைரக்ட்லி தி ஜூவல்லரி ஷாப்ஸ். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்டா இன்ஃபர்மேஷன் வேணும். நம்ம கையை விட்டு ஜூவல்ஸ் போயிடக் கூடாது. அஞ்சு நிமிஷம். அதுக்குள்ள முடியும், பாருங்க.தேங்க்ஸ். வெச்சிடறேன்.

(மொபைலில் மெஸேஜ் டோன் கேட்கிறது. எடுத்துப் பார்த்து, பக்கத்தில் இருக்கும் டேபிளில் இருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து, மொபைலைப் பார்த்து, பேரையும், செல் எண்ணையும் குறிக்கிறார். ஒரு எண்ணை கால் செய்கிறார்.)

ர : ஹலோ விஜய்! ஹவ் ஆர் யூ...?

...

ர : அங்கிள் இஸ் ஃபைன். எவ்ரிஒன் இஸ் ஃபைன். வேர் ஆர் யூ நவ், மை யங் மேன்..?

...

ர : குட். ஷட்டில் இஸ் குட் ஃபார் ஹெல்த். சரி, உனக்கும் அவனுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லையா..? போன் பண்ணி புலம்பறான்.

...

ர : அது ஜென்ரேஷன் கேப், விஜய். உனக்கே தெரியுமே...? நான் அருண்கிட்ட எவ்ளோ சண்டை போட்டிருக்கேன் தெரியுமா..?

...

ர : இல்ல. நீ வந்து உன் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டுப் பாரு. அவனும் என்னைப் பத்தி இதே மாதிரி தான் குறை சொல்லுவான்.

...

ர : எல்லாம் உங்க மேல இருக்கற அக்கறையினால தான். ஓ.கே. ஸ்டடிஸ் தவிர மத்தபடி உனக்கும் அவனுக்கும் எதுவும் க்ளாஷ் இல்லையே..? பாக்கெட் மணி எல்லாம் ஒழுங்காத் தர்றானா...?

...

ர : அது போதும். ஓ.கே. பை. அவன் கூட அளவா சண்ட போடு. பி.பி.பேஷண்ட் அவன். ஷுகர் இருக்கு. டேக் கேர். பை.

(குறித்து வைத்த சீட்டில் ஒரு டிக் செய்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, மீண்டும் கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! அனிதா..! நான் தான்...

...

ர : ஸ்வீட் கேர்ள். எஸ்..! அங்கிள் ரங்கு தான் பேசறேன். எங்கம்மா இருக்க..? சல்ஸா க்ளாஸா..? ஹார்ஸ் ரைடிங்கா..?

...

ர : குட்..! நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலையே...?

...

ர : ஓ.கே..! இப்ப எதுக்கு ஃபோன் பண்ணிணேன்னா, உங்க டேடிக்கும், விஜய்க்கும் இடையில பிரச்னைகள் இருக்கா..? சரியாகவே பேச மாட்டேங்கறாங்க ரெண்டு பேரும்..?

...

ர : இவனைக் கேட்டா அவன் மேல குறை சொல்றான். அவன் இவன! நார்மல் ஃபாதர் சன் க்ளாஷ் தான..? வேற எதுவும் சீரியஸா இல்லையே..?

...

ர : ஓ.கே.டா. அங்கிள் அப்புறமா கால் பண்றேன். டேக் கேர்.பை.

(வைத்து விட்டு அடுத்த டிக் செய்கிறார். கால் வருகின்றது.)

ர : சொல்லுங்க குமரன். விவரம் தெரிஞ்சிடுச்சா..?

...

ர : ஓ...! என்னிக்கு...? யார் வந்தாங்களாம்..?

...

ர: ஓஹோ..! அதுவும் அப்படியா..? ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் தி டைம்லி ஹெல்ப், குமரன்.

...

ர : இல்ல. வேணாம். நானே பாத்துக்கறேன். அவர் தான் கம்ப்ளெய்ண்ட் பண்ணலைன்னு சொல்லிட்டாரே..? அதுக்கப்புறம் நாம எப்படி ஏக்ஷன் எடுக்க முடியும்..? மோர் ஓவர், எனக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கு. நீங்க சொன்னவங்க அதைத் திருடித் தான் அடகு வெச்சிருக்கணும்னு இல்ல. ஐ வில் டேக் கேர் அபவுட் திஸ். ஓ.கே. வெச்சிடறேன்.

(காலை கட் செய்கிறார். தீவிரமாகக் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். குறித்து வைத்திருந்த எண்களை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, மீண்டும் செல்போனில் கால் செய்கிறார்.)

ர : அஞ்சலை..! நான் உன் முதலாளியோட ஃப்ரெண்ட் பேசறேன். ரிட்டையர்ட் போலீஸ் ஆபீஸர். இரு.. பதறாத..! இப்ப எங்க இருக்க..?

...

ர : நல்லது. நான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். உண்மையான பதில் வந்திச்சுனா ஒண்ணும் செய்ய மாட்டேன். பொய்யோட வாசம் கொஞ்சம் அடிச்சாலும், கால்கள்ல முட்டினு ஒரு ஏரியா இருக்காது. என்ன சொல்றியா..?

...

ர : ஒரே கேள்வி..? எழுபத்தஞ்சு பவுன் நகையை ஏன் நீ திருடினே..?

...

ர : இல்ல. இது நடிக்கறதுக்கான நேரம் இல்ல. நீ அடகு வெச்ச டி. நகர் ஷாப்ல அன்னிக்கு என்ன கலர் ரிப்பன் கட்டிட்டுப் போயிருந்தங்கறதுல இருந்து எல்லா தகவலும் தெரிஞ்சிடுச்சு. 'இல்ல.. தெரியாது'னு சொல்றதுல அர்த்தம் இல்ல. எனக்கு ஒரே ஒரு உண்மை தெரிஞ்சா போதும். நீயா இந்த வேலையச் செஞ்சியா இல்லை யாராவது செய்யச் சொன்னதாலா..? ஏன்னா எனக்கு நம்பிக்க இருக்கு. நீயா செய்யல. அப்படி செய்யறவளா இருந்தா நகைகளை அடமானம் வெச்சிருக்க மாட்ட. வித்திட்டு ஊர விட்டே ஓடிப் போயிருப்ப. மறுபடியும் அங்கயே வேலை பாக்கறத வெச்சுப் பார்த்தா, இதுல தெரியாம நீ மாட்டிக்கிட்டனு தான் தோணுது. உஷ்...! அழக் கூடாது. யாரு உங்கிட்ட நகைகளை கொடுத்தா..? அத மட்டும் சொல்லிடு.

...

ர : ஆகாது. அவங்களுக்கு எதுவும் ஆகாது. நான் கேரண்டி.ம்.. சொல்லு..!

...

ரா : ஓ..! எதிர்பார்த்தது தான். சரி. இப்ப ஒண்ணு செய். இனிமேல் அந்த வீட்ல காட்டிக் குடுத்திட்டமேன்னு குற்ற உணர்ச்சியோட நீ வேல செய்ய வேணாம். மனிதர்களைப் பத்தி உனக்குத் தெரியாது. அவங்களுக்கு சாதகமா இருக்கற வரைக்கும் தான் ஒத்துப் போவாங்க. இல்லாட்டி கழிச்சுக் கட்டிடுவாங்க. அவங்களே உனக்கு திருட்டுப் பட்டம் கட்டி அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க. அதுக்காக கவலப்படாத. அந்த வேலய விட்டுடு. என்னிக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பறாங்களோ அன்னிக்கு எனக்கு போன் பண்ணு.. நான் வேற எடத்துல வேல வாங்கித் தரேன். இப்ப மார்க்கெட்ல இருந்து அவங்க வீட்டுக்குப் போய் வழக்கமா வேலையப் பாரு.

(போனை வைக்கிறார். அடுத்து ஓர் எண்ணைக் குறித்துக் கொண்டு கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : fine. நீங்க நல்லா இருக்கீங்களா..?

...

ர : ஆமா, சும்மா இல்ல. காரணம் இருக்கு. உங்களுக்கு திடீர்னு எழுபத்தஞ்சு பவுன் நகைய அடமானம் வெக்கற அளவுக்கு என்ன தனிப்பட்ட வகை கஷ்டம்..? அவன்கிட்ட கேட்ட குடுக்க மாட்டானா..? வீட்ல யாருக்கும் தெரியாம அப்படி என்ன திரைமறைவு வேலைகள்..?

...

ர : இருங்க. அழாதீங்க. எல்லாம் தெரிஞ்சிடுச்சு. எனக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்குத் தெரியாது. உங்க வேலைக்காரிகிட்ட குடுத்து விட்டு, ரகசியமா பணம் வாங்கி... எதுக்கு இதெல்லாம்..?

...

ர : என்கிட்ட நீங்க தைரியமா சொல்லலாம். என்னை விட்டு எங்கயும் வெளிய போகாது. எனக்குள்ள மட்டும் இருக்கும். உங்களுக்கு நினைப்பிருக்கானு தெரியல. ஒரு தடவ ரெண்டு ஃபேமிலியும் மூணாறு டூர் போனப்ப, என் கைல ராக்கி கட்டி விட்டீங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி. அதுக்கு அர்த்தம் தெரியும் இல்லையா..?

...

ர : சொல்லுங்க. (நீண்ட மெளனம்.) இதை எல்லாம் நீங்க முன்னாடியே போலீஸ்கிட்ட சொல்லி இருக்கலாம். அட்லீஸ்ட் என்கிட்டயாவது..! fine. இப்பயும் ஒண்ணும் காரியம் கெட்டுப் போயிடல. அந்த ஆள, உங்க மாமானு தான சொன்னீங்க... மூணே நாள்ல கண்டுபிடிச்சு, குடுக்கற எனிமால இனிமேல உங்க வழிக்கே வராம பண்ணிடலாம். அவன்ட்ட இருந்து பணத்த மறுபடியும் வாங்கி, நகைய மீட்டிடலாம்.

...

ர : கண்டிப்பா அவனுக்கு டவுட் வரும். காணாம போன நகை எப்படி திடீர்னு திரும்பி எப்படி வந்திச்சுனு அவன் கேட்பான். நான் சொல்ற மாதிரி சொல்லுங்க. உங்க வீட்டு வேலைக்காரி அஞ்சல தான் நகையைத் திருடிட்டு போய் அடமானம் வெச்சிருக்கா. சமயம் பாத்து வேலய விட்டு ஓடிப் போக திட்டம் போட்டிருந்தா. யதேச்சையா கண்டுபிடிச்சுட்டேன். நகை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்திட்டேன்னு அவன்கிட்ட சொல்லுங்க.

...

ர : குதிக்கத் தான் செய்வான். போலீஸ்கிட்ட போறேன். கம்ப்ளெய்ண்ட் குடுக்கறேன்னு கத்துவான். குடும்ப நிலவரம் வெளிய தெரிஞ்சா மீடியாவுக்குத் தான் அவல். அதனால, வேலைக்காரிய, வேலைய விட்டு மட்டும் துரத்திடலாம்னு சொல்லிடுங்க. மீடியான்னா அவனுக்கு கொஞ்சம் பயம். ஒருதடவ போர்ட் மீட்டிங் முடிஞ்சு ஆனுவல் ரிப்போர்ட் டிஸ்ட்ரிப்யூட் பண்ணும் போது, ஒரு ஜர்னலிஸ்ட் கூட தகராறு ஆகி, இப்போ இவன் மேல ப்ரெஸ் ஒரு கண் வெச்சிருக்கு. சின்ன திரி கிடைச்சா போதும். வெடி வெச்சிடுவாங்க. இது அவனுக்கும் தெரியும். சோ ரெண்டு மூணு நாள்ல பணம் கிடைச்ச உடனே, நகைய மீட்டுக் கொண்டு வந்திடுங்க. நான் சொன்ன மாதிரி செஞ்சிடுங்க.

...


ர : இல்ல. நகை எங்கயும் போகாது. ப்ளாக் பண்ணி வெச்சிருக்கோம்.

...

ர : அழாதீங்க. இனிமேலயாவது உஷாரா இருங்க. நானும் அவன் கிட்ட சொல்லி போலீஸ் அளவுக்கு போக வேணாம்னு சொல்றேன். பணத்தை மீட்டப்புறம் உங்களுக்கு மறுபடியும் கால் பண்றேன். சரி, இப்ப வெச்சிடறேன்.

(போனை வைத்து விடுகிறார். சமையலறைச் சத்தங்கள் அமைதியாகின்றன. சேனல் குரல்கள் ஓய்ந்து மெளனமாகின்றன. ரங்கராஜன் முன்னே நிமிர்ந்து பார்க்கிறார். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒற்றைக் கற்றை ஒளி அவர் முகத்திற்கு மட்டும் பாய்ச்சப்படுகிறது. அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ர : இது தான் நான் செய்த வேலை. பிறகு லக்ஷ்மியின் மாமாவைப் பிடித்துப் பணத்தை மீட்டு, நகையை மீட்டு, வேலைக்காரி மேல் லக்ஷ்மி திருட்டுக் குற்றம் சுமத்தி, அவளைத் துரத்தி, அவள் என் மூலமாக வேறொரு வீட்டில் வேலை செய்கிறாள்.

இதில் எத்தனை பேரை நான் ஏமாற்றி இருக்கிறேன்? விசு, அவன் மனைவி லக்ஷ்மி, வேலைக்காரி அஞ்சலை.

விசுவைப் பொறுத்தவரை, நகை திருடியவள் வேலைக்காரி. அவள் மூலமாக நகை மீண்டும் கிடைத்து விட்டது. அவளுக்குத் தண்டனை பணிநீக்கம். அவனுக்கு குடும்பத்தின் மேல் இருந்த அவநம்பிக்கை போய், மீண்டும் குடும்பத்தில் இன்பம் வீசுகிறது.

லக்ஷ்மிக்கு அவள் செய்த குற்றம் அவள் கணவனிடம் இருந்து மறைக்கப்பட்டு, நல்லவளாகவே தொடர்கிறாள். அவளுக்கு அவள் மாமன் தொல்லையும் ஒழிந்தது. பணமும், நகையும் கிடைத்தது.

வேலைக்காரி அஞ்சலைக்கு 'இப்படி தன்னை உபயோகப்படுத்தி விட்டு, தன் மேலேயே திருட்டுப் பட்டம் கட்டி, துரத்திய வீட்டிலிருந்து' விடுதலை. வேறொரு நல்ல வீட்டில் வேலை.

மூன்று பேருக்கும் சுகமான முடிவைத் தரும் வகையில் சம்பவங்கள் என்னால் டிசைன் செய்யப்பட்டன. இதில் எதுவும் தவறு நான் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் நான் செய்தது நல்லது. மொத்தமாகப் பார்த்தால், ஒரு வகைக் குரூரமாகவும் தெரியலாம். ஆனால் தனிப்பட்ட அவர்களது நன்மைகளுக்காக கலெக்டிவான செயல்முறைகள் சில சமயம் இப்படிக் கொடூரமாகத் தெரியலாம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா..?

(அந்த ஒற்றை ஒளிக் கற்றையும் அணைகிறது. மேடையைப் பழையபடிக்கு இருள் முழுக்க முழுக்க சூழ்கிறது.)

***

கலைவனாக நாடகம் எழுத, கற்றுத் தந்த துரோணருக்குச் சமர்ப்பணமாக, 'ரங்கராஜனை' நாயகனாக்கி இருக்கிறேன். வாத்தியாருக்கு நன்றிகள்!



நன்றி!

***

டிசம்பர் முதல் வாரத்தின் சீனா சார் அனுமதி கொடுத்த படியால், வலைச்சரத்தில் ஒரு வாரம் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது பதிவுகளின் இடையே ஒரு நாடக முயற்சி செய்து பார்த்ததில், உருவானது இது.

நாடகத்திற்கு வந்த சில கமெண்ட்டுகள் ::

13 comments:
தமிழ்ப்பறவை said...

நண்பர் வசந்த்துக்கு....
நல்ல முயற்சி. நன்றாகத்தான் இருந்தது.குறைகள் அவ்வளவாக இல்லை.
ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?
என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.
வலியோர் வலியோர்தான்... மெலியோர் மெலியோர்தான் எனும் பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.
ஆனால் நடைமுறையில் இவ்வாறுதான் நடக்குமென்பதால் வாய் பொத்திக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் வசந்த்...

December 4, 2008 12:56:00 AM IST
தமிழ்ப்பறவை said...

just for mail folloup

December 4, 2008 12:56:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

வாழ்த்துக்கு நன்றிகள்.

/*ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?*/

சட்டென்று வேறு பெயர் தோன்றவில்லை.

/*பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.*/

அப்படி இல்லை. இப்படித் தான் நடக்கும் என்று சொல்ல வந்தேன். நான் வலியுறுத்தவெல்லாம் இல்லை.

December 4, 2008 1:07:00 AM IST
வீரசுந்தர் said...

இன்னமும் வேலைக்காரிகள் அஞ்சலைகளாகவே இருக்கிறார்களா!? ஒரு மாறுதலுக்கு ஸ்ரேயா, நமீதா என கதைக்காக மட்டும் பேர் சூட்டினால் என்ன!?

வித்தியாசமான கதைக்களம். ஒரு விதத்தில் நிர்வாக மேலாண்மைக் கருத்துடன் ஒத்துப் போகிறது. நிறுவன மேலாளர், பெரிய வேலைகளை தனக்கு கீழே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சிறிது சிறிதாகப் பிரித்துக் குடுத்து வேலை வாங்குவதைப் போல.

December 4, 2008 1:11:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

மிக வித்தியாசமான பார்வையாக மேனேஜ்மெண்ட் கான்செப்ட்கள் இதில் இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறீர்கள்.

December 4, 2008 1:28:00 AM IST
துளசி கோபால் said...

நாடகம் நல்லா வந்துருக்கு. நம்ம தமிழ்ச் சங்கத்துலேபோட நாடகம் தேடிக்கிட்டு இருக்கேன்.

இது கொஞ்சம் நீளமா மட்டுமில்லே ஒரே ஆள் என்றதாலே பார்வையாளர்களுக்கு அவ்வளவா சுவாரசியப்படாது.

முதல் ரெண்டுவரிசையைத் தவிர எல்லாரும் யுகயுகமாப் பிரிஞ்சு இருந்தவங்க, இப்பத்தான் பார்த்த மாதிரி சளசள ன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க(-:

வேற நகைச்சுவை நாடகம் எதாவது எழுதியிருக்கீங்களா?

December 4, 2008 1:45:00 AM IST
கபீஷ் said...

//என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.//

ஆமா

December 4, 2008 6:07:00 AM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு துளசி கோபால் மேடம்...

வாசக இடைவெளி என்ற ஒன்று நல்ல சிறுகதைகளில் இருக்க வேண்டிய ஒரு கூறு. அந்த இடைவெளியை படிப்பவர்கள் தத்தம் மன உயர்விற்கேற்ப நிரப்பிக் கொள்வார்கள். நம் மனநிலை நாம் வளர்வதேற்கேற்ப பக்குவம் அடைந்து கொண்டே வரும் என்பதால், அந்த சிறுகதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும். அதனால் அவை அமரகதைகள் ஆகின்றன.

அந்த மாதிரியான வாசக இடைவெளி ஒன்றை நாடகத்திலும் கொண்டு வர செய்த சிறு முயற்சியே இது.

எதிர்முனையில் இருப்பவர் பேசுகின்ற வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் யூகத்திற்ல்கே விடப்பட்டு, இந்த முனையில் பேசுபவரின் ரிப்ளைகளைக் கொண்டு மட்டுமே, பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு எழுத விரும்பினேன்.

இதில் இருக்கின்ற கவனங்கள் தேவைப்படும் இடங்கள்,

1. இந்த முனையில் இருப்பவர் தான் அதிக வசனங்களைப் பேச வேண்டும். வெறும் ஆங்... ஆங்... சரி... ஒ.கே.. என்றவாறு பேசக் கூடாது.

2. முக்கியமாக ஒரே ஒருவர் மட்டும் நடிப்பதால், நீங்கள் சொன்ன மாதிரி பார்ப்பவர்கள் சலிப்புற்று விடக் கூடாது என்பதால், கூர்மையான, சுவாரஸ்யமான வசனங்களின் பங்கு மிக முக்கியம். அந்த இடத்தில் ஓரளவு மட்டுமே நன்றாக வந்துள்ளது என்பதை தங்களது பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்கிறேன். Miles to go.

இது தான் எனது முதல் நாடக முயற்சி என்பதால், இந்தக் குறைகளை மன்னித்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வேறு நாடகங்கள் எதுவும் எழுதவில்லை. இன்னும் எவ்வளவு நாட்களில் நகைச்சுவை நாடகம் தேவை என்று சொன்னீர்கள் எனில், முயற்சி செய்து பார்க்கிறேன்.

நன்றிகள்.

***

அன்பு கபீஷ்...

தினப்படி வாழ்க்கையில் நடக்கின்ற ஒன்றைத் தான் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் அதனைப் பற்றிய குற்ற உணர்வு (எனக்கும்) இருப்பதால் தான் நாடக ஆரம்பத்திலும், கடைசியிலும் பார்வையாளர்களிடம் கேட்கிறார், 'நான் செய்தது சரியா?' என..!

அந்தக் கேள்விக்கான பதிலை பார்ப்பவர்கள் தத்தம் மனதில் தான் தேட வேண்டும்.

நன்றிகள்.

December 4, 2008 6:39:00 AM IST
துளசி கோபால் said...

வசந்து,

எப்ப முடியுமோ அப்ப எழுதித்தாங்க. பொங்கலுக்கு இல்லைன்னா புதுவருசத்துக்கு ஆச்சு.

நாடகத்துலே நடிக்க மக்களை ரவுண்டுகட்டி ரிகர்ஸல் நடத்தறதுக்குள்ளே போதும் போதுமுன்னு போயிரும்.

மூணு நாடகம் இயக்கி நடிச்ச பெருமை ஒன்னு நமக்கு இருக்கே:-)))

December 4, 2008 7:15:00 AM IST
சதங்கா (Sathanga) said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

December 4, 2008 9:26:00 AM IST
கிருத்திகா said...

புதிய முயற்சின்னு சொன்னாலும் அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

December 4, 2008 12:31:00 PM IST
இரா. வசந்த குமார். said...

அன்பு துளசி கோபால் மேடம்...

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். இன்னுமொரு இலக்கிய முறையில் கை வைக்கலாம் என்று வழி காட்டியிருப்பதற்கு நன்றிகள்.

***

அன்பு சதங்கா...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துற்கு..!


***

அன்பு கிருத்திகா மேடம்...

வாழ்த்துக்கு நன்றிகள்.

December 4, 2008 9:19:00 PM IST
அனுஜன்யா said...

வசந்த்,

கன்னி முயற்சிக்கு நிச்சயமாக நல்லாவே இருக்கு. சற்று நெருடிய விஷயங்களை தமிழ்ப்பறவை சொல்லி, நீங்கள் விளக்கமும் கொடுத்து விட்டீர்கள். ஆங்கிலப் பிரயோகத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தலாம். மொத்தத்தில் அதகளம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

December 6, 2008 12:33:00 PM IST

சிராப்பள்ளிச் சிற்றுலா.

ன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிரு(ம்)மே.

பதிகம்: 1:98
பண்: குறிஞ்சி
தேவாரம்.

முன்னிரவு 21:30க்கு வர வேண்டிய ஏர்பஸ் மிகத் தாமதமாக 22:30 மணிக்கு ஸ்டேஷன் ஃபவுண்டனில் திரும்பி, கைரளி தியேட்டர் ரோட்டில் கொஞ்சம் சென்று, ரிவர்ஸில் வந்து, களைத்த பயணியரைக் கொட்டி நின்ற போது, உள்ளே டி.வி.க்களில் ஸ்ரீமன் பேசிக் கொண்டிருத்தார். 'அருமை பெருமையா வளத்தமே என் தேசிங்கு ராசா.. இப்படி அக்ரகாரத்துல போய் வாக்கப்படப்..'

'யாரும் ஏறாதீங்க. எல்லார்க்கும் சீட் இருக்கு. வண்டிய கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு தான்..' கண்டக்டர். ட்ரைவர் இறங்கி முகம் கழுவிக் கொடார். என்னோடு, ஒரு இந்திக் குடும்பம். இறுக்கமான பேட், கவுனில் ஒரு சிறுமி. கையடக்க வீடியோ கேம்ஸ் கைப் பையன். சுடிதார் மனைவி. ஒரு கல்லூரி மாணவன். இரு கிழவர்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ஏறிக் கொண்டு, சிதறி அமர்ந்து கொண்டோம். ஜன்னல்கள் திறக்கப்பட்டும், அடைக்கப்பட்டும்! சீட் புஷ்பேக் வேலை செய்கிறதா என்று பரிசோதனை.

22:50க்கு பஸ் உறுமியது. மெல்ல நகர்ந்தது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் கலைந்து கிடக்கும் ட்ராக்குகளின் மேல் தாவி நழுவும் ஓவர்பிரிட்ஜைக் கடந்து, கிள்ளிப்பாலத்தின் மீதேறி, நாகர்கோவில் ரோட்டில் சீராக ஓடத் துவங்கும் போது, கண்டக்டர் அருகில் வந்து, சீட் கம்பிகளில் சாய்ந்து நின்றார். முன்னூறு ரூபாய்களைக் கொடுத்து, ஏற்கனவே கணக்கிட்டு வைத்திருந்த போதும்,"லேட்டா கிளம்பறதுனால, சுமாரா எத்தனை மணி சார் ஆகும்..?"

"காலைல பத்து மணி ஆகும் திருச்சி போய்ச் சேர..!" என்றார்.



நெல்லையைக் கடந்து, விருதுநகர் தாண்டி, சாத்துரை நீங்கி, மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் பாதியை விழுங்கும் போதே, பூமியின் இந்தப் பகுதி சூரியனைப் பார்க்கத் துவங்க, வானத்தின் கீழ் எல்லை சிவக்கத் தொடங்கி விட்டது. பாதி வழியிலேயே சேதுவை நிறுத்தி விட்டிருந்ததால், புதிதாக வாங்கி இருந்த இயர்போனில் (ஒரிஜினல் ப்ரைஸ் 250 ரூ. உங்களுக்காக 10 ரூ. ரிடக்ஷன் பண்ணிக்கறேன்.), தொகுத்து வைத்திருந்த கதம்பப் பாடல்கள் மீண்டும் மீண்டும் லூப்பில் உலா வந்து கொண்டிருக்க, அவ்வப்போது இடையே எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வின் 'யாமிருக்க பயமேன்'.

மாட்டுத் தாவணியில் நுழைந்தது.பொலபொலவென புலர்ந்து விட்டிருந்தது. டீக்கடைகளில் சூடாக நுரைகள் பொங்கிக் கொண்டிருந்தது. சூடான மெது வடைகள், பக்கோடாக்கள், நாளிதழ்கள், மறைவான சிறுநீர்க் கழிப்பிடங்கள். நீல குப்பை ப்ளாஸ்டிக் பக்கெட்கள் அழுக்கடைந்திருந்தன. தாடியும், சந்தனப் பொட்டுக்களுமான மாலை போட்டிருந்த ஆட்டோ டிரைவர்கள், இறங்கியவுடன் சூழ்கிறார்கள். களைத்த காற்றுப் பேருந்துகள் ஆங்காங்கே செருகிக் கொண்டு நின்றன. சி.டி. கடையில் இருந்து 'வில்லு' கிளம்புகின்றது.

பசித்ததால், சில வடைகள் வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டேன். அது தான் வம்பாகிப் போய் விட்டது.

வண்டி ஸ்லோ பிக் அப் என்பதால் தான் இவ்வளவு லேட் என்றார் ட்ரைவர். "பத்து மணிக்குப் போயிடலாம்..."

கூட ஒரு மாணவர் வந்தார். சின்னப் பையனாய், ஒல்லியாய், வெடவெடப்பாய், பூனை மீசைகள் போல் வைத்திருந்தவரிடம்,

"நீங்க ஃபர்ஸ்ட் இயரா..?"

"இல்ல. fourth year. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங்.."

ஜெர்க்கடித்து, "பார்த்தா அப்படி தெரியலயே. ஸ்கூல் பையன் மாதிரியே இருக்கீங்க. எப்படி இப்படி யூத்தாகவே இருக்கீங்க..?" வடைப் பொட்டலத்தைப் பிரித்தவாறே கேட்டேன்.

ஆட்காட்டி விரலால் வடைகளைச் சுட்டிக் காட்டி,"இதை எல்லாம் நான் சாப்பிடறதில்லை.."

மேலும் கிழக்கு நோக்கிப் பயணம் துவங்கித் தொடர்ந்து, மேலூர், துவரங்குறிச்சியைத் தொலைத்து, திருச்சி ஜங்ஷனை அடைந்து, மத்திய பேருந்து நிலையத்தைத் தொட்டு நிற்கும் போது, சரியாக சனிக்கிழமை காலை 10:10. வடைகளின் புண்ணியத்தில் வயிறு கலக்கத் தொடங்கி இருந்தது.



திருச்சிராப்பள்ளி ஒரு வசீகரமான ஊர்.

நகரப் பேருந்து நிலையம் சுற்றி எத்தனை கல்லூரிகள்! ஒரு குளத்தைச் சுற்றி, மூன்று நான்கு அறைகளில் சரக்குகள். கவிழ்த்துப் போட்ட குடைகளில் வட்ட வரிசைகளில் வாட்சுகள். சாலைகளில் அலட்சியமாக கடக்கும் மாடுகள். கறுப்பாய், வெடவெட கால்களோடு சிக்னலை மீறும் ஆடுகள். அகண்ட காவேரி என்ற வெண் மணல் பிரதேசம். தியேட்டர் காம்ப்ளக்ஸ்கள். ரெயில்வே ட்ராக்குகள். கந்தக வெயில். கால் ரிக்ஷாக்களும், ஸ்க்ரீன் மூடிய ஒல்லி ஆட்டோக்களும் உயிர்த்திருக்கின்ற மிகச் சில நகரங்களில் ஒன்று. மலை உச்சி சைவக் கோயில்கள். ஆற்றுத் தீவில் வைணவப் பெரும் கோயில். நீரிலேயே மூழ்கி இருக்கும் சிவத் தலம். ஆடி வெள்ளிகளில் நிறையும் மாரி ஆலயம். நகரின் நிழல்கள் சட்டென்று மடிந்த பிறகு பச்சை வயல்கள் படர்ந்திருக்கும், மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் மகாநகர்.



இரண்டு நாட்களில் சனிக்கிழமை இரவு ஸ்ரீரங்கமும், ஞாயிறு காலை மலைக்கோட்டையும் சென்று வந்து விட்டு, மதியம் கிளம்பி விட்டேன்.



அண்ணா சிலை பஸ் ஸ்டாப்பில் 1-ம் தட பஸ்ஸைப் பிடித்து, காவிரிப் பாலத்தைக் கடந்து, இடது புறம் வெட்டி (பெரியார் நகர்... திருவானைக்கா கோயில் போறவங்க எறங்கிக்கோங்க..!) சென்று, தெற்கு கோபுரத்தில் இறங்கிக் கொண்டோம்.

திருவரங்கத்தில் கூட்டம் அள்ளுகின்றது. மார்கழி மாதம். சனிக்கிழமை. ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தான் எங்கிலும்! நாங்கள் சென்ற நேரம் தரிசனம் இல்லாத நேரம் (18 - 19:00). இலவசத் தரிசனத்தில் நீண்ட நேரமாக நின்று, தெலுங்குப் பெண்களின் இடைபுகுதலைத் தடுத்து, கருஞ் சட்டைக் காரர்களின் பல கோஷங்களைக் கேட்டு, பொதுக் க்யூவில் நுழைந்தோம். இரண்டு சுற்றுகள் கடந்து, பள்ளி கொண்ட பெருமாளை, அரங்கநாதனைக் கண்ணாரக் கண்...அதற்குள் வெளியே திருப்பப்பட்டு, தங்கக் கோபுர பிரகாசத்தின் அடியில் விழுந்தோம்.

அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா!
துணையேன் இனிநின் அருளல்ல தெனக்கு
மணியே! மணிமாணிக்கமே! மதுசூதா!
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ!
- பெரிய திருமொழி 11-8-8
(திருமங்கையாழ்வார்)

இரவு நெடு நேரம் ஆகி விட்டிருந்தபடியால், தாயார் சன்னிதியை மூடி இருந்தார்கள். கோதண்டராமர், பட்டாபிராமர் சன்னிதிகளும் அவ்வணமே இருந்தன. சனிக்கிழமை சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்லது என்று சொல்லப்பட்டிருந்ததால், அவசர அவசரமாகச் சென்று 21:40க்கு மேல், நாளின் கடைசி பூஜையை அட்டெண்ட் செய்தோம்.

சுற்றி வரும் போது, பகல் பத்து விழாக்கள் நடந்து கொண்டிருந்தன. மஞ்சல் சோடியம் வேப்பர் லைட்டின் ஒளியின் கீழ், சுற்று மதில் அருகில் ஒருவர் கதாகாலேடபம் செய்து கொண்டிருக்க, மொட்டை அடித்த கூட்டம் ஒன்று ஆயிரம் கால் மண்டபத்தில் என்ன இருக்கின்றது என்று தேடிக் கொண்டிருந்தது.

தயிர் சாதம், புளியோதரைப் பிரசாதங்கள். அன்னமூர்த்தி ஃபோட்டோ. ஏறத்தாழ சாத்தி விட்ட கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தோம். நல்லவேளை காலணி பாதுகாப்பிடம் இன்னும் அடைக்கவில்லை. அணிந்து கொண்டு, மீண்டும் தெற்குவாசல் வழியாகவே பஸ் ஸ்டாப்பை அடைந்த போது, இரண்டடுக்கு கம்பி வேலிகளோடு படித்துக் கொண்டிருக்கும் பெரியார் சிலை.

திருவரங்கத்தில் சில ஸ்நாப்கள்::













தெப்பக்குளத்தின் கிழக்குக் கரையில் பல புத்தக நிலையங்கள் இருக்கின்றன. அகஸ்தியர், இண்டர்நேஷனல், லிப்கோ, சைவ சித்தாந்த மட புத்தகாலயம். ஆங்காங்கே சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்து, சாரதாஸில் சில துணிகள் பொங்கலுக்காக எடுத்துக் கொண்டோம்.

பின் மலைக்கோட்டை சென்றோம்.

இந்தப் பதிவிலேயே விளக்கமாக எழுதி விட்டதால், இங்கே சில போட்டோக்கள் மட்டுமே!













* ஒரு மலேஷிய சுற்றுலாக் கூட்டம் வந்திருந்தது. பக்திப் பரவசம் மேலிடப் பாடல்கள் பாடினார்கள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டைகள். நெற்றி முழுதும் பல அடையாள்ச் சின்னங்கள். மலேஷியச் சிறுவர்கள் கைகளில் வைத்திருந்த நவீன கேமிராக்களில் மகேந்திரவர்மர் செதுக்கிய கல்வெட்டுகளைச் சிறைப்பிடித்தார்கள். கனம் ஏறிய சுடிதார் ஆண்ட்டிகள், டிஷர்ட் பிதுங்கிய அங்கிள்கள் என நகரச் சுவடுகள் பூண்டிருந்தனர்.



* காற்று பிய்த்துக் கொண்டு போகின்றது, ஜன்னல்கள் வழியாக. வேப்ப மரங்களின் அடியிலிருந்து பார்க்கும் போது, மாநகரத்தின் பல் வரிசை வீடுகளையும், பரந்த காவேரி நிலத்தையும், ரயில் மற்றும் ரோட்டுப் பாலங்களையும், கோபுரங்கள் எழுந்த திருவரங்க நிலத்தையும் பார்க்க முடிந்தது.



* உச்சிப் பிள்ளையாரின் கருவறையின் மேல் வைத்திருந்த போர்டில், ஆங்கிலப் பிள்ளையார், பிள்ளியாராக ஆகியிருந்தார். இவ்வளவு நாளாக ஏன் யாருக்கும் இது கண்ணில் படவில்லை..?

* தாயுமானவர் சன்னிதிக் கதவில் வாத்சாயனர் சொன்ன ஒரு முறையின் சிற்பம் பார்த்தேன்.

* படி ஏறும் போது, ஓரிடத்தில் தாயுமானவர் கதையை விளக்கி ஒரு வினைல் போர்டு வைத்திருக்கிறார்கள். நம் தமிழ்க் குலக் கொழுந்துகள் பால் பாய்ண்ட் பென்களால் தம் உளம் கவர் கள்ளிகளின் திருப்பெயர்களை இணைத்துக் கிறுக்கி இருந்தார்கள். ஓர் இடம் பாக்கி இல்லை. சிவலிங்கம், அம்மன் முகம்..! ம்ஹூம்..! எதுவும் தப்பவில்லை. கல்வெட்டு வைக்கும் அளவிற்குச் செய்ய இயலாத இவர்கள் செய்யும் இது போன்ற காரியங்களையும், அதனைக் கண்டுகொள்ளாது இன்னும் அப்படியே வைத்திருக்கும் திருக்கோயில் நிர்வாகத்தையும் என்னவென்று வைவது?



* மெளனகுரு மடத்தைச் சேர்ந்த பசுபாதுகாப்புத் தொழுவத்திற்குச் சென்று, வாங்கி வைத்திருந்த கீரைத் தண்டுகளைக் கொடுத்து மகிழ்ந்தோம். பசு மாடுகளைத் தடவிக் கொடுத்தோம். கொஞ்ச நேரம் ராமராஜன் ஃபீலிங் வந்தது.





திருச்சியில் இருந்து நான்கு மணிக்குக் கிளம்பி மதுரை வந்து சேர்ந்து, ஊருக்கு வந்திருந்த தமிழ்ப்பறவையைச் சந்தித்துப் பேசினேன். அவர் எனக்காக வெகு நேரமாகக் காத்திருந்து, சுற்றி விட்டு, மதுரை காந்தி ம்யூசியம் சென்று சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தார். கொடுத்தார். சந்தித்த ஞாபகத்திற்காக நாங்கள் அமர்ந்து பேசிய இடத்தின் அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியைப் படம் எடுத்துக் கொண்டேன். சில விஷயங்கள் பேசி விட்டு, பதினொரு மணிக்கு நாகர்கோயில் பேருந்தைப் பிடித்தேன்.



***

ஹிஷாம் அப்பாஸின் ஒரு பாடல்.

Tuesday, December 23, 2008

IFFK - 2K8 :: Flooded Out.

Flooded Out
Los Inundados

Argentina/1962/35mm/B&W/87'/Spanish

Direction : Fernando Birri
Producer : Carlos Alberto Parrilla
Cinematography : Adelqui Camuso
Editing : Antonio Ripoll
Sound : Jorge Castronuovo
Cast : Pirucho Gomez, Julio Omar Gonzalez, Kector Palavecino, Lola Palombo, Carlos Rodriguez, Maria Vera

IFFK திரைப்பட விழாவில் பார்த்த முதல் படம் இது. சனிக்கிழமை (13.டிசம்பர்.2008) காலை, கலாபவன் திரையரங்கில்!

கடைசி வரிசைக்கு இரண்டு முன் தள்ளி, rowவின் மத்திய ஏரியாவில், மத்திய சீட்டில், 'ஸ்வீட் ஸ்பாட்' என்று எழுதி ஒட்டி இருந்தது, ஆடியோபைலான என் கண்களுக்குத் தெரிந்தது. சரியாக அமர்ந்து கொண்டேன். நான்கைந்து வரிசைகள் தவிர, தியேட்டர் காலியாக இருந்தது.

ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடிய படம் முழுக்க முழுக்க காமெடியும், சட்டையருமாக இருந்தது.

ர்ஜெண்ட்டினா நாட்டின் ஒரு கிராமத்தில் வெள்ளம் புகுந்து விடுகின்றது. மிஞ்சிப் போனால் இருநூறு பேர் கூட தேறாத அதன் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறார்கள். கதாநாயகன் ஒரு குடும்பத் தலைவன். சரியான சோம்பேறி. குடும்பத்தை அமைப்பதில் அந்தளவிற்குச் சுணக்கம் காட்டாதவர் (ஒரு வயது வந்த பெண, இரு சிறுவர்கள், ஒரு கைக்குழந்தை, ஓர் ஆட்டுக்குட்டி, இரு வாத்துகள்), அதனை கட்டிக்காப்பதில் மகா சோம்பல் பட்டுக் கொண்டிருப்பதால், குடும்பத்தலைவியின் சமாளிப்பால் ஓடிக் கொண்டிருக்கின்றது.

காலையில் தூங்கி எழ முயற்சிக்கும் போதே, கால் வைத்தால், முட்டி வரை தண்ணீர். எல்லோரும் வீட்டை காலிச் எய்து கொண்டிருக்க, நம்மாள் சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், 'அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்' என்ற கருத்தோடும் இருக்கிறார். இந்த கருத்து படம் முழுதும் வருகின்றது.

இராணுவம் வந்து மீட்கின்றது. அனைவரையும் நகரத்தின் ஒரு பெரும் மைதானத்தில் தங்க வைக்கிறார்கள். அப்போது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகள் கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்து நோட்டிஸ் விடுகிறார்கள். ட்ராஃபிக் முனைகளில் எதிர்பாராமல் சந்திக்கும் போது, எதிர் கோஷம் போட்டுக் கொள்கிறார்கள்.

நிவாரணப் பொருட்கள் வந்து குவியும் போது, அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்கிக் கொள்கிறார்கள். நம்மாள் குடும்பத்தினர் கையில் கிடைத்த அளவிற்கு அள்ளிக் கொண்டு, 'வீட்டில்' வைத்து விட்டு, மீண்டும் ஓடுகிறார்கள்.

வீடென்பது, ஓடாமல் நின்று கொண்டிருக்கும் ரெயில் கோச்சுகள். வேலை கொடுக்கிறோம் என்று பலரும் உதவ முன்வர, நம்மாள், 'நான் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? I am flooded!' என்று சொல்லிக் கொள்கிறார்.

இரயில் பெட்டிகளைக் காலி செய்யுமாறு வேண்டுகோள் விடப்பட்டும் இவர் குடும்பம் மட்டும் காலி செய்யாததால், கோச் தனியாகக் கழற்றி விடப்பட்டு, ஓடும் ஒரு ரெயிலோடு இணைத்து விடப்படுகின்றது. தூங்கிக் கொண்டிருந்த குடும்பம், குலுக்கலை உணர்ந்து எழுந்து, மரக்கட்டைக் கதவுகளின் இடைவெளியில் பார்க்க, நிலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. தாங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம் என்று புரிகின்றது. நம்மாள் மட்டும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல், பெட்ஷீட்டை இன்னும் இழுத்துக் கொண்டு சுகத்தூங்கி ஆகிறார்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்று விடுகின்றது. இப்படி ஒரு கோச்சே, இந்த ரயிலில் வருவதற்கான ரெக்கார்டு இல்லை என்பதால், ஸ்டேஷன் மாஸ்டர் குழம்பி, அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்து, ஆர்டர் வரும் வரை கோச் அங்கேயே கழற்றி விடப்படுகின்றது.

அங்கிருக்கும் ஊர் மக்கள் இவர்களை விரோதி போல் பார்க்க, ஒரு பாட்டி மட்டும் ப்ரெட் எடுத்து குடும்பத்தின் கைக்குழந்தையிடம் கொடுத்து, வாங்கிக் கொள்கிறாள். பிறகே அங்கே சகஜமான நிலை வருகின்றது. 'we are flooded' என்று சொல்லிக் கொண்டே, இவர்கள் ஊரோடு ஐக்கியம் ஆகின்றார்கள்.

நம்மாள் அங்கே ஒரு விளையாட்டில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் அள்ளிக் கொள்கிறார். குடும்பத் தலைவி, அங்கேயே ஓர் ஓரமாக அடுப்பு மூட்டி, சமையல் செய்து செட்டில் ஆக முயலும் போது, இரண்டொரு நாட்களில் கவர்ன்மெண்ட் ஆர்டர் வந்து, கோச்சை மீண்டும் அவர்களது கிராமத்திற்கு அருகேயே அனுப்பி விடுமாறு சொல்லி விட, மீண்டும் கோச் மற்றோர் இரயிலோடு இணைக்கப்படுகின்றது.

'கோச் கிளம்புகிறது' என்று அப்பாவிடம் சொல்லச் சொல்லி விட, அவன் ஓடி வந்து சொல்லும் போது, அலட்சியப்படுத்து விட்டு, விளையாட்டில் தீவிரம் ஆகின்றார் நம்மாள். தூரத்தில் இரயில் ஓடத் துவங்கி விட்டதைப் பார்த்து, அதில் சில கோச்சுகள் முன்பாக, குடும்பமே 'அப்பா, அப்பா' என்று கத்துவதைப் பார்த்து, ஓடுகிறார்; வேலியைத் தாண்ட முயறு, முடியாமல், குனிந்து, உடை கிழிந்து, எழுந்து ஓடுகிறார்; ரயில் பெருமூச்சிட்டு கனைத்து, ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. பாதையின் செடிகளை மிதித்து விட்டு ஓடுகிறார்; ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் ஆண்களும் பெகளும் சிரிக்கிறார்கள்; கைகளைப் பரத்திக் கொண்டு, ஓடுகிறார்; பையன்களும், பெணும் அழுது கதறுகிறார்கள்; மனைவி கைக்குழந்தையைப் பிடித்துக் கொண்டு கத்துகிறாள்; கைக்குழந்தையும் எதுவும் புரியாமல் அழுகிறது; ரயில் வேகமெடுக்கின்ரது; புகை பெருகிப் பெருகி துடித்து வெளியேறுகிறது; ஓடி கடைசி கோச்சைத் தாண்டி ஓடுகிறார்; அத்தனை பேரும் ஒரு கையால கதவைப் பிடித்துக் கொண்டு மறு கையை நீட்டுகிறார்கள். தலை கலைந்து, முடிகள் காற்றில் துவம்சமாகிப் பறக்க, சட்டை திறந்து, பனியன் வியர்த்து ஊற்ற, உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி, ஓடி..... கோச்சை நெருங்கி, கைகளைப் பிடித்து, உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டு, மனைவியில் மடியில் விழுகிறார்.

வெள்ளம் வடிந்த கிராமத்திற்கே மீண்டும் அனைவரும் வந்து சேர்கிறார்கள். குடும்பம் வழக்கமான வேலைகளில் ஈடுபடத் துவங்குகிறது. நம்மாள் பல் கொப்பளிக்கிறார்.வானத்தைப் பார்க்கிறார். பளிச்சென்று இருக்கின்றது; சூரியக் கதிர்கள் பொங்குகின்றன. கூறுகிறார்,'those were good days. when will the next flood come?'

தையின் ஊடாக மூத்த பெண்ணின் காதலும், முத்தமிடல்களும் வந்து போகின்றன. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட வயல்கள், மனிதர்கள், இரயில்கள், அரசாங்கங்கள் என்று பார்ப்பது அழகாக இருக்கின்றது. முதலில் எழுத்துப் போடும் போதே, ஒரு வித கொண்டாட்ட நக்கலான இசை வந்து படத்தின் தளத்தைச் சொல்லி விடுகின்றது. ஸ்லைடுகளின் பின்புலம் வெள்ள்ம். அதில் மிதப்பவை, கவிழ்ந்த பாத்திரங்கள், கட்டில் கால், மேரி மாதா புகைப்படம், சுற்றும் குண்டா, செடிகள், மீன்கள் மற்றும் அசையும் சூரியன்.

கொஞ்சம் நாஸ்டால்ஜிக் உணர்வை ஏற்படுத்தும் இப்படம், பார்த்து சிரித்து விட்டு வருவது, யோசித்துப் பார்த்தால், நமக்குள் இருக்கும் ஒரு சோம்பேறி தான் என்று அறிந்து கொள்வதில் சுகமாக இருக்கின்றது.