
மென்மையான குளிர் ஒன்று தன் பட்டுச் சிறகுகளை விரித்து பறக்கிறது. சின்னச் சின்ன குரல்களை அடைகாத்து வைத்திருக்கும் நதிக்கரையோரம், வண்ண வண்ணப் பூக்களை வளர்த்து வைத்து, தலையசைத்துச் சிரிக்கும் மலர்த் தோப்பு, பொட்டுத் துளி ஒளி சிமிட்டும் கோயில் விளக்குத் தூண்... எல்லாப் பக்கமும் நகர்ந்து செல்கிறது.
மயில் இறகே, குயில் ஒலியே, மழைக் குளுமையே, நிழல் அருமையே என்று சதா சர்வகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் ஒரு காதலனின் மூடிய இமைகளின் வழியே ஊடுறுவுகிறது. துடித்துக் கொண்டிருக்கும் சிவந்த இதயத்தின் அருகில் சில நொடிகள் இருந்து கேட்கிறது. அவளது பெயரையே ஆயிரம் ஆயிரம் ஜென்மங்களாய் உச்சரிக்கும் ஓர் உயிரின் பெருங்காதல் அவஸ்தையை அள்ளிக் கொள்கிறது.
இவனது நிறைய நிறைய பிறவிகளின் அமுதம் வழியும் அன்பை கொள்ள வேண்டிய அவளைத் தேடிப் பறக்கின்றது.
கோடானு கோடி அண்டம் பேரண்டம் முழுதும் நிறைந்து வழிந்து ததும்புகின்ற விண்மீன்கள். விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி ஒளிப் பிரவாகத்தைத் துளித் துளியாய்ச் செலுத்துகின்றன. கரிய இருளோடை வியாபித்திருக்கும் பிரபஞ்சத்தின் அகண்ட வானவெளியெங்கும் பூத்திருக்கின்றது குளிர்.
அவள் பனிப்பாறைகளின் படுக்கைகளில் புரள்கிறாள். ஆழ ஆழிக் கரைசலின் உச்சம் போன்ற கரும்பாம்புகள் திரளும் கூந்தலின் நுனிகளில் பனித்துகள்கள் சொட்டுகின்றன. மலர்கள் பூத்திருக்கும் தோல் துளைகள் வழியாக வாசனை நிறைந்த ஒரு பாடல் வெளியேறும் போது, மெளனத்தின் மிருதுவான போர்வையைப் போர்த்திக் கொள்கிறாள். யுகம் யுகமாய் நிரம்பி அழிந்து பின் துளிர்க்கும் இரகசியம், அவளது விழிகளின் வெம்மையால் மட்டுமே வாழ்கின்றன. அவளது விரல்கள் நட்சத்திரங்களைத் தடவும் போது, நகங்களில் இருந்து நழுவுகின்ற ஏதோ ஒன்று சந்தியில் அடிவானெங்கும் விரைகின்ற ஆகாயச் சிவப்பின் நிறப் பூச்சை முலாமிடுகின்றன.
ஊழிக்காற்று அவள் மீது உரசிப் போகின்ற போது, ஆடைகள் என்னும் அநாவசிய அலங்காரம் கலைந்து, காற்றோடு கரைந்து அபூர்வமான, நிஜமான பேரெழில் ப்ரசன்னமாகின்றது. பொன் தோல் ஒளியால் ஜொலிக்கட்டும். காது மடல்களில் பூத்திருக்கும் சின்னஞ்சிறு முடிகள் சிலிர்க்கட்டும். பூக்களின் வரைதலின் பொருட்டு மட்டும் நொடிக்கு நொடி புதிதாய் பிறப்பெடுக்கும் அவளது பாத கணுக்களின் மேல் அகங்காரத்தோடு, ஆணவத்தோடு, இறுக்கமாய், கொடிகள் பின்னிக் கிடக்கட்டும்.
திரட்சியான பளிங்கு உருகி ஊற்றி கனமாகி, கடிது வார்த்து உயிர் தொட்டு உருவாகி, இமை பிறந்து, இதழ் திறந்து, சிவந்த தன் ஈர அதரங்களால் அவன் பெயரைக் கூறும் போது, தென்றலே அவன் இதயத்தில் இருந்து உருவிக் கொண்டு வந்த மெய்க் காதலை மொழி!
இருட்டின் இடை மேல் ஏறி அமர்ந்து கொண்ட இசையா? நாள் பொழுதின் நகரா நேரங்களின் நாதமா? மாலை மங்கி வரும் போதும், இரவின் மிகைக் கிரணங்கள் தன் வழி தேடி கரங்கள் வீசும் போதும், நூலெடுத்து, வானம் வரை நின்று அளக்கும் அமைதியா?
ஓ...! ஜன்னல்களின் ஸ்பரிசங்கள் மழை பெய்யும் நேரங்களிலும், மின்னல்களின் மிரட்டல்கள் விழிகள் சந்திக்கும் போதும் நிகழக் கூடும் போது, பொன்னழகே, போதாக் குழைவே, இன்னிழலே, இணைகின்ற இருமலரே என தென்றல் கூவுகின்றது.
வெண் பட்டுத் தூரிகையின் வெள்ளி நார்கள் வர்ணச் சொட்டுகளைத் தொட்டு, பொட்டிட்டு, களைத்து, கவிழும் போது, ஓர் ஓவியம் தன் உயிர்ப்பைக் கண்டு கொள்கிறது. ஜரிகை வளைத்த ஆடைகளின் எல்லைகளில் இருந்து தேனோடும் இனிமையான பாதை நோக்கி, வரிசை கட்டிப் பாய்கிறது பாட்டொலி.
மிகைப் புன்னகை, மிளிர்கின்ற புருவச் சுழிப்புகள், இமைகளின் இடைவிடாத இதழ் முத்தங்கள், சிவந்த இரத்தம் பொங்கிப் பாயும் அதரங்கள் கசிகின்ற, ஜீவனைப் பிடித்து வைத்திருக்கும் வார்த்தைகள்.
மஞ்சள் வர்ணம் முதுகில் சுமந்த புகைக் காற்று, தன் ஊஞ்சலின் உள்ளிருந்து அவன் காதலை எடுத்துக் காட்டுகிறது. ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்து எப்போதோ விசிறிய ஒரு மயிலிறகை, மறைத்து வைத்து, இன்றோடு உன் கைகளில் திணிக்க வருகின்றது. இடை கூட ஒரு பூக்கோலம் போட்ட குறு அழகாய் குவிந்திருக்க, ஆதிக் குளிரின் அத்தியாவசிய மிச்சங்கள் இடை வழி உறிஞ்சும் இரத்தப் புள்ளிகளை!
முத்தமிட்ட ஒரு நொடியில், உறைகின்ற இறகுகள் மீண்டும் இயக்கம் பெறும் மற்றொரு நொடிகளில், இயல்புகள் கலைந்து போய் பறத்தலுமாய், மிதத்தலுமாய், கால்கள் பதியாமல், கடக்கின்றான் வெகு தூரங்கள்.தொலைவில் ஓர் உயிர்த் துடிப்போடு சுடர் விடும் விளக்கிடம் கேட்க வேண்டி சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன் அவனுக்கு!
இதழ் துடிக்க, வியர்வைப் பருக்கள் கன்னத்தின் பிம்பங்களை பதிந்து காட்ட, முகத்தில் பதித்த ஒரு கணம், சூடான திரை ஒன்று மூடிக் கொண்டது நாடகத்தின் இறுதி போல்!
அவன் இன்னும் ஜெபிக்கிறான். அவள் தன் நீளப் பொற்கரங்களால் நீவிக் கொண்டே இருக்கிறாள் தன் கைகளுக்கெட்டும் பாதரசத் துளிகளை!
தென்றல் இன்னும் பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!
***
படத்தை க்ளிக்கி இன்னும் சிறப்பாக பார்க்கலாம். ப்ளாகர் GIF ஃபைலை அதன் மாயாஜாலங்களோடு காட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.
இப்படத்தை இறக்கி வெகு நாட்களாகி விட்டதால், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலை இட முடியவில்லை. யாராயினும் நன்றிகள் உரித்தாகுக..!