Saturday, March 22, 2008

Enigma- Eyes of Truth

இந்த Enigma வீடியோவிற்கு கதை சொல்லவே தேவை இல்லை. எல்லாம் நாம் அறிந்த கர்ணன் கதை தான். இளைய தலைமுறையினர் யாருக்காவது 'who is this Karnan ya...?' என்ற ஐயம் வந்தால், தலைவரின் தளபதி போல் என்று கொள்ளுங்கள். அட, அதுவும் தெரியாதவரா... அப்போது நீங்கள் இந்த வீடியோவை மட்டும் பார்த்து மகிழுங்கள்.

நெல்லை - ஒரு நாள் பயணம்.



மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தேன்.

இரவின் மெளனமான குளிர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சல்லாத் துணியைப் போல் மேகப் புகைகளைக் கொண்டு, நிலாப் பெண் தன் வெண் முகத்தை மறைத்தும், காட்டியும் ஒரு இரகசிய நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழைத்தூறல் முன்பே பரப்பிய குளிர்மையை விட்டு வைத்திருந்தது. மஞ்சள் மின் விளக்குகளின் ஒளி, சாலையோரம் தேங்கியிருந்த மழைத் தேக்கத்தில் மரங்களின் இலைகளில் இருந்து நழுவும் துளிகள் விழுந்ததால் கலைந்து போய்க் கொண்டிருந்தது. வழக்கமாய் அலுவலகத்தில் இருந்து அந்நேரத்திற்கு திரும்புகையில், வாழ்த்துப் பாடி வரவேற்கும் பைரவர்களின் ஒலியும் இல்லை. தெருவே வெறிச்சோடி இருந்தது. கள்வர்களின் பயம் மட்டும் மனதின் ஓரம் மினுக்கிக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தேன்.

இன்று அதிகாலை 3 மணி.

அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இருந்த தம்பானூர் பேருந்து நிலையத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கூட்டமும் இங்கு இல்லை.

பூச்சிகள் பறந்து கொண்டிருந்த டியூப் லைட்கள், நகர்த்த இயலாமல் கால்களில் ஆணியடிக்கப்பட்ட சேர்களில் அமர்ந்தும், புரண்டும், சரிந்தும், வாய் திறந்தும், மூடியும், அரைக் கண்களை திறந்தும், மூடியும் இருந்த பல பிரயாணிகள், நாள் முழுதுமான பயணத்தில் களைத்த பேருந்துகள் ஓய்வு, திறந்திருந்த சில ஓட்டல்கள், நேரக் கண்காணிப்பாளர் அலுவலகம், சில பத்திரிக்கை கடைகள் ( அங்கிருந்த ஆடையில்லாத படங்களை வெறித்துப் பார்த்தும், நகர்ந்தும் சுற்றிக் கொண்டேயிருந்த சில கண்கள்), டீ ஆற்றும் ஒரே ஒரு அரசாங்கக் கடை, அங்கிருந்து மிதந்து வந்து காற்றின் பக்கங்களில் தன் வரிகளைப் பதித்துப் போன 'கண்ணன் ஒரு கைக்குழந்தை...'....


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறுகையில் நான் பார்த்த திருவனந்தபுரம் முக்கிய பேருந்து நிலையம் இந்த அழகில் இல்லை.

துரையில் மாமா வீடு இருப்பதால் அங்கும், திருச்சியில் அத்தை வீடு இருப்பதால் அங்கும் சிறு வயதில் பல முறை சென்று வந்தாயிற்று. கோவை நம்ம ஊர். அங்கு சித்தப்பா வீடு இருந்ததால் அங்கும் பல முறை சென்றாயிற்று. சேலம் இன்னும் அருகில்! வடக்கும், கிழக்கும் நோக்கிய பயணங்களில் சேலம் தாண்டாமல் இருக்க முடியாது. சென்னையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்தது. பெங்களூரிலும் சில காலம் ஓடியது. ஹைதராபாத்தில் ஒரு சுற்றுலா சென்றதால், அதையும் பார்த்தாயிற்று. இன்னும் பார்க்காத தமிழக மாநகராய் நெல்லை மட்டும் இருந்து வந்தது. தெற்குப் பக்கமாக வர வேண்டிய அவசியம் இதுவரை இல்லாததால் நெல்லை பயணம் மட்டும் அமையாமலே இருந்தது. (இப்போது ஈரோடும், திருப்பூரும் மாநகர் வரிசையில் நின்று கொண்டதால், திருப்பூர் மட்டுமே இவ்வரிசையில் மிச்சம் இருக்கின்ற மாநகராய் உள்ளது.)

நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தருணம் அமைய வேண்டும் என்பதற்காகவே நெல்லை வருகை மட்டும் தள்ளிப் போடப்பட்டே வந்தது போலும்!

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்து விடுபட்டு, எவ்வித தகவல் இணைப்பும் இல்லாமல் போய்விட்ட பள்ளி நண்பர் ஒருவர் இப்போது நெல்லையில் குடும்பத்துடன் வசிப்பதாக தெரிய வந்த போது, அத்தருணம் வந்து விட்டது என்று தோன்றியது.

பங்குனி உத்திரம், மிலாது நபி, ஈஸ்டர் மூன்றும் இணைந்து வந்த இப்புனித வெள்ளியில் செல்ல வேண்டும் என்று இருந்தது போல், காலை உணவை தம்பானூரிலேயே முடித்துக் கொண்டு, நாகர்கோயில் செல்லும் பேருந்தில் ஏறினேன்.

தொடர் மழையில் இருந்து காத்துக் கொள்ள ஒரு குடையும், குடை மறைக்க குமரன் சில்க்ஸின் பிளாஸ்டிக் கவர் பையும், பயணத்தின் போது படிக்க ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்டு இருந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' பற்றிய கையேடும் என்னுடன் பயணத்தில் துணை இருந்தன. தம்பானூரில் தமிழ்ப் புத்தகங்கள் ஏதும் கிடைக்காததால், 'இந்தியா டுடே' ஆங்கிலப் பதிப்பு மட்டும் வாங்கிக் கொண்டேன்.

ஜன்னல் திறக்க முடியாத இறுக்கத்தில், மேகங்கள் குவிந்திருந்த நாள் பொழுதின் குளிர்க் காற்று தீண்டாமல், ஒரு மெளனப் படம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். புரட்டத் தொடங்கி நன்றாக இருக்கிறதே, வாங்கிப் படிக்கலாம் என்று முடிவு செய்ய வைத்தது, 'இந்தியா டுடே' யில் இடம் பெற்றிருந்த அத்வானி அவர்களின் 'My Country, My Life' புத்தகத்தின் மதிப்புரை மற்றும் சில Excerpts.

மார்த்தாண்டம் அருகே சாலையோரமாகவே சில தேவாலயங்கள் வருவதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 8:50க்கு ஆரம்பித்த பயணம், எல்லையைக் கடந்து நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தை அடைந்து மூச்சை நிறுத்தும் போது, 11 மணி.

அந்நிலையத்தில் விகடன், குமுதம் மற்றும் ஜூ.வி. வாங்கிக் கொண்டேன். கைப்பையின் எடை சற்று அதிகரித்தது. நெல்லை செல்லும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.



இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன மழை மேகங்கள். வழியெங்கும் கடந்த 48 மணி நேரத்தில் இடைவிடாது பெய்திருந்த மாமழையின் விளையாட்டுக்கள். தன் உடலில், கடந்து செல்லும் வாகனங்கள் வாரி இறைக்கும் பழுப்பு நீரின் சேற்றைத் தாங்கிக் கொண்டு, பதிலுக்கு சாலையோரம் அமர்ந்திருந்த, நடந்த, நின்ற மனிதர்கள் மேல் சாலைக் குழிகளின் மழை நீரை பீச்சியடித்து... இந்த அலகிலா விளையாட்டை விளையாடிய படி பகல் 1 மணி சுமாருக்கு நெல்லை புது பேருந்து நிலையம் வந்தடைந்தது பேருந்து.

'நான் சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்று அடையாளம் சொல்ல, 'அது போல் ஆயிரம் கடைகள் இருக்கின்றன' என்று பதில் வர , வேறு வழியின்றி மற்றுமொரு அடையாளம் கூறினேன். 'இலவசக் கழிப்பிடம் அருகில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் நிற்கிறேன்' என்றேன். 'அது நம்ம ஊரில் மிகக் குறைவு தான். எனவே இந்த அடையாளம் போதும்' என்றான். More Input Hops, But Very less Output Hops....?

உடலளவில் சற்று மாறிப் போயிருந்த நண்பன், மனதளவில் மாறாமல் என்னைப் பார்த்து 'என்னடா இப்படி ஆளே மாறிட்டே' என்றான். சிரித்தோம். பின் அங்கிருந்து பாளை பேருந்து நிலையம் வந்தோம். அங்கிருந்து நெல்லையப்பர் கோயிலைத் தாண்டி ஒரு நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றோம்.

பேச்சு. உணவு. பேச்சு. கொறித்தல். விட்டு விட்டு பொழிந்த, தூறிய, பெய்த, சிலுசிலுத்த மழையை இரசித்தல்.

மாலை 5.15 ஆனது. கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து நடந்து சென்றோம்.





நெல்லையப்பர் கோயில் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தோன்றவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பிரம்மாண்டமாய் இல்லா விட்டாலும் இதுவும் பெரிதாகவே இருந்தது. நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தரிசித்து விட்டு, வசந்த மண்டபத்தில் பங்குனி உத்திர சிறப்பு திரு வீதி உலாவிற்காக அலங்காரம் செய்து கொண்டிருந்த பல்லக்கில் உற்சவர் தரிசனம், பிள்ளையார் பிடித்து பால் ஊற்றுதல், தாமிரசபை, எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு சல்யூட், திருகோயிலின் யானை நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகிலேயே அமர்ந்து பேச்சுக்கள் (ஏனெனில் அங்கு தான் யாரும் அதிக நேரம் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். யானை மேல் இருக்கும் ஆதி பயம் மட்டுமில்லாது, அதன் பெரிய உடலில் இருந்து வந்து கொண்டிருந்த விலங்கு மணம்..!) என்று இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கோயிலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தோம்.

வசந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிவ புராண நிகழ்ச்சிகள், கந்த புராண நிகழ்ச்சிகள் என்று ஓவியங்கள் வரையப் பட்டு இருந்தன. அதில் ஓர் ஓவியத்தில் அழகன் முருகனின் முக அழகு, அந்த செளந்தர்யம், வசீகரம், மந்தகாசப் புன்னகை, குறும்பு கொப்பளிக்க வள்ளியைக் காணும் காதல் கண்கள், நின்றிருக்கும் கம்பீரத் தோரணை.... அடடா....! ஒளவைக் கிழவி ஏன் இந்தச் சிறுவனை மட்டும் கொண்டாடினாள் என்பது புரிந்தது.

'நம்ம ஊரில் தான் பங்குனி உத்திரம் என்றால் முருகன் ஸ்பெஷல். இங்கு இது, சாஸ்தா ஸ்பெஷல்' என்று சொல்லப் பட்டிருந்ததால், வன்னியடி சாஸ்தா கோயிலில் இருந்து திருநீறு மற்றும் பொங்கல் வாங்கிக் கொண்டு கோயிலில் இருந்து வெளி வந்தோம்.

நெல்லையில் இருக்கும் ஒரே ஒரு பொழுது போக்கு இக்கோயில் என்பதால் ( இறைவா..! கோயில் பொழுது போக்குத் தலமா? உள்ளத்தின் பழுது போக்குத் தலம் என்றல்லவா நான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்...!) வஞ்சனையே இல்லாமல் சிறுவர் சிறுமிகள் தூண்களின் மேல் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தூண்களில் இருக்கும் சிலைகள் கண்கள் மூடி இருக்கும் அப்போது என்று தோன்றியது.

வெளியே வர, என் செருப்பு மட்டும் யாரும் சீண்டாமல் கிடக்க, கிடைக்க, நண்பனது செருப்பு காணாமல் போயிருந்தது. கொஞ்ச நேரம் தேடிப் பார்த்து விட்டு வெறுங்காலோடு வந்தோம். 'காலுக்கு வந்தது காலணியோடு போயிற்று' என்று சொன்னால் அடித்து விடுவானோ என்ற அச்சம் இருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை.



வீட்டுக்கு வந்து சொன்னால், 'சரி! கொண்டு போயிருந்த குடை எங்கே?' என்று கேட்டார்கள். திக்கென்று இருந்த்து. நல்லவேளை கொண்டு வந்திருந்தோம். இல்லாவிடில் வழக்கமான 'தலைக்கு வந்தது தலைக் குடையோடு போனது' என்று மேலும் ஒன்று சொல்ல வேண்டி வந்திருக்கும்.

நாங்கள் கோயிலுக்குச் சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் வரை இறுக்க மூடியிருந்த வானம், வீட்டுக்குள் நுழைந்த சில நொடிகளில் பொங்கி கொட்டியதை நினைக்கையில் ஏதோ ஒன்று புரிந்தது போல் இருந்தது.



பின் மீண்டும் ஜங்ஷன் வந்து உண்மையான, சத்தியமான சாந்தி ஸ்வீட்ஸ் நாங்கள் தான் என்று போர்டு கூறிய கடையில் அல்வாப் பாக்கெட்டுகள் வாங்கினோம். இருட்டுக் கடை கதவு திறக்கும் முன்பே அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அப்பக்கம் செல்லவே இல்லை.

கொட்டும் மழையில் புதிய பேருந்து நிலையம், திருவனந்தபுரத்திற்கு நேரடி பேருந்து இல்லை என்பதால் மீண்டும் நாகர்கோயில் செல்லும் பேருந்துக்குள் ஏறிக் கொண்டேன், ரிப்போர்ட்டரை வாங்கி விட்டு..!

ஓரங்களில் ஊற்றிக் கொண்டே இருந்த பேருந்தில் ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டே கையில் வாங்கி வைத்திருந்த புத்தகங்களை படித்துக் கொண்டே வர, இரவு 9.50 மணி சுமாருக்கு எடுத்த பேருந்து, முன்னிரவு 11.30 சுமாருக்கு நாகர் கோயிலை அடைந்தது.

அங்கு வருவதற்குள் எல்லாப் புத்தகங்களும் காலியாகி விட்டிருந்ததால், நா.கோ.லில் எமெர்ஜன்சி நேரத்தில் மட்டும் வாம்க்கும் குங்குமம், கல்கி, நக்கீரன் வாங்கினேன். படிக்கும் அத்தனையும் ஜீரணிக்க Maazaவும் கூட..!

உடனே கிளம்பிய பேருந்தில் ஒட்டிக் கொண்டு, மஹா சித்தர்கள் கூறிய 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்' என்ற கேள்விக்குப் பதிலாக அதிகாலை 1:40 மணிக்கு தம்பானூர் வந்து இறங்கும் வரை பேருந்தில் நான் இருந்த நிலையைச் சொல்லலாம். பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாக அப்பயணம் கழிந்தது.

அடுத்து கழக்குட்டம் செல்லும் பேருந்து 2:30க்கு என்று தெரிந்து கொண்டதில், சும்மா இருக்க மாட்டாமல் தமிழ் 'இந்தியா டுடே ' வாங்கி அதை மேய, அதில் பாதி காலையில் வாங்கிய ஆங்கிலப் பதிப்பின் மொழியாக்கம் என்று புரிந்தது.

அந்த அகால இரண்டு மணிக்கும் இன் பண்ணிய இருவர் வந்து 'சார்! இது ஒரு நல்ல ஆஃபர். வெப்ஸ்டர்ஸின் டிக்ஷ்னரி. வேர்ல்ட்ஸ் இம்பார்டென்ட் ஃபேக்ட்ஸ். ஒரிஜினல் 1500 கிட்ட வரும். இப்போது சலுகை விலையாக 250க்கு தருகிறோம்' என்று கேட்க ஆரம்பித்தனர்.

அவர்களை மறுத்து நகர்ந்து கொண்டேன். வலை வந்த பிறகு, இது போன்ற தகவல் தொகுப்பு புத்தகங்களின் அவசியம் அற்றுப் போய் விட்டது என்று அவர்களிடம் சொல்ல நினைத்தாலும், இல்லை.

மலப்புரம் செல்லும் பேருந்து கிளம்புகையில், அதில் ஏறிக் கொண்டு, பூ ஒன்று குளத்தின் அலைகளில் மிதப்பது போல் மிதந்து கழக்குட்டத்தில் இறங்கிக் கொண்டேன்.

வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.



வீடு இருக்கும் கருமை பூசிய தெருவில் நடக்க, அருகின் இரயில்வே தடத்தில் மின்வண்டி தடதடத்துப் போகின்ற சத்தம் கேட்டது. அதிலும் யாராவது ஒருவர் நான் நடந்து போகும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பாரோ என்று தோன்றியது.

அறைக்குள் நுழைந்து அந்த ஒரு நாளில் எடை கூடிப் போன கைப்பையைப் பிரித்து குடையை ஆணியில் மாட்டி வைத்தேன். Maazaவில் மிச்சத்தைக் காலி செய்தேன். வாங்கிய விகடன், குமுதம், குங்குமம், ஜூ.வி., ரிப்போர்ட்டர், நக்கீரன், இந்தியா டுடே, India Today, கல்கி அனைத்தையும் எடுத்து புத்தக அலமாரியில் அடுக்கி வைக்க, 'நானும் இருக்கிறேன் தீண்டப்படாமல்' என்ற வருத்தத்தோடு கையில் வந்து விழுந்தது 'Time Management' புத்தகம்.

ஏனோ ஒரு சிந்தனை அப்போது வந்தது.

விளக்கை அணைத்து விட்டு... Good Night...இல்லை... Good Morning. ஏதோ ஒன்று. தூங்க வேண்டும்.

Thursday, March 20, 2008

பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ் .


ன்ஸ்டீன் அண்ணாத்தைக்கு முதலில் சலாம்.

ன்றும் இல்லாததை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது தான்.

ஆனால் அதை அழுத்தி இருக்கிறார்கள். Squeeze செய்திருக்கிறார்கள். பாருங்களேன்.

http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2008/229/1

வாழ்வின் மாயா தத்துவத்தையும், இயற்பியலையும், புத்தமதத் தத்துவத்தையும் இணைத்து ஒரு பெரிய ஆர்டிகிள் எழுதி இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றிலாவது குறைந்தபட்சம் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் படித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் அப்படியே ஏறக் கட்டி விடுங்கள்.

http://www.higgo.com/quantum/laymans.htm

காந்தப் புலத்தைத் தூண்ட என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, பார்த்தீர்களா..?



ரண்டாம் உலக மகா போரில் ஜப்பான் பேரரசை நிலை குலைய வைத்த 'சின்னப் பையன்'.



ரு சதுரத்தின் பரிமாணம் 2. ஒரு கோட்டின் பரிமாணம் 1. ஒரு புள்ளிக்கு பரிமாணமே கிடையாது. சரி. எல்லாம் நாம் அறிந்தது தான்.

முக்கோணத்தின் பரிமாணம் என்ன? ஒரு மரத்தின் பரிமாணம், காலையில் சாப்பிட்ட இட்லியின், பரிமாணம், வானில் நகர்கின்ற மேகத்தின் பரிமாணம் என்னவாய் இருக்கும்?

அறிய ஆசையா? அணுகவும்.

பிரதி வாரம் செவ்வாய் காலை 7 மணி முதல், மதியம் 1 மணி வரையும் Massachusetts சர்வரிலும், வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் ஒன்பது முப்பது மணி வரை பிட்ஸ்பெர்க் சர்வரிலும் மாறிக் கொள்ளாமல், எப்போதும் ஒரே சர்வரில் நின்று அருள் பாலிக்கும் இங்கே :

http://www.math.umass.edu/~mconnors/fractal/sierp/sierp.html

குழப்பவியலைப் (Chaos Theory) பற்றிய குழப்பமான தத்துவங்களையும், குழப்பமான ஈக்வேஷன்களையும் நம்மைக் குழப்பாமல் , குழப்பவும் செய்யாமல், குழம்பவும் விடாமல் ஒரேயடியாக குழப்பி அடிக்காமலும் குழப்பமே இல்லாமலும் இங்கே ஒரு சிறிய அறிமுகம். என்ன கொஞ்சம் குழப்பி விட்டேனா, இல்லை குழம்பி விட்டேனா..? ரொம்பக் குழம்பாமல் இங்கு சென்று பார்க்கவும். உங்கள் குழப்பம் கொஞ்சம் தெளியலாம்.

குழப்பாண்டவரே துணை.

http://www.imho.com/grae/chaos/main.html

இல்லான் இல்லாள்...!



'ன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கலாமோ? சக்கர கம்மியா குடுத்த காபிக்கு கத்தாம, சாக்ஸ் தொவைக்காம இருந்தா எரிச்சல்படாம, ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வந்தா ஆத்துல இல்லைனா டென்ஷன் ஆகாம இன்னும் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். வைதேகி. இப்படி ஆகிடுச்சேம்மா. இனிமே உன்ன எங்க பாக்கப் போறேன். மேலோகத்திலயா? சொர்க்கத்திலயா? ம்ஹூம் நான் உன்ன பண்ணின கஷ்டத்துக்கெல்லாம் எனக்கு சொர்க்கமா கெடைக்கும்? நரகம் தான். சங்கரா..! நாராயணா..!'

ரங்கநாதன் கண்களை மூடிக் கொண்டார்.

"ம்மா! இந்தக் கணக்கு சரியாம்மா? கொஞ்சம் பாரேன். தப்பா போட்டிருந்தா ஸ்கூல்ல டீச்சர் தொடையிலயே கிள்றாம்மா..!"

"ஏண்டா! நோக்கு ஏழு வயசாறதோ இல்லையோ? இன்னும் என்னடா அம்மா அம்மானு முந்தானையையே புடிச்சிண்டு சுத்தறே! உங்கப்பா தான் அங்க பேப்பர் படிச்சிண்டு ஒக்காந்திருக்காளே! அவர் கிட்ட போய்க் கேளேன். அம்மா தான் இங்க சமையல்ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்லோ இல்லையோ? ஏன்னா...! செத்த இவனக் கவனிச்சுக்கப் படாதா? நான் இங்க ஒருத்தியா கிச்சன்ல அவஸ்தைப் பட்டுண்டு இருக்கேன். இந்த மனுஷனுக்கு பேப்பர்...! காலயில எழுந்ததுல இருந்து பேப்பர் தான் உலகம். கக்கூஸ் போறதுல இருந்து, பல் தேச்சு ஆபீஸுக்குக் கிளம்பற வரைக்கும்.. அப்படி என்ன தான் பேப்பர்ல இருக்குமோ? ஆபிசுவரி வரைக்கும் கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கணுமா? எங்க மதினி வீட்ல எல்லாம் இப்படியா இருக்கா? காலையில எழுந்து பொம்மனாட்டிக்கு ஹெல்ப் பண்ணின்டு, அப்புறமா தான் ஆபிஸ் கிளம்பறா..! எனக்குனு வந்து வாச்சிருக்கே, இப்படி ஊருல இல்லாத மனுசனா...?"

"என்னடி! பொலம்பிண்டே இருக்க..! ச்சே..! ஒரு மனுஷன் காலங்காத்தால எழுத்தரிச்சு நிம்மதியா ஆபீஸுக்கு கெளம்பறதுக்குள்ள எத்தனை சத்தம்..? என்னடா வேணும் இப்ப உனக்கு..?"

"இல்லப்பா! இந்த கணக்கு சரியானு அம்மாவ பாக்க சொன்னேன்..."

"கொண்டா...! என்னடா கணக்கு போட்டிருக்க நீ! 73 + 27 நூறுனு தெரியலயே உனக்கு! 87னு போட்டு வெச்சிருக்க..! ஏண்டா இவ்ளோ வயசாறதே , ஒரு கூட்டல் கணக்கு சரியா போட வர்றதா உனக்கு? எடு அந்த ஸ்கேலை.! கையை நீட்டு!"

"அப்பா..! அடிக்காதீங்கப்பா...!"

"போறும்..! புள்ளய அடிச்சது! ஆத்துல இருக்கற கோபத்தை எல்லாம் பச்சப் புள்ள மேல தான் காட்டறது. கொண்டாங்க இப்படி! காத்தால எழுந்திரிச்சு ஆத்துக்காரிக்கு கூடமாட ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் அப்படினு தோணல. ஆனா புள்ளைய அடிக்கறதுனா மட்டும் அப்படியே ஆங்காரமா எழுந்திருச்சு வந்திடறது...!"

"அடச்சை..! நீ புள்ளயை சரியா வளத்திருந்தினா, இப்படி கணக்கு எல்லாம் தப்பா போட்டுண்டு வந்து நிப்பானா..?"

"ஏன் நீங்க தான் சரியா வளக்கறது! அப்படியே ராமானுஜம் ஆத்துல அரை கிலோ தயிரை தெனமும் குடிச்சு வளந்தாப்ல தான் பேசறது..! மாசா மாசம் சம்பளத்துல 400 ரூபா குறையறதேனு கேட்டா அதுக்கு சரியா கணக்கு சொல்றதில்ல. ஆபிஸுல கூப்பிட்டானு சொல்லி தண்ணி அடிக்க வேண்டியது.."

"என்னடி நாக்கு நீள்றது? நீ மட்டும் கணக்குல புலியோ? உங்கப்பன் கலியாணத்துக்கு போடறதா சொன்ன பதினைஞ்சு பவுன் நகைக்கு கணக்கு கேட்டா மட்டும் மூச்சே வராதே..! எல்லாம் ஏமாத்து குடும்பம். பெரியவா சும்மாவா சொன்னா? 'ஆழம் தெரியாம் கால விடாத'னு..!"

"இதோ பாருங்க..! என்ன பத்தி என்ன வேணாலும் பேசுங்கோ! பொறுத்துக்கறேன்! எங்க ஃபேமிலியப் பத்தியோ, அப்பாவைப் பத்தியோ ஏதாச்சும் கொற சொன்னீங்க, அப்புறம் நான் என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது.."

"என்னடி செஞ்சுக்குவ...! உங்கப்பன் வீட்டுக்கு ஓடிப் போய்டுவியோ? அங்கயே தரித்திரம் தல விரிச்சு ஆடுது..!"

"நான் எதுக்கு அங்க போகணும்..? எங்கப்பான் பெருமாள் காலடியில போய் சேந்திடுவேன். அப்புறம் நீங்களாச்சு, உங்க பதினஞ்சு பவுன் நகையுமாச்சு..! கட்டிண்டு அழுங்கோ.."

"எப்படி செஞ்சுக்குவே அம்மா பரதேவத...?"

"எப்படியோ செஞ்சுக்கறேன். லோகத்துல வர்றதுக்கு ஒரே வழி. போறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. டேய், நீ இங்க வாடா..!..."

"ப்படி ஆச்சு...?" பார்வதி மாமா கேட்டாள்.

"என்னனு சொல்ல மாமி..? காலையில சண்டை. வழக்கமா நடக்கற சண்டை இல்லை. கொஞ்சம் பெரிய வார்த்தை எல்லாம் வந்து விழுந்திடுச்சு. அந்த கோபத்தோடவே ஆபிஸுக்கு கெளம்பிப் போயிருக்கார். நான் ஒரு பாவி! அவருக்கு ஆபிஸுல ஆயிரம் டென்ஷன் இருக்கும். அதையெல்லாம் வீட்டுல தான் காட்ட முடியும். காட்டி இருக்கார். அதைப் புரிஞ்சுக்காம அவர்கூட எப்பயும் சண்டை போட்டுண்டே இருந்திருக்கேன். இன்னிக்கு அந்த கோபத்துல போய்க் குடிச்சிருக்கார். ஸ்கூட்டர் ஓட்டிண்டு வரும்போது லாரில அடிபட்டி அங்கேயே....! பெருமாளே! சாகும் போது என்ன நெனச்சிண்டாரோ? நான் பாவி..! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா அவர் கூட வாழ்ந்திருக்கலாமே....!" வைதேகி தலையில் அடித்துக் கொண்டாள்.

பீச்சாங்கர...!



டல் நீருக்கு வெள்ளை ஆடைகளை அணிய வைத்து, அலைகளாய்க் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கருணையே இல்லாத கதிரவன் காற்றைப் பொசுக்கிக் கொண்டிருந்தான். காற்றின் கண்ணீர் கானல் நீராய் கசிந்தது.

"இப்ப இன்னாத்துக்கு இங்க இட்டாந்த? அதும் இப்டி ஒரு மொட்ட வெயில்ல..?"

"இன்னாம்மே! கொஞ்ச நேரம் குஜாலா இருக்காலாம்னு சவாரி கூட போகாம இங்க வந்தா..."

"அய்ய! அதுக்காண்டி தான் இஸ்துகினு வந்தியா? வூட்டாண்டயே சொல்லிருக்க வேண்டியது தான..."

"அது எப்டி? புள்ளங்க தான் மூணு மூன்றையானா இஸ்கோலுல இருந்து வூட்டுக்கு ஓடியாந்துருமே..!"

"அதான் மச்சான் இங்க கூட்டிகினு வந்தியா? நானும் பீச்சுக்கு கூட்டினு போனு எத்தினி தபா கூவிகினே இருந்தேன். ஐயாவுக்கு தோணுச்சினா தான் நடக்கும் போல..! அது சரி..! இன்னாய்யா இது பாக்க சின்னஞ்சிறுசுக மாரி இருக்குதுங்க! அந்த போட்டுக்கு அடியில உக்காந்து இன்னா பண்ணுதுங்க..?

"ஆங்..! கோலி வெள்ளாடறாங்கோ? இன்னாடி நீ? ரெண்டு புள்ள பெத்தவ மாரியா கேக்கற..?"

"அதுக்காண்டி..! இன்னாயா அக்கிரமா இருக்கு! பாத்தா படிக்கற புள்ளைங்க மாரி இருக்குதுங்க. இப்டி பட்டப் பகலுல மனுசன் போய்க்கினும் வந்துகினும் இருக்கற பப்ளிக் பிளேஸ்ல இந்தக் கருமாந்திரம் பண்ணிட்டு இருக்குதுங்க! இதுங்க அப்பனாத்தா பாக்க சொல்லோ எப்டி மனசு நொந்து போகும். கஷ்டப்பட்டு வாயக் கட்டி, வயித்தக் கட்டி அவுங்க கஷ்டப்பட்டு ஒயச்சு, காசு சேத்து, புள்ளங்களாவது நல்ல இருக்கணும்னு பெரிய பெருய இஸ்கோலுலயும், அது இன்னாய்யா அது... அக்காங், காலேசு அங்க எல்லாம் சேத்து வுட்டா, இதுங்க பண்ற காரியத்துக்கு எனக்கே செருப்ப கயட்டி நாலு அடி அட்ச்சா இன்னானு தோணுது.."

"அடேங்கப்பா! இன்னா ஒனக்கு இவ்ளோ கோவம் வருது! இதுக்கே இப்டி டென்சன் ஆகறியே, இன்னும் பெசன்ட் நகரு பீச்சுப் பக்கமெல்லாம் பயங்கர கலீஜா இருக்கும். சவாரி போச் சொல்ல கண்ண மூடிக்கினு தான் கிராஸ் பண்ணிப் போவேன். அத எல்லாம் பாத்தா இன்னும் என்ன சொல்லுவியோ?"

"பீச்சுனா பாக்க சொல்ல நல்லாருக்கும். புள்ளங்களையும் கூட்டிகினு வரலாம். செலவு கம்மியா பொயுது போகும்னு நெனச்சா, இந்த எளவையெல்லாம் பாக்க அதுங்கள வேற கூட்டிகினு வரணுமானு தோணுது..!"

"அப்ப பீச்சுக்கு கூட்டிகினு போனு அப்பபோ சவுண்டு விடுவியே, அதெல்லாம் ஒனக்கோசரம் இல்லையா..?"

"அடப்பாவி மனுசா! நீ அப்டியா நெனச்சுக்கினு இருந்த! ஏன்யா! ரெண்டு புள்ள பொறந்தாச்சு. அதுங்க இஸ்கூலுக்கு போற வயசாகிடுச்சு! இன்னமும் நீயும், நானும் மட்டும் பீச்சு, பார்க்குனு சுத்தறதுக்கு நாம் இன்னா நேத்து தான் கலியாணம் பண்ண சோடியா? இனிமே புள்ளைங்க நல்லது தான் நமக்கும்.."

"அது சர்தான்! வாத்தியாரே பாட்டுல சொல்லி இருக்காரே!"

"இன்னானு..?"

" 'இனி புருசனுக்கு கெடியாது கொயந்தைக்கு தான் முத்தம்'னு.."

"கரீட்டு தான்! வாத்தியாரு சொன்னா அது என்னிக்காவது தப்பா போயிருக்கா..? சரி வா! புள்ளைங்க வந்திடப் போகுதுங்க! போய் சோத்த ஆக்கணும்! நீயும் சவாரி போய்ட்டு வா..! வழியுல இந்த மாரி கண்றாவியெல்லாம் பாத்து மனசக் கெடுக்காத. வூட்டுல நான் ஒருத்தி உசுரோட இருக்கேங்கறத மறந்திடாத. இன்னா புரிஞ்சுதா.?"

"சர்தான் புள்ள! வா! வூட்டுக்குப் போலாம். இன்னோரு தபா, இந்த மாரி எல்லாம் நடக்காம பீச்சு சுத்தமா இருக்க சொல்லோ, புள்ளங்களயும் கூட்டிகினு வருவோம். நீ சொன்ன மாரி, இனிமே புள்ளங்க சந்தோசம் தான் நமக்கும்! ஆனா, நம்ம புள்ளங்கள இதுங்க மாரி தறுதலயா வளக்கக் கூடாது. தங்கம் கணக்கா தான் வளக்கோணும். இன்னா, ஒனிக்கு ஹாப்பி தான...?"

" தோடா.. தொர இங்கிலீசு எல்லாம் பேசுது...!"

பொறிந்த வெயிலின் சிதறல்களாய் இருவரும் சிரித்தனர்.

அழகே.. அழகே நித்தியத்தில் இன்று கலந்து போவோம்!



ப்ரிய முகிலே! இள வயதின் மிகப் பெரும் கனவுகள் போல், மழை நீரைத் தளும்பத் தளும்ப நிறைத்து வைத்திருக்கிறாய் போலும்! சற்று தெளித்து விட்டுத் தான் செல்லேன்! என் தேவதை பாதையில் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். குளிர்ந்திருக்கும் பூமியின் மேல் மென் பாலாடை போல் பனித் துளிகள் போர்த்தி இருக்கும் இம்முன்னிரவில், ஒரு காதலின் கைப்பிடித்து அவள் வருகிறாள்.

சிலுசிலுவென உள் நரம்புகள் வரை ஊடுறுவும் தென்றல் குயிலே! அவள் தேகத்தை நடுக்கச் செய்ய முயலாதே! தீண்டத் தீண்ட நீ நடுங்கிப் போவாய், அதன் வகையில் குளிர்விப்பதற்கு வார்த்தைகளைக் கொண்டு வருகிறாள்.

விழிகளில் துள்ளித் துள்ளி விளையாடும் கரு முத்துக்களை பாதரசப் பூக்களில் குழைத்து விசிறி அடித்த இருள் பூத்திருக்கும் இவ்வேளையில், பச்சை விளக்கின் தூறல்களாய் ஒளி தெளிக்கும் மின்மினிக் குட்டிகள் திரும்பிப் பார்க்க கொலுசின் ஒளியைப் பறைசாற்றி வருகிறாள்.

ஜெகஜ்ஜோதியாய் ஒளிப் பிரவாகம் பொழியும் அமுத நிலவே, உன் வெண்ணொளி வெள்ளத்தில் நிறைக்க ஒரு அட்சயப் பாத்திரம் போல், முல்லைப்பூ சரத்தின் சரள நடையை மேற்கொண்டு வருகின்றனள்.

பிரபஞ்சத்தின் எண்ணிலா வெண் முத்துக்களைக் கொண்டு மூடிக் கொள்ள, ஒரு பூமியென காத்திருக்கிறேன். பிரம்மாண்ட இரவின் பனிக் கரங்களில் பூத்திருக்கும் வியர்வைக் குருதிப் பொட்டுக்களை உறிந்து, ஆழ்ந்த மெளனத்தின் விரியில் அமிழ்ந்து, காலக் கடிகாரம் அற்ற, கோடானு கோடி கற்பக் காலங்களில் பேரின்பப் பெருவெளியில் நிறைந்து துளித் துளியாய் காணாமல் போக,

வா

அழகே.. அழகே நித்தியத்தில் இன்று கலந்து போவோம்!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மோக்ளி Labs - Intriguing Innovations.

மேனிலை வகுப்புகள் முடிக்கும் வரை ஆய்வகங்கள் பக்கம் செல்லும் வேலையே இல்லை. எப்போதாவது ஆசிரியர் வரவில்லையானால், சென்று அங்கு அவர் இருக்கிறாரா என்று பார்த்து வர வேண்டும். அவ்வளவு தான்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்காக பள்ளியிலேயே இரவு தங்கிப் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்த போது தான் நின்று அவ்வப்போது ஆய்வகங்களை கவனித்தோம். ஆணியில் கழுத்தை மாடித் தொங்க விட்டிருக்கும் எலும்புக்கூடு, கலர் கலர் புகை பூக்கும் வேதியியல் கூடம், இரவு முழுதும் எரிய விட்டு மஞ்சள் ஒளியைப் பொழிந்து கொண்டே இருக்கும் சோடியம் லைட் (அப்போது எங்கள் ஊருக்கு சோடியம் வேப்பர் சாலை விளக்குகள் வந்திருக்கவில்லை..!)இயற்பியல் கூடம் என்று விசித்திரமாய் இருந்தது.

பதினொன்றாம் வகுப்பு வந்த பின்பு தான் ஆய்வுச்சாலைகளில் நேரடி படையெடுப்பு நிகழ்ந்தது. ஆங்கிலம், தமிழ் செய்முறைப் பயிற்சிகளும் இருந்தன. ஆங்கிலத்திற்கு ஏதேனும் பாராவைப் படித்துக் காட்ட வேண்டும். அதற்கே மூச்சு வாங்கி விடும். தமிழுக்கு மற்றுமொரு விளையாட்டு. திருக்குறள் முழுவதையும் படிக்க வேண்டும், மனதிற்குள்! வழக்கம் போல் பொண்ணுங்க மட்டும் முழுதும் மூச்சு முட்ட படித்துக் கொண்டிருக்க, நாங்கள் எல்லாம் ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாம் பாலுக்கு ஜம்ப். அட..அட.. வள்ளுவர் என்னமா ரசிச்சி, அனுபவிச்சு எழுதி இருக்கிறார் என்று புரிந்தது. அதில் ஒன்று மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. தலைவி சொல்றாப்ல, 'இந்த கண்கள் ரொம்ப பாவம். தலைவனைப் பிரிஞ்சா அந்தக் கவலையிலேயே தூங்க மாட்டேங்குது. தலைவன் இருந்தாலோ அவன் தூங்க விடறதில்லை. ரொம்ப பாவம்ல?' என்று ஃபீல் பண்ணுவது போன்ற குறள்! என்ன ஒரு ரொமாண்டிக் வரிகள் இல்லை..?

அப்புறம் பொண்ணுங்க 'முடிச்சுட்டேன் ஐயா' என்று சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சு நாங்களும் 'ஆங்..! ஆச்சு சார்!' என்று மூடி வைத்தோம்.

இயற்பியல் கூடத்தில் இந்த ஸ்பெக்ட்ராமீட்டர் ஓர் ஆட்டம் காட்டும். அந்த மஞ்சள் ஒளித் துணுக்கை கண்ணில் கொண்டு வந்து பார்ப்பதற்குள், மூச்சு முட்டி விடும்.

அது தவிர எத்தனை முறை விலங்கியல் ஆய்வேடு பக்கங்கள் கிழித்தெறியப் பட்டிருக்கின்றன என்பதற்கு கணக்கே இல்லை.

வேதியியல் ஆய்வுக் கூடத்தில், கையில் கிடைத்த பொடிகளை, பேர் தெரியாத, புரியாத கரைசல்களோடு கலக்கி புகை புகையாய் வருவதையும், கலர் கலராய் வருவதையும் வேடிக்கை பார்ப்போம். ஒருமுறை அது போல் எதையெதையோ கலக்கி, சும்மா இராமல் அடியில் சூடு வைக்க, கொஞ்ச நேரத்தில் கலவை டுபுக்கென மேலே பொங்கி உயரே சீறிப் பறந்து, சாரலாய் சுற்றி இருந்த எல்லோர் மேலும் கொட்ட... யப்பா செம கப்பு! சட்டையெல்லாம் கறுப்பு கறுப்பாய் புள்ளிகள்.

என்ன தான் நன்றாகப் படித்திருந்தாலும், பரீட்சை என்று வரும் போது எப்படியும் கை நடுங்கி, ரிசல்ட் சரியாக காட்டி வெளி வருவதற்குள் திக்கித் திணறித் தான் போவோம். வேதியியல் இறுதித் தேர்வுக்கு ஆய்வக உதவியாளரிடம் 'சால்ட் என்னங்ணா ' என்று கேட்டு மஞ்சள் பேப்பரில் கட்டியது 'சோடியம் குளோரைடு', வெள்ளை பேப்பரில் ' சோடியம்-பை-கார்பனேட்' என்று இரகசியக் குறிப்புகள் பெற்று, கொஞ்சம் அதற்கேற்றார் போல் சோதனைகள் செய்து, 'முடிச்சாச்சு சார்' என்று சொல்லி, ரிசல்ட் அளவுகள் எழுதும் போது, தவறாய் எழுதி விட, அழிப்பான் கூட இல்லாமல் பரிதாபமாக நிற்க, எதிரில் இருந்த ஒப்ரு பெண் எச்சி தொட்டு அழி (?) என்று சொல்ல, அது படி கேட்டுச் செய்ய, பேப்பரே கிழிந்து வர (உனக்கெங்கடா அறிவு போச்சு, அது என்ன ஸ்லேட்டா..?)... ஒரு மாதிரி தான் +2 இறுதித் தேர்வு முடித்து வந்தேன்.



இயற்பியலில் எதிர்பார்த்தது போலவே ஸ்பெக்ட்ரோமீட்டர் தான். அதிலும் இல்லாத தடங்கலகள் (ஒண்ணுமில்லைங்க.. கொஞ்ச நேரம் கரண்ட் போயிடுச்சு..! சோடியம் லைட் மீண்டும் ஃபுல் ஃபார்மிற்கு வர அரை மணி நேரம் ஆகும்.) ஏற்பட்டு, அப்புறம் மஞ்சள் துணுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, 'ஒரு மாதிரி வெளிச்சம் மட்டும் கொண்டு வா' என்று சொல்லப்பட, 'ஒரு ஆரஞ்சு புள்ளி தெரியுது பாருங்க' என்று எதையோ காட்ட, அது எதிரே நின்று வேறொரு ஆய்வு செய்து கொண்டிருந்த சக மாணவியின் வளையல் மேல் சூரிய ஒளி பட்டு தெறித்தது என்று தெரிந்து எக்ஸ்டர்னல் சூப்பர்வைஸர் டென்ஷனாகி, அப்புறம் ஸ்பெக்ட்ராமீட்டரின் ரெண்டு கைகளையும் கால்களாய் நினைத்துக் கொள்கிறேன் என்று கும்பிட்டு அப்படி, இப்படி என்று திருப்பி, மஞ்சள் ஒளியைக் கொண்டு வந்து காட்டி, 'தப்பித்தேன். பிழைத்தேன்' என்று தலை தெறிக்க ஓடி வெளியே வந்து விழுந்தேன். சுற்றி என்ன நடந்தது என்று கேட்டவர்களிடம், 'ஜூஜூபிடா எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ்! என்ன தான் காட்டினாலும் இது அந்த லைட் இல்லைனு டார்ச்சர் பண்ணிட்டார்! அவருக்கு கண்ல ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்' என்று சொன்னேன். உடனே 'நான் சொன்னேன்ல, அவர் கண் ப்ராப்ளம்னு' என்று ஒரு சக மாணவன், தன்னருகில் நின்ற பெண்ணிடம் அறுவடையை ஆரம்பித்தான். நான் கடுப்பாகி 'உனக்கும் ஸ்பெக்ட்ராமீட்டரா?' என்று கேட்டேன். சைலண்டாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

தாவரவியலுக்காக மட்டும் தான் ரொம்ப மெனக்கெடவில்லை. பள்ளி கிராமப் புறத்தில் இருந்ததால் 'ஹெர்பேரியத்திற்கு' அலைய வேண்டிய தேவையே வரவில்லை. இறுதித் தேர்வில், 'இது என்ன செடி', 'இதுக்கு லத்தீன்ல என்ன பேரு' என்று திருப்பித் திருப்பி மூன்று செடிகளை மட்டும் காட்டி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாம தான் எப்பவுமே கடைசி பேட்ச். (என்ன செய்ய ! பேர் ராசி அப்படி!) முன்பே களம் கண்டு வாகை சூடி வந்த வீரர்களிடம் தகவல் பெற்று, சரியாகச் செய்து விட்டு வந்தேன்.

விலங்கியலுக்கும் இதே போல் ஏதோ கூத்து நடந்தது. சுத்தமாக நினைவில்லை.

ஆனால், எங்களுக்கு மொத்த கடுப்பும் இந்த கணிப்பொறியியல் மாணவர்கள் மீது தான். மாங்கு மாங்கென்று காடு, கழனி, வயல் வரப்பென்று அலைந்து செடிகளை ஒட்டி, அக்காக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி உயிரியல் படங்களை வரைந்து ஆய்வேடு தயாரித்து ( இதில் ரஃப் காப்பி, ஃபேர் காபி என்று 2 வகை வேறு! ரஃப் காபி உயிரியல் ஆசிரியர் கிழித்தெறிய, ஃபேர் காபி எக்ஸ்டர்னல் வாத்தி காறித் துப்ப..! ) என்று அவனவன் உயிரைக் கொடுத்து உழைக்க, அந்தப் பசங்க மட்டும் 1 + 2 = 3? என்ற கஷ்டமான சந்தேகத்தை ஸால்வ் செய்ய வட்டம், சதுரம், சாய்ந்த கட்டம் என்று சும்மா ஸ்கேலாலேயே கிறுக்கி விட்டு (அதையெல்லாம் படம் என்றே எந்த தன்மானம் உள்ள உயிரியல் மாணவனும் சொல்ல மாட்டான்..!) full mark எடுத்துச் செல்வார்கள்.

இப்படிப்பட்ட திருப்பணிகளால் ஆய்வகங்களை முடித்து விட்டு, கல்லூரியில் கால் வைத்தேன்.

ள்ளியிலேயே பிராணனை பிய்த்து எடுத்த விதி, கல்லூரியில் கை, கால்களை வைத்து சும்மா இருக்குமா என்ன?

கல்லூரியில் சேர்ந்து விடுதி அறை எல்லாம் பிடித்தது புதன்கிழமை. நன்றாக நினைவு இருக்கிறது. அன்று சூரிய கிரகணம். வெள்ளிக் கிழமையில் இருந்து வகுப்புகள் துவங்கும் என தெரிய வந்தது. 'ஆஹா நல்ல நாள் பார்த்து தான் ஆரம்பக்கிறார்கள்' என்று மகிழ்வாகிற்று. நடுவில் வியாழக்கிழமை என்று சும்மா இருப்பானேன் என்று கல்லூரியில் சேர்ந்து முதல் வேலையை நல்லபடியாக ஆரம்பிப்போம் என்று முடிவு செய்து ஒரு மூன்று பேர் படத்திற்கு கிளம்பினோம். வியாழன் ஃபர்ஸ்ட் ஷோ! சத்யம். படம் ஏதோ கப்பல் பற்றிய படம். பெயர் மறந்து விட்டது.

அது தான் முதன்முறையாக DOLBY எஃபெக்டில் படம் பார்க்கிறோம். திரையின் இடது ஓரத்தில் கப்பலின் கதவு திறக்கிறது. (படம் பேர் : THE VIRUS ). தியேட்டரின் இடது ஸ்பீக்கர்களில் மட்டும் அந்த சத்தம் கேட்கிறது. சொல்வதற்கே வெட்கமாய் இருக்கிறது. அம்மாம் பெரிய தியேட்டரில், நாங்கள் மூன்று பேர் மட்டும் 'யார்ராது படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது, உள்ள வர்றது' என்று இடது பக்கம் திரும்பிப் பார்க்கிறோம். நினைத்துப் பாருங்கள். எல்லா தலைகளும் ஸ்ட்ரெய்ட்டாக திரையைப் பார்த்து இருக்க, நடு தியேட்டரில் மூன்று தலைகள் மட்டும் , டென்னிஸ் நடுவர் போல் இடது பக்கம் திரும்பினால் எப்படி இருக்கும்? என்ன செய்ய? அது அறியாத வயசு! புரியாத மனசு! (சுவாரஸ்யம் என்னவெனில் அந்த மூன்று பேரில் நானும் மற்றொருவனும் 3D Surround Audio துறையில் தான் இப்போது பணி ஆற்றுகிறோம். மற்றொருவன் Bio Tech Ph.D., செய்ய US பறந்து விட்டான்.)

மங்களகரமாய் வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தது. அதற்குள் வகுப்பு கால அட்டவணை கொடுத்து விட்டிருந்தார்கள். முதல் வகுப்பு என்ன என்று பார்க்க, எங்கள் பேட்சிற்கு லேப் என்று இருந்தது. கொஞ்சம் திக் என்று இருந்தது. அதுவும் நம்ம பேர் ராசிக்கு செகண்ட் பேட்சின் செகண்ட் க்ரூப்புக்கு என்ன என்று பார்க்க 'இயற்பியல் லேப்'. பயந்து கொண்டே ஆய்வகத்திற்குள் நுழைய, சரியாக, மிகச் சரியாக எனக்கு அன்று கொடுக்கப்பட்ட பரிசோதனை.. அதே தாங்க.. ஸ்பெக்ட்ரோமீட்டர் ! 'என்ன தம்பி எப்படி இருக்கற? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?' என்று விஷமமாக அது கேட்க, 'ம்ஹூம்... ம்ஹூம்ம்' என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டே , வேறு வழியே இல்லை, அதன் கைகளையும் கால்களாக்கிக் கொண்டேன்.

'எல்லோரும் பள்ளியிலேயே செய்திருப்பீர்கள். 50 மார்க் வாங்கி இருப்பீர்களே! நீங்களே செய்யுங்கள்' என்று சொல்லி விட்டார் லேப் ஆசிரியர். 'நாம எந்த ரேஞ்சில் வந்திருக்கோம்' என்று நமக்குத் தானே தெரியும். வழக்கம் போல் மஞ்சல் ஒளி..ம்ஹூம்.. கிடைக்கவேயில்லை. ஆனால் மற்றொன்று கிடைத்தது. 'காதல் கொண்டேனில்' டெஸ்டரை முகத்தில் எறிந்து சரமாரியாக பொழிவாரே ப்ரொபஸர், அது போல் வார்த்தை விளையாட்டு விளையாடினார் அந்த லேப் ஆசிரியர். 'சரி தான்! ஆரம்பத்திலேயே வாங்கிக் கட்டிக்க ஆரம்பிச்சாச்சா..! உருப்புட்டாப்ல தான்' என்று முடிவுக்கே வந்து விட்டேன். கொஞ்ச நாட்களில் 'இவங்க எப்பவுமே இப்படி தான்! சும்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க! நமக்கு இதெல்லாம் பழகினது தானே! விடுங்க பாஸ்' என்று மனசாட்சி சொல்லி விட அப்புறம் என்ன, திட்டுகள் எல்லாம் பூமாரியாய் தோன்ற ஆரம்பித்தது.

வேதியியல் லேபில் ஏதும் சொல்லிக் கொள்வது போல் நடக்கவில்லை. வழக்கம் போல் கலர் கொண்டு வந்தோமா, அளவு கொண்டு வந்தோமா என்றே ஓடியது.

கணிப்பொறி லேபில் ஆதிகால மெஷின்களில் Lotus123, Foxpro எல்லாம் கற்று தெய்வீக நிலைக்கு உயர்ந்தோம். பசங்க அதிலேயே சில சித்து விளையாட்டுகள் விளையாடி, 'படம்' பார்க்க ஆரம்பிக்க, விடுதி மாணவர்கள் இரவெல்லாம் கணிப்பொறி லேபிலேயே குடியிருக்க ஆரம்பித்தார்கள்.(சரி.. சரி..! மக்களே கோபிச்சுக்காதீங்க.! 'குடியிருக்க ஆரம்பித்தோம்'. இப்ப ஓ.கே.வா?)

மெக்கனிக்கல் லேபில் தான் ஒரிஜினல் இஞ்சினியர்கள் போல் 'வெட்டு, குத்து, கண்ணே, காதலி' என்று பி.கே.பி. நாவல் தலைப்பு கணக்காக சத்தம் வரும் அளவிற்கு வேலை நடக்கும். அங்கு ஒரு துணைப் பிரிவில், மெட்டல் உருக்குவதற்கு, ஈர மண்ணைக் குவித்து, அதில் இடை இடையே இருக்கும் காற்று இடைவெளியை நீக்க, குச்சிகளை வைத்து குத்திக் கொண்டே இருப்பார்கள் என்று செய்து காட்ட, 'சார்! அப்ப பெரிய பெரிய மெட்டல் பாடிகளை செய்ய ஏக்கர் கணக்கில் மண் கொட்டி, அதில் இருக்கும் காற்று இடைவெளிகளை நீக்க, எல்லோரும் அதற்குள் இறங்கி ஜங், ஜங் என்று குதிப்பார்களா சார்?' என்று கேட்டு அவரின் கடுப்பைச் சம்பாதித்துக் கொண்ட நண்பன் இன்று Entrepreneur ஆக இருக்கிறான்.

முதல் செமஸ்டரின் இறுதித் தேர்வு வந்தது.

'கடவுளே! தயவு செய்து ஸ்பெக்ட்ரோமீட்டர் மட்டும் வரவே கூடாது' என்று வேண்டிக் கொண்டே செல்ல, நல்ல வேளையாக அது வரவில்லை. மாறாக வெர்னியர் ஸ்கேல் மூலம் ஊசல் எண்ணிக்கை அளக்கும் ஓர் ஆய்வு வந்தது. 'சரி! சப்பையான ஆய்வு ' என்று சந்தோஷமாக அங்கு போய் ஊசல் எல்லாம் சரியாக ஆட்டி, எண்ணிக்கை எல்லாம் கணக்கிட்டு, கடைசியாக ஊசல் குண்டு தொங்க விட்டிருக்கும் மெல்லிய நூலின் ஆரம் (radius) கண்டு பிடிக்க வேண்டும், வெர்னியர் ஸ்கேல் கொண்டு!

அங்கு ஆரம்பித்தது சிக்கல்!

வெர்னியர் ஸ்கேல் மூலம் நாம் பார்ப்பது ஆரமா, இல்லை வேறெதாவது அளவீடா என்று சந்தேகம் வந்து விட்டது. அந்த மெல்லிய கம்பியை வெர்னியரில் வைத்து அளவு பார்க்க, அது எப்படியும் மில்லிமீட்டருக்கும் குறைவாகத் தான் காட்டும். அது எதைச் சுட்டுகிறது என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஸ்பெக்ட்ரோமீட்டர் பயத்தில் அதை மட்டும் நன்றாக படித்துச் சென்றதில், கோட்டை விட்ட மற்ற ஆய்வு இது. வேர்க்க ஆரம்பித்து விட்டது.

யோசி! யோசி!

கொஞ்ச நேரத்தில் செம ஐடியா வந்தது.

பள்ளியை விட்டு சென்ற முதல் செமஸ்டர் என்பதால், இன்னும் நான் இங்க் பென் தான் உபயோகப் படுத்திக் கொண்டிருந்தேன். அதுவும் சும்மா சாதாரணமாக ஒல்லிப்பிச்சான் போல் எழுதும் ஹீரோ பேனாக்கள் மீது எனக்கு என்றுமே நாட்டம் இருந்ததில்லை. எழுத்து சும்மா பட்டை அடிக்க வேண்டும். அப்படி ஒரு குண்டு பேனா வைத்திருந்தேன் , அப்போது!

திருவாதிரைத் திருநாளில் அள்ளி அள்ளி மாவைத் தின்று விட்டு, கையை நீட்டினால் மஞ்சள் பூசிய கயிறு கட்டி விடுவார்கள் வீட்டில்! அதுவும் 'புள்ள மெட்ராஸில் படிக்கப் போறான்ல' என்று, கட்டி விட்டதில், வலது கையில் கலர் கலராய் கயிறுகள்!

ஒரு கயிரைப் பிய்த்து எடுத்தேன். குண்டு பேனாவை ஒரு வட்டமாய்ச் சுற்றினேன். நூலின் அந்த நீளத்தை ஸ்கேலால் அளவிட்டேன். அந்த அளவு நூலின் நீளம் என்பது வட்டமான குண்டு பென்னின் சுற்றளவு (circumference) தானே? அந்த நீளம் = 2 * (22 / 7) * r தானே! அதிலிருந்து r குறித்துக் கொண்டேன். பின் அதே குண்டு பேனாவை வெர்னியரின் இரு முனைகளுக்கும் இடையில் வைத்து, வெர்னியர் காட்டும் அளவைக் குறித்துக் கொண்டேன்.

இந்த இரண்டு அளவுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்ததில், என்ன ஆச்சரியம்! வெர்னியர் அளவு, முந்தைய அளவை விட சற்றேறக் குறைய இரண்டு மடங்கு இருந்த்து. பிறகென்ன? வெர்னியர் காட்டுவது விட்டம் (diameter) என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.

ச்சும்மா கடகடவென அளவுகள் எடுத்து, ஆய்வை வெற்றிகரமாய முடித்து, சந்தோஷமாய் வெளியே வந்து நண்பர்களிடம் நம்ம சிந்தனையைச் சொல்ல, 'அட அற்பப் பதரே' என்பது போல் பார்த்தார்கள். 'ஏண்டா நாயே! ஆறாவதில் இருந்து வெர்னியர் ஸ்கேல் பற்றி படித்துக் கொண்டு வருகிறோம். அது diameter அளக்க பயன்படும் என்பது கொஞ்சம் கூட ஞாபகம் வரவில்லையா' என்று கேட்க... டன் கணக்கில் அசடு....!

கெமிஸ்ட்ரி லேபில் அப்படியே அருகில் இருந்த நண்பனைப் பார்த்து அடி காப்பி! பின்ன என்னங்க, எல்லாம் ஆங்கிலத்திலேயே எழுத என்றால், எவ்ளோ கஷ்டம்.

கணிப்பொறி லேபில் அவுட்புட் காட்ட கோல்மால்கள் பல!

மெக்கானிக்கல் லேபில், நம்ம அதிர்ஷ்டம் மணல் குத்து விளையாட்டு தான் வந்தது. 'குத்தடி குத்தடி சைலக்கா! குனிஞ்சு குத்தடி சைலக்கா' என்று விளையாடியதில், அதுவும் ஜாலியாகவே போனது.

இன்னும் அடுத்த எழு செமஸ்டர்களிலும் இது போல் டப்பா டான்ஸ் ஆடியும், கம்பீரமாகவும் ரிசல்ட்கள் காட்டி ஒரு மாதிரி நானும் எஞ்சினியர் ஆனேன்.

லேப்கள் பற்றி மட்டும் சொல்ல இன்னும் பலப் பல கதைகள் உள்ளன என்பதால், அவை பின்பொரு முறை நினைவு கூறப்படும். இப்போது சில துணுக்குச் செய்திகள் மட்டும்!



* Wien Bridge என்று ஒன்று உள்ளது. அதில் சரியாக ரெஸிஸ்டரும், கெப்பாஸிட்டரும் வைத்து, எந்த ஒரு பகுதியிலும் வோல்டேஜ் zero என்று காட்ட வேண்டும். அதற்கேற்றாற் போல் வைக்க வேண்டும். ஒரு நண்பன் அது போல் சரியாக கணக்கு எல்லாம் போட்டு, சர்க்யூட் செட் செய்து விட்டு, இண்டர்னல் எக்ஸாமினரைக் கூட்டி வந்து காட்டினான். வோல்ட்மீட்டரை ஒவ்வொரு armமிலும் வைத்து 'நல்லா பார்த்துக்கோ சார்! அப்பாலிக்கு ராங்கு காட்டக் கூடாது. இன்னா புரிஞ்சுதா? இக்கட சூடு. நோ வோல்டேஜ். இங்க பாரு. நோ வோல்டேஜ்' என்று எல்லா பக்கமும் காட்டி விட்டு, சந்தோஷமாய் அவர் முகம் பார்த்து 'இன்னா ஓ.கே தான?' என்றான். அவர் மிக அமைதியாக் 'எல்லாம் சரி தான்! முதலில் பவர் ON பண்ணுப்பா! பவரே இல்லாட்டி எல்லா armஸ்லயும் zero வோல்டேஜ் தான் காட்டும்' என்று சொன்னாரே பார்க்க வேண்டும்.

தலைவர் என்று எங்கள் துறையில் ஒரு மாணவர் இருந்தார். அவருடைய பராக்கிரமங்களை எழுத மட்டும் 500 ப்ளாக்போஸ்ட் வேண்டும். சாம்பிளுக்கு அவருடைய சில லேப் சித்து விளையாட்டுகள். ( தலைவரே மன்னிச்சிடுங்க...! கண்ட்ரோல் பண்ண முடியல.! )

* ஓர் எலக்ட்ரானிக்ஸ் லேப் வைவா. ப்ரொபஸர் கேட்கிறார். "From this circuit, how can you get the output?". தலைவர் அசரவே இல்லை. பதில் கொடுத்தார் பாருங்கள். "Sir, If you give input, output will come..!". ப்ரொபஸர் அப்படியே பேஸ்தடித்துப் போய் விட்டார். அவரது 30 வருட பொது வாழ்க்கையில் இப்படி ஒரு பதிலை அவர் கேட்டதே இல்லை. இனிமேல் கேட்க என்ன இருக்கிறது? "O.K. Your viva is over. Please you can go..!". விட்டால் அழுதே விடுவார் போல் இருந்தது. தலைவருக்கு ரொம்ப சந்தோஷம். 'ஒரே கேள்வியோடு முடித்து விட்டாரே என்று!'

* Communications Lab Viva. "Can you draw the block diagram of the Amplitude Modulation Process?" Professor asked. Thalaivar never got worry about this type of questions. He took the pen and put it on the paper. He started to draw a transistor and started to explain, " Sir! This is PNP transistor...". "Stop! Stop! Your viva is over! Please go..!" the shocked professor.

தலைவரின் லேப் சரித்திரத்திலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நிகழ்வு இப்போது கூறப் போவது.

ஆறாம் செமஸ்டரில் Bio Medical Lab மற்றும் Instrumentation Lab என்று இரண்டு லேப்கள் ஒரே நேரத்தில் வரும். பேட்ச்கள் பிரித்துக் கொண்டு செல்ல வேண்டும். செமஸ்டர் இறுதித் தேர்வு. சீட்டு குலுக்கப்பட்டு விட்டது. 'B' என்று வந்தால் Bio Medical லேபிற்கும், 'I' என்று வந்தால் Instrumentation லேபிற்கும் செல்ல வேண்டும். எல்லோரும் 'I' தான் வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு எடுத்தோம். ஏனெனில் அது கொஞ்சம் ஜாலியாக இருக்கும். Bio Medical Lab என்றால் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருக்கும். தலைவரும் சீட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டார். ' 'B' வந்தவர்கள் எல்லோரும் இடது புறமும், 'I' வந்தவர்கள் எல்லோரும் வலது புறமும் நிற்கவும்' என்று சொல்லப்பட எல்லோரும் அது போல் நின்றோம்.

தலைவர் இரண்டு புறமும் நிற்காமல், நடுவில் நின்றார். 'என்னடா, தலைவர் ஒண்ணு இடது பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் வலது பக்கம் நிற்க வேண்டும். வித்தியாசமாக நடுவில் நிற்கிறாரே' என்று எல்லோர்க்கும் குழப்பம் வந்து விட்டது. 'உனக்கு என்னப்பா வந்திருக்கு?' என்று லேப் ப்ரொபஸர் கேட்க, தலைவர் கூறிய பதிலில் ஆய்வகமே அதிர்ந்தது.

"மேடம் எனக்கு 'H' வந்திருக்கு. இப்ப நான் என்ன செய்ய?' என்று பரிதாபமாக கேட்டார்.

புரிந்திருக்கும்...! தலைவர் 'I' என்பதைத் தான் குறுக்காக வைத்துக் கொண்டு 'H' என்று குழம்பிக் கொண்டு இருந்தார்.

தலைவர்....! தலைவர்....!

Wednesday, March 19, 2008

ஹார்மோன்கள் சூழ்ந்த ஹார்ட்டின்!



மென் அழகின் பொன் நிழலே! மாலை கவிழும் பகலின் தடங்கள் மறைகின்ற வரை நந்தவனத்தின் இருக்கைகளில் அமர்ந்திட்டுச் செல்!

முக்கனிகள் பூத்துக் காய்த்துக் கனிந்து, பின் வாசனையோடு வசந்தம் பரப்பும் காலம் அல்லவா இது? தேரோடும் வீதிகள் பாயும் ஊரோடும் ஒதுங்கி இருக்கும் தோட்டத்தில் மேகங்கள் பொழிவது பொல் குளிர்ச்சியென பொழிந்து போ, தமிழை!

சீதளமென படர்ந்திருக்கும் குளக்கரையில் அன்னம், நாரை, வெண் தாமரை, செந்தாமரை, யாவும் தேன் சுமந்து நிரம்ப மாட்டாமல் நிற்க, நீ நடந்து வருகையில் கவிழ்ந்து வணக்கம் செய்கையில் சிந்தித் தெறிக்கின்றன சேர்த்து வைத்த இனித்தேன் துளிகள். வண்டினம் மகிழ வலம் வருகிறாய் நீ!

மோகன இரவின் நிலாக் கிரணங்கள் நனைக்கின்ற பொழுதுகளில் உறக்கம் விழுங்கிய விழிகளை வீசி எறிய, நீ நடை பயின்ற பாதைகளில் தடம் தேடுகின்றன. குளிர்த் தென்றல் கோதுகின்ற காலை நேரத்தில் நடை வர, பாதங்கள் உன் நிழல் கலந்திருந்த நிழல்களைக் காலடியில் மிதித்திருந்த மாமரங்களின் அடியில் சென்று சேர்க்கின்றன.

மல்லிகை, முல்லை, ஆவாரம்பூ, பூசணிப்பூ, நாகவட்டை, செவ்வரளி குவிந்திருக்கும் வனத்தில் மேலும் ஒரு மலரென மலர்ந்திருக்கும் இராஜராணி, தேகத்தில் ஊறி காய்ந்த பின் கழற்றித் தூர எறியும் முகம் சூம்பிய பூ போல் வீசி எறிவாயோ என்னையும் பின் ஒரு காலம்?

திருக்கோயிலின் தூண்களில் ஆதுரமாய்த் தடவிச் செல்லும் போது தமக்குள் புன்னகைத்துக் கொள்ளும் சிலைகளில் நானும் ஒன்றாய் ஒரு இடத்தில் நின்று கொள்ளவா, நினது பூ விரல்கள் தீண்டும் இன்பம் பெற?

உமையொரு பாகனின் நாயகியென நீ நர்த்தனமிட தெறிக்கின்ற கொலுசின் மணிகளை அள்ளி வந்து திருக்கரங்களில் வழங்கிட, சிந்துகின்ற புன்னகையில் மற்றும் ஒரு மணித் துகளாய் சிதறி ஓடி விழுகின்றேன்.

மலை நுனியில் விளைந்திருக்கும் தேனுமினிய நெல்லியென விளைந்திருக்கும் இனிக்கும் சொற்களைச் சொல்லச் சொல்ல, பல நாள் பெரும் பசியினோடு மல்லுக்கட்டிய வேடனின் முன் பேரின்பம் நல்கும் அமுதப் பொழிலைச் சரிக்கப் பாய்கின்ற புயல் வேகத்தோடு சுவைக்கத் தொடங்குகிறேன்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, March 18, 2008

இது அவசரமாய் எழுதிய ஒரு கவிதை!



நிறுத்து உன் புன்னகை எல்லாம்! கிறுக்கல்கள் அதிகரிக்கின்றன.

வேறெங்காவது செலுத்து உன் பர்வைகளை! பற்றி எரிந்து தீய்ந்து போய் விட்டது இதயம் முழுதும்!

சொற்களை சேர்த்து என் மேல் எறிவதை கொஞ்ச காலமாவது அணை கட்டி வை!
வார்த்தைகளின் கும்பலுக்குள் தொலைந்த போய் இப்போது தான் மேலேறி வருகிறேன்!

தொலைவில் எங்காவது போய் நின்று கொள்! நிழல் கூட என்னைக் கேலி செய்கின்றது!

பறவையாய் பறப்பதைக் கற்றுக் கொள்! நதியலைகள் கொஞ்சம் நகர்ந்து செல்லட்டும்!

கரையிலேயே நிற்கிறாய் நாணலென! காலடியில் சுற்ற வைக்கிறாய் நினது நாணமென...!

H2SO4.



குளிரூட்டப்பட்ட அறையின் காற்றில் 'கம்'மென்ற சத்தம் கலந்திருந்தது.

விகாஸ் க்ரூப் வைஸ் சேர்மன் விகாஸ் தன் பொன்னிறக் கண்ணாடியை உயர்த்திக் கொண்டார். எதிரே வெண்மையாய் இருந்த பிளாஸ்டிக் திரையைக் கவனித்தார். இடது ஓரத்தில் ப்ரொஃபஸர் ரஞ்சன் குப்தா நின்றிருந்தார். நேரம் இரவு எட்டு மணியை எட்டிக் கொண்டிருந்தது. இடம் டெல்லியின் புறநகர்ப் பகுதி. விகாஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆர் அண்ட் டி லேப்.

"குப்தா! உங்களுக்கு என் நேரத்தின் மதிப்பு தெரியும். ஒரு புதிய கண்டுபிடிப்பிற்காக என்னை அழைத்துள்ளீர்கள். கொஞ்சம் விரைவாக கூறினால், நலம்.."

குப்தா என விளிக்கப்பட்டவர், குரலை மெல்ல கனைத்துக் கொண்டார். காலரில் பொருத்தியிருந்த மைக்கை சரி செய்து கொண்டார். பிளாஸ்டிக் மூடியை அகற்றி, கண்ணாடி டம்ளரில் இருந்து நீர் அருந்திக் கொண்டார். புரொஜெக்டரை ஆன் செய்து, திரையில் விழுந்த பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளை லேசர் புள்ளியால் ஒற்றி எடுத்து பேசினார்.

அறுபத்தைந்து என்று சொல்லத்தக்க வயதைக் கொண்டவர் என்பது பளபளவென மின்னிய முன் வழுக்கையில் தெரிந்தது. வெண் நிற ஃபுல் ஹேண்ட் சட்டையை பழுப்பு நிற பேண்டில் டக் இன் செய்திருந்தார். சம்பந்தமேயில்லாத பூ போட்ட சிவப்பு நிற டையை அணிந்திருந்தார்.

"இப்ப நான் சொல்லப் போற கண்டுப்பிடிப்பு நம் கம்பெனியின் இலாபத்தை பல மடங்காக்குகின்ற ஒன்று. எஸ். இது வரைக்கும் நம்ம வாட்டர் பிஸ்னெஸ்க்காக எல்லா ரிவர்ஸையும் டார்கெட் பண்ணி, ஃபாக்டரி வெச்சு, சுத்திகரிச்சு, பாக்கெட், பாட்டில் வாட்டர் ஸேல் பண்றோம். இதுக்கு பல பல பிரச்னைகள். கவ்ர்ன்மெண்ட், என்விரோன்மெண்டல் டிபார்ட்மெண்ட், உள்ளூர் மக்கள், பொலிட்டிகல் சைட் இப்படி பல. அதுக்கு பதிலாக இப்ப நாம பண்ணப் போற ப்ராடெக்ட் தண்ணிக்காக ரிவர்ஸை நம்பாம வேற வாட்டர் ரிஸோர்ஸை எடுத்துக்கப் போறோம்..."

விகாஸ் நிமிர்ந்து உட்கார்ந்தார். "கோ அஹெட்.."

"பாலைவனத்தில மழை பெய்யறது ரொம்பக் கம்மி. அதனால அங்க வளர்ற தாவரங்கள் தங்களோட சர்வைவலுக்காக கிடைக்கிற கொஞ்ச தண்ணியை சேர்த்து வெச்சிக்கும். அதே மாதிரி ஆப்ரிக்கா, செளத் அமெரிக்கா காட்டுப் பகுதிகள்ல இருக்கிற சில படர் தாவரங்கள் பெய்யற மழையை சேர்த்து வெச்சிக்கும். அதைப் பத்தி நேச்சர்ல கூட வந்திருக்கு. (டீப்பாயில் இருந்த நேச்சர் பத்திரிக்கையை லேசர் புள்ளி சுட்டியது.) அது தான் நம்ம டார்கெட். அதுக்காக நாம அதை எல்லாம் அழிக்கப் போறதில்லை. சல்ஃபியூரிக் ஆசிட்டுக்கு டீஹைட்ரேட் ப்ராபர்ட்டி இருக்கு. அது கூட இன்னும் சில கெமிக்கல்ஸ் கலந்து பெளடர் ஃபார்மெட்டுக்கு கொண்டு வந்து இந்தக் காடுகள்ல தூவினா அந்த தாவரங்கள் சேர்த்து வெச்சிருக்கற வாட்டர் அப்படியே உறிஞ்சிடும். ஆப்போஸிட் காம்பினேஷன்ல இன்னொரு கெமிக்கல் பவுடர் வெச்சு இந்தத் தண்ணி யெல்லாம் நாம எடுத்துக்கலாம். இதுக்கு ஆகற செலவு கம்பேரிட்டிவ்லி ரொம்ப கம்மி. இது மாதிரி டன் கணக்கில செடிகள் அந்தக் காட்டுப் பகுதிகள்ல இருக்கு. ஸோ... அந்த கெமிக்கல்ஸை தயரிச்சுத் தந்திடற வேலை என்னுடையது. இதிலிருந்து நீங்க எதிர்பார்க்கறது..."

"ஹை ரிட்டர்ன்ஸ்...!" கட்டை விரலை உயர்த்தி, புன்னகையோடு எழுந்து கொண்டார் விகாஸ்.

"ல்ராம்..! இன்னும் ஒரு ஆஃப் அன் அவருக்கு யாரையும் அலோ பண்ண வேணாம்.." இண்டர்காமில் உத்தரவிட்டு விட்டு தன் சீட்டில் சாய்ந்து கொண்டார் ரஞ்சன் குப்தா.

கண் மூடி சிந்தனையில் ஆழ்ந்து கொண்டார்.

15 நிமிடங்களில் இண்டர்காம் கிணுகிணு.

"எஸ்..!" பட்டனைத் தட்டி.

"சாப்..! உங்களைப் பார்க்க குணானு ஒருத்தர் வந்திருக்கார்..." பல்ராம்.

சட்டென வியர்வை முத்துக்கள் பூத்த நெற்றியை கைக்குட்டையால் தடவிக் கொண்டார் குப்தா.

"கூட யாராவது வந்திருக்காங்களா..?"

"இல்லை சாப்..!"

"ஓ.கே. அல்லோ ஹிம்.!"

சற்று நேரத்தில் அந்த குணா என்பவன் உள்ளே வந்தான்.

கொஞ்சம் தேசலான உடல். சொர சொரப்பாய் வளர்ந்திருந்த சில நாள் தாடி. காற்றில் கலைந்திருந்த சுருள் முடிகள். கைகள் மடக்கி விட்டிருந்த கட்டம் போட்ட சட்டை. வெட வெடப்பாய் படபடத்த பேண்ட். கண்களில் இப்போதே 'உன்னைக் கொலை செய்து விடுவேன்' என்ற கோபம் இருந்தது. உற்றுப் பார்க்கையில் கொஞ்சம் அறிவு ஒட்டி இருந்த நெற்றியைப் பார்க்கையில் டெல்லி யூனிவர்சிடியின் ஆராய்ச்சி மாணவன் என்று சத்தியம் செய்யலாம்.

ஆம. அவன் மாணவன் தான்.

"வாங்க மிஸ்டர் குணா..! குணா தானே..?"

"விளையாடாதீங்க சார்..! நான் தான் குணானு உங்களுக்குத் தெரியாதா. ஐ கம் டு தி பாய்ண்ட் ஸ்ட்ரெய்ட்ட்லி! ஒழுங்கா என்னோட ரிசர்ச் பேப்பர்ஸை குடுத்திடுங்க. நான் போய்க்கிட்டே இருக்கேன். அதர்வைஸ் ஐ வில் கால் போலிஸ்..."

"என்னப்பா சொல்ற..? எனக்கு நீ யார்னே தெரியாது. நான் யார்னு தெரியுமா உனக்கு? அம்ரிஸ்டர் யூனிவர்ஸிடில ப்ரொபஸரா இருந்திட்டு, இப்போ நீ நின்னுட்டு இருக்கிற விகாஸ் ஆர் அன்ட் டி லேப்ஸ் சீஃப் சயின்டிஸ்ட். என்கிட்ட விளையாடாதே. நல்ல டாக்டரா போய்ப் பாரு.."

"யூ சீட்..! உனக்கு மரியாதை குடுத்துப் பேசினதே தப்பு. என்னோட ஆராய்ச்சிப் பேப்பரைத் திருடிட்டு வந்திட்டு அதை வெச்சு பேர் வாங்கலாம்னு பாக்கறியா? அது மட்டும் இல்ல. என்னோட ப்ராடெக்ட் கெமிக்கல்ஸையும் திருடிட்டு வந்திருக்க. உன்னை.." குப்தா மேல் பாய்ந்தான் குணா.

"பல்ராம்..!" இண்டர்காமில் விரல் பதித்தவாறே கத்தினார் குப்தா.

வாசலிலேயே காத்திருந்த பல்ராம் உள்ளே ஓடி வந்தான்.

அதற்குள் குணா குப்தாவின் கழுத்தை இறுக்கத் தொடங்கி இருந்தான். பல்ராம் போராடி அவனைப் பிரித்து, முகத்தில் இரண்டு குத்துக்கள் விட்டு வெளியே இழுத்துச் சென்றான்.

பாதி உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து, கீழே விழுந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைத்தார் குப்தா. கவிழ்ந்திருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டார்.

டெலிபோனை எடுத்து டயல் செய்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு பேசினார்.

"குருதாஸ்!"

"ஆமா சார். என்ன சார் குரல் ஒரு மாதிரியா இருக்கு. எனி ப்ராப்ளம்...?"

"அந்த குணா இங்க வந்திருந்தான்யா..! ரிசர்ச் பேப்பரும் ப்ராடெக்டும் திருடினியானு கேட்டான். இல்லைன்னேன். மேலே பாய்ஞ்சு மூக்குல குத்தி, கழுத்தை இறுக்கி...ஒரே அடிதடியாகி களேபரம் ஆகிடுச்சு. எப்படி அவனுக்கு விஷயம் தெரிஞ்சுது?"

"என்ன..? எப்படி அவனுக்குத் தெரியும்? இட்ஸ் இம்பாஸிபிள். என் மேலே சந்தேகப்படறீங்களா நீங்க..?"

"இல்ல..! உன் மேல சந்தேகப் படுவனா? நீ இந்த மாதிரி எத்தனை தடவை நிறைய ரிசர்ச் பேப்பர்ஸ் திருடி வந்து குடித்திருக்க. அதை வெச்சு நான் ப்ராடெக்ட்ஸ் பண்ணி விகாஸ் இண்டஸ்ட்ரீஸ்ல லாபமா குவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கும் பங்கு தர்றேன். இது வரைக்கும் யாரும் கண்டுபிடிக்கல. இந்த தடவை எப்படி மிஸ் ஆகிடுச்சு.வி மஸ்ட் பி கேர் ஃபர்தர்."

"ஒருவேளை இந்த தடவை நாம கெமிக்கல் ப்ராடெக்டையே எடுத்திட்டு வந்திருக்கோம். அது அளவு குறைஞ்சதால சந்தேகம் வந்திருக்குமோ? அந்த குணா எமகாதகன் ஸார். எப்படியோ மோப்பம் பிடிச்சு உங்க வரைக்கும் வந்திருக்கான் பாருங்க. இனிமே நாம ஜாக்கிரதையா இருக்கணும்."

"இப்ப உடனே கிளம்பி வா இங்க. கொஞ்சம் பேசணும் உங்கிட்ட..."

இரு புறமும் ரிஸீவர் வைக்கப்பட்டது.

குணா இருள் படர்ந்திருந்த புதரில் இருந்து மெல்ல விழித்து எழுந்தான். கொஞ்ச நேரம் ஒன்றும் புரியாமல், பின் சடசடவென எல்லாம் நினைவுக்கு வந்தது. ஜிவ்வென்று ரத்தம் சூடாக பாய்ந்தது.

'போலீஸுக்கு போனால் அவன் பணத்தைக் காட்டித் தப்பி விடும் வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது செய்தாக வேண்டும் அவனை! யோசி.! யோசி..! முதலில் யூனிவர்சிடி சென்று ப்ரொபஸரிடம் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும் பின் பார்க்கலாம்.'

கை தட்டி அழைத்தான். "ஆட்டோ..!"

"குணா..! என்ன இது இந்த நேரத்திற்கு வந்திருக்க..! என்ன பிரச்னை..?" ரிஸர்ச் ப்ரொஃபஸர் நாராயணன் கேட்டார்.

"ஸார்..! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். கேக்கணும்.."

சட்டென நினைவு வந்தவராக, "நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். நீ ப்ரிபேர் பண்ணி வெச்ச கெமிக்கல் பெளடர் எல்லாம் எங்க இருக்கு?"

"சார்! அதைப் பத்தி தான் சொல்ல வந்தேன். அது வந்து.."

" நோ மோர் டைம் மை யங் மேன்! உடனடியா அந்த கெமிக்கல்ஸ் எல்லாத்தையும் அழிச்சாகணும். இப்ப தான் பார்த்தேன். நாம மிக்ஸ் பண்ணின காம்பினேஷன்ல மெத்தில் ஆல்கஹால் ரேஷியோ 0.5% அதிகம் ஆகிடுச்சு. நீ ப்ரிபேர் பண்ணின கெமிக்கல் பெளடரும் சல்பியூரிக் ஆஸிட்ல கலக்க ஆரம்பிச்ச 15 ஹவர்ஸ்ல பர்ஸ்ட் ஆகிடும். அதோட வெடிப்பு 2 கி.மீ. சுற்றளவில எல்லாத்தையும் பொசுக்கிடும்.வி ஹேவ் டு ஸ்டாப் இட். லேப்ல ஃபுல்லா தேடிப் பார்த்திட்டேன். நாம ப்ரிபேர் பண்ணின அளவை விட 50 கிராம்ஸ் கம்மியா இருந்தது. லேப்ல இருந்த கெமிக்கல்ல ஆப்போஸிட் பேஸ் கலந்து அதை அயனைஸ் குறைச்சு வெச்சிருக்கென். மீதி 50 கிராம்ஸ் எங்க..? உடனடியா அதை அயனைஸ் குறைச்சாகாணும். உன் ரூம்ல இருக்கா என்ன?"

குணா மெளனமாகப் புன்னகைத்தான்.

"எஸ் சார்..! நீங்க பேஸ் குடுங்க! நானே அயனைஸ் பண்ணிடறேன்."

"க்விக்..!" ப்ரொபஸர் ஒரு குடுவையில் மஞ்சள் நிறத்தில் சுருள் சுருளாய் கலங்கலாய் இருந்த கலவையைக் கொடுத்தார்.

குணா அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். யூனிவர்சிடியின் காம்பவுண்டு தாண்டி வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். கையில் இருந்த கலவையைக் கீழே ஊற்றினான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, மிச்சத் தீக்குச்சியை அதன் மேல் எறிந்தான். 'ஜிவுக்'என்று சிவந்த தீப் பிழம்பு தெறித்து அடங்கியது. திரும்பிப் பார்க்காமல் தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

'நாளை பேப்பர் வாங்கி பார்க்க வேண்டும்'.

"குருதாஸ்! இந்தக் கெமிக்கல் கொண்டு வந்து எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்?"

"பதினைஞ்சு மணி நேரம் ஆகப் போகுது! எதுக்கு கேக்கறீங்க சார்?"

"எதுக்குனா இதோட ப்ராபர்ட்டீஸ் என்ன டைம் ஸ்கேல்ல மாறுதுனு தெரியணும் அதுக்கு தான். சரி..! நீ இங்க இருந்து பார்த்துக்க. அந்த குணா எப்ப வேணா வர சான்ஸ் இருக்கு. நான் அங்க உட்கார்ந்து இந்தக் கெமிக்கல் பத்தி என்ன எழுதி இருக்குனு டாகுமெண்ட்ஸ் பாக்கறேன்.."

"ஓ.கே. சார்..!"

சல்பியூரிக் ஆஸிட்டில் கலந்திருந்த அந்த கெமிக்கல் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்திற்கு மாறிக் கொண்டே வருவதை குருதாஸ் பார்த்துக் கொண்டே இருந்தான். குடுவையில் மெல்லிய விரிசல் விழுந்தது.

****************************************************************

ந்தக் கதை எழுதுவதற்கு காரணமாய் இருந்த நிகழ்வைக் கூறா விட்டால், நரகத்தில் நாலு கோடி வருஷம் ரவா உப்புமா தின்னும் பாவம் வந்து சேரும் என்பதால் அந்நிகழ்வு.

ஏழாவது படிக்கையில் ட்யூஷனில் அறிவியல் சார் வெண் பாஸ்பரஸை எடுத்துக் கொண்டு வந்து காட்டினார். அது நீரில் மூழ்கி இருந்தது. அதை எடுத்துத் தட்டில் வைத்துக் காட்டி விளக்கி, டேபிளில் வைத்து விட்டு, திரும்பி போர்டில் அதைப் பற்றி எழுதினார். அவர் திரும்பி எழுதி, மீண்டும் எங்கள் பக்கம் திரும்பும் சைக்கிள் கேப்பில், ஒரு நண்பன் கொஞ்சம் வெண் பாஸ்பரஸை அள்ளி சட்டைப் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

அறியாத மனசு..! புரியாத வயசு..!

வெண் பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தீப்பிடிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிக.

The white phosphorus allotrope should be kept under water at all times as it presents a significant fire hazard due to its extreme reactivity with atmospheric oxygen, and it should only be manipulated with forceps since contact with skin can cause severe burns. (நன்றி : விக்கிபீடியா).

கொஞ்ச நேரம் கழித்து எல்லோரும் ட்யூஷன் முடிந்து கிளம்புகையில் அவன் புத்தகங்கள் கொண்டு தன் மேலுடம்பை மறைத்துக் கொண்டே வந்தான். என்னடா என பார்க்க, சட்டை, பனியன் எல்லாம் பொசுங்கி இருந்தது. நல்லவேளை பனியன் போட்டிருந்ததால், உடலில் ஏது தீக்காயம் படவில்லை.

இப்படி கெமிஸ்ட்ரியோடு விளையாடிப் பார்த்த நிகழ்ச்சிக்கு ஆச்சி மசாலா தடவி எழுதிய கதை தான் மேலே படித்தது.

Monday, March 17, 2008

நெய்யார் அணைச் சுற்றுலா!

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி இருப்பான். ஆம்..! அப்படி தான் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு கால் மணி நேரம் கழித்து பிரத்யேகப் பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டேன். உள்ளே ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர். மெல்லப் புன்னகைத்துக் கொண்டோம். வண்டியின் பின்புறம் பார்க்க, ஒரு பெட்டி இருந்தது. இறுக்கி மூடியபடி.

"உள்ளே எல்லாம் இருக்கின்றது அல்லவா?" என்று கேட்டேன்.

"எல்லாம் சரியாக இருக்கின்றது. இன்னும் சில பெட்டிகள் வைக்கும் இடத்தில் இருக்கின்றன."

"Good..!" சொல்லிக் கொண்டேன்.

அதற்குள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஒவ்வொருவராக வந்து ஏறிக் கொண்டார்கள். பின் ஒவ்வொன்றாக எடுத்து வகை பிரித்து வைத்தார்கள். தனித்தனியாக பேக்குகளில் வைத்து அடுக்கி, குளிரூட்டும் ஐஸ் கற்களையும் எடுத்துப் போட்டு, பிரித்து கடைசி இருக்கையின் அடிப்புறங்களில் வைத்தார்கள்.

BagPiper.

KingFisher Beer.

அட.. நாங்க நெய்யார் அணைக்குச் சுற்றுலா சென்ற கதையைத் தாங்க கொஞ்சம் த்ரில்லிங்கா சொல்ல வந்தேன். என்ன பயந்துட்டீங்களா..? (அடிங்க....!)

தம்பானூர் சென்று காலை உணவை முடித்துக் கொண்டோம். (நான் பொங்கல் 2 வடை மட்டும்..!)

பின் பாடு பாடிக் கொண்டு, (அவிட மக்கள் தாங்க பாட்டு பாடிக் கொண்டே வந்தது. நாம வெறும் கைத் தட்டு தான்..)

மலை நாட்டிற்கு வந்து சில சுற்றுலாக்கள் சென்று வந்திருந்தாலும், இது தான் உண்மையான கேரள ஸ்பெஷல் சுற்றுலாவாக இருந்தது. காலையில் இருந்தே மழைத் தூறல். அவ்வப்போது கொஞ்சம் பெரியதாக. பின் அமைதியாக என்று வகை வகையாக வழியெங்கும் பெய்து கொண்டிருந்தது.

காலை 10.30 மணி சுமாருக்கு அணைக்கட்டுப் பகுதியை அடைந்தோம்.

மெல்ல நடை போட்டு, மேலேறினோம். அணைக்கட்டைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஒற்றை வழி போல் இருந்தது. அதில் நடந்து தான் செல்ல முடியும். வண்டிகள் எல்லாம் செல்ல முடியாது. அதைக் கடக்கையில் கீழே எட்டிப் பார்த்தோம். மெயின் மதகுகள் திறக்கப் படவில்லை. இருந்தாலும் நீர் வெளியேற்றத்திற்காக சிறிய மதகுகள் வழி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. அதிலேயே நீர் பேய் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.

இந்தப் பக்கம் பார்த்தால், அணைக் கட்டு அமைதியாக தோற்றம் அளித்தது.

அதனைக் கடந்து அந்தப் பக்கம் சென்றோம்.

படகுச் சவாரிக்கு இன்னும் படகு வந்து சேரவில்லை என்று தெரிந்தது. ஏற்கனவே ஒரு சவாரிக்குச் சென்றிருந்தது. அதற்குள் சும்மா இருக்க மாட்டாமல், கையோடு கொண்டு வந்திருந்த கால்பந்தை உதைக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் சும்மா இருக்கவில்லை..! அங்கிருந்த பெட்டிக் கடைக்குச் சென்று, பெரிய சைஸ் நெல்லிக்கனிகள், ஏதோ ஒரு பழம் பேர் சொன்னார்கள், அது, மாங்காய்த் துண்டுகள் (உப்பு மிளகாய்த் தடவி) என்று வாங்கி வந்து அவர்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பின்னே, எல்லோரும் விளையாடப் போய் விட்டால், யார் தான் சப்போர்ட் செய்வதாம்..!

இரு படகுகள் வந்தன. ரூஃப் மற்றும் டாப்லெஸ்.

தண்ணி சைவர்களான சில பேர் மற்றும் தண்ணி அசைவர்கள் என்று இரு அணிகள் பிரிந்து, த.அ. ரூஃபை எடுத்துக் கொள்ள, நாங்கள் டாப்லெஸ்க்கு வந்தோம். அதுவரை தூறிக் கொண்டிருந்த காலநிலை சட்டென்று மாறி, வெயில் கொளுத்த ஆரம்பித்தது. என்ன கொடுமை சார் இது? டாப்லெஸ் கடுமையாக வறுத்தெடுத்தது. சுற்றிலும் தண்ணீர், ஆனாலும் உடலிலிருந்து வேர்வை பொங்கிப் பிரவாகித்தது.

'கெட்ட ப்ராஜெக்டே கிடைக்கும்! விட்ட பக்கே துரத்தும்' என்ற பழமொழிக்கேற்ப படகு பாதி வழியில் மக்கர் பண்ண ஆரம்பித்து விட்டது. ஓட்டுநர் அப்படியேத் திருப்பி, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப ஆரம்பித்தார். பாதி வழியில் படகு நின்று விட்டால், இறங்கித் தள்ளக் கூப்பிடுவார்களோ' என்ற சந்தேகம் எல்லோர்க்கும் இருந்து கொண்டே இருந்தது. நல்லவேளையாக பத்திரமாக புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ப்பித்தார். வெயிலின் கொடுமை எந்தளவிற்கு இருந்ததென்றால், கையில் வைத்திருந்த கால்பந்து, சரியாக படகுக் குழாமை அடைந்த நொடி, 'படாரென' வெடித்துப் பிளந்து, உண்மையிலேயே 'கால்'பந்து ஆனது தான்..!

அதற்குப் பின் மீண்டும் காலநிலை மாறியது. மீண்டும் தூறல் விழ ஆரம்பித்தது. 'இதைத் தான்டா நேரக் கொடுமைனு சொல்லுவாங்க' என்று நினைத்துக் கொண்டேன். பின் எல்லோருடனும் மொக்கை போட்டுக் கொண்டே (இங்க சூப்பர் ஸ்டார் யாரு? என்னது மோகன்லாலா? ரஜினி மாதிரியா? கொஞ்சம் ஓவர் தான்..!)

பின் ரூஃப்டாப் வர அதில் எல்லோரும் ஏறிக் கொண்டு மெதுவாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டே, மிச்ச மக்கள் இறங்கிய இடத்திற்குச் செல்ல, அங்கு எதுவுமே மிச்சமில்லை. வெறும் கொஞ்சம் மிக்சர் பாக்கெட்டுகள், 7அப் மட்டும் தான் இருந்தன. மனம் வெறுத்துப் போய் அதற்கும் அடித்துக் கொண்டு சாப்பிடோம். இருந்தாலும் இப்படி ஆகியிருக்கக் கூடாது. ;-(

பின் அங்கே யானைகள் கட்டியிருந்த இடத்திற்குப் போனோம். யானை சஃபாரி (அது தாங்க யானை சவாரி!) அன்று இல்லை. காரணம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது தான். பின் யானைகளைத் தொட்டுக் கட்டிப் பிடித்து, தும்பிக்கைக்கு முத்தம் கொடுத்து என்று எல்லாம் போஸ் கொடுத்து எங்களது வீரத்தைப் புகைப்பதிவு செய்து கொண்டோம். பாவம் அந்த ஐந்து வயது யானைக் குட்டி தான் திணறிப் போய் விட்டது. அது நினைத்திருக்க வேண்டும், 'ஏண்டா எனக்கு மட்டும் இவ்ளோ முத்தம் கொடுக்கறீங்க..! போங்க..! போங்க..! அங்க எங்க தலைவர் இருக்கார்.அவர்கிட்ட நெருங்குவீங்களா..? நாங்க அப்பிரணிங்ககறதால தான எங்களை இப்படிப் படுத்தறீங்க..!'

பின் மதிய உணவை முடித்துக் கொண்டு, முதலை காப்பு மையத்திற்குச் சென்றோம். 'ஸ்டீவ் இர்வின்'. நினைவிருக்கிறதா? அவர் பெயரைத் தான் இந்த மையத்திற்கு வைத்துள்ளார்கள். அங்கும் அரை கி.மீ. தூரத்திற்குத் தள்ளி நின்று 'க்ளிக்'.

பின் சிங்கராஜா இருக்கும் பகுதிக்கு பாதுகாப்போடு சென்றோம். அங்கிருந்த போர்டில் எழுதி இருந்தது. 'இரண்டு ஆண் சிங்கங்கள். ஆறு பெண் சிங்கங்கள்'. (மச்சம்டா மகாராஜாவுக்கு..!).

பின் அவற்றின் அருகிலேயே சென்று க்ளிக்கிக் கொண்டோம்.

என்ன கொடுமை! அவை எங்களை மதிக்கவேயில்லை. இது போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்களோ..! சில பேர் 'சூ..சூ..' என்று வீட்டு ஜிம்மியைக் கூப்பிடுவது போல் கூப்பிட்டார்கள். காட்டு ராசாவைக் கூப்பிடும் முறையா அது என்று வருந்தினேன். 'இராஜாதி ராஜ இராஜ மார்த்தாண்ட இராஜ குல திலக....' மனசுக்குள் ஓடியது.

பின் மலையை விட்டு இறங்கி ஊரைப் பார்க்கக் கிளம்பினோம்.

இரவு 7.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்து, புகைப்படங்களை உற்றுப் பார்க்க, விரக்தியால் சுருங்கிப் போன கண்களோடு மகாராஜாவின் சோக முகம் மனதில் பதிந்தது. யானைக் குட்டி இதைப் பற்றியும் நினைத்திருக்குமோ...?

'மின்னிய பழம்பெருமையின்
மிஞ்சிய வெறும் நினைவு...!' (மேற்கோள் நன்றி : மதன். வந்தார்கள் வென்றார்கள்)







உப்புக் காற்றில் உன் அருகில்...!



தூரத்தில் போகின்ற புள்ளிக் கப்பல்களின் விலகல்களின் எதிரொலிகள் அதிர்கின்ற கடலடி.

பூநுரைகளின் புதையல்கள் மிதக்கின்ற கரையோரம் பதித்துள்ள பாத ஓவியங்களின் மேலெங்கும் நிறைகின்றது கடல் ஈரம். நீல வானோடு முத்தமிடும் நீண்ட எல்லைக் கோடுகளைக் கடக்கின்றன கரும்புகை கக்கிக் கொண்டு இரும்பு பேருடல்கள்.

தொலைக் கிழக்கின் மஞ்சள் மேனி கரைத்து, எதிர்ப்புறம் உருள்கின்றது பூமி. நிழல் போல் எதிர்பாராமல் எட்டிப் பார்க்கின்ற கருமேனி மேகங்களின் பின் ஒளிந்து கொண்டு விளையாடுகின்றது செவ்வுருண்டை.

சில்லென்று இருக்கிறதல்லவா விரல்கள்?

துகள்கள் தூவிய மணற்பரப்பெங்கும் ஆயிரமாயிரம் பாதப் பதிவுகள். எங்கிருந்து, எப்போதிருந்து பதியத் தொடங்கி இருக்கும் அவை?

சென்ற வருடத்தில் நாம் இணைந்து பதித்த முதற்பதிவு இந்நேரம் இருக்குமா?

படபடத்துப் பறக்கின்ற புறாக்கள் நிரம்பிய தேவாலயத்தின் முன் வாசலின் முகப்பெங்கும் துடிதுடித்துக் கொண்டே இருக்கின்றன சின்னச் சின்ன ஒளித் துணுக்குகளைச் சுமந்து கொண்டிருக்கும் மெழுகுகள். எல்லை கட்டிய கார்த் தார் சாலையின் அதட்டலையும் தாண்டி, அவ்வப்போது எட்டிப் பார்த்துத் தான் செல்கின்றது ஈரக்காற்று.

வீச்சைச் சுமந்த உப்புக் காற்றில் உன் அருகில் நின்றிருக்க தலை கலைத்துப் போகின்றது மென் சூட்டில் பொறிகின்ற காற்றின் உவர்ப்புத் துகள்கள். இரகசியமாக நம் காதுக்குள் சொல்லிச் செல்கின்ற சில சப்தங்களின் மெளனங்களால் கட்டமைந்த வெண் சங்கின் தியான ஒலியைக் கேட்டபடி நிற்கிறோம். உடலின் உள்ளெங்கும் பரவி விசிறுகின்றது பேரொலி. ஓயாப் பேரலைகளால் நம் காலடிகளைக் கழுவிச் சென்று கொண்டே இருக்கிறது களைப்பறியா கடலலை. பாதத்தின் கீழ் மணலைத் தன்னோடு அழைத்துச் செல்கின்றது அலை.

மெல்ல மெல்லக் கவிழ்ந்து வருகின்றது முன்னிரவு.

ஒன்றும் பேசாமல், மெளனத்தால் நாம் பரிவர்த்தனை செய்து கடலைப் பின்னோக்கித் தள்ளி நடக்க, நாம் விட்டுப் போகின்ற மிச்சமிருக்கும் கால் தடங்களை பெரும்பசியோடு தின்னப் பாய்ந்து வருகின்றது நீர்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Sunday, March 16, 2008

மோக்ளி in uniform.

சீருடைகளில் மோக்ளியின் அனுபவங்கள் எத்தகையன?

4-ஆம் வகுப்பு படிக்கையில் சிண்ட்ரெல்லா நாடகம் பள்ளியின் ஆண்டு விழாவில் நடத்தப்பட்டது. அவள் நடன மேடையில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்புகிறாள். இளவரசன் அந்த ஒற்றைச் செருப்பை வைத்து சிண்ட்ரெல்லாவைக் கண்டு பிடிக்க முயல்கிறான். கண்டு பிடித்து விடுகிறான். அவனும், அவனது பாதுகாப்பு வீரர்களும் அவளது சித்தி வீட்டில் இருக்கும் அவளைக் கண்டுபிடித்து மணந்து கொள்கிறான். They lived happily thereafter.

இதில் இளவரசனோடு போகின்ற பாதுகாப்பு வீரர்களில் இரண்டாவது வரிசையில் இடது மூலையில் அந்த ஒற்றைச் செருப்பைப் பிடித்துக் கொண்டு வந்தான் மோக்ளி. அது ஒன்றும் பெரிய செருப்பு இல்லை. பள்ளியில் அணிகின்ற கருப்பு லேஸ் ஷூ.துவைக்காத சாக்ஸின் கப்புடன் அதைக் கையில் பிடித்து பாதுகாப்பு கூட்டத்தின் தலைவனின் பின்னால் வந்தது தான் மோக்ளியின் முதல் சீருடை அனுபவம்.

பச்சை நிறத்தில் மேலே ரெண்டு, கீழே ரெண்டு என்று நான்கு பாக்கெட்டுகள். தோள் பட்டைகளில் வெள்ளை நட்சத்திரங்கள் மூன்று. இடது தோள் பட்டையின் இடையில் புகுந்து, பாக்கெட்டின் வழியாகச் சுற்றி ஒரு முடிச்சு போட்டு, பாக்கெட்டிலேயே செருகிக் கொள்கின்ற விசில். அதே பச்சை நிறத்தில் பேண்ட். டைட்டான பெல்ட். போதுமா? அனைத்திற்கும் மகுடம் போல் அதே பச்சை நிறத் தொப்பி. அதில் ஏதோ பேட்ச் வேறு இருந்தது.

இப்படி ஒரு கெட்டப்புடன் கையில் அழுக்கடைந்த ப்ளாக் ஷூவைப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அது தான் அன்றைய இரவில் மோக்ளியின் நிலை.

இதில் இத்தனை கெட்டப்புடன் லெப்ட் - ரைட் வேறு போட்டுக் கொண்டு வர வேண்டும். எப்படி?

பின் அதே சீருடையில் ஆண்டு விழாவின் பரிசுகளைப் பெற்று நடு இரவில் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினோம். பள்ளியை இரவில் பார்க்கின்ற அனுபவம் எப்போதும் நினைவில் நிற்கின்ற ஒன்று அல்லவா?

யர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது ஸ்கெளட் - ல் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு நடந்த கதைகள் வேறு விதமானவை.

இங்கு ஒரு தொப்பி. அதை மறக்காமல் இடது பக்கம் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும். வலது புருவத்தில் இருந்து மூன்று விரல் தொலைவில் தான் தொப்பி வர வேண்டும். வலது விழிக்கு மேல் பேட்ச் வர வேண்டும். இறுக்கமான சாம்பல் நீலக் கலரில் சட்டை. பெல்ட். ஹூம்... இங்கே டிராயர் போட வைத்து விட்டார்கள். அது வேறு இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். இப்படி ஒரு சீருடை.

இதில் தான் பயிற்சிகள் எல்லாம்.

என்ன பெரிய பயிற்சி?

சின்னச் சின்னப் பசங்களின் விளையாட்டு வகுப்பில் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். யாராவது பெரிய மனிதர்கள் வந்தார்கள் எனில் வரிசையில் நின்று சல்யூட் வைக்க வேண்டும். குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தால், நாங்க தான் முன்னால் நின்று எல்லாம் செய்ய வேண்டும்.

பள்ளிச் சீருடையில் இருந்து, ஸ்கெளட் சீருடைக்கு மாற வேண்டும், அவசர அவசரமாக! வீட்டில் இருந்து பள்ளிச் சீருடையில் வந்து, வகுப்பறையில் நுழைந்து, யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே அந்த உடைக்கு மாற வேண்டும்.

அதுவும் ட்ராயருக்கு ஜிப் வைக்க மாட்டார்கள். பட்டன்கள் தான். அது எப்போது பிய்ந்து போகும் என்று யாருக்கும் தெரியாது. அவ்வளவு டைட்டாக இருக்கும்.

அப்போது தான் ஒரு கேம்ப் இருக்கிறது என்று கூட்டிச் சென்றார்கள். கேம்ப் கோபி 'வைரவிழா மேனிலைப் பள்ளிக்கு'.

அது தான் முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே தங்குவது. Home Sick. பின் அதிலேயும் சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நேர அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும்.காலையில் வகுப்புகள் சரியாக 9 மணிக்கு ஆரம்பித்து விடும். நோட்ஸ் எடுக்க வேண்டும்.கஞ்சி மாதிரி ஏதோ தருவார்கள். மதியம் உணவு. அது முடிந்ததும் அவுட்டோர் வேலைகள்.

சீக்கிரம் எப்படி கூடாரம் கட்டுவது? முடிச்சுகளின் வகைகள். ஓடுதல், விளையாடுதல் என்று பல களப்பணிகள் இருந்தன.

காலை ஆறு மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதற்குள் எல்லோரும் குளித்து மைதானத்தில் அசெம்பிள் ஆகி விட வேண்டும். மாலை சரியாக ஆறு மணிக்கு கொடி இறக்கப்படும். அப்போது யார் எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து நிற்க வேண்டும். இதைக் கேள்விப்பட்டு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஆனால் யாரிடமும் அதைக் கேட்டுத் தொலைக்கவில்லை. ;-)

கடைசி நாள் தான் ஒரு காமெடியாகி விட்டது.

பிரிவு நாள் என்பதால், ஆளாளுக்கு கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகபட்சம் எட்டு மணிக்குள் காலை உணவு உண்ட பழக்கம் அப்போது இருந்தது. (இப்போது ஹூம்..!) அந்த அசெம்பிள் கூட்டம் போய்க் கொண்டே இருந்ததில் காலை 9:30 ஆகி விட்டிருந்தது.

'தடால்'.

கண்களில் ஒரே இருட்டு. எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது புரிந்தது. கஷ்டப்பட்டு விழித்துப் பார்க்க மைதானத்தின் ஓர் ஓரத் தூணில் சாய்ந்து கிடக்கிறேன். மயக்கமாகி விழுந்து விட்டதும், அரிகில் இருந்தவர்கள் தூக்கி இங்கு கொண்டு வந்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் வெட்கமாகிப் போய் விட்டது.

பின் காலை உணவு உண்டு விட்டு அவசர அவசரமாக மூட்டை கட்டி, பேருந்து நிலையத்தில் 21 பிடித்து ஊருக்கு வந்து வீட்டில் சாப்பாடு சாப்பிட்டதில் தான் வீட்டுச் சாப்பாட்டின் அருமை புரிந்தது.

ல்லூரியில் சேரும் போது NCC, NSS, NSO இம்மூன்றில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக சேர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஏற்கனவே நாங்க எல்லாம் மிலிட்டிரி ரேஞ்சில் இருந்தவர்கள் என்ற நினைப்பில் NCC தேர்வு செய்தான். அதிலும் இரண்டு வகை NCC ARMY, NCC NAVY. சரி தான் கழுத, NCC ARMY எடுப்போம் என்று எடுத்தான். அங்கே தான் ஆரம்பித்தது வினை.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பரேடு நடக்கும் அரை நாளிற்கு. பளிச்சென்ற ஷேவ் முகத்தோடு வர வேண்டும். தடவிப் பார்த்தால் சொர சொரப்பாக இருக்கக் கூடாது. தலை முடியை ஒண்ட வெட்டி விட்டு வர வேண்டும். அதே தாங்க, மிலிட்டிரி கட்டிங். பிடரியைப் பிடிக்கவே முடியாது. என்னவோ இப்போதே டெம்போவில் ஏற்றி, வாகா தாண்டி போஸ்டிங் செய்யப் போவது போல், யூனிஃபார்ம் விறைப்பாக இருக்க வேண்டும். கசங்கி இருக்கவே கூடாது.

வேறு வழி இல்லை. மெக்கானிக்கல் லேபிற்கு வாங்கி வைத்திருந்த காக்கி சட்டை, காக்கி பேண்ட் தான் சீருடையானது கொஞ்ச நாளைக்கு! பிறகு அவர்களே அளவெடுத்து, தைத்துக் கொடுத்தார்கள். கண்கள் பிதுங்கி வெளியே வந்து விட்டது. அந்தளவிற்கு இறுக்கம்.

சட்டையில் மூன்று பொத்தான்களுக்கு மேல் வெளியே தெரியக் கூடாது. பெயர் பேட்J, ரிச்சி ஸ்ட்ரீட்டில் செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலத்திலும், இந்தியிலும்.

பரேடு சரியாக நடக்கவில்லை என்றால், தவளை குதி தான் (Frog Jump). குதித்தபடியே அலுவலகத்திலிருந்து, EEE துறை வழியாக, மெக்கானிக்கல் துறையை அடைந்து, கெமிஸ்ட்ரி துறையைக் கடந்து, மீண்டும் அலுவலகம் வர வேண்டும். ஒரே ஒரு முறை தான் அதில் செமத்தியாக மாட்டினான்.

இதில் மற்ற பிரிவு தேர்வு செய்தவர்கள் செய்யும் எஞ்சாய்மெண்ட் பார்த்து பார்த்து ஆர்மிக்காரர்களுக்கு புகை புகையாய் வரும்.

NSS என்றால் குப்பை கூட்டுவது, களை பிடுங்குவது என்று சமூக சேவையைச் செய்து கொண்டு தங்கள் கடலை சாகுபடியையும் குறைவே இல்லாமல் முப்போகமும் விளைவித்து அறுவடை காட்டுவார்கள். NSO என்றால் விளையாட்டு மட்டுமே! கேட்கவும் வேண்டுமா? மைதானத்தைச் சுற்றி வர வேண்டியது. தாகசாந்தி செய்து கொள்ள வேண்டியது. ஓரமாக உட்கார்ந்து மொக்கை போட வேண்டியது. இதில் இந்த மெக்கானிக்கல் மாணவர்கள் பண்ணும் அழும்பு தான் ரொம்ப ஓவராக இருக்கும்.

மொத்த வகுப்பிற்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே இருந்ததால், 'இருக்கறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு டோட்டல் தமிழ்நாடு' என்ற நினைப்பில் கண்ணில் பட்ட, கூட ஓடி வரும், களைப்பாக ஓரமாய் உட்காரும் புள்ளைகள் என்று மானாவாரியாக தீயத் தீய வறுத்தெடுப்பார்கள்.

எங்கள் அளவிற்கு இல்லாவிடினும் கொஞ்சம் கடினமாக பயிற்சி செய்பவர்கள் NCC NAVYக்காரர்கள். ஆனால் அங்கே வேறு ஒரு அனுகூலம் இருந்தது. அட வேற ஒண்ணும் இல்லைங்க! கொஞ்சம் பொண்ணுங்க இருந்துட்டாங்க அங்க. அவ்வளவு தான்!

ஆர்மினாலே ஆம்பளப் பசங்க இராஜ்ஜியம் தானே! அது வேற மாதிரி ஜாலி! ரொம்ப ரீஜண்ட்டா எல்லாம் இருக்க வேண்டியதில்லை. நம்ம இஷ்டத்துக்கு சாஞ்சுக்கலாம். தண்டனை ஏதாவது கிடைச்சுட்டா கவலையே பட வேண்டியதே இல்லை. வெட்கப்படவும் வேண்டியதில்லை. அதையே அட்வென்சரா எடுத்துக் கொண்டு சின்சியரா அதை செய்யலாம்.

இங்கு கற்றது தான் ரைஃபிள் ஷூட்டிங்! அது இப்போது தென்மலா டூரில் 4/5 டார்கெட் அடிப்பது வரை துணையாய் இருந்திருக்கிறது என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.

முதல் வருஷக் கடைசியில் கேம்ப் அழைத்துப் போனார்கள். எங்கே? காஞ்சிபுரம் போகும் வழியில், செங்கல்பட்டு செல்லும் இரயில்வே தடத்தில் 'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கி வடக்குப்பட்டு என்ற இடத்தில் இருந்த 'திரிவேணி அகாடமி' என்ற ரெஷிடெண்ட்ஷியல் ஸ்கூல்!

'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கும் போதே முந்தின (வேறு கல்லூரி) பேட்ச் ஒன்று திரும்பி வந்து கொண்டு நின்றிருந்தது. எப்படி? தவளைக் குதி செய்து கொண்டு! எங்களுக்கு அப்படியே எல்லாம் ஆடி விட்டது. 'ஆஹா! என்னடா இது ! ஆரம்பமே சரி இல்லையே! திரும்பி போகும் போதும் பரேடு பழுக்குதே! அப்ப, உள்ள என்ன ரேஞ்சில இருக்கும்' என்று பயம் வந்தது.

ஆனால் அப்படியே தலைகீழ்!

வந்த அன்றைக்கே ஒருவன் 'படி தடுக்குச்சு! பதறி விழுந்தேன்! கால் உடைஞ்சிடுச்சு! காவலா இருக்கேன்!'னு ஒரு பிட்டைப் போட்டு, அங்கிருந்த 15 நாளும் எங்கள் மூட்டைகளுக்கு காவலாய் படுத்துக் கொண்டான். அப்படி என்ன அதில் பொக்கிஷமா இருந்தது? துணி மூட்டை தான்!

முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கண்டிப்பு இருந்தது. அப்புறம் செம ஜாலி! பரேடெல்லாம் சும்மா வெயில் பறக்கும், முற்பகல் நேரம்! பிறகு 'பிற்பகல் முழுதும் விளையாடு பாப்பா' என்று விளையாடித் தீர்க்க, புழுதி தான் நம்ம சட்டை ஆக்கும்.

அவ்வப்போது மீட்டிங், கதைகள், அரட்டை என்று நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் டைம் மிகச் சரியாக மெய்ண்டைன் செய்தோம். சரியாக ஆறு மணிக்கு எழுந்து, இரவு பத்து மணிக்கு படுத்து விட வேண்டும். அது போலவே இன்று வரையும் கடைப் பிடித்து வந்திருந்தால், வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கும். ஹூம்....!

பத்து மணிக்கு சொன்னாலும், சொல்லா விட்டாலும் தூக்கம் சொக்கி வந்து விடும். கண்ட்ரோல் செய்யவே முடியாது. அப்படி ஒரு உழைப்பில் உடல் வாடிப் போய் இருக்கும். அது தாங்க உழைப்பு.! இப்ப ஏன் நேரங்கெட்ட நேரத்துல படுத்தாலும் தூக்கமே வர மாட்டேங்குதுனு புரியுது.

ஒரு முறை எங்கள் சிறு குழுவின் மேற்பார்வையில் உணவு பரிமாறுதல். அன்றைக்குப் பார்த்து இட்லி வந்து விட்டது. அதை ஆளாளுக்குச் சண்டை போட்டு பிய்த்து காலி செய்து விட, கடைசியில் எங்களுக்கு வெறும் மாவுத் துணுக்குகள் தான் மிஞ்சி இருந்தன. விடவில்லையே அதையும்!

எல்லோரும் சொல்வது தான். இருந்தாலும் சொல்கிறேன். காலையில் கொளுத்தும் (மே மாதம் தான் கேம்ப் நடக்கும். சென்னையின் மே மாத வெயில்! எப்படி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்!) வெயிலில் பரேடு நடத்தி விட்டு கால் மணி நேர இடைவெளியில் மதிய உணவு முடித்து வர வேண்டும் என்ற அவசர கதியில் உண்ணும் அந்த உணவிற்கு, சத்தியமாகச் சொல்கிறேன், ஈடு இணையே இல்லை. அவ்வளவு ருசியாக இருக்கும். மற்ற நேரங்களில் அதை வாயில் வைக்க முடியாதபடி இருக்கும்.

ஓர் 5 நாட்களில் பள்ளி மாணவர்கள் வேறு வந்து விடுவார்கள். அவர்களை மேய்ப்பதும் ஓர் எக்ஸ்ட்ரா வேலையாகச் சேர்ந்து விட்டது. வெறும் பசங்க மட்டும் என்பதால், அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

இப்படியே 15 நாட்கள் போன பின், மிக்க வருத்தத்தோடு தான் எல்லோரும் பிரிந்தோம். யாரும் எதிர்பார்க்கவேயில்லை, NCC Army கேம்ப் இந்த அளவிற்கு எஞ்சாய்மெண்ட் ஆக இருக்கும் என்று!

ப்போது வெறும் ப்ளெய்ன் அல்லது லைன் அல்லது செக்கர் ஷர்ட், டார்க் பேண்ட், சம்பந்தமே இல்லாத டை, ப்ளாக் ஷூ என்று வேறு மாதிரி ஒரு ஆடைக்கு பழக்கப் படுத்திக் கொண்டாலும், அந்த சீருடைகளின் உழைப்பு இல்லை என்பதில் இன்றைய ஆடைகளை நான் 'யூனிஃபார்ம்' என்ற கேட்டகிரியிலேயே சேர்ப்பதில்லை.

இன்னும் போலீஸ் யூனிஃபார்ம் தான் மாட்டிப் பார்க்கவில்லை. அலுவலக கலைக் குழுவில் எப்படியாவது ட்ராமாவில் போலீஸ் வேஷங் கட்டிட வேண்டியது தான்.

அப்போ மலையாளத்துல சம்ஸாரிக்கணுமே..! பேசாம சிரிப்பு போலீஸ் ஆகிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க..?

A Good Song.

ங்களுக்காக லால், பார்வதியின் இணையில் ஒரு நல்ல பாடல்.