Thursday, June 11, 2009

வாழ்த்துக்கள்.



திவர் பொன்ஸுக்கு இன்று திருமணம். வாழ்த்துக்கள்.

http://sangamwishes.blogspot.com/2009/06/wishes_11.html

'பொன்ஸ்’க்கு கன்னாலம்…

Monday, June 08, 2009

மொக்ஸ் - 09.JUN.2K9



ண்பர் பதிவர் தமிழ்ப்பறவை, எனது கதை ஒன்றுக்குத் படங்கள் அனுப்புவதாக உறுதியளித்து முதல் சேப்டருக்கு அனுப்பி இருந்தார். அது இங்கு உள்ளது. அந்த சேப்டரிலும் இணைத்து விட்டேன். தொடர்ச்சியாக படங்கள் வரைந்து தருவதாக கூறி, அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அந்தக் கதையை முழுதும் எழுதி முடிக்க வேண்டுமாம்.

கஷ்டம் தான் என்று சொல்லியிருக்கிறேன்.

டந்த சில தடவைகளாக கவனிக்கிறேன்.

தென்னக ரெயில்வேயின் கேரளா செல்லும் அத்தனை ரயில்களின் அத்தனை ஜெனரல் கம்பார்ட்மெண்ட்களிலும் பீகாரிகள், ஒடிஸாக்கள்; பெங்காலிகள் அப்பிக் கொண்டு வந்து, வழிகளில் கொத்துக் கொத்தாக உதிர்கிறார்கள். தங்களது பான் தடங்களையும், பல வர்ண லுங்கிகளையும், இடைவெளியிட்ட கறை படிந்த பற்களையும் கூட உயிர் வாழ்ந்தாக வேண்டிய சர்வைவல்தனத்தையும் சுமந்து வருகிறார்கள்.

நிலம் அதிரப் பிளக்கும் மல்டி அபார்ட்மெண்ட், மால் கட்டிடங்களின் ஸ்கெலடன்களை உருவாக்குவதில் இவர்கள் தான் சீப்பாக கிடைக்கிறார்கள். என்கிறார்கள். முன்பு தமிழர்கள் கிடைத்துக் கொண்டிருந்தார்கள்; இப்போது அவர்கள் டீக்கடைகளிலும், ஹோட்டல்களில் பெஞ்ச் துடைப்பதிலும், ஒதுங்கிக் கொள்ள வறுமை துரத்தும் கடின உழைப்பாளிகளாக வடவர்கள் கிடைப்பதாக ஒருவர் சொன்னார்.

கல் உடைக்கிறார்கள்; சிமெண்ட் கலக்கிறார்கள்; டயர் காலணி கட்டி தாரில் நடக்கிறார்கள்; ரோட்டிலேயே அவ்வப்போது துப்புகிறார்கள்; மீசை இல்லாத முகங்கள், சட்டென கேரளர்கள் மத்தியில் அன்னியப்படுத்தி விட, ஒரு குரூப்பாகவே அலைகிறார்கள்; வெளிறிய ஜீன்ஸ் மேல் சட்டை இழுத்து விட்டு இறுக்கமாக துண்டு கட்டுகிறார்கள்; பறட்டையான எண்ணெய் காணாத மென் பழுப்பு முடி வறவறக்க அலைகிறார்கள்; கையேந்தித் தள்ளுவண்டிகளிலேயே முடித்துக் கொள்கிறார்கள்;

கலைந்து தூங்கிக் கொண்டே ஒவ்வொரு பெட்டியிலும் அடைத்துக் கொண்டு வரும் இவர்களை விந்தியத்தின் கீழ் முனைக்குத் துரத்தியது யார்கள்..?

நேற்று இரவு பயணிக்கும் போது, காய்ந்த மார்பை நிரடிக் கொண்டு, தேடிக் களைத்து அழுத கைக்குழந்தையை, முதுகில் அடித்து, மார்பெலும்புக் கூட்டிற்குள் திணித்துப் புடவையில் மூடிக் கொண்ட பெண்ணுக்கு இந்தப் புண்ணிய தேசத்தை ஆண்டவர்கள் செய்தது என்ன? செய்வது என்ன...?

முதல் தளத்தில் என் எதிரில் அமர்ந்து கொண்டு, என்னை விட, இரண்டு அடி முன்பாகவே பயணம் செய்தவர் ஒரு கேரளர். அவரிடம் 'கொறச்சு கொறச்சு' மலையாளத்தில் 'சம்ஸாரித்த' போது, என்னை அவரினம் என்று நினைத்துக் கொண்டார். பின் உண்மை தெரிந்து, 'எனக்கும் தமிழ் கொறச்சு அறியான். தமிழ் மாத்ரம் அல்லா, கொறச்சு இங்க்லீசு, கொறச்சு ஹிந்தி, கொறச்சு அரபி அறியான்' என்றார். வியப்பாக இருந்தது. பின் பேச்சு எங்கெங்கோ திரும்பி, இந்த வட இந்தியர்கள் 'பெங்காலிலிருந்து வரவில்லை; கல்காத்தாவில் இருந்து' என்றார். 'எந்தா வல்லிய difference?' என்று கேட்டேன். அவர், 'கல்காத்தா பெங்காலில் இருந்து கிட்டத்திலா, தூரத்திலா?' என்று கேட்டார்.

அத்தனை கொறச்ச மொழிகளிலிருந்தும் அப்படி என்ன தான் அறிந்து கொண்டிருப்பார் என்று சந்தேகம் வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மொட்டை மாடிப் படிக்கட்டில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நியூஸ் சேனலில், ஏற்காடு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். 'ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்ப்டுகின்றது...'. ஒரு அழகான வாக்கியம் எப்படி முட்டாள்தனமாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் இது எனலாம். யார் ஏற்காட்டை 'ஏ.ஊ.' என்று அழைக்கிறார்கள்? ஏற்காடு என்ன உயிரினமா? உயர்திணையா? யாராவது அழைத்தால் அது பதில் சொல்லுமா..? அது ஓர் ஊர் அல்லவா? பின் எப்படி அதை 'அழைக்க முடியும்..?'. சொல்லப்படுகின்றது. குறிப்பிடப்படுகின்றது. என்பன தானே சரியாக இருக்க முடியும். இது போன்ற அர்த்தம் கெட்டவற்றைக் கேட்கும் போது ஏற்படும் எரிச்சல் கொஞ்சம் அல்ல.

ற்றுமொரு எளிமையாகச் செய்ய முடிகின்ற தவறு, Invention, Discovery இடையேயான உபயோகங்கள். Invention என்றால் புதிதாக உருவாக்குவது; Discovery என்றால் ஏற்கனவே இருந்த ஒன்று, இதுவரை யாராலும் வெளியுலகிற்குச் சொல்லப்படாமல், வெளியுலகு அறியாத ஒன்றைக் (கண்டு - பிடிப்பது).

டெலிவிஷனை உருவாக்கியவர் ஜான் பெயர்ட்.
அமலாவைக் கண்டுபிடித்தவர் டி.ஆர்.

Telephone was invented by Bell.
America was discovered by Columbus.

இதனை எளிமையாக நினைவு கொள்ள நான் ஒரு கொக்கி வைத்திருக்கிறேன்.

டிஸ்கவரி சேனலில் பெரும்பாலும் என்ன காட்டுகிறார்கள்? யானைகள் தும்முவதையும், மான்கள் கிழிக்கப்படுவதையும், கொம்புகள் முறிக்கப்படுவதையும், மூட்டைப்பூச்சிகள் முதுகில் அமர்ந்து முனகுவதையும் தானே பார்க்கிறோம். அவை ஏற்கனவே இருப்பவை தானே? எனவே ஏற்கனவே இருப்பது என்றால் டிஸ்கவரி. புத்தம் புதிய மேட்டர் என்றால் இன்வென்ஷன்.

சிம்பிள். இல்லையா? சின்ன வயதில் அம்மா தான் வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

Sunday, June 07, 2009

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

ண்மையில் வாங்கிய வாத்தியாரின் 'ஓரிரு எண்ணங்களில்' எழுதுவது பற்றி சில வரிகள் சொல்லியிருக்கிறார். தெரிந்து கொள்வது இன்னும் நம்மைக் கொஞ்சம் விசாலமாக்கும் என்பது என் நம்பிக்கை.

689 நல்ல கதைகள் படித்து அலசிய ஹெல்மட் பான்ஹைம் என்பவர் நல்ல சிறுகதை என்பதற்கு பன்னிரண்டு அடையாளங்கள் சொல்கிறார்,

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியமாக இருக்கும்.

2. ஒரு சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்திற்கு முன் கதையின் தொண்ணூறு சதவிகிதம் நடந்து முடிந்திருக்கும். அதாவது சிறுகதை முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரிய கதை.

3. எல்லோருக்கும் எழுத வரும். ஆனால் அந்தக் காலகட்டத்திலும் சுமார் 10 பேர் தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள்.

4. சிறுகதைக்கான விஷயம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் திறமை, பிறவியில் ஏற்படுவது. அதை எந்தக் கல்லூரியிலும், புத்தகத்திலும் கற்க முடியாது.

5. எந்த நல்ல கதையிலும் எழுதியவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

6. உலகத்தில் எழுதப்பட்ட மொத்த கதைகளில் 85% பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இது ஒரு .விவரம்.

7. எனவே, நல்ல சிறுகதை எழுத்தாளனுக்கு கண், காது, மூக்கு சரியாக இருக்கும்.

8. சிறுகதைக்கான விஷயம் தேர்ந்தெடுப்பதில் இரக்கமோ நாசூக்கோ மரியாதையோ இருக்காது. அதற்கு காப்பியடிப்பதைத் தவிர, மற்ற எந்தவிதமான பாவச்செயலும் செல்லுபடியாகும்.

9. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

10. உலகில் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது.

11. கதைக் கருத்து என்று புதுசாக ஏதும் இல்லை. எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. புதிய இடங்களில், புதிய காலங்களில், புதிய வடிவமைப்புகளில் பழைய கதைகளைத் தான் சொல்கிறோம்.

12. கதைக்காக ஒரு 'இன்ஸ்பிரேஷன்' - ஒரு கற்பனைக் கன்னி வந்து பால் புகட்ட வேண்டும் என்று ஒரு கதாசிரியர் காத்திருந்தால், பட்டினியால் செத்துப் போவார். எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.

சில பொன்மொழிகள் :

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.

வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன.

ஃப்ராங் ஓ கானர், 'சிறுகதை சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றியது' என்றார்.

சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.

அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்தக் கணத்தை ரெவலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.

'எப்போது கதை எழுதினாலும் சந்திரனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் தெரு விளக்காவது; அல்பம் ஒரு மெழுகுவர்த்தியாவது கிடைக்கிறது.'

ராபர்ட் பென் வாரன் சொன்னது;

"THE IMAGE THAT FICTION PRESENTS IS PURGED OF THE DISTRACTIONS CONFESSIONS AND ACCIDENTS OF ORDINARY LIFE."

"தின வாழ்வின் அலுப்பான விவரங்கள் விலக்கிவிட்டு அதன் காலம் கடந்த சமாச்சாரப்க்களைக் கண்டுபிடிப்பதுதான் இதன் சூட்சுமம்".

ழுதுவது எப்படி என்று என்னைக் கேட்டு பல கடிதங்கள் வருகின்றன. என்னால் அதை விளக்கமாகச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. பதிலாக எழுத்துக் கலையைப் பற்றி சில நல்ல எழுத்தாளர்களும் அறிஞர்களும் சொன்னதை வாராவாரம் சொல்கிறேன்.

இந்த வாரம் அரிஸ்டாட்டில்:

"நன்றாக எழுதுவதற்கு அறிஞர்களைப் போல சிந்தித்து சாதாரண மக்களைப் போல வெளிப்படுத்து."

எர்னஸ்ட் ஹெமிங்வே:

"நான் பார்ப்பதை, உணர்வதை என்னால் முடிந்த வரை மிகச் சிறந்த, மிக எளிய முறையில் எழுதுவதே என் குறிக்கோள்."

ஜான் ஹெர்ஸே:

"எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல-திரும்பத் திரும்ப எழுதுவது-மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது! எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதுவதில் திருப்திப்படாமல் இருப்பது... மீண்டும் எழுதுவது!"

வில்லியம் பாக்னர்:

"ஒரு கதைமாந்தனுடன் ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று நின்று நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவு தான்."

தாமஸ் ஹார்டி:

"உண்மையாக எழுத வேண்டுமானால், சாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். சுவாரஸ்யமாக எழுத வேண்டுமானால், அசாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். எழுத்தாளனின் பிரச்னை இவையிரண்டையும் சமனப்படுத்துவது தான்."

"மூன்று பேர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள். ஜானகி அப்போதுதான் கணவனுடன் போட்ட சண்டையை நினைத்துப் பார்த்தாள். ரமேஷ் தன் மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டு, போட்டுக் கொண்டான். திவாகரன் அந்த ஒட்டகத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தான்..."

இந்த கதை ஆரம்பத்தில் என்ன தப்பு? வ்யூபாய்ண்ட் தான்! யாருடைய கதை இது? ஜானகியா, ரமேஷா, திவாகரனா? யாராவது ஒருத்தர்தான் மையமாக இருக்க வேண்டும். மற்ற பாத்திரங்கள் வரக்கூடாது என்றில்லை. ஓர் ஆசாமியின் பேரில் "emotional focus" என்பார்கள். அது வேண்டும். ஒரு பாத்திரத்தின் வெளி உலக மன சஞ்சலங்களை விட்டு கதை விலகக் கூடாது. உங்களுக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் திருப்பிப் படித்துப் பாருங்கள், வ்யூபாய்ண்ட் மாறுகிறதா என்று மாறினால் உடனே கதையின் பெயர் குறிப்பிட்டு ஒரு கார்டு எழுதவும். நிரூபிக்கப்பட்டால் பரிசு ரூ 4.95, ஒன்றுக்கு மேற்பட்ட விடை வந்தால் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

"ன்றி வாத்யாரே!" என்று சொன்னால் க்ளிஷே என்பாய். இருப்பினும் மற்றும் ஒருமுறை சொல்வேன்.

"நன்றி வாத்யாரே!!"


***

புத்தகம் : ஓரிரு எண்ணங்கள்.

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பதிப்பகம்.

பதிப்பகம் : திருமகள் நிலையம், தி.நகர்.(044 - 24342899, 24327696), நூற்கடைகள்.

விலை : 115 ரூ.