Saturday, May 17, 2008

பொன்னாபரணம்.



யர்பாடி அமைதியாக இருந்தது.

மேற்றிசையில் திரண்டிருக்கும் கரும்முகில்கள், மழையைப் பொழிவதற்குத் தயாராக இருக்கின்றன. சிறிசிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மலரின் மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர்களின் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற நீர்க்குளம். தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருக்கின்றன மேகங்கள்.

இணை இணையாக, பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், ஜோடி நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் இடையே அரிசித் துகள்களைத் தெறித்தது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரியத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு அண்ட சராசரமெங்கும் கிடுகிடுங்க, கிளை கிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கிறது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த, பெரிய மரங்களின் பூக்கள் படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்கின. பின்னே என்ன செய்ய முடியும் அவற்றால்? அமைதியாக வீசிக் கொண்டிருந்த தென்றலும் அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வந்தால், பூக்களும் அந்தத் திக்கைத் திரும்பித் தான் பார்க்க வேண்டும் அல்லவா?

பொன்னூஞ்சலின் பூங்கயிற்றின் மேனியெங்கும் சின்னச் சின்னதாகப் பூக்கள் தவழ்ந்திருந்தன. வெள்ளை நிறம், சிவந்த நிறம், மஞ்சள் நிறம் என்று வானவில்லின் வர்ணங்களை பெய்கின்ற மழை நீர் கரைத்து தெறித்தால் எவ்வாறு சிதறியிருக்குமோ, அவ்வாறு பலப்பல வர்ணங்களால் பூக்கள் விரிந்திருந்தன. கூடவே பச்சைப் பசிய இலைகள்.

இலைகளுக்கெல்லாம் ஒரு வருத்தம் இருந்து வந்தது. 'வண்ண வண்ணமாக மலர்களைப் படைத்து, அவற்றை மட்டுமே வண்டினங்களைச் சுற்றிவரச் செய்கிறானே! நமக்கு மட்டும் ஏன் ஒரே நிறமாக பச்சை கொடுத்தான்?' என்று.

வெண்பஞ்சின் இழைகளை எல்லாம் எடுத்து, தொகுத்து தம் மேனி மேலெங்கும் வைத்து, தைத்துக் கொண்ட அன்னங்கள் , தமது சிவந்த மூக்குகளால் குளத்தின் குளிர் நீரைத் துழாவின. அவை எதைத் தேடியிருக்கும்? தம் நாசிகளுக்கு நல்ல மோதிரமாக இருக்குமோ? அன்றி, தம் இணைந்த விரல்களுக்கு நல்ல வளையாக இருக்குமோ?

சின்ன சின்ன உயரங்களில் அலைகள் எழுப்பும் கரைகள் வரிசையாக வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. காற்றின் மென் தீண்டலுக்கும் தாங்காது நாணி, நழுவி, அவ்விடம் விட்டு நகர அலையலையாய் சென்று சாந்தமடைகின்றன நீர்ச் சுழல்கள்.

வானெங்கும் நீல நிறத் தூறல்கள். அது எவ்வாறு இருந்ததெனில், கடலின் நீரெல்லாம் ஆவியாகி வானை அடைத்துக் கொண்டார்ப் போல் இருந்தது. சோலையின் பாதையில் பூத்திருந்த பலவர்ணப் பூக்களைப் பார்த்து வர, பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் கண்ணனையும் , இராதையையும் காண்கிறோம்.

வானின் நீல நிறம், குளத்தின் நீல நிறம் இவற்றோடு கலந்த காற்றின் நீல நிறம் கலந்த அந்த அழகன் இருக்கிறான். அந்தபடியால், அவனைக் காண முடிந்திருக்கவில்லை.

மிக அதிகாலையில் வானம் நீல நிறம் உடைத்தாய் இருக்கிறது. பின் மெல்ல, மெல்ல கதிரவன் தன் பொன் கிரணங்களால், நீலத்தைக் களைந்து வெளி வருகிறான். அப்போது வானிலிருந்து கதிர் வருகிறதா, கதிர் வானைத் தாண்டி வருகின்றதா என்ற ஐயம் வருகிறது அல்லவா? அஃதன்ன, இந்த வண்ணன் அணிந்திருக்கும் மஞ்சள் ஆடை அவனது நீலமேனியைப் போர்த்தியிருக்கும் பேரெழிலைக் காண குழப்பம் வருகிறது.

பொன்னாபரணங்களால் தன்னை மேலும் அழகுபடுத்திக் கொள்ளும் அவசியமற்ற அந்த அழகன், கொஞ்சமே கொஞ்சம் நகைகளை அணிந்துள்ளான். அவை மட்டுமா?

சிவந்த கோமேதகங்களும், மின்னுகின்ற வளைகளும், ஜ்வலிக்கின்ற முத்து நகைகளும் தத்தம் வாழ்நாளின் பயனைப் பெறும் வகையில் அவன் மேனியில் அலைபுரள்கின்றன. மார்பில் அணிந்த மணியாரங்களும், கரங்களில் குலுங்கிடும் பொன் வளைகளும், பாதங்களில் புரளும் வெள்ளிக் கொலுசுகளும், தோள்களில் மினுக்கிடும் தொல் அழகிய கணங்குகளும், விரல்களைச் சுற்றி விலையாடும் மோதிரங்களும்... அம்மம்ம... அந்த பேரெழிலனின் எழிலுக்கு முன் நிலவின் முன் மண்டியிட்ட விண்மீன்களாயின எனலாம்.

கண்ணனைக் கொள்ள முடியாத பொன்னிறம் தன் ஆசையை முழுதும் இராதையைக் கொண்டு நிரைவேற்றிக் கொண்டது. பொன் எனவா, மஞ்சள் எனவா இல்லை மாலையில் மறைகையில் கதிர் மிச்சம் வைத்து விட்டுப் போகும் விண்ணொளி எனவா, என்னவென்று சொல்வது இராதையின் அழகை?

இரவின் சாரமெல்லாம் குவிந்து, காற்றில் அலைபாய்கின்ற கருங்கூந்தல், அதில் மின்னல் கூற்றுகள் என மின்னும் மல்லிகைச் சரங்கள், கண்ணனது நீல நிறத்திலேயே குழைந்த நீலப் பட்டாடையை அணிந்திருந்தாள். அவள் இடையை வளைத்திருந்த கண்ணனின் கரங்களோடு போட்டி இட்டது பொன் ஒட்டியாணம். பூ மாலைகள், முத்தணிகள், கருகுமணி மாலைகள் என்று அவளது அழகுக்குக் அழகு செய்தன.

இரு மலர்கள் காற்றில் ஆடுகையில் மொழியும் வார்த்தைகளை பிறர் அறிய முடியுமா? அலையும், கரையும் பேசிக் கொள்ளும் அழகையெல்லாம் யாரேனும் கூற முடியுமா? காதலின் பெரு மெளன வெளியில் பொழிகின்ற அன்பை யார் தான் சொல்ல முடியும்?

காலத்தின் பாதையில் கரையாமல், கல்லின் வார்த்தை போல் நின்று விட்ட இனிய பொழுதுகளை எண்ணி, எண்ணி இராதை பாடுகின்ற பாடல் காற்றை நிரப்பி விடுகின்றது.


படம் நன்றி :: http://deeconster.googlepages.com/KrishnaRadha.JPG/KrishnaRadha-full.jpg

மற்றுமொரு நீ!

ரவின் மென் குளிரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன், நடுக்கத்துடன். பதியன் போட்ட ரோஜாச் செடியின் புது மொட்டைப் பார்த்தபடி! மலராகுமா, முள்ளாகுமா தெரியாத பதிலைத் தருவிக்கும் கேள்வியைச் சுமந்து கொண்டு!

தன்னைச் சுற்றி ஒரு மண் வளையம் இட்டதையும் அறியாது, அதனைச் சுற்றி ஒரு மன வளையம் இருப்பதையும் தெரியாது, தென்றலின் மெல்லிய தாலாட்டிற்குத் தலையாட்டியது தாவரம்.

கோடானு கோடி கண்களுடன் ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது கருவானம். எண்ணித் தீராத துளைகள் வழியே அனுப்பிக் கொண்டே இருக்கிறது பனித் துளிகளை!

இரகசியமாய், வெகு பத்திரமாய் வைத்திருக்கச் சொல்லி, கொடுத்து வைத்திருந்த மனமெனும் பீப்பாய், ஒவ்வொரு துடித்தலுக்கும் பீச்சியடிக்கிறது அமுதக் காதலை!

இலைகளின் இருளான இடுக்குகளின் வழியே கசிந்து கொண்டிருந்த குளிர்க் காற்று, கண்களின் துணை கொண்டு கண்டு கொள்கிறது, என்னை!

ரோஜாக்கள் அறியாது முள்ளின் வலியை!

Friday, May 16, 2008

ஆதி ஒலி நிலைக்கு...!

தாவது ஒன்றுக்காக நீ என்ன வேண்டுமானாலும் கொடுப்பாயா என்று கேட்டால், 'அம்மா செய்கின்ற பச்சைப்பயிறு குழம்பு மற்றும் பருப்பு சாதத்துக்கும்' அப்புறம் இந்தப் பாடலுக்காக எதையும் கொடுப்பேன் என்பேன்.

என்ன ஓர் அற்புதமான இசை! இது ஒன்றிற்காகவே ராஜா பிறந்துள்ளார் எனலாம். பாலுவும், ஜானகி அவர்களும் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கிட்ட அழைத்துச் செல்கிறார்கள்.

அடிப்படையில் அனைவரும் ஒலி மட்டுமே! எல்லாம், எல்லோரும் இறைவனின் எண்ண வடிவங்களே! எனவே இறுகிய அலை வடிவம் தான் நான், நீங்கள், பப்லு, பூனைக்குட்டி எல்லாம் என்கிறார் பரமஹன்ஸ யோகானந்தா.

இப்பாடலைக் கேட்கையில் எல்லாம் ஆதி நாளில் ஒலி அலைகளாய் உணர்ந்த நிமிடங்களை துளி அளவிற்கு வாழச் செய்கிறது, என்னை!

Sunday, May 11, 2008

அழகிய முரண்.

கேட்க
காதுகளற்ற
வனத்தில்,
விழும் மரம்
ஏற்படுத்துமா
சப்தம்?

இது புதுக்கவிதை அல்ல. 1910-லேயே எழுப்பப்பட்ட ஒரு கேள்வி.

யாருமே இல்லாத காட்டில் ஒரு மரம் விழுந்தால், அது சப்தம் எழுப்பும் என்பதை எப்படி உறுதி கூறுவது? ஏனென்றால் அதை ருசுப்படுத்த யாரும் அங்கு இல்லையே? விழும் மரம் சப்தம் ஏற்படுத்தியதா, இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாது என்கிறார்கள்.

இது நமக்குள் சில கேள்விகளை ஏற்படுத்துகிறது.

* ஒரு கேம், ஒரு வேர்டு எடிட்டர் என்று இரண்டு அப்ளிகேஷன்களைத் திறந்து வைத்துள்ளீர். டேமேஜர் வரும் வரை ஆர்வமாக கேம் விளையாடிக் கொண்டிருக்கிறீர். அவர் அருகில் வருவதற்கான சமிக்ஞைகள் வந்த்தும், கேமை பாஸ் செய்யாமல் வேர்டு எடிட்டருக்கு வந்து ஸ்பெக் பார்க்கிறீர்கள். அவர் தொலை சென்றதும், மீண்டும் கேமை தொடர்கிறீர்கள். அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கேமில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படி உறுதி செய்யலாம்?

*மரம் விழுவதில் சப்தம் எழுப்புவதைக் கேட்க ஆள் இல்லாததால், அது சப்தம் எழுப்பாது எனக் கூறலாமா? காமன் சென்ஸ் படி ஆள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்நிகழ்வு சப்தம் எழுப்பும் என்பதை அறிவோம். எனில், கடவுளைக் கண்டவர் என்று எவரும் இல்லாது போய்விட்டால், கடவுளைக் காணல் என்ற நிகழ்வு இல்லை என்றாகி விடுமா? என்ற கேள்வி வருகிறது.

இது போன்ற சுவாரஸ்யமான ரிட்டில்ஸ் உள்ளன. பாருங்களேன்.

நாம் அந்தக் குடும்பத்திலேயே வேறு உறுப்பினரான முரண்பாடுகளைக் காண்போமா? எனக்குப் பிடித்த(அல்லது புரிந்த) சில முரண்கள் இங்கு..!

*இது ஒரு தவறான வாக்கியம்.

மேற்சொன்ன வாக்கியம் ஓர் எளிய முரண். நீங்கள் 'ஆம்' என்று ஒத்துக் கொண்டால், வாக்கியம் சரி என்று ஆகிறது. அப்போது வாக்கியம் தவறு என்று ஆகிப்போகும். அப்போது வாக்கியத்தின் பொருள் சரி என்று ஆகும். இப்படியே ஒரு சுழலில் மாட்டிக் கொள்வோம்.

இதே போன்ற மற்றொன்று, 'இந்த கேள்விக்கான பதில் இல்லை தானே?'

* எல்லா குதிரைகளும் ஒரே நிறம்.

இல்லை தான். ஆனால் கணிதப் பூர்வமாக பார்க்கலாம். ஒரு ஐந்து குதிரைகளை எடுத்துக் கொள்வோம். முதலில் இந்த ஐந்து குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்தலாம். அதற்கு என்ன செய்யலாம்? இந்த செட்டில் இருந்து நான்கு குதிரைகள் அடங்கிய இரண்டு சப்ஸெட்டுக்ளை உருவாக்குவோம். அதாவது 1,2,3,4 என்ற ஒரு சப்செட், 2,3,4,5 அடங்கிய ஒரு சப்செட். இப்போது இந்த இரண்டு சப்செட்ட்களிலும் இருக்கும் 4 குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்தினால், ஒரிஜினல் செட்டில் இருக்கும் ஐந்து குதிரைகளும் ஒரே நிரம் என்று கூறி விடலாம் அல்லவா?

சரி எப்படி ஒரு சப்செட்டில் உள்ள நான்கு குதிரைகளும் ஒரே நிறம் என்று உறுதிப்படுத்துவது?

அதே லாஜிக்.

நான்கு குதிரைகள் அடங்கிய ஒரு சப்செட்டை இரண்டு மூன்று குதிரைகள் அடங்கிய சப்செட்டுகளாகப் பிரிக்கலாம் அல்லவா? 1,2,3. 2,3,4.

இப்படியே பிரித்துக் கொண்டே போனால், இறுதியாக, ஒரே ஒரு குதிரை மட்டுமே உள்ள சப்செட்டுகளாக கிடைக்கும். சந்தேகமே இல்லை. அந்த ஒரு குதிரை மட்டுமே இருக்கும் சப் செட்டில் இருக்கும் எல்லா குதிரைகளும் (அந்த ஒரு குதிரை மட்டும் தான்!) ஒரே நிறமாகத் தான் இருக்க வேண்டும் அல்லவா?

மீண்டும் இப்படியே மேல் நோக்கிப் போனால், உலகத்தில் உள்ள எல்லா குதிரைகளும் ஒரே நிறம் என்றாகி விடும்.

எந்த இடத்தில் நாம் தவறு செய்கிறோம்?

இரண்டு குதிரைகள் மட்டுமே உள்ள செட்டை இரண்டு சப்செட்டாக பிரிக்கையில், முதல் சப்செட்டில் இருக்கும் குதிரையின் நிறமும், இரண்டாம் சப்செட்டில் இருக்கும் குதிரையின் நிறமும் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அந்த பாராமீட்டரில் கவிழ்ந்து விடுகின்றது லாஜிக்.

எல்லா பெண்களும் அழகு தான்.

இந்தக் கூற்றை அனேகமாக அனைவரும் ஒப்புக் கொள்வோம். எனினும் மேற்சொன்ன Horse Paradox -ஐ இதற்கு முயற்சித்துப் பாருங்களேன்.

*ஸ்டார் விஜய் டி.வி.யி.ல் விஜய் ஆதிராஜ் 'திறந்திடு ஸீஸேம்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் கலந்து கொள்ள வருகின்றவர்களை அவர் உற்சாகப்படுத்தும் விதமும், அதில் பங்கேற்போரின் நொடி நேர முக உணர்வு மாறுதல்களும் நிகழ்ச்சியை இரசிக்கவைக்கின்றன.

மூன்று கதவுகளில், ஒன்று திறக்கப்படும். மற்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து, பீங்கான் பாத்திரங்களோ, காரோ, அழகான பெண்ணின் கைகளால் கிடைக்கப் பெறலாம். எப்படி இந்த கேமில் வெல்வது?

Monty Hall Paradox
இதைப் பற்றி தான் கூறுகிறது.

இந்தப் போட்டியில் போட்டியாளர் 'ஸ்விட்ச்' ஆப்ஷன் தேர்வு செய்வதே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள். காண்க படம்.



கண்ணீரும், கம்பலையுமாக சீரியல்கள் சின்னத்திரைத் திரைகளை நிறைத்திருக்க, இது போன்ற சிந்திக்கத்தக்க நிகழ்ச்சிகள் கொஞ்சம் உருப்பட வைக்கின்றன எனலாம் , அமெரிக்கன் கேம் ஷோவான Lets Make a Deal என்ற நிகழ்ச்சியின் காப்பி தான் இது என்றாலும்..!

*ராசையா என்று நினைக்கிறேன். சுந்தர்ராஜனும், வடிவேலுவும் கோழிக்கடைக்குப் போய்,வாங்கி வந்து கணக்கு பார்க்கையில் ஒரு ரூபாய் இடிக்கும். எங்கே போனது அந்த ஒரு ரூபாய்?

Missing Dollar Paradox அதைப் பற்றித் தான் சொல்கிறது.

இது போன்ற முரண்களைப் பார்த்து, கொஞ்சமே கொஞ்சம் நமது மூளைக்கும் வேலை கொடுத்தால் என்ன?

Liast of Paradoxes.

நமது கவிஞர்கள் இது போன்ற வார்த்தை முரண்களை வைத்து விளையாடி இருக்கின்றார்கள். குறிப்பாக வைரமுத்து அவர்கள்.

காதல் பிசாசும், அழகிய அசுராவும், அழகான ராட்சசனும் நமது முரண்கள்.