Saturday, December 10, 2016

நீலாம்பல் நெடுமலர்.6.

ன்பமாய் வெண்பா எழுது என்ற ஈற்றடிக்கு:

எரிகனல் எம்ப எழுந்தழல் உண்ணும்
கரியுடல் எங்கிலும் கூற்று - வரும்வரை
அன்பரே, அன்றிலை இன்றிலை அன்றிலின்
இன்பமாய் வெண்பா எழுது.

ழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு:

கூரை புதுக்கிக் குளிர்மண் குவித்திட்டு
காரைத் தரையில் களிமண் பரப்பிட்டு
ஊரை அழைத்து உவப்பின் விருந்திட்டு
மாரை நிமிர்த்தி மலர்ந்த மனையினைச்
சாரை அரவென சீறிடும் - கோரப்பல்
பாழலை பாய்ந்திறங்கிப் பாழாக்கல் போலான
ஊழலை ஒப்பலாமோ சொல்.

ன்னடம், கன்னடர் என்பதே வெறுப்பு என்றவருக்குப் பதில்:

வழியென்ன செய்யும் விடமுள் விளையின்
கழியென்ன செய்யும் களவோர் பிடிப்பின்
விழியென்ன செய்யும் விரலால் குடையின்
மொழியென்ன செய்யும் மொழிந்தார்ப் பிழைப்பின்.

கழியால் கலயத்தைத் தாக்கி உடைத்தால்
பழிப்பீரா பாலைப் பகர்.

தேன்நிறைக் கூட்டினைத் தேடியே போவோரும்
தேனீயைக் கண்டதும் தேங்கியே நிற்பரோ
ஊன்நிறை உண்டாட்டில் அல்லதை நீக்கியே
உள்ளதை உண்ணுவோர் நாம்.

தன்மொழி தின்போன் பிறமொழி தீண்டானா
என்மொழி மென்மொழி உன்மொழி - வன்மொழி
என்பானா எம்மொழி என்றாலும் எச்சுவை
என்றாலும் சொட்டிடும் கள்.

பிழைப்பிற்குக் கற்றதோ பின்வந்தோர் சொல்லை
உழைப்பிற்குக் கற்றல் கணிமென் மொழியை
களைப்பிற்கு உள்ளதோ அன்னை மொழியே
களிப்பிற்குக் கற்போம் பிற.

கற்கையில் தோன்றிடும் கன்னடம் கற்கண்டு
பொற்கரம் சூடிய பொன்வளை - பெற்றவள்
நந்தமிழ் பெற்றதனால் சிற்றன்னை ஆகிய
பந்தமோ பாகின் சுவை.