Thursday, January 21, 2010

3.கண்ணனை அலங்கரித்தல்.



போலே இருப்பதென பேசுவதும் ஏலாது
மாலே மணியன் மகுடமுதல் - காலே
அணிந்த கொலுசு அதுவரை ஆழ்வார்
பணிந்த சுவடு பதிந்து.

ஈரச் சிகைகளை இன்னும் உலர்த்திட்டுப்
பாரம் குறையப் புகைகாட்டி - தீரம்
புகட்டிய பைம்பொன் பதித்த இறகால்
முகமே மின்னும் ஒளிர்ந்து.

கொஞ்சம் பவளம் இடையிடை முத்துக்கள்
எஞ்சும் இடத்தினில் வைரங்கள் - பஞ்சுக்
கழுத்தினைக் கட்டியக் கயிறது பட்டுப்
பழுத்தன கைகள் தடவி.

தங்கப் பதக்கம் கரங்கள் புயத்தினில்
மங்காத ஆரம் மணிக்கட்டில் - பொங்கும்
ஒளித்துளி மின்ன ஒளிரும் வளையம்
மிளிரும் அவன்தன் விரலில்.

பட்டுநூலால் ஓராடை பக்குவமாய்ச் சுற்றிப்பின்
கட்டி இறக்கி முடிச்சிட்டு - சுட்டியின்
குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு.

பாதம் கொலுசுடன் ஜல்ஜல் எழுப்ப
மீதம் விரல்மோ திரம்வழி - மோதும்
பலவொலி கிண்கிணி கிண்கிணி கன்றுகள்
பலவந்துப் பார்க்கும் இயல்பு.

நெற்றிக்குப் பொட்டிட்டு நீள்புருவம் கண்இமைகள்
சுற்றிலும் மையெழுதிச் சுந்தரனின் - வெற்றித்
திருமுகத்தில் வைத்த வலதுகன்னப் பொட்டு
ஒருமுகமாய்ப் பிள்ளைக்குத் திருட்டி.

மோகனனின் மேனி எழிற்சிதறல், மாமலை
யோகிக்கும் சேர்த்த அலங்காரம் - போதாமல்
புன்னகை செய்யும் பரந்தாமன் கண்டதும்
தன்னையே நீங்கினாள் தாய்.

***

Image Courtesy :: http://dr-narasinha-kamath.sulekha.com/mstore/Dr-Narasinha-Kamath/albums/default/Krishna2.jpg

ஒரு குரலும் மற்றொரு மழைத்துளியும்!

லகப்புகழ் பெற்ற ஓவியத்தில் இருந்து ஒரு குரல் பிரிந்து, திசைகள் பற்றிய பிரக்ஞையின்றித் திரிந்தது. ஒரு செயற்கைக்கோளின் மேல் இடித்துக் கொண்ட சின்ன மேகத்தின் விளிம்பில் இருந்து வழுக்கி விழுந்த மழைத்துளி ஒன்றோடு அதற்குச் சிநேகம் உண்டானது.

ஒரு பியானோவின் இடுப்பில் நெருக்கமாய்த் திணிக்கப்பட்டிருந்த வெளுத்த மற்றும் கருத்த கட்டைகளின் இடைவெளிகளில் அவை இரண்டும் துரத்திப் பிடித்து விளையாடிய போது, செழித்து வந்த சிம்பொனியை ரகம் பிரிக்க முடியாமல், ராகக் குறிப்புக் காகிதம் குழம்பியது.

வெப்பம் வெளியேற்றும் குளிர்ப்பெட்டியின் முன் நின்று தற்கொலை செய்து கொள்ளத் தயாரான துளியைக் குரல் கவ்விச் சென்று, அதற்குச் செந்திரவம் வாங்கிக் கொடுத்தது.

வரப்பு ஒன்றில் ஊர்ந்து கொண்டிருந்த மண்புழு, பாய்ந்து வந்த வெள்ளத்திற்கு அஞ்சி, மடங்கி மடங்கி நகர்ந்து செல்வதைக் கண்டு உறைந்த குரலைக் குருவிக் கூடுகளில் உறங்கிய துளி கிளப்பிக் கொண்டு வரப் பெரும்பாடு பட்டது.

மின்சாரம் அற்றுப் போன ஒரு முன்னிரவில், தொலைக்காட்சி முக்காட்டின் மேல் நின்று கழிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் அருகில் தலை எரிந்த சில தீக்குச்சிகளைக் கண்டு, குரல் பேச்சற்றுப் போன போது, மழைத்துளி, சுருண்ட பூக்களால் கோர்க்கப்பட்டிருந்த மாலை தொங்கிய ஒரு புகைப்படத்தின் கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டு பிரமித்துக் கொண்டது.

வானம் நோக்கித் திறந்திருந்த குழாய்களிலிருந்து சுருள் சுருளாய் மனிதர்கள், கழுத்துப் பட்டைகளோடு வரிசையாக நகர்ந்து கொண்டிருப்பதை, மழைத்துளி சொல்லிய போது, சாக்கடையின் நுரைகளில் முகம கிழிந்திருந்த ஒரு புகைப்படம் மிதந்து வந்ததைப் பார்த்தது குரல்.

ஊமையள் ஒருத்தி, தன் முதுகில் ஊர்ந்த காட்டெருமையைத் தள்ளி விட்டுத் தான் எழுதும் சிறுகதையைத் தொடர்ந்தாள். அவளது திரண்ட மார்புகளின் வெண்மை, குரலை மயக்கம் கொள்ளச் செய்த போது, துண்டான எருமையின் கொம்பு மேல் சொகுசாய்த் துளி உட்கார்ந்து கொண்டு, சொட்டிய ரத்தங்களை எண்ணியது.

உதடுகளைக் கடித்துக் கொண்டு, தன் அழுகையை அடக்கும் சிறுமியின் விரல்களை அடிக்கும் ஆசிரியையின் வலது கையை ஒரு கொசு கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்த மழைத்துளியைக் குரல் உறிந்து விட, ஓவியத்தில் இருந்த மர்மப் புன்னகைப் பெண் ஒரு முறை தும்மியதை, வரலாற்று ஆய்வாளர்கள் குறித்துக் கொள்ளத் தவறினர்.

Wednesday, January 20, 2010

2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.



சுமந்து கொணர்ந்த சுகமான சாந்தைக்
கமகமக்கும் வாசப் புகையில் - சமப்படுத்திப்

பச்சைப் பயிற்றுமாவில் பாங்காய்க் கலந்திட்டுக்
கச்சை முடிச்சிட்டுக் கண்ணனின் - உச்சியில்

காய்த்த சுடுஎண்ணெய்ச் சேர்த்துச் சுருள்முடியில்
தேய்த்து நுரைத்திட்டாள் தாயாக - வாய்த்த

யமுனைநதித் தீரத்தின் யாதவ அம்மை
அமுதெனப்பால் தந்த யசோதா. - குமுறும்

முகில்வண்ணன் கொஞ்சும் முகுந்தன் முகத்தில்
அகிற்புகை சாற்றி அளவாய்ச் - சகிக்கும்

கடலைமா வைப்பயத்தம் மாவுடன் கூட்டி
உடலில் தடவிட்டு ஊறிக் - குடத்தில்

நதியெடுத்துக் கோபாலன் மேனியைக் கொஞ்சம்
புதிதாக்க ஊற்றிப் புறத்தை - அதிரூபம்

பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!

***

Image Courtesy :: http://images.exoticindiaart.com/hindu/little_krishna_gets_a_bath_ha39.jpg

Tuesday, January 19, 2010

1.கண்ணன் கோகுலம் வருதல்.

ண்ணன் பாட்டிலும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்ற மார்கழி மாத ஆரம்பத்தில் மாதம் முழுதும் முப்பது வெண்பாக்கள் கண்ணன் மேல் எழுத விரும்பித் துவங்கினேன். கொஞ்சம் தான் எழுத முடிந்தது. ;(

அவற்றை இங்கேயும் கொண்டு வருவதில் மகிழ்கிறேன்.

***

திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

***

விநாயகர் துதி.



பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.

கலைமகள் துதி.



புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.

கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.

குரு வணக்கம்.



மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.

1.கண்ணன் கோகுலம் வருதல்.



கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து

பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த

இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின

நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து

நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்

அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத

வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!

***

Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg

Monday, January 18, 2010

பதிவர் கார்க்கியின் விருப்பத்திற்காக...

மீபத்தில் பதிவர் கார்க்கி, 'தமிழ் சினிமாவில் இசை சுனாமி' என்ற பதிவில் ஓர் ஆதங்கப்பட்டிருந்தார்.

/* ஒ மகசியா நல்ல பகடி என்றாலும் ஒரு அருமையான மெலடியை வீணடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. */

வீணடித்த மெலடிக்குத் தகுந்த வரிகள் கொடுத்து உயிர் கொடுக்க விரும்பினேன். அது கீழே..!

***



நேற்றைய மழையே
க்ரேக்கத்து சிலையே
தொட்டவுடன் நானாய் சொக்கிடுவேன் தானாய், வந்திடுநீ!

தாஜ்மஹல் பூவே
தாமரைத் தீவே
தங்கநிறமேனி நெஞ்சுத் தலகாணி, தந்திடுநீ!

வெட்கங்கள் ஆடைசூடும்
வேனில்மழைக் காலம் காலம்
நிலா குளிர் வேதனைக் கூட்டம் கூட்டும்
விரலாலே எனை மீட்டிப் போ..!


சரணம்.1 ::

மேக மெத்தைமேல்
முத்துக்கள்
மழையாய்த் தூங்கும்

மின்னல் பட்டாலே
முத்தமாய்த்
தூறல் தூவும்

நீலப் பட்டாடை
நீங்கிடக்
காலையில் காயும்

நில்லாக் கதிரொளி
மாலையில்
மங்கையுள் பாயும்

நீ வர நான் தர முத்தம்நூறு
நீ பட நான் தொட சத்தம் ஏது?

பட்டுத் தொட்டு ஓட
மெட்டுக் கட்டிப் பாடத்
தீ ராகமே...!!!


சரணம்.2 ::

வேண்டும் போதெல்லாம்
வேண்டிக் கொண்டாற்போல்
வந்திடும் தேவி

வெட்கப்பூ தாங்கி
வெப்பத்தில்
கொன்றிடென் ஆவி

காணும் போதெல்லாம்
கண்களுக்குள்ளே
கலந்திடும் போது

கைகள் இணைந்து
கலவிடக்
காரணம் ஏது?

பொன் துளி போதைத் தேன் நீயுமென
தென் மலர் தேயிலை நீயுமென

மச்சம் தொட்டுப் பார்க்க
மிச்சம் இன்றி வேர்க்க
பெய் மழையே...!!!

***

கார்க்கி, ஹேப்பி..?