Showing posts with label தேவதைகளின் தேசம்.. Show all posts
Showing posts with label தேவதைகளின் தேசம்.. Show all posts

Tuesday, June 15, 2010

கேரளத்தில் சில காலங்கள்.



"Adieu...Cheers..."

பாஸ்கின் ராபின்ஸில் ஐஸ்க்ரீம் கோப்பைகளை உயர்த்தி க்ளிங்கிக் கொண்ட நேரத்தில், ஒரு டிசம்பர் மாதம் பனி இறங்கிக் கொண்டிருந்த பதினோரு மணிக்கு திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் வந்திறங்கிய நினைவு வந்தது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக அடைந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அது இன்னும் மேலே செல்ல வேண்டும். முதலாம் ப்ளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளுடன் நின்றேன். ட்யூப் லைட்டுகளில் பூச்சிகள் இரைந்தன. ஸ்பீக்கர் போனில் புரிந்தும் புரியாத பாஷை. வெளியே வந்து ஆட்டோ பிடித்து, அறை கிடைக்காமல், கிழக்குக் கோட்டைப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் (307) பிடித்து, உள் நுழைந்து, கதவைச் சாத்தி, ரிமோட்டை அழுத்த, ஏஸியாநெட்டில் இளம் மோகன்லாலும் ஷோபனாவும் ஓடக்கரையில் நடந்தனர். ஒரு மென்மையான தென்றல் போல நகர்ந்த பாடலைச் சகிக்க முடியாமல் ரிமோட்டைக் கதற வைத்து ஏதோ ஒரு பழைய ஆஷ் சீரிஸுக்குப் பாய்ந்தேன்.

இன்று அப்படிச் செய்ய மாட்டேன். இந்த இரண்டரை ஆண்டு காலக் கேரள வாசம் கொஞ்சம் பதப்படுத்தி இருக்கின்றது.

எத்தனை சம்பவங்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை உணர்ச்சிகள்..!!!

ரிட்டர்ன் சார்ஜையும் சேர்த்து மீட்டர் போடும் ஆட்டோக்காரர்கள்; ஒற்றை வாசல் மட்டுமே கொண்ட செம்பேருந்துகள்; மழை ஊற்றினால் படுதாவைச் சரித்துக் கொள்ளும் அழுக்கடைந்த ஜன்னல்கள்; பெரிய பெரிய கண்களில் மையெழுதிய மங்கைகள்; தென்னங்கீற்றுக்களில் தெறிக்கும் இரவின் பனி; பேக்கரி ஜங்ஷனில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் மேம்பாலப் பணிகள்; ம்யூஸியத்தில் கண்ட ராஜாவின் தேர்; டி.ஸி. புக்ஸ் நூல் அழகம் நடந்த சந்திரசேகரன் மைதானம்; அதிலேயே புழுதி கிளம்பிய கால்பந்துப் போட்டிகள்; பிக்ஃபன் நிற மசூதி சுற்றிய வி.சி.டி. கடைகள்; ஆளற்ற கடற்கரையில் விரிந்த வெட்டவெளியில் கழித்த பெரியவரும், சுற்றிய நாயை விரட்ட அவர் கையில் விசிறியும்; சங்குமுகத்தில் படுத்திருக்கும் ஒய்யார நிர்வாணி; ஸ்ரீகார்யத்தில் பழம் விற்கும் தூத்துக்குடி அன்பரும் அவர்தம் தமிழ் படிக்கத் தெரியாத இரு பெண்களும்; வாழைப்பழத்தை எண்ணெயில் பொறித்துத் தரும் 'பழப் பஜ்ஜி'; சர்வதேசத் திரைப்பட விழாவில் 'My Marlon and Brando' படத்திற்கு நிரம்பிய கைரளி தியேட்டர் கண்டு வியந்த அதன் குறுந்தாடி இயக்குனர்;

மகாத்மா காந்தி கல்லூரியின் மூடிக்கிடந்த கம்பிக் கதவை ஒட்டி உடைந்த சுவரைத் தாண்டிக் குதித்து விளையாடிய கிரிக்கெட்; அனந்தபுரி ஹோட்டலில் கரைந்த மதிய உணவு; தாமரைக்குளங்கள் மிதக்கும் வாசல் அடைந்த வீடுகள்; இரண்டிரண்டு நாட்களில் 'கோஸ்ட் ஹவுஸும்', அயனும், பழஸிராஜாவும், 2012ம் திரையிடப்படும் கழக்குட்டம் க்ருஷ்ணா தியேட்டரின் புதிய குஷன் சீட்டுகள்; வெள்ளிக்கிழமைகளில் ஏர் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் அந்த கோழிக்கோடு இளளின் அடர் ரோஸ் நகப்பூச்சு; மகாதேவர் கோயிலின் அமைதி கலைக்கும் இரண்டே இரண்டு ஆடுகள்; கல்லார் காட்டருவியில் தன்னந்தனியாகக் குளித்த களித்த ஞாயிறின் பகல்; ஆட்டிங்கல் பேருந்து நிலையத்தில் குடித்த கோழி சூப்;

மெல்லிய சேலை வழுவும் புகையாய் அரபிக் கடலிலிருந்து விரவும் மென் முகில்கள்; உடனே கரைந்து எல்லோரையும் நனைத்து விட்டுக் காணாமல் போகும் அதிசயங்கள்; ஹெலிக்கல் ஸ்ட்ரக்சரில் வளைந்து மேலேறும் தம்பானூர் இண்டியன் கஃபேயில் காந்தி படம்; கிழக்குக் கோட்டை கணபதி க்ஷேத்ரத்தில் படீர் படீரென அடிக்கும் தேங்காய்ச் சிதறல்கள்; விஜய், சூர்யா கட்-அவுட்களில் மாலை சூட்டும் ஜீன்ஸ் பையன்கள்; கொஞ்சம் சாக்கடையாகவே ஓடும் பட்டம் அருகின் நதி; மாடிகளின் மேலே இரவெங்கும் மின்னும் கல்ஃப் தங்க நங்கைகள்; நீல விளக்கு கூவும் ஆம்புலன்ஸ்கள்; கேசவதாசபுரம் ஜங்ஷனின் ஆலமரத்தின் மேல் ராத்திரி பத்தரைக்கு சிறுநீரடித்தவரைச் சுற்றியிருந்த செங்கொடிகள்;

கோவளம் கரையில் அலை உடைக்கும் பாறை வரை சென்ற தைரியர்கள்; 'நீலத்தாமர'யில் பார்த்த அர்ச்சனா; நாகர்கோயில் பேருந்துகளுக்கு அருகில் ஒரு சுருள் கடலை இரண்டு ரூபாய்க்கு விற்கும் சைக்கிள் பெரியவர்; இதய ஆப்ரேஷன் அம்மாவுக்காக ப்ளஸ்2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு, ஆர்யாஸில் தட்டம் எடுக்கும் நெல்லைப் பையன்; சாலை பஜாரில் கவிழ்த்த குடைக்குள் பச்சை மிளகாய்; மார்பளவு காந்தியைச் சுற்றிய பச்சைப் பூங்கா;

ரோட்டோரம் மாயக் கால்பந்தை உதைத்தே செல்லும் பள்ளிச் சிறுவர்கள்; 'ஆல் கேரளா மம்முட்டி ஃபேன்ஸ் அண்ட் வெல்ஃபேர் அஸோஸியேஷன், சாவடிமுக்கு யூனிட்' போர்டு தொங்கும் நடு ரோட்டு மின் கம்பம்; இஞ்சினியரிங் கல்லூரி வாசலில் பறக்கின்ற கொடியில் SFI; பண்டிகைக்களுக்காக வாசலில் ஸ்டூல் மேல் விளக்கேற்றி, பொரியும், பழமும் வைத்துக் காத்திருக்கும் ஆண்கள்; எப்போதும் யாராவது உண்ணாவிரதம் இருக்கும் செக்ரட்ரியேட் வாசல்; பார்த்திருக்கும் திவானின் கம்பீரச் சிலை; பத்மநாபன் கோயிலின் கோபுரத்தின் இருட்டுகளிலிருந்து சிதறிப் பறக்கும் புறாக்கள்; தேஜஸ்வினி உச்சியில் நின்று பார்க்கத் தெரியும் விசிறியடித்த தென்னை சாம்ராஜ்யம் - திருவனந்தபுரம்!!!

இங்கே இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் சென்ற இடங்கள் ஒப்பிடக் குறைவு தான்.

வந்த முதல் ஞாயிற்றுக் கிழமையிலேயே பொன்முடி சென்று காய்ந்து போய் வந்தேன்; கல்லார் அருவியில் காட்டுக் குளியல் போட்டேன்; அரவிந்த், சுந்தர் மற்றும் அவர்களின் நெல்லூர் நண்பருடன் காரில் கிளம்பி செங்கோட்டை சாலை வழிச் சென்று குற்றாலம், பாபநாசம், பாணசமுத்திரம் அருவி, கடையநல்லூர், திருநெல்வேலி நாற்கரச் சாலை வழி நாகர்கோயிலில் ராத்தங்கல், விடியல் கண்டு மீண்டு அனந்தபுரம் திரும்பும் போது பத்மனாபபுரம் அரண்மனை பார்த்தேன்; அம்மா, தம்பியுடன் கன்னியாகுமரியில் வைகறை ஐந்து மணிக்கு அலைகள் தங்கக் கரை கட்டி ஈரமாய்ப் பாய வெய்யக் கதிர்ரோன் வெளிவந்த செஞ்ஞாயிறு வியந்தேன்; விவேகானந்தர் பாறை, வள்ளுவர் பேருரு கண்டேன்; 2008 இறுதியில் பகல்கள், இரவுகளாக ஆட்டோக்கள் பிடித்தும், பஸ்கள் ஏறியும் கையேட்டை நோட் செய்தும் கைரளி, அஜந்தா, கலாபவன், ஸ்ரீ தியேட்டர்களில் மாறி மாறிப் உலகத் திரைப்படங்கள் ரசித்தேன்; சாரல் விழும் மாலை நேரங்களில் புகை நகரும் கூரைகளின் கீழ் நின்று கட்டன் சாயா குடித்தேன்; லயோலா மைதானத்தில் டெக்னோபார்க் கால்பந்து போட்டிகளில் நடனங்களில் விசில் ஊதிக் கொண்டே கலந்தேன்; நிலா பின் பக்கக் கதவு ஒட்டிய தமிழ் உணவகத்தில் தோசை, மாம்பழச் சாம்பார் கொண்டேன்;

சந்தித்த பெரும் மனிதர்களையும் மறக்க முடியாது.

எழுத்தாளர் நீல.பத்மனாபன் அவர்கள். முதன் முறையே நேரந்தாழ்த்திப் போய்த் திட்டு வாங்கினேன். ஒரு முறை கூட அவர் நடத்தும் நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வாங்க முடியவில்லை. வருத்தமே. ஐம்பது வருட இடைவெளி இருந்த போதும் எத்தகைய மனத் தொலைவும் வராத வகையில் இயல்பாகப் பேசுவார்; இவரைச் சந்திக்க முடிந்தது ஒரு தமிழ் வாசகனாக மகிழ்வே!

தமிழ்ச்சங்கர்கள். மாதத்தில் ஒரு ஞாயிறு கதைநேரம், மற்றொன்றில் கவிதை வேளை என்று நடத்துகிறார்கள். என்னால் சரியாகக் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், சில விழாக்களில் இருந்தேன். கமலநாதன் அவர்களின் வீட்டிற்கு எப்போது போனாலும் கேரள உணவு கிடைக்கும்.

நாகர்கோயில் சென்று ஜெயமோகன் அவர்களைச் சந்திக்க முடிந்தது மற்றொரு நல்லூழ். ;)

இன்னும் எத்தனையோ எளிய மனிதர்களுடன் பழக முடிந்ததும் அவர்களுடைய வாழ்வைக் கொஞ்சமாவது உற்று நோக்க முடிந்ததும் கேரளத்தில் இருந்ததன் சாறு என்று நம்புகிறேன்.

இங்கே சொல்லாத சம்பவங்களும், மனிதர்களும், ஆச்சரியங்களும், அனுபவங்களும், கசப்புகளும் பட்டுப் புடவையில் ஊடாடி ஊடுறுவும் சரிகை நூல் போல் எப்போதாவது ஏதாவது கவிதையிலோ, கதையிலோ, கட்டுரையிலோ தென்படலாம். அப்போதும் கேரளா எனக்கு வியப்புப் பிரதேசமாகத் தான் இருக்கும்.

மீண்டும் ஏதாவதொரு நாள் நான் அனந்தபுரம் போக வேண்டி வரலாம். இன்று எனக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டு நான் வெளிவந்து விட்டாலும் செக்ரெட்ரியேட் வாசலில் ஆளாக் கட்சியின் தர்ணாவையும், உயர்நீதிமன்ற முகப்பில் சோம்பிய காந்தி சிலையையும், தம்பானூர் ஸ்டேஷன் சாம்பார் இட்லியையும், பத்மனாபன் கோயிலையும், ஆர்ப்பரிக்கும் அரபிக் கடல் அலைகளையும், மென் நாரைகளின் சுருள் சிறகுகளாக மிதந்து கரையும் சாம்பல் மேகச்சரங்களையும் திருவனந்தபுரத்தை விட்டு யாரும் எடுத்துக் கொண்டு வர முடியாது என்று தோன்றுகின்றது.

***

கேரளத்தில் இருந்த அனுபவங்களை 'தேவதைகளின் தேசம்' வகையில் படிக்கலாம்.

Image Courtesy :: http://www.keralagreenads.com/photos/trivandrum_big5.jpg

Monday, January 11, 2010

இந்திய அறிவியல் மாநாடு - 2010.

லைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநாடு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். இந்த ஆண்டு (97-வது மாநாடு ) பிரதமர் சிங் துவங்கி வைக்க, ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 3லிருந்து 7 வரை திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் ( கார்யவட்டம் கேம்பஸ் ) நடைபெற்றது.

'முத்துடைத் தாமம்' என்றெல்லாம் இல்லாமல், கார்பெட் ஷீட் போட்ட பிரம்மாண்ட பந்தற்கீழ் கண்காட்சி நடைபெற்றது. 'Stealing the Show' என்று ISRO அள்ளிக் கொண்டது. நடுவில் ஒரு பெரிய ஸ்டால் கட்டி, சந்திராயன் வீடியோக்கள், நவீன ஸேட்டிலைட் வடிவ மாதிரிகள் என்றெல்லாம் சுற்ற வைத்தார்கள். ஓரத்தில் ஒரு மாதிரி ராக்கெட் சீறிப் பாயும் போஸில் நிற்க, காதலர்கள் காதலிகளுடன் 'காதல் வானிலே... காதல் வானிலே...' என்று பாடிக் கொண்டே அதன் மேல் ஒய்யாரமாய்ச் சாய்ந்து, போஸ் கொடுக்க, நண்பர்கள் 'க்ளிக்'..!

கேரளப் பயிர்க் கல்லூரியின் வெவ்வேறு பிரிவுகளில் 'கொழுகொழு' ஹைப்ரிட் கோழி வளர்த்து, டெமோவுக்கு காட்ட, கூண்டுக்குள் அது ஒண்டி நின்று எங்களை வேடிக்கை பார்த்தது.

மண்ணே தேவையில்லாமல், தேங்காய் நாரிலேயே அக்ரியில் உருவாக்கிய சில கெமிக்கல்களைச் சேர்த்து,செடி வளர்ப்பதால், மண் மாசுபடுதலைத் தவிர்க்கலாம், அதே சமயம் மறுசுழற்சிக்கும் தயார் படுத்தலாம் என்று ஒரு பெண்மணி விளக்க, கூட அமர்ந்திருந்தவர் செல்போன் விளையட்டில் பிஸியாக இருந்தார்.

சதீஷ் தவான் அவர்களைப் பெருமைப்படுத்தித் தனியாக ஒரு ஸ்டால். அதில் அவர் பணிகளைப் பாராட்டும் இந்திரா, கலாம் புகைப்படங்கள்; அவர்களது பாராட்டுரைகள்; அவரது பொன்மொழிகளென்று பெய்ண்ட் பூசி வைத்திருந்தார்கள். சுற்றியும் எல்.ஈ.டி. விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

வீடியோகான் தனி ஸ்டாலில் ஸேடிலைட் டிஜிட்டல் எல்.ஸி.டி., என்று ஆரவார விளம்பரம் இருக்க, ஆர்வமாய் விசாரித்தால், வெளியே இருக்கும் செட்டாப் பாக்ஸை டி.வி.மானிட்டருக்குள்ளேயே செட் செய்து வைத்திருக்கிறார்கள். ரூ.26699 லிருந்து பட்ஜெட் போகிறது. மானிட்டர் இஞ்ச் பொறுத்து விலை நிர்ணயம்.

பிரியத்ர்ஷினி அறிவியல் ம்யூஸியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் அவதாருக்குத் தாத்தா வகையறா 3-டி காட்சிகள் காட்டினார்கள்.

சந்தடி சாக்கில் பி.எஸ்.என்.எல். இரண்டு ஸ்டால்களைக் கைப்பற்றி கார்டுகளை விற்றுக் கொண்டார்கள்.

காதி பவன் ஸ்டாலில் கதர்த் துண்டுகளும், சட்டைகளும் இன்னபிற நார்ப் பைகளும் தொங்கிக் கொண்டிருக்க, சரசர மணிகள் நிரப்பப்பட்ட குழாய்களைக் குலுக்கி விற்க முனைந்தார்கள்.

அரசுக் கைவினைப் பொருட்கள் ஸ்டாலில் தென்னை மினியேச்சர், குடை சுமக்கும் மஞ்சள் பார்டர் மார்க்கச்சைப்பெண்கள், கதகளி முகம், கோரைப் பாய்கள் என்று மாறாமல் கேரளப் பண்பாட்டைக் கடை விரிக்க, அதற்கு எதிர்ப்புறத்தில் வங்காளத்தில் இருந்து வந்திருந்த ஸ்வாமி பிரபுபாத சைதன்ய மகாபிரபு மடத்தின் ஒரு ஸ்டாலில் சில புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

அறிவியல் கண்காட்சியில் ஆன்மீகத்திற்கு இடம் என்ன என்று பார்த்தால், அத்தனை புத்தகங்களிலும் இரண்டையும் லிங்க் செய்த முயற்சிகள். மாதிரிக்கு ஒன்று படிக்கலாம் என்று 50% தள்ளுபடியில் ஒரிஜினல் ரூ.95, வாங்கிய விலை ரூ45 என்று எடுத்துக் கொண்ட புத்தகம் 'Vedanta and Biotechnology'.

அத்தனை பள்ளிக் கூட்டங்கள்! தைரியமாய்ச் சைட் அடிக்கலாமா என்று ஆசை கொள்ள வைக்கும் சுடிதார் சுந்தரிகள்! பட்டாம்பூச்சிக் குழந்தைகள்! யூனிஃபார்ம் யூத்கள்! யூனிவர்சிட்டி இளம் சிட்டுக்கள்! கேண்டீன்கள்! இரண்டு மணிநேரமும் ஸ்டால்களோடு, கண்களுக்குக் கூல்களாகவும் பார்த்து ரசித்து வெளியேறினால், காக்கிக் காவலர்களோடு, 'Quick Operation' என்ற பெயரில் ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸினர், ஓபன் ஜீப்பில் கனமான துப்பாக்கியோடு செல்போன்களுக்கு விறைப்பாய் போஸ் கொடுத்தனர்.















































Wednesday, September 23, 2009

மூன்று சந்திப்புகள்.

ல்யாண் மருத்துவமனைக்கு அருகிலேயே ஆட்டோவை நிறுத்தி விட்டு, இருபது ருபாய் வாங்கிக் கொண்டார். நடந்து, குறியத்தி பைபாஸ் ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஸ்டாண்டில் 45'யில் ஒன்றைக் கவிழ்த்து அடியில் பாய்ந்திருந்தார்கள். பார்சல்கள் கொண்ட லாரி ஒன்று நின்றிருந்தது. பி.ஸி.ஓ.வில் ஒர் பெண் பேசிக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை இரவு நல்ல மழை பெய்திருந்தது. ஃபேன்ஸி ஸ்டோரில் ஒர் பெரிய மன்ச் மட்டும் வாங்கிக் கொண்டேன். சாப்பிடுவாரா என்ற் தெரியவில்லை. இருந்தாலும், பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது வெறுங்கையோடு போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். தேங்கியிருந்த சேற்று நீரில் செம்பருத்திப் பூநிழல் காற்றில் கசங்கியது. மெய்ன் கதவைத் திறந்து உள்ளே சென்று, அழைப்பு மணியை அழுத்தினால், கொஞ்ச நொடிகளில் வந்து கதவைத் திறந்தார், எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்கள்.



அவர் மனைவி மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். தனியாகத் தான் இருந்தார். கோட்டையில் ஒரு ப்ராமின் வீட்டில் செய்யச் சொல்லி உணவு கொண்டு வருகிறார்கள். முதுகு வலி படுத்துகின்றது. இருந்தாலும் எனக்காக உட்கார்ந்து நிறைய நேரம் பேசினார். கமலாதாஸ் மறைவை ஒட்டி 'நெய்ப்பாயாசம்' என்ற அவரது கதையை தீராநதியில் இவர் மொழிபெயர்த்து அனுப்பி வைக்க வெளியிட்டிருக்கிறார்கள். குட கொஞ்சம் கவிதைகளையும் பெயர்த்து அனுப்பியிருந்தார். எதிலும் வரவில்லை. ஓணம் திருவிழா சிறப்பு மலர்களுக்காக ஜனயுகம் போன்ற மலையாள பத்திரிக்கைகள் சாரின் புதிய கதைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பத்திரிக்கைகளில் அனுப்பி வைத்தால்ம் வருவது இல்லை. பொறியாளர் தினத்திற்காக ஒரு பொறியாளரின் பேட்டி வேண்டுமென இவரைத் தேடி வந்து பத்தி போட்டிருக்கிறார்கள். 'என்னை ஏன்?' எனக் கேட்க, நகரில் நிறைய எஞ்சினியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இலக்கியத் தொடர்புள்ள இஞ்சினியர் நீங்கள் தானே என்று சொல்கிறார்கள்.

மேலே மாடிக்குச் சென்றால் ஓர் எழுபதாண்டு எழுத்து வாழ்க்கையின் சாரம் அலமாரிகளில் நிறைந்திருக்கின்றது. தனியாக ஒரு பீரோவில் அவர் எழுதிய புத்தகங்கள். ஒரு நெருக்கடியான அலுவலக வாழ்வில், எழுதுவதின் மேல் எத்தனை பிரியம் இருந்தால், இப்படி எழுதியிருக்க முடியும் என்ற ஆச்சரியம் வருகின்றது. அவர் கணிப்பொறியில் சில சின்ன பிரச்னைகள் இருந்தன. அதைச் சரி செய்து கொடுத்தேன். அவரது வலைப்பதிவில், 'கோபிகையின் கெஞ்சல்' என்ற கவிதையின் கீழேயே அதன் ஒலி வடிவமும் வருமாறு செய்யச் சொன்னார். செய்யப்பட்டது.

கீழே வந்து நிறைய சொன்னார். தமிழில் எழுதுவது பற்றிய சில அறிவுரைகள், இலக்கிய உலகில் எழக்கூடிய இடையூறுகள், தமிழில் எதிர்பார்க்கக்கூடிய அங்கீகாரமின்மைகள்...! அவரை நிறைய தொந்தரவு செய்ய விரும்பாததாலும், தமிழ்ச்சங்கர் ஒருவரது வீட்டில் மதிய உணவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தபடியாலும் கிளம்ப வேண்டியதாக இருந்தது. கிளம்பும் ம்ன் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். பூஜையறைக்குக் கூட்டிச் சென்றார். நவராத்திரி துவக்க நாளாகையால், சரஸ்வதி முன்னே வீற்றிருந்தாள். காலில் விழுந்து வணங்க, பூஜையில் வைத்திருந்த சிறிய வாழைப்பழத்தைக் கொடுத்து, நெற்றியில் நீறு பூசி விட்டார். ஒரே ஒரு போட்டோ எடுக்கக் கேட்டேன். மேலே துண்டு போர்த்தியிருந்தவர், 'ஜெயகாந்தன் மாதிரி ஆகியிரக் கூடாதில்லையா? போன வாரம் விகடன் பார்த்தேளா..!' என்று சிரித்து சட்டை போட்டுக் கொண்டார். எவ்வளவு அப்டேட்டாக இருக்கிறார்..!

அடுத்த நாள் மற்றுமொரு எழுத்தாளரைப் பார்க்கப் போவதாகச் சொன்ன போது, அவரையும் நலம் விசாரிக்கச் சொன்னார். கிளம்பி விட்டேன்.

முன்பாக படிக்க ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்று கேட்டேன். குறிப்பாக அவரது புத்தகங்களில் ஒன்று. கொடுத்தார் ஒரு 750 பக்க புத்தகம். 'உணர்வுகள் சிந்தனைகள்'. 1965லிருந்து 2005 வரை அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளையும் என்.சி.பி.ஹெச் தொகுத்து 400 ரூபாயில் வெளியீடு. (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98. 044 - 2635 9906, 2625 1968.)

ஓர் எழுத்தாளர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர். அதிலும் தமிழ், மலையாளம் என்ற இரு பிராந்திய மொழிகளில் வல்லமை பெற்று, அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் மொழிபெயர்த்துக் கொடுத்தவர். திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு, மலையாள இலக்கிய உலகை உள்ளிழுத்து அப்படியே தமிழில் நடக்கின்றவற்றைக் கண்டு... இரண்டு வகைகளின் ஒப்பீட்டைச் செய்து எழுதுகிறார். இன்னும் படித்து முடிக்கவில்லை. படித்தவரையிலுமே இந்நூல் ஒரு இலக்கிய வாசகனின் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. சென்ற காலகட்டங்களின் வரலாற்றை, முக்கியமாக இலக்கியப் போக்குகளைத் தெரிந்து கொள்ள ஓர் ஆவண நூல் இது. காசு கொடுத்து ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளப் போகிறேன்.

னந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் பழக்கமானவர் திரு.கமலநாதன். இப்பெயரிலேயே நிறைய குட்டிக் குட்டிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மங்கையர் மலர், சுட்டி விகடன், சக்தி விகடன், குமுதம் என பல பத்திரிக்கைகளிலும் வந்திருக்கின்றன. சிறுகதைகளும் எழுதுவார். இவர் மனைவியும் எழுதுவார். அசன் நகரில் வீடு இருக்கின்றது. மதிய உணவிற்குச் சென்றேன்.

வயிற்றுக்கு ஈயும் போதே செவிக்கும் ஈந்தார். இவர் சொன்னதில் இங்கே ஒன்று சொல்கிறேன். 'கணிணித் தளத்தில் பணிபுரிவதால், அறிவியல் / தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதலாமே என்றார். எந்த அளவுக்கு எளிமையாகவும், படிக்கும் தன்மையிலும் என்னால் எழுத முடியும் என்று தெரியவில்லை. முயல்கிறேன்' என்று சொல்லி வைத்தேன். ஒரு ஆர்வ முயற்சியாக சிஙகப்பூர் பதிவர்கள் குழுமம் நடத்தும் 'மணற்கேணி - 2009'க்கு ஒரு தொழில்நுட்பக் கட்டுரை (Audio Signal Processing) அனுப்பியிருப்பதைச் சொன்னேன்.

சம்பா சோறு. மென் சாம்பார். ரசம். அப்பளங்கள். கூட்டு. பொறியல். வாழைப்பழம். முடித்து விட்டு கை கழுவும் போதே கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டன. இன்னும் கொஞ்சம் பேசி விட்டு, கிழக்குக் கோட்டைக்கு நடந்தே வந்து, பிக் பஸார் பின் சந்தில் நடந்து, ரெயில்வே ஸ்டேஷனை அடைந்தேன். கோட்டோவியம் போல் கலந்திருந்த தண்டவாளங்கள் மேல் ஏறி புக் ஸ்டால் வந்து, சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு எதிர்ப்புற தம்பானூர் பேருந்து நிலையத்தில் ஆட்டிங்கல் பஸ் பிடித்து, கழக்குட்டம் திரும்பினேன்.

ப்ளாக்கர் ப்ரொஃபைலில் வயது 28 என்று மாறிய நாற்பது நிமிடத்தில் தமிழ்ப்பறவையிடமிருந்து வாழ்த்து செல்லில் வந்தது. மற்றுமொரு பிறந்த நாள் விடியப் போகின்றது. எதுவும் ஸ்பெஷலாகச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. அம்மா புது உடை எடுத்தாயா? உடுப்பாயா? என்று கேட்டார்கள். இல்லை. ஏனோ சின்ன வயதிலிருந்தே ஆடைகள் மேல் விருப்பம் இருந்ததில்லை. ஏதே ஒரு வருட தினமலர் தீபாவளி மலரில் திலகர் தன் மாமனாரிடம் தலைதீபாவளிக்கு புதுத்துணிகளோ, மோதிரமோ வேண்டாம் என்று சொல்லி, அதற்கிணையான பணத்தைப் பெற்றுக் கொண்டு அத்தனைக்கும் புத்தகங்களாக வாங்கி வந்தார் என்று படித்திருந்தேன். அடுத்த வருட பிறந்த நாளுக்கு (அல்லது பொங்கலுக்கு?) எனக்கும் துணி வேண்டாம். புக் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டு அடம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. உண்மையில் என் கையில் காசு கொடுத்தால் ஒன்று புத்தகம் வாங்குவேன்; இன்றேல் ஏதேனும் பண்டம் வாங்கித் தின்பேன். வேறு எதற்கும் செலவு செய்ய விரும்புவதில்லை.

குறைவான அழுக்குப் படிந்த ஒரு சட்டை, வழக்கமான பேண்ட் இரண்டையும் எடுத்து வைத்துக் குளித்து விட்டு அணிந்து கொண்டேன். பிறந்த நாளுக்குக் கோயிலுக்குப் போன பழக்கமெல்லாம் எப்போதோ நிகழ்ந்த கனவுகள் போல் தோன்றுகின்றது. எப்போது வீட்டின் பிடியை விட்டு வெளியேறினேனோ, அப்போதே குடும்பம் என்ற அந்த அழகான அமைப்பின் சில விதிகள் தாண்டப்பட்டு விட்டன. இப்போது கூட பாருங்கள். புரட்டாசி மாதம். நான் வெஜ் சாப்பிடக் கூடாது, வீட்டிலிருந்த வரை. இந்த செவ்வாய் கூட சிக்கன் சாப்பிட்டேன். நவராத்திரி நேரங்கள். ஹூம்...!

மீண்டும் ஒரு குடும்பம் அமைந்த பின், அதன் இனிய கட்டுப்பாடுகளுக்குள் அடங்கும் வரை இப்படிப்பட்ட விதிமீறல்கள் - இவற்றை மீறல்கள் என்று சொல்லலாமா? கண்டு கொள்ளாமல் இருத்தல் எனலாம் - இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருவனந்தபுரம் - நாகர்கோயில் சாலை வழி அத்தனை அழகாய் இருக்கும். அதுவும் நான் பயணம் செய்த ஞாயிறு அதற்கான விடுமுறை நாளின் அமைதியை, மெளனத்தை பூசிக் கொண்டு விரிந்திருக்கின்றது. சாலை ஏறி, இறங்கி, வளைந்து, கலைந்து, பிரிந்து, இணைந்து போய்க் கொண்டே இருக்கின்றது. திடீர் திடீரென அல்லிக் குளங்களும், விரிந்த தாமரைத் தேக்கங்களும் சாலையோரங்களில் சலசலக்கின்றன. ஓர் ஊதாக் காற்று ஜன்னல் விளிம்புகளில் தடவி உள்ளே பாய்கின்றது. சில மசூதிகள் வெளிர் பச்சை அல்லது பிக் ஃபன் இளம் ரோஸ் நிறங்களில் வெய்யிலில் நிற்கின்றன. மாட்டுக் கறிக்கடைகளில் கொக்கிகளில் சதைகள் தொங்குகின்றன. கேரள வீடுகள் சிலவற்றில் காலியான ஊஞ்சல்கள் தெரிகின்றன. லேசாக அதிர்கின்ற பாலத்தில் கடக்கும் போது, கால் வட்டம் envelope போல் நதி குதித்து ஓடிக் கொண்டிருக்கின்றது. நெய்யாற்றின்கரா தாண்டி ஏதோ ஒரு குக் பஸ் ஸ்டாப்பில் ஒரு குடும்பம் ஏறிக் கொண்டது. அப்பா மூவர் சீட்டில் அமர்ந்து கொண்டார். அம்மா முன்பாகவே நிற்க, குட்டித் தங்கை அப்பாவுக்குப் பின் மூவர் சீட்டில் அமர்ந்து, அண்ணனைக் கூப்பிட, அவன் கண்டு கொள்ளாது என் அருகில் வந்தான். நகர்ந்து அவனுக்கு ஜன்னல் சீட்டைக் கொடுத்தேன். ஆர்வமாய் நுழைந்து ஜன்னலில் தொலைந்தான். ஏனோ இப்போதெல்லாம் ஜன்னல் சீட் தியாகம், ரயிலில் பிரயாணிக்கையில் ஏதாவது தின்றால், கண்ணுக்குத் தெரியும் சிறுவனுக்கு/சிறுமிக்கு கூப்பிட்டுக் கொடுப்பது, நன்றாகப் படிக்கும் பையனைக் கண்டால் அவர்களுக்கு ஏதாவது ஊக்கமாகச் சொல்வது என்று செய்யத் தோன்றுகின்றது. இதை முதிர்தல் என்பதா இல்லை ஒருவித அன்பு கிளைக்கின்ற மனம் வந்து கொண்டிருக்கின்றது என்பதா என்று புரியவில்லை. பயமாக இருக்கின்றது.

மார்த்தாண்டம் சர்ச்சிலும், இன்னும் சில தேவாலயங்களிலும் சண்டே மார்னிங் ப்ரேயர் நடந்து கொண்டிருக்கின்றது. நிறைந்து, வெளியே நின்றபடியும் கேட்கிறார்கள். பச்சைப் பூபாளம் இசைக்கின்ற வயல்வெளிகள் சாலைக்கு ஜரிகை போல் மின்னியபடியே வருகின்றன. மிக அருகாமையில் படர்கின்ற மலைத் தொடர்களில் மேகங்கள் பிஞ்சு பிஞ்சாய்க் காய்த்து மிதக்கின்றன. மேலே கருமுகில்கள் யார் உத்தரவிற்கோ காத்து அழத்தயாராய் நிற்கின்றன. நாகர்கோயிலுக்கு நான்கு கி.மீ. முன்பே இறங்கி சிலரிடம் விசாரித்து நடந்து போய், ஒரு குளம் அருகில் இறங்கினேன். கொக்குக் கால்கள் போல் கொஞ்சம் சிவப்பாய் நின்ற ஒற்றைத் தண்டுகளின் மேல் U U U-வாய் இணைந்து வெண்மையாய் நீர்மலர்கள் ஈரத்துடன் சரிந்து நாணின. குளம் பச்சையாய் இருந்தது. இலைகள் பச்சையாய் இருந்தன. குளத்தின் மேலாடையில் முற்பகலின் வெயில் முனைகள் கொண்ட வானம் வரையப்பட்டிருந்தது. வேலி இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களும், பிஸ்கட் கவர்களும், குடும்பக் குப்பைகளும் இருந்தன. ஆனாலும் அந்த மலர்கள் அழகாகவே சிரித்தன. போன் செய்து வந்து விட்டதைச் சொல்லிட, பையன் வந்து வீட்டுக்குக் கூட்டிச் சென்ற மாடியில், சுவரோடு சேர்ந்திருந்த கண்ணாடி குகைகளுக்குள் பொக்கிஷங்களாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்குள் அசோகமித்திரனும், காந்தியும் உறைந்த சட்டங்களின் முன் அமர்ந்து எனக்கு கை நீட்டினார் எழுத்தாளர் ஜெயமோகன்.



நிறைய விஷயங்கள் சொன்னார்; அறிவியல் கட்டுரைகள் எழுதுவதை எப்படி சுவாரஸ்யமாகவ்ம், தகவல்களாகவும் சொல்வது என்று சில உதாரணமுறைகள் சொன்னார்; நிறைய நிறைய படித்தால் மட்டுமே கொஞ்சமாவது எழுத முடியும் என்றார்; அவர் பேச்சின் குறுக்கே சென்று அஜிதன் தனியாக படித்தான். +2. என் இரண்டு கதைகளைப் படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்ததில் படித்து விட்டு, 'தேறாது' என்பதற்கு கொஞ்சம் மேலே மார்க் போட்டார். 'நீங்கள் புதுமைப்பித்தனிலிருந்து யுவன் வரை அத்தனை கதைகளையும் படித்தால் மட்டுமே ட்ரிக் மட்டும் கதை அல்ல. அதில் ஆத்மா இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்' என்றார்;

அவர் வீட்டிலேயே மதிய உணவு கொண்டேன். மேடம் எளிமையாக இருந்தார். சகஜமாகப் பேசினார். உனவு இனிமையாக இருந்தது. உண்டு விட்டு ஒரு ஃபோட்டோ எடுத்து விட்டு அவர் தூங்கச் செல்ல, நான் இறங்கி வந்து, பூனை போல் மெல்ல நடந்தும் புரிந்து கொண்டு ஹீரோ குரைத்து எடுத்தார். நடப்பது போல் கிட்டத்தட்ட ஓடி வெளியே வந்து விட்டேன். மீண்டும் வடசேரி சென்று பஸ் பிடித்து, தூங்கிக் கொண்டே அனந்தபுரம் வந்து சேர்ந்தேன்.

Friday, September 18, 2009

பளிச் செய்தி..!

திருவனந்தபுரம், செப்.18 :

இன்று மாலை மங்கிக் கொண்டு வந்த முன்னிரவு சுமார் 18:40 முதல் 19:00 மணிக்குள் திருவனந்தபுரம் நகரில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எமது சிறப்பு நிருபரிடம் அனுபவித்த டெக்னோபார்க்கில் பொட்டி தட்டும் வசந்த் தெரிவித்ததாவது :

"சார்... இன்னும் நடுங்குது..! இன்னிக்கு சாயந்திரம் ஒரு ட்ரீட்டுக்காக அலுவலக சகாக்களோடு அம்ப்ரோஸியா போகலாமா இல்லைன்னா பாஸ்கின் ராபின்ஸான்னு சீரியஸ் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு ஆறரை மணி கிட்டக்க இருக்கும். படபடன்னு செகண்ட் ஃப்ளோரே நடுநடுங்கிச்சு. எல்லோரும் எழுந்திருச்சிட்டாங்க. வி ஃபெல்ட் த வைப்ரேஷன்ஸ். ஒரு ஆறு செகண்ட் தான் அதிர்ச்சி இருந்திச்சு. அப்புறம் மெல்ல அந்த அதிர்வுகள் அடங்கறது, க்யூபிக்கிள் மேல கை வெச்சப்போ ஃபீல் பண்ணினோம். நான் கீழ எறங்கி வந்திட்டேன். கொஞ்சம் பெரிய நல்ல மழை பெஞ்சிட்டிருந்திச்சு. அப்ப தான் நான் கூட ஒருவேள நிலநடுக்கமா இருக்கலாமோனு நெனச்சேன். ட்ரீட் ப்ளான் கேன்சல் ஆகி, எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. நான் மட்டும் விடலையே..! அம்ப்ரோஸியா போய் க்ரிஸ்பி சிக்கன் பர்கர் சாப்பிட்டேன். டி.ஸி. புக்ஸ் ஷாப்புக்கு போய் தேவதாஸிகள் பற்றிய ஒரு புக்கும், டேவிட் இஸட் ஆல்பர்ட் எழுதிய டைம் அண்ட் சான்ஸ் பிஸிக்ஸ் புக்கும் வாங்கினேன்.

நிருபர் குறுக்கிடுகிறார் : சார், எர்த் க்வேக் பத்தி மட்டும் சொல்லுங்க..!)

இருங்க, அதுக்கு தான் வரேன். அப்புறமா மழயிலயே நனஞ்சிகிட்டு போய் ஐ.ஓ.பி. ஏ.டி.எம்ல கொஞ்சம் பைசா எடுத்திட்டு, வழக்கமான பெட்டிக் கடையில செவ்வாழைகளும், சன் ஃபீஸ்ட் ஆரஞ்ச் ஃப்ளேவர்ட் க்ரீம் பிஸ்கட்டும் வாங்கினேன். அப்ப விசாரிச்சா, கடக்காரரும் அப்படித் தான் சொன்னார். கடைல தொங்க வெச்சிருந்த குர்குரே பாக்கெட்டெல்லாம் அவர் மேலயே சரிஞ்சிச்சாம். பட்டத்திலிருந்து கிளம்பிய நடுக்கமாம் இது. அவர் வீட்டுக்கு செல்ல கேட்டப்போ, அவங்க அலமாரி பாத்திரமெல்லாம் விழுந்திடுச்சாம். ஏதோ பெருச்சாளி ஓடியிருக்குன்னு நெனச்சிட்டாங்களாம். சரியான காமெடி இல்ல..? (நிருபர் : ஊஃப்...) ஓ.கே. ஓ.கே..! தமிழ்ச்சங்கர் ஒருவரையும் ஃபோன் பண்ணி கேட்டேன். அவரும் ஆமான்னு சொன்னார். ஸோ, கேரளா கூட இப்ப ஸேஃப் கெடயாது..! கடவுளின் கண்ட்ரிலயே க்வேக்..! எப்பூடி...?"

http://www.technoparktoday.com/2009/09/earthquake-in-trivandrum/

http://aruninte.blogspot.com/2009/09/earthquake-in-trivandrum-kerala.html

http://www.hindu.com/2009/09/19/stories/2009091959380100.htm

updated :: it was a mild tremor and not an earthquake. recorded as in 3.5 scale.

Monday, August 31, 2009

Happy Onam Wishes.



நாளை மறுநாள் மகாபலிச் சக்ரவர்த்தி கேரள மண்ணிற்கு விஜயம் தருகிறார். தீபாவளிக்கு கூட லீவு தராமல், இங்கே உச்சக் கொண்டாட்டம் திருவோணத் திருநாளிற்கே..!

டெக்னோபார்க்கில் எல்லோரும் இன்று மாலையில் இருந்தே பண்டிகை மூடுக்கு வந்து விட்டார்கள். அவசர அவசரமாக ரிலீஸ் செய்ய வேண்டிய மாட்யூல்களை அனுப்பி விட்டு, எல்லோருக்கும் 'ஓணம் ஆஷம்ஸுகள்' ஃபார்வேர்ட் செய்து விட்டு, ஒரு ரிலீஃப் மூடில் ஸ்வைப் கார்ட் தேய்த்து வெளியேறுகிறார்கள். பர்வீன், ஏ1, பிஸ்மி ட்ராவல்ஸ் புக்கிங் ஆஃபீஸ்கள் முன் பயண பேக்கில் அடைத்த அழுக்குத் துணிகளும் ஃபாண்டா பாட்டிலுமாக ஜீன்ஸ் பெதும்பைகள் காத்திருக்கிறார்கள். கழக்குட்டத்தில் 'குடும்பஸ்த்ரீ' என்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் ஊறுகாய்கள், குளியல் பொடி, மஞ்சள் தூள், அரப்புப் பொடிகள் ஆகியவற்றை நேற்று ஒரே நாளிலேயே விற்றுத் தீர்த்து விட்டு, இன்று சிட்டிக்குள் பட்டறை போட்டிருக்கிறார்கள். திடீரென ஜனித்த கூரைகளில், ட்யூப் லைட்களின் அடியே பறங்கிக்காயும், வாழைச் சீப்புகளும் பரப்புகிறார்கள். ஹோட்டல்கள் மூன்று நாட்களுக்கு மூட்டை கட்டி விடலாமா என்று யோசிக்கிறார்கள். அட்வான்ஸாக சம்பளம் போட்டு விட்டதால், ஏ.டி.எம்.கள் ஏழு மணிக்குளேயே காலியாகி, லேட்டர்களுக்கு 'ஸாரி' சொல்லி விட்டன. செல்போன் ஷாப்புகள், ரெடிமேட்ஸ் அண்ட் கட்பீஸ் கடைகள், -1 தள கல்ஃப் கிஃப்ட் ஷாப்புகள் எல்லாவற்றிலும் கூட்டம் அப்புகிறது.

சிக்கன் கார்னரிலும், லோக்கல் கையேந்தி பவனிலும் ஜனம் அதகளம் செய்கிறது. கன்ஸ்ட்ரக்ஷனுக்காக கூட்டி வரப்பட்ட வட இந்தியர்கள், வெளுத்த முடியை நீவிக் கொண்டு, கடக்கும் மஞ்சள் மங்கைகளை ஓரக்கண்ணால் விசாரிக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் 'ப்ரமரம்' ரெண்டாவது வாரமாக ஒடுகின்றது. அதிசயமாக! மகாதேவர் கோயிலின் குட்டிக் குட்டி விளக்குகள் சிமிட்டிக் கொள்கின்றன. அன்னபூர்ணாவில் தமிழ் மென்னியர்கள் எக் தோசையும், புளிச் சாதமும், சாயாவும் கலந்தடிக்கிறார்கள். ஹாஸ்பிடல் வெட்டுச் சந்தில் இருக்கும் பகவதி கோயிலில் விநாயகரை ஸ்பீக்கரில் அழைக்கிறார்கள்.

திருவிழாவின் உற்சாக மனநிலை ஒரு ஜூரம் போல் மாநிலமெங்கும் பரவுவதை தலைநகரத்திலிருந்து உணர முடிகின்றது. ப்ரெளஸிங் மையத்திலிருந்து இதை டைப் அடிக்கும் நானும் நாளை இரவு கிளம்புகிறேன்.

ஐந்து நாட்கள் விடுமுறை. டெக்னோபார்க்கும், ஒட்டிய ஓட்டல்களும், சிங்கிளர்கள் மேன்ஷன்களும், தனி வீடுகளும், லேடீஸ் ஹாஸ்டல்களும், மறைத்த இணையப் பெட்டிகளும் நாளையிலிருந்து semi - deserted ஆக இருக்கும்.

எல்லோருக்கும் திருவோண வாழ்த்துக்கள்..!!!

படம் நன்றி :: http://farm4.static.flickr.com/3051/2864731990_36df86009f_m.jpg

***

ரெஷஸன் நேரமாக இருப்பதால், சென்ற முறை போல் இல்லாமல் எளிமையாகவே ஓணம் கொண்டாடினோம். நாள் முழுதும் வேட்டி சட்டையில் குளுகுளுப்பாகவே இருந்தது. அலுவலக நங்கைகளும் கேரளப் பாரம்பரிய சேலையில் வந்தார்கள். வித்தியாசமாக இருந்தது. :)

மதியம் மட்டும் அல் - ஸாஜ் ஆடிட்டோரியத்தில் உணவு ஓணசதயம் (ஓண உணவிற்குப் பெயர்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்று விட்டு, தின்று விட்டு, ஒன்றரை மணிக்கு மேல் கோடிங்குகளுக்குத் திரும்பினோம்.

Wednesday, May 13, 2009

IEEE - 125.

Tracing its routes to its founding organizations, the AIEE (1884) and the IRE(1912), IEEE celebrates 125 years of Engineering the Future on 13 May 2009. IEEE Kerala Section, with support of the local chapters of sister professional associations, is proud to celebrate the occasion. The event will bring together technology leaders to reflect upon the fascinating growth of engineering during the past 125 years, and to provide perspectives on the future of technology. Talks would be followed by Buffet Dinner.

இந்த கடைசி வரி எனக்கு பிடித்திருந்தது.



15-வது நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலின் கடைசி கட்டம் அனலாக நடந்து கொண்டிருந்த போது IEEE தனது 125-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. Institute of Electrical and Electronics Engineers என்பதன் சுருக் IEEE. தமிழில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் குழுமம் என்று சொல்லலாம்.

1884-ல் துவங்கப்பட்டு 13 மே 2009 உடன் 125 வயதை பூர்த்தி செய்த இந்த மிகப் பழமையான குழுமம் உலகமெங்கும் மின் தொழில்நுட்பத் துறைகளை நெறிப்படுத்துவதிலும், புதிய முறைகளை உருவாக்குவதிலும் ஒப்பில்லாத பணியாற்றுகின்றது. அதன் கேரள பிரிவினரால் பிறந்த நாள் விழா இன்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் இஞ்சினியர்ஸ், கேரளாவால் கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் நோட்டிஸ் போர்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருக்க, அதை நோட்டிஸ் செய்து இன்று கலந்து கொண்டேன்.

அலுவலகப் பேருந்தில் பி.எம்.ஜி. செல்லும் வரை பிரச்னையில்லை. பிறகு வெள்ளையம்பலம் செல்வதற்குள் ட்ராஃபிக் நெரிசலில் சிக்கிக் கொள்ள, ஊர்ந்து ஊர்ந்து நகர்வதற்குள் பேச்சுகள் முடிந்து விடுமோ என்ற அநாவசிய சந்தேகத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து, ம்யூசிய கூட்டத்திற்குள் தொலையாமல் கட்டிடத்தை அடையும் போது, பஸ் எங்களை கடந்து சென்றது.

அட்டெண்டன்ஸில் கையெழுத்திட்டு விட்டு, முதலில் சூடாக சாயா மற்றும் இரண்டு மேரிகள் எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் சங்கமிக்க, சங்கத்தார் பேசிக் கொண்டிருந்தனர். நான் சாயா காலி செய்து, பிஸ்கெட்டை அப்படியே திணித்துக் கொள்வோமா இல்லை உடைத்து நாசூக்காய் சாப்பிடுவோமா, உடைத்தால் சத்தம் வருமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது, விளக்குகள் அணைக்கப்பட்டன. டக்கென்று வாய்க்குள் போட்டுக் கொண்டேன்.

125-வது பிறந்த நாள் கொண்டாடும் ஐ.ட்ரிபிள் ஈக்கு வாழ்த்துக்கள் சொல்வதாக டயஸில் ஒருவர் சொன்னார். கூட வந்திருந்தவன் காதைக் கடித்தேன். 'பர்த் டேவா..? அப்ப கேக் எல்லாம் எங்க..?'

ஆச்சர்யம்! நிஜமாகவே ஒரு பெரிய கேக் கொண்டு வந்து சங்கத் தலைவர் வெட்டினார். எஞ்சினியர் கும்பல்னா இப்படி தான் திங்க் பண்ணுவாங்களோ..? 'ஹேப்பி பர்த் டே டு யூ..' பாடாதது தான் பாக்கி.

பிறகு பிசிறு பிசிறாக கொண்டு வந்து காட்டினார்கள். கொஞ்சம் சுரண்டி எடுத்துக் கொண்டோம்.

முதல் செஷன் துவங்கியது. கேரள மாநில மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் டா.ஜி.பவித்ரன் பேசத் தொடங்கினார். பி.பி.டி. ஓபன் பண்ணும் போதே, எப்போதும் செய்வது போல் எத்தனை ஸ்லைடுகள் என்பதை பார்த்து வைத்துக் கொண்டேன். அப்போது தான் மெண்டலைத் தயார் செய்து கொள்ள முடியும். குமுதம் ஸ்பெஷல் போல் 16 பக்கங்கள் மட்டுமே! அவர் எடுத்துக் கொண்ட கருத்து எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்கின் நேற்று இன்று நாளை! ஆதியில் இருந்து டெஸ்லா, ஓமில் ஆரம்பித்து, இன்றைய க்ரிட் வழி பாயும் மின்சாரம், ஹைட்ரோ, காற்றாலை, நியூக்ளியர், நிலக்கரி என்றெல்லாம் நிறைய சொன்னார். முக்கால்வாசி விக்கியில் இருந்து அப்படியே காபி, பேஸ்ட். அட, சைட்டேஷன் கூட ரிமூவவில்லை. அவர் சொன்ன ஒன்று நன்றாக இருந்தது. In electrical we transfer the power,while in electronics we transfer the information.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் கல்லூரியள் போல் இருந்தாள். பொட்டு இல்லை. கேரளக் கூந்தல் விரிப்பு. மென் கறுப்பு புடவை சுற்றியிருந்தாள். மேட்சாய் ரவிக்கை. பார்டரில் மஞ்சள் கண்ணாடிப் பொட்டுகள். சின்ன நெக்லஸ். கண்ணாடி போட்டிருந்தாள். மெதுவாகப் பேச வேண்டுமே என்று கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போல் பேசினாள். சில இடங்களில் தடுமாறினாலும் அதுவும் அழகாகவே இருந்தது.

அடுத்ததாக திருவனந்தபுரம் CDACன் செயல் இயக்குநரான ராஜன்.T.ஜோசஃப் க்ளாஸ் எடுத்தார். இவர் பேசியது எலெக்ட்ரானிக்ஸின் நேற்று, இன்று, நாளை. நிறைய விஞ்ஞானிகள், அவர்களது கண்டுபிடிப்புகள், ட்ரான்சிஸ்டரில் இருந்து ஐ.ஸி. வரை வந்து மைக்ரோப்ராசஸர் தாண்டி மூர்ஸ் விதி என்று நிறைய பேசினார். ஸ்லைடுகளில் விஞ்ஞானிகளைப் பற்றி கூறும் போது வெறும் அவர்கள் கண்டுபிடித்த/உருவாக்கியதைப் பற்றி மட்டும் பேசாமல், அவர்களது சொந்த வாழ்க்கையையும் எழுதி இருந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. உதா : கிரகாம்பெல்லின் அம்மா, மனைவி இருவருக்கும் காது கேட்காது. இவர் பாதி கிணறு தாண்டியிருக்கும் போதே, ஹாலின் பின் பகுதியில் பாத்திரங்கள் இழுத்துச் செல்லும் சத்தங்கள், அடுக்கப்படும் ஒலிகள், கரண்டிகள் கலகலக்கும் 'டிலீங்...டிலீங்', ஸ்பூன்கள் கொட்டப்படும் 'கலங்..கலங்' எல்லாம் கேட்டு பாதி தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்பி விட்டு சுறுசுறுப்பாக்கியது.

முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, InAPP ப்ரெஸிடெண்ட்டான சதீஷ் பாபு கம்ப்யூட்டிங்கின் நே.இ.நா.,வை அவசர அவசரமாகத் தள்ள வேண்டியாயிற்று. ஆனாலும் நன்றாகவே இருந்தது. கி.மு.1500-ல் ஆர்யபட்டா காலத்தில் துவங்கி டைம்லைனில், போன வருஷம் கூகுள் ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் சவால் வைத்தது வரை இழுத்து வந்தார். பின் இன்று கம்ப்யூட்டிங் நிலைமை என்ன என்பதைப் பற்றியும், எதிர்காலத்தில் ரோபோ, நானோ, பயோடெக்கில் வரப்போகின்ற ஆச்சரியங்களைப் பற்றி சொன்னார்.

நன்றியுரை சொல்லப்பட்ட பின் எல்லோரும் வரிசை கட்டி நின்றோம்; தின்றோம்.

ஐந்தாறு சிக்கன் பீஸ்கள், நான்கு அப்பளங்கள், ரெண்டு முறை குஸ்கா, நான்கே நான்கு சப்பாத்திகள் மட்டும் தான் சாப்பிட்டேன். சூடாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, ரெண்டே ரெண்டு தடவை பழங்களில் போட்ட கட்டி ஐஸ் க்ரீம்கள் எடுத்துக் கொண்டதில், பற்களுக்கு எதுவும் டேமேஜ் இருக்காதே..?

சில செல் பளிச்கள் :













(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் வ.குமாரா..?)




***

மேலும் தெரிந்து கொள்ள :

http://en.wikipedia.org/wiki/IEEE

http://www.ieee.org/portal/site

http://www.ieee125.org/

http://ewh.ieee.org/r10/kerala/

Sunday, April 26, 2009

பள்ளிகொண்டபுரம்,தமிழ்ச்சங்கம்,நீலபத்மம்,தலைமுறைகள்.

ன்று எழுபத்தோராவது பிறந்ததினம் காணும் தமிழ் எழுத்தாளரான திரு.நீல.பத்மநாபன் அவர்கள் தமது அறக்கட்டளை மூலமாக வருடம் தோறும் கொடுக்கின்ற சிறந்த கவிதைக்கான நீலபத்மம் மற்றும் சிறந்த சிறுகதைக்கான தலைமுறைகள் விருதுகள் கொடுக்கும் விழா, இன்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் பி.ஆர்.எஸ். அரங்கில் மாலை 5.30-ல் இருந்து 8.30 வரை நடைபெற்றது.

இந்த முறை தனியாகப் போகக் கூடாது என்று தீர்மானித்து, சுந்தரையும் கூப்பிட, தனது அலுவலக மற்றும் தனி வேலை இறுக்கங்கள் இடையிலும் இன்று மாலை 4.30க்கு செல் செய்து, 'போகலாமா' என்று கேட்டார். நான் அப்போது தான் குளித்து விட்டு, எத்துணி குறைவான அழுக்கோடு இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன்.

அவரை நேரடியாக கிள்ளிப்பாலம் நிறுத்தத்திற்கு வரச் சொல்லி விட்டு, நான் தம்பானூர் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். வழியில் நேரம் வீணாகப் போகின்றதே என்று, கால்வாசியில் தொங்கலில் விட்டிருந்த, 'சாயத்திரை'யை (சுப்ரபாரதிமணியன்) விரித்தேன். ஐந்தாம் அத்தியாயத்திற்கு மேல் படிக்க முடியாமல் திணறி, மூடி வைத்து விட்டு, ரோட்டில் நிற்கும் மரங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

கண்டிப்பாக அது நாவலின் குறையாக இருக்க முடியாது. பின்னட்டையில், 'கையெழுத்துப் பிரதியிலேயே திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் பரிசினைப் பெற்றுள்ளது' என்று சொல்கிறார்கள். எனது அப்போதைய மனநிலை நாவலோடு ரெசனன்ஸில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீல.பத்மனாபன் அவர்களின் 'பள்ளிகொண்டபுரம்' நாவலையும் முதலில் படிக்கும் போது, ஆரம்பத்திலேயே உற்சாகம் சரிந்து மூடி வைத்து விட்டு, பின் சில மாதங்கள் கழித்து இரண்டு மணியில் முடித்து, அவரிடமும் சொல்லி பாராட்டினேன்.

தம்பானூர் போய், பத்திரிக்கைகள் வாங்கி விட்டு, தோசை, சப்பாத்தி முடித்து, ஆட்டோவில் சங்கம் சொல்லிச் செல்ல, வழியில் சுந்தர் மசாலா கடலை வாங்கிக் கொண்டிருந்தார். அங்கேயே கையும் கடலையுமாய் அவரை மடக்கி, ஆட்டோவிற்குள் திணித்து, அவர் ரெண்டு ஸ்பூன் சாப்பிடுவதற்குள் சங்கம் வந்து விட, அவசரமாக இறங்கியவுடன் கீழே கொட்டிவிட்டார்.

கூர்மையாக மாலை 5.30க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லி இருந்தபடியால், 5.40க்கு அரங்கில் நுழைந்தால், இசை விருந்து நடந்து கொண்டிருந்தது. டாக்டர் வேலாயுதன் வாய்ப்பாட்டில் மிருதங்கம், வயலின் குழுவுடன் பாடிக் கொண்டிருந்தார். உண்மையான மருத்துவரான இவர், வலிமையான குரலில் தியாகராஜர் கீர்த்தனைகள், 'பாட்டும் நானே பாவமும் நானே', கெளரி மனோகரி ராகம், காம்போதி ராகங்கள் விரிவு செய்தல் என்று அசத்தினார். அவ்வப்போது குரல் விரிசல் விட, ஈரமாய் குடித்தார். டாக்டரிடம் கேட்க வேண்டும், அது என்ன?

6.30க்கு இசை விருந்து மங்களம் (நாளென் செய்யும்?கோளென் செய்யும்?) பாடி முடித்தார். முடிந்ததும் எல்லோரும் சென்று பாராட்டினார்கள். 'கடவுள் எனக்குத் தர வேண்டும் ஆயுஸ்; நான் தர வேண்டும் வாய்ஸ்; நீங்கள் தர வேண்டும் எனக்கு சான்ஸ்;' என்றெல்லாம் டி.ஆரினார்.

பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. எல்லோரும் எழுந்து நின்று 'செயல் மறந்து வாழ்த்தும்' போது, ஒரு குட்டிப் பையன் குறுக்கே ஓடினான். சங்கத்தலைவரான கா.பாலசுப்ரமனியன் வரவேற்புரை நிகழ்த்தி, நெல்லை தூய சவரியார் கல்லூரி தமிழியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர்.சிவசுப்ரமணியம் விருதுகள் பெற்ற்வர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 2008-ம் ஆண்டிற்கான நீலபத்மம் விருது திருமதி.சூரியகுமாரி இராதாகிருஷ்ணன் மற்றும் தலைமுறைகள் விருது திரு.மு.இரவீந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

சிவசு அவர்கள் பதம்னாபன் அவர்களைப் பற்றியும், பொதுவாகத் தற்போதைய தமிழ் நிலவரம், கலவரங்கள் (ஏழைகள் நண்பன்; உங்கள் தொண்டன்; என் சொத்து வெறும் பத்து கோடி தான், எனக்கே ஓட்டு!), இலங்கை கவலைகள் என்று பேசினார். அவர் லயன்ஸ் ஷேர் எடுத்துக் கொள்ள, பிற்பாடு வந்தவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. பள்ளிகொண்டபுரம் பற்றியும், புதிய சிறுகதைத் தொகுதியான 'பிறவிப்பெருங்கடல்' பற்றியும் தனது கருத்துக்களைச் சொன்னார்.

பிரபலமான மலையாள எழுத்தாளர் ஜி.என்.பணிக்கர், பதமநாபன் அவர்களின் மலையாள நாவலான 'குருஷேத்ரம்' மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலான 'Birds in the Cage' (தமிழில் கூண்டினுள் பக்ஷிகள்) பற்றி பேசிவிட்டு, வாழ்த்தி, தமிழன் நிலை மட்டும் அல்ல, மலையாளத்தான் நிலையும் கூட அதே கேவலமானது தான் என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். மேடையில் அவ்வப்போது கண்கள் செருகினாலும், பேசும் போது சிரித்தவாறே பேசினார். இவர் என்ன எழுதி இருக்கிறார் என்று தேடிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார், மல்லு சூப்பர் ஸ்டார் சாரு!

காலச்சுவட்டின் க்ளாஸிக் வரிசையில் பள்ளிகொண்டபுரம், அம்ருதா வெளியீடான திலகவதி தொகுத்த பத்து சிறுகதைகள் கொண்ட 'முத்துக்கள் பத்து', புதிய சிறுகதைத் தொகுப்பான 'பிறவிப்பெருங்கடல்', ஆகியவற்றை பேராசிரியர் சிவசு வெளியிட, சாகிதய அகாடமி வெளியீடான 'Neela Padmanabhan - A Reader', Birds in the Cage மற்றும் குருஷேத்ரம் (Malayalam) ஆகியவற்றை பணிக்கர் வெளியிட்டார்.

முதல் பிரதிகளைச் சங்கத் தலைவர் பெற்றுக் கொண்டார். வெளியிடுவது என்றால் இங்கே, அந்நூல்களை சங்க நூலகத்தில் சேர்க்கச் செய்தல் என்று பொருள் படும்.

கவிதை விருது நடுவர் முனைவர் ராஜேந்திரன் மற்றும் கதை விருது நடுவர் முனைவர் சரிகா தேவி தாம் தேர்ந்தெடுத்த காரணத்தை விளக்கினார்கள். ராஜேந்திரன் கடல் தாண்டி இருக்கும் தலைவனைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு ஓர் உணர்ச்சிக் கவிதை வாசித்து விட, எல்லோரையும் எழுந்து நின்று கைதட்டச் சொன்னார்கள். செய்தோம். விருது பெற்ற சூரியகுமாரி மற்றும் இரவீந்திரனும் இரண்டு நிமிடங்கள் பேசி நன்றி சொன்னார்கள். பேராசிரியர் பாலசுப்ரமணியம் (இவர் வேறு பா.), பத்மனாபன் அவர்கள் சிபாரிசில் சாகித்ய அகாடமி சார்பில் கவிஞர் கண்ணதாசனின் மோனோகிராஃப் எழுத முடிந்து, முதல் பதிப்பு நெருப்பாய் விற்றுத்தீர்ந்து, அடுத்த பதிப்பிற்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்லி விழா நாயகருக்கு நன்றி கூறி, இறங்கினார்.

நன்றியுரை சொல்ல செயலாளர் மு.முத்துராமன் வந்து, அவர் பங்கிற்கு ஒரு கவிதையை எடுத்துப் போட்டார். அவர் நன்றி என்று சொல்வதற்குள், இன்னோர் அம்மா (பெயர் தெரியவில்லை!), மைக்கைக் கைப்பற்றி தானும் ஒரு கவிதையைச் சோகமாய்ச் சொல்லி விட்டு, நகர்ந்து விட, செயலாளர் உஷாராகி இனி வேறு யாரும் கவிதை என்று முழங்கக் கூடாது என்று அடுத்த செயற்குழுவில் தீர்மானம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டே நன்றி சொல்லி விட, தலைவர், 'கூட்டம் முடிந்தது' என்று சொல்வதற்குள் கலைந்தோம்.

*தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் துவங்கிய கூட்டம், ஜனகனமன இல்லாமல் முடிந்தது.

*டீ எனக்கு கிடைத்தது. ஸ்நாக்ஸ் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

* சிவசு அவர்கள் பேசி முடித்தவுடனே, சுந்தர் எஸ்கேப் ஆனார்.

* நல்ல கூட்டம். நிறைய பேர் குடும்பத்துடன் வந்திருக்க, சின்னப் பசங்கள், பெண்கள் அங்கே இங்கே ரேண்டமாய் குதித்து விளையாட ஏதோ கல்யாணத்திற்கு வந்தாற் போல் இருந்தது. பந்தி எங்கே என்று கேட்காத குறை!

* யோசித்துப் பார்த்தால், எல்லோர்க்கும் கவிதை எழுதும் இச்சை இருக்கின்றது என்பது தெரிந்தது. இலங்கை கொடுமைகள் கிடைத்திரா விட்டால், உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தைப் பற்றியும் இன்று கொதித்து முழங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பிரபாகரன் வாழ்க என்றும், நாங்கள் இருக்கின்றோம் என்று லாங் சைஸ் நோட் பேப்பர் இரண்டு பக்கத்திற்கு உணர்ச்சியாய்க் கவிதை ஒன்று எழுதி வந்து கிடைத்த மைக்கில் முழங்கி விட்டுப் போகும் போது, 'ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு பெர்த் கன்ஃபார்ம் ஆகியிருக்குமா?' என்ற கவலையில் போவது, எந்த வகையில், ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர உதவும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது. நாம் செய்ய வேண்டியது, வேறு வகைப் பணிகள். மற்றபடி அறைக்குள் கவிதை படித்துக் கொண்டிருப்பதால், விளைவில்லை என்பது என் எண்ணம்.

* சென்ற வருடம் ஒரே ஒரு முறை மட்டும், கவியரங்கு ஒன்றுக்கு கலந்து விட்டு, 'நிலவொளி நிழல்' கவிதை கொடுத்தேன். காட்டில் பெய்த மழையாய்க் கவனிப்பாரற்று போய் விட்டது. :(

* நன்றியுரை சொல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே வெள்ளை நிறத்தொரு பூனை, மீட்டிங் கேட்டுக் கொண்டிருந்தது, சுவாரஸ்யமாக இருந்தது. உளவுத்துறை பூனைப்படையில் இருந்து ஆள் அனுப்பி இருப்பார்களோ என்றோர் எண்ணம் வந்தது.

* சில செல் நிழல்கள் :