Saturday, March 08, 2008

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள். - 2.

இப் பதிவின் தொடர்ச்சி இது.

சென்ற முறை பயணம் செய்தது போல் இன்றி, இம்முறை உண்மையாகவே பேருந்து விட்டுப் பேருந்து தாவித் தான் பயணிக்க வேண்டியதாகி இருந்தது.

கழக்குட்டத்தில் இருந்து கிளம்பி, பவானியில் இருக்கும் உறவினர் வீட்டை அடைய மொத்தம் எட்டு பேருந்துகள் தேவைப்பட்டன.

கழக்குட்டம் - கொல்லம், கொல்லம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - திருச்சூர், திருச்சூர் - பாலக்காடு, பாலக்காடு - கோவை, கோவை - லட்சுமி நகர் பைபாஸ், பைபாஸ் - அந்தியூர் பிரிவு.

நல்லவேளையாக, கொல்லம் - எர்ணாகுளம் இடையில் ஆலப்புழை வரை செல்லும் பேருந்தில் மாட்டிக் கொள்ளாமல், ஸ்ட்ரெய்ட்டாகவே செல்ல முடிந்தது.

இப்பயணம் முழுதும் இரவிலேயே நடந்து முடிந்ததால், எதுவும் சிறப்பாகச் சொல்ல இல்லை. சென்ற பயணத்திலேயே, பகல் பயணத்தைக் கண்டு விட்டதால், இம்முறை இராப்பயணம்.

விரிவாக எதுவும் இம்முறை எழுத முடியவில்லை. பின்பு விளக்கமாக எழுதுகிறேன்.

இப்பண்டிகைகளின் போது, எடுத்த புகைப்படங்களை மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.

திரும்ப வரும் பயணம் பவானி - ஈரோடு, ஈரோடு - திருச்சூர், திருச்சூர் - கழக்குட்டம் என்று சுருக்கமாக முடிந்து விட்டது சற்று எளிதாக இருந்தது.














இரத்தம் பூக்கின்றது உன் இதழ்களின் ஓரம்.



சில சொற்கள் வலி தருவன என்பதை அறிவாயா? சில நிழலின் நேரத்தைக் கூட்டுமென நினைத்திருக்கிறாயா?

சில பார்வைகள் பிளந்து செல்லும் கோடரி போன்று கூர்மையானவை என்பதனை உணர்ந்தனையா? சில முத்தமிட்டதும் குருதித் துளி எட்டிப் பார்க்கச் செய்யும் ஊசி போன்றன என்பது உனக்குத் தெரியுமா?

சில குறிப்புகள் மனதிற்குள் மல்லிகை பூக்கச் செய்யும் என்பதையும், சில இரணமாக்கிச் செல்லும் என்பது இப்போது தெரிந்து கொள்!

போதை கொண்ட பொழுதுகளின் இனிமை இன்னும் பெருங்காலத்திற்கும் தொடரச் செய்யும் சில புன்னகைகள், மதியப் பொழுதின் மந்தமான உள்ளத்திற்குள் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் சில உற்சாக வார்த்தைகள் என்பதும் தேன் சொட்டும் சிரிப்புகளைக் கொண்ட உன் மாலை நேரங்கள் அறியுமா?

முதலில் குளிரென ஜில்லிப்பூட்டும் பனியைப் பொழியச் செய்யும் தொலைதூர மேகம், பின் அப்பனியை உறிந்து கொள்ள அதனையும் விட தொலை தூரத்திலிருந்து பெருங்கொடுங் கரங்களை நீட்டும் வெயில் என்பதை காலத்தின் சக்கரங்கள் காட்டும் உனக்கு!

சாலையோரங்களில் கருப்பாய்ப் பூத்திருக்கும் வேல மரங்களின் இலைகளை அசைத்துச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகளின் டீசல் புகையாய், வாரி இறைத்துச் சென்றாய் சில நினைவுகளை. அவை என் முகத்தின் மேல் இன்னும் பல வர்ணங்களை வரைந்து சென்றன.

பச்சைப் பாசிகளால் நிறைந்திருக்கும் குளத்தின் அலைகள் போல் அலைந்து கொண்டேயிருக்கும் என் மனதிற்கு ஆழ்ந்த முத்தத்தை இட்ட பின்பு, இரத்தம் பூக்கின்றது உன் இதழ்களின் ஓரம்.

சூ.. சூ.. வென விரட்டியும் விலகாத சூட்டைப் பொழியும் பகல் பொழுதில் ஒற்றைக் குடையாய் பாதையோரம் காத்திருக்கும் என்னைக் காணாது நீ நகர்ந்து செல்ல, கம்பிகளின் இடையே இழுத்துக் கட்டப்பட்டிருந்த கருந்துணி படபடவென வெடித்துக் கிழிந்த சத்தம் கேட்டும் திரும்பிப் பார்க்கவில்லையெனில், தூரப் புள்ளியெனத் தோன்றும் பேருந்தின் அடியில் சென்று சிதறட்டும் இம்மனம்...!

இதயத் தூது.



சின்னக் கீறல் சத்தம் கேட்டது.

விழித்துப் பார்த்தேன். மலைச்சரிவில் இருந்து, சறுக்கி விளையாடும் பளிங்குக் கல் போல் இதயம் வெளி வந்து கொண்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது.

'என்ன செய்கிறாய்' கேட்டேன். 'எத்தனை காலம் தான் தனிமையின் அறைகளில் அடைபட்டிருப்பது என்று தான் வெளியே வருகிறேன். இன்று ஒரு நாள் என்னை வெளியே விடு. சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்' என்றது.

'நீ வெளியே போய் விட்டால், நான் எப்படி உயிர் பிழைத்திருப்பேன்' என்று பயத்துடன் கேட்டென். சிரித்துக் கொண்டு 'இப்போது மட்டும் நீ என்னாலேயா உயிர் வாழ்கிறாய்? அந்த நினைவுகள் தானே உனக்குள் உயிர் ஊற்றுகிறது' என்றது குறும்புடன்.

'சரி.. சரி.! இப்போது எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன். எங்காவது அந்த அழகின் பெண்ணைக் கண்டால் நீ அவளைச் சென்று சேர்ந்து கொள்வாய்? பின் நான் என்ன செய்ய?'

'வருந்தாதே! உன்னைக் கேளாமல் நான் எங்கும் செல்ல மாட்டேன்' என்றது.

ஆனால் என்ன மாயம் செய்தனை? என்ன வசியம் வைத்திருந்தாய் உன் விழிகளிலும், இதழ்களிலும்?

சமர்த்தாய் என்னுடன் வந்து கொண்டிருந்த சின்ன இதயம், உன்னைக் கண்ட மாத்திரம், 'சடாரென' தாவி உன்னை அணைத்துக் கொண்டது, என் இரத்தத் துளிகளோடு!

மெல்ல சிரித்துக் கொண்டாய். ஒரு குழந்தையைப் போல் கைகளில் ஏந்திக் கொண்டு, ஆதுரமாய்க் கேட்டாய் என் இதயத்திடம்,' என்ன வேண்டுமாம் இந்த குட்டி இதயத்திற்கு?'

குற்றம் சாட்டும் பாணியில் விரல்களை என் பக்கமாய்க் காட்டிக் கூறியது இதயம்.' பின் என்ன செய்ய? இந்தப் பையனின் தொல்லை தாங்க முடியவில்லை. நாளும் பொழுதும், உனது நினைவுகளைச் சுமக்க வைக்கிறான். பகலெல்லாம் அக்கனத்தைத் தாங்கிக் களைக்கிறேன். இரவிலாவது ஓய்வெடுக்க விடுகிறானா? இல்லை. அப்போதும் கனவின் வழி என்னை உறங்க விட மாட்டேன் என்கிறான். கவிதைகள் எண்ணுகிறான். அதன் எழுத்துக்களை என் இரத்தக் குழாய்கள் வழி அனுப்பி அனுப்பி ஓய்ந்து விடுகிறேன். ஒரு ரோஜாப்பூ போல் உன்னைத் தாங்கி வைத்து என் மேல் செருகி வைக்கிறான். உன்னிடம் நியாயம் கேட்கலாம் என்று தான் கிளம்பி வந்தேன்' என்றது.

மென் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, இதயத்தின் தலையை அன்பாய்த் தடவி விட்டு, 'சரி..! இனிமேல் உன்னைத் தொல்லை செய்ய மாட்டான். உன்னை நானே வைத்துக் கொள்கிறேன். என்ன.?' என்று கூறி விட்டு என்னைப் பார்த்தாய்.

அசடு வழிந்த முகத்தைக் கொண்டு, உன்னை நெருங்கினேன்.

இதயம் பட படவெனத் துடிக்கத் தொடங்கியது.

பாய்ந்த ஒரு வில்!



கோலப் புள்ளிகளைக் கலைத்துப் போட்டு நவீன ஓவியம் என்றாய். 'ஆமாம்' என்றேன்.

வானின் மீன்கள் போல் உதிர்த்தாய், மஞ்சள் ஆடை அணிந்திருந்த இலைகளை மரத்திலிருந்து. நனைந்தேன்.

கால்கள் மாறி மாறி நடக்க ஒற்றைத் தண்டவாளம் போதும் என்றாய். 'மிகச்சரி' என்றேன்.

நான் தீண்டா இடங்களைத் தொட்டுத் தழுவும் வகையில் காற்றை அனுமதிக்கும் ஆடைகளை அணிந்து 'எப்படி' என்றாய். 'கச்சிதம்' பதிலுற்றேன்.

நதிக்கரையில் நடக்கையில் ஒற்றை இலக்கத்தில் எடுத்துப் போட்டுக் கொண்டே வந்த கற்கள் 'எத்தனை' கேட்டாய். 'உன் வயது' என்றேன். மெளனாய்.

இருண்ட காட்டுக்குள் நடக்கையில், 'இரு விரல்களை மட்டும் பிடித்துக் கொள்' என்றாய். 'எந்த இரு விரல்கள்?' என்றேன். வெட்கத்தில் சிவந்த முகக்தைக் காட்டினாய்.

கூந்தலில் சிக்கிய பூக்களை அவிழ்க்கையில், என் உதவி கேட்டாய். பூக்கள் என்னிடம் கெஞ்சின 'எடுக்காதே' என்று. எந்தப் பூவின் பேச்சைக் கேட்க நான்?

தேவதூதன் முன் மண்டியிட்டு ஜெபித்தாய். அருகில் நின்று வேர்க்காமல் விசிறி நின்றேன். 'எனக்கெதற்கு விசிறி' என்றாய். 'உனக்கு நான் விசிறி' என்றேன். ஜெபித்த கைகளை என் மேல் வைத்து ஆசிர்வதித்தாய்.

'எதற்கு இவ்வளவு செய்கிறாய்' என்று ஒரு நாள் கேட்டாய். 'பாய்ந்த ஒரு வில்' என்றேன். மண் பார்த்து குனிந்து கொண்டாய்.

துரும்புப் பூ!



மெல்ல.. மெல்ல... தன் துடிப்பில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் கரங்களின் மின்னல்கள் போல் பாய்ந்து வந்து கீறு இட்டு, கூறு போட்ட வார்த்தைகளின் வலி, ஏற்படுத்தும் வலி.. பிரம்மாண்டம்.

செதில் செதிலாய் சிதறத் தொடங்கியது. எத்திசையின் பக்கம் நகர்வது என்ற எண்ணங்கள் அற்ற நிலையில் துளித் துளியாய்ப் பொடிப் பொடியாய் நொறுங்கிக் கொண்டே இருக்கிறது.

கசக்கிப் பிசைந்து தூரத் தூக்கி வீசிய பின் கைகளில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான சிவந்த இரத்தத் துளிகளை உதறிச் செல். காக்கைகளும், கழுகுகளும் காத்திருக்கின்றன், கூர் நுனி கொண்ட ஆயுதங்கள் கொண்டு கொத்திக் கொத்திச் சிதைத்து குதறித் தின்ன...!

பொல பொலவென உதிர்ந்து, தரையெங்கும் புள்ளிகளாய்ப் படம் போல் விரிகின்ற இதன் மேல் உனக்கு என்ன கோபம்? மிதித்துத் தேய்த்து, சிதறத் தெறிக்கும் சின்னச் சின்னத் துளிகளை அப்படியே விட்டுச் செல். ஈரம் வழிகின்ற நாக்கோடு காத்திருக்கின்றன வெறி மின்னும் கண்களோடு நாய்கள்.

வடிவமற்ற உருவை எடுத்துக் கொள்ளௌம் வகையில், கலைகின்ற இதன் துணுக்குகளை எப்படி கண் கொண்டு பார்ப்பாய்? நாக்கைச் சுழட்டிக் கொண்டு, கொடூரம் பூசிய கண்களோடு காத்திருக்கும் அந்தக் கரும்பூனை போன்றா?

மொழி அறியாத ஊமையாய் கதறுகிறதே கிழிந்து துண்டு துண்டாகும் போது, இதன் ரோமங்களை அள்ளி போர்வை செய்து கொள்ள பார்த்து வைத்திருக்கிறதே, இரத்த வெறி கொண்ட நரிகளும், ஓநாய்களும்... உன் செவி மடல்களில் பதியவேயில்லையா இதன் அலறல்?

நுரை கொண்ட வெள்ளமாய் தன் மேனியை எழுத்துக்கள் அடித்துச் செல்கையில் காற்றில் கரைந்து காணாமல் போகின்ற ஆவியைப் போல் இன்றி, சொத சொதவென கொழ கொழவென நுரைத்து, நிறைத்து, சொட்டுகின்றதே இதன் உயிர்த் துளிகளை, சேகரித்து வைத்துக் கொள்வாயா..?

மழை நின்ற பின், கொளுத்தும் வெயிலின் கொடூரத் தாக்கலுக்கு ஆளாகையில் குளிர் என சில துளிகளைத் தேடுகையில், உனக்கு உபயோகப் படலாம், இந்த இதயத்தின் ஈரம்....!

காற்றே, பொய் வா!



ன்மையாக நனைத்து கொண்டிருந்தது வெயில்.

சின்னச் சின்ன ஆணிகளைத் தூவிக் கொண்டிருந்த வெயிலின் கூர்க் கரங்கள், புதைத்தன சூடான தீத் துளிகளை!

அலைந்து கொண்டிருந்த வறண்ட காற்றின் மேனியெங்கும் பதிந்திருந்த இரணப் புள்ளிகளின் முனைகளில் இருந்து சொட்டிக் கொண்டே இருந்தன, புழுக்கத்தின் கூரான துகள்கள்.

பிரம்மாண்ட வெளிச்சமாய்த் திறந்திருந்த வெண் வானத்தின் கூடுகளில் சிறைப்பட்டிருந்த மேகக் கூட்டங்களைக் கலைத்துச் செல்ல தோன்றவேயில்லை, பெருங்காற்று!

ஈரத்தைத் தேடிய விரல்களைக் கொண்ட என் கைகளில் தட்டுப்பட உன் நிழலைத் தர வரவேயில்லை நீ!

அச்சமூட்டும் எலும்புகளால் என் தலையைக் கலைத்துப் போட்டதும் அல்லாமல், வாரி வாரி என் மேல் தூற்றிக் கொண்டே இருந்தது, அனல் காற்று!

நடுப் பகலின் நர்த்தனம் கோரம் கொண்டு, கொதித்துத் தள்ளத் தொடங்குகையில், தூரே ஒளிப் புள்ளியாய் உன் பிம்பம்.

என் மேலிருந்த மணல் பொட்டுகளைத் தள்ளி விட்டு எழ, காற்றின் போக்கில் கலைந்து பாதையில் ஓடும் சருகைப் போல் நீ பாய்ந்து வருகிறாய். இதயத்தை வெளியெடுத்து, விரல்களில் செருகிக் கொண்டு துடிக்கின்ற இமைகளின் வழி, இரகசியமாய்க் கசிகின்ற கண்ணீர்த் துளிகளால் நனைத்த ஒரு பொக்கிஷம் போல் சுமந்து நிற்கின்ற என்னைக் கண்டு கொண்டனையா...? சரசரவென அசைந்தாடும் புல் புதர்களின் ஊடாக வீசுகின்ற கொடுங்காற்று, கடத்திச் செல்லப் பார்க்கின்றது என் பிம்பத்தை, தொலைவில் மினுக்கும் கானல் நீரின் தளத்திற்கு! அதனைக் கண்டனையோ, காதலி...?

காய்ந்த பூக்களும், ஓய்ந்த இலைச் சருகுகளும், தலைகீழாய்க் கவிழ்ந்த பூச்சிகளின் உடல்களும், விரிசலிட்ட தரையின் மேல் பாய்கின்ற வெயிலின் பாய்வும் நிரம்பிய பாதையின் வழி நீ ஓடி வந்து என்னை நெருங்கினாய்.

இன்னும் என்ன நமக்கிடையில்? யுக, யுகமாய்த் தொடரும் ஏதோ ஓர் இழையின் இரு நுனிகளில் நம்மைக் கோர்த்து விட்டு, உருட்டி விளையாடுகின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான விதியின் கடுங்கரங்கள் இன்னும் நம்மைப் பிரித்து விடுவதற்குள், காற்றும் தீண்ட அஞ்சும் இடைவெளியைக் கொன்று, கட்டிக் கொண்டாய், என் இதயப் பரிசை வாங்கிக் கொண்டு!

வேறு யாருமற்ற பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருக்கும் நம் இருவரின் பேரன்பில் மெல்ல மெல்ல வன்மை இழந்து கொண்டே இருக்கிறது பொசுக்கும் வெயிலின் வீரம்...!

Friday, March 07, 2008

பயணங்களால் கட்டமைந்த எட்டு நாட்கள்.

ப்பதிவு இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதலாவது, கடந்த சனி, ஞாயிறுகளில் மலை நாட்டின் தென்மலா (தேன்மலை) மற்றும் பாலருவி பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றிருந்த கதையைப் பேசும். மற்றுமொரு பகுதி, திங்கள் முதல் இன்று மதியம் வரை பயணித்த சொந்த ஊர்ப் பயணத்தைக் கூறும்.

னிக்கிழமை காலை ஆறு மணிக்குத் தொடங்கிய பயணம், மெல்ல மெல்ல மலையின் மடிகளில் ஏறி, பின் தென்மலாவை அடைந்தது. இது தேன்மலை என்றும் குறிப்பிடப் படுகிறது. இங்கு ஒரு அணை இருந்தது. காலை ஒரு கடையில், சூடாக இட்லி உண்டோம். கேரள நண்பர்கள் மிகவும் கஷ்டப்பட்டே அதனை உண்ண வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் இட்லி கொஞ்சம் மெதுவாகத் தான் இருந்தது. புட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது தமிழக எல்லை என்பதால், இட்லி, தோசை மட்டுமே கிடைத்தது.

அங்கு ஒரு ஃபான்ஸி கடையின் போர்டில் Snakes கிடைக்கும் என்று இருந்ததைப் பார்த்ததும் மென் அதிர்ச்சி. காட்டுப் பகுதி ஆதலால், உண்மையாகவே கிடைக்கும் போலும் என்று நம்பிக் கொண்டோம்.

முதலில் அரை கி.மீ. தள்ளி இருந்த Eco Tourism அலுவலகத்தின் நுழைவு வாயிலை அடைந்து, அங்கிருக்கும் வசதிகளை அறிந்து கொண்டோம். பின் முதலில் இரும்புப் படிக்கட்டுகளால் அமையப் பெற்றிருந்த ஏணிகள் வழியே சற்று செங்குத்தான பாதை வழிச் சென்றோம். பாதி தூரம் சென்ற பின் தான் இதன் த்ரில் தெரிந்தது. ஆட ஆரம்பித்தது. எல்லோரும் கும்பல், கும்பலாய் ஏறத் தொடங்க, அப்படியும், இப்படியுமாக ஆட ஆரம்பித்தது. எனக்கோ, Shrek படத்தில் வரும் காட்சி நினைவுக்கு வரத் தொடங்கியது.

பின் ஒருவழியாக அட்ரீனலின் சுரப்பைத் தூண்டி விட்டு, மலையை அடைந்தோம்.

அங்கு Rock Climbing என்று ஒரு சாகச நிகழ்வு நடத்தப்படும் என்று இருந்தது. சிலர் முயன்று உச்சியை அடைந்து, மீண்டும் தரையை அடைந்தனர். எவரெஸ்ட் உச்சியை அடைந்து திரும்பியவர்கள் போல் முகங்களில் அப்படி ஒரு மகிழ்வு. 'நாங்க எல்லாம் இந்த மாதிரி கயிறு பிடித்து ஏற மாட்டோம். அப்படியே மலையேறும் சாகசம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்' என்று மனதிற்குள் சவால் விட்டுக் கொண்டு (வெளியில் கேட்டு விடப் போகிறது..) அடுத்திருந்த பாதை வழி நடக்கத் தொடங்கினேன்.

அங்கே இறங்குவதற்கு கடினமான பாதைகள் வழி, இறங்கி, சில இடங்களில் ஓடி கீழே செல்ல... படகுக் குழாம், குளத்தைக் கயிறு வழி கடக்கும் சாகசம், துப்பாக்கிச் சுடும் விளையாட்டு, கட்டை ஏணிகள் வழி நடந்து மலை உச்சி அடைதல் என்று பல இருந்தன.

துப்பாக்கியைப் பார்த்ததும், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டு 5 தோட்டாக்கள் சுட்டுப் பார்க்க, ரேஞ்சுக்குள் நான்கு புல்லட்டுக்கள் பதிந்திருந்தன. எல்லோரும் கை தட்ட, ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் இதற்கு எடுத்துக் கொண்டிருந்த முற்காலத்து பயிற்சிகள் இங்கே யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி மோக்ளி பிறகு கூறுவான்.

பிறகு சும்மா இராமல் சருகுகள் வழி, உடைந்த மரங்கள் வழி குனிந்து, வளைந்து, தவழ்ந்து செல்ல மற்றொரு பக்கத்தைக் காணலாம் என்று நினைத்து ஏறிப்போக சாலை ஓடியது. 'ச்சே' என்றாகி விட்டது. பிறகு நமது வால் பையன் குணத்தைக் காட்டும் விதமாக அங்குமிங்கும் தவ்வித் தாவி, பாய்ந்து, ஓடி, குதிக்க உள்ளிருக்கும் காட்டுவாசி வெளியே வந்து விளையாடினான்.

பிறகு எல்லோரும் களைப்பாகி, வெளியே வர, Fanta, Maa, water packet அமோகமாக விற்றுத் தீர்ந்தன.

பின் நடந்து மதிய உணவு ஏற்பாடு செய்திருந்த இடத்தை அடைந்து, ஒரு கட்டு கட்டி விட்டுப் பார்த்தால், கண்கள் செருக ஆரம்பித்தன. ஆங்காங்கே கும்பல் கும்பலாக அமர்ந்து கதை, அந்தாக்ஷ்ரி, மொக்கை, பாட்டு என்று குழு குழுவாக களை கட்ட ஆரம்பித்தது. நமக்கு தான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாமல் மொழி பெரும் தடையாக இருந்ததே.. என்ன செய்வது என்று யோசித்து, வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன்.

வேன் மூலமாக அணைக்கட்டில் ஒரு படகுச் சவாரி ஒருமணி நேரம் மெதுவாக ஊர்ந்து நீர் நிலைகளில் நகர்ந்து, அலையோடு விளையாடி, மனதுக்குத் தோன்றிய பாடல்களோடு பயணித்து (இளங்காற்று வீசுதே..), மீண்டும் அலுவலகம் வந்தோம்.

சுற்றுலா அலுவலகம் சென்று, பட்டாம்பூச்சி சஃபாரியைப் பார்த்தோம். இது பட்டாம்பூச்சி பெருக்கம் செய்யும் காலம் இல்லையாம் (ஜூன் - ஆகஸ்ட்). எனவே வெறும் பொம்மைகளையும், ஆங்காங்கே இருந்த சின்னச் சின்ன பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு திரும்பினோம். பின் Water Fountain ஆரம்பிக்க மாலை ஏழு மணி ஆகும் என்பதால், அணைக்கட்டு அருகில் இருக்கும் சிலைக் குழுமம் சென்று அதனையெல்லாம் பார்த்து, மிதக்கும் பாலம் சென்று நடந்து பார்த்து, water fountain வந்தோம்.

டிஷ்யூம் டைலாமோ, ப்ரிட்னியின் பேபி ஒன் மோர் டைம், பம்பாய் ஹம்மா, ஹம்மா (இந்தி), மற்றும் சில குதிக்க வைக்கும் மலையாளப் பாடல்கள் என கலந்து கட்டி அடிக்க, நீர்த் திவலைகள் வண்ண ஒளியின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டன. கடைசியாக 'சாரே ஜஹான் சே அச்சா' போட்டு நிறைவு செய்தார்கள். உணர்வு வயப்பட்ட மக்கள், 'பாரத் மாதா கீ ஜே' போட்டு கலைந்து சென்றார்கள்.

தங்குமிடம் போய் தங்கி விட்டு, இளைப்பாறி, கேம்ப் ஃபயரில் தண்ணி, சிக்கன், என்று ஒர் வெட்டு வெட்டி விட்டு, அயர்ந்து உறங்க இரவு இரண்டானது.

காலை ஆறு மணிக்கு விழிப்பு வந்து விட, அருகில் இருந்த மலை மேல் ஏறிப்பார்க்க, கதிரவனின் ஆயிரமாயிரம் கிரணங்கள் அப்படியே மிகப் பிரம்மாண்டமாய் விரிந்து மேற்குத் தொடர் மலைகளின் மேனியெங்கும் வருடிக் கொடுத்துச் சிவக்க வைக்கத் தொடங்கின.

அங்கிருந்து கிளம்பி, பாலருவி சென்று (குற்றாலம் 28 கி.மீ.) அங்கும் எல்லாரும் குளிக்க, நாம் தான் பொன்முடியிலேயே குளித்தாகி விட்டதே என்று, அங்கும் மலைகள் மீதேறி சுற்றிப் பார்க்க, சற்று தொலைவில் பாம்பு ஊர்ந்து சென்று மறைந்ததைக் கண்டேன்.

அங்கிருந்து கிளம்பி, மீண்டும் தேன் மலை வந்து சின்ன ஷாப்பிங் முடித்து விட்டு, திருவனந்தபுரத்திற்கு வண்டியைக் கிளப்புகையில் மாலை 2.30 மணி.

கழக்குட்டத்தில் இறங்க மாலை 5 ஆகி இருந்தது. பின் வீடு சென்று கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு, அழுக்குத் துணிகளை அள்ளிப் போட்டு, வாங்கி வந்த காட்டுத் தேன், அக்தர் பாட்டில், பொன்முடி தேநீர்த் தூள் பாக்கெட் எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் கழக்குட்டம் வந்து கொல்லம் பேருந்து பிடிக்கையில் என் கைகடிகாரம் சரியாக மணி ஏழு என்றது.

டுத்து 15 மணி நேர பயணம் காத்திருந்தது, நான் எதிர்பார்த்திராத சுவாரஸ்யங்களுடன்...!











Thursday, March 06, 2008

போய்ப் பொய்!



னதின் இருண்ட மூலைகளில் சிறைத்திருக்கும் எண்ணங்களின் நிறங்களை யாரறிவர்?

ஒரு மூலையில் கிளைத்திருக்கும் சின்னச் செடியின் முளைத்தலின் பின் இருக்கும் நம்பிக்கையின் வலு என்ன?

கற்களை உருட்டி விளையாடும் நதியலையின் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்வது யார்?

பகலின் வெம்மையைப் பதிந்து கொண்ட பாறையைப் பிளக்கின்ற ஆயுதத்தின் கூர் உணருமா அதன் வெம்மையை?

நாள் பொழுதில் மெதுவாய் நகர்கின்ற முட்களைச் சுமக்கின்ற கடிகாரத்தின் கோபம் யாருக்குத் தெரியும்?

அனல் வீசுகின்ற காற்றின் பிரவாகத்தில் பூக்கின்ற அரளிப்பூ பால் அறிவதில்லை அதன் விஷம்!

பெரும் அமைதிக்கு முன் எடுத்து வீசிய களிமண் பொம்மையை, எங்கே கரைத்திருக்கும் புயல்?

காலத்தின் கைகளில் தாங்க இயலா வலியோடு நகர்கின்ற வாழ்வின் கூறுகளை நினைவில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பவன் யார்?

பூ பூத்த பின் சொல்லிச் சென்று தேன் அருந்தும் வண்டுக்கு யார் சொல்லுவர், பூ பூப்பெய்தியதை?

காற்றின் கரங்களில் அகப்பட்டுக் கொண்ட சருகைப் போல் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் தூறல்களில் நனைகின்ற கணங்களில் யார் போய் பொய் சொல்லி வந்தனர் நம் கனவுகளில்...?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தீராத இரகசியங்களும், திகட்டாத அதிசயங்களும்...(A)



விட்டு விட்டுத் தூறிக் கொன்டிருக்கும் மார்கழியின் மாலை நேரம்.

பூப்பூவாய்ப் பறந்து கொண்டிருந்த குளிர்த் துளிகள் காது நுனிகளில் படலமாய்ப் படர்கையில், மெல்லிய சூடு புகையாய்ப் பறக்கும். தெளிவில்லாத மேகங்கள் சூறையாடும் வானின் நீல நிறம் பொழிந்து நிரப்புகிறது, பாசி படிந்த குளக்கரைகளை!

பொறிப் பூச்சிகளாய் நிறைந்திருக்கும் தோட்டத்தின் முடிவிலாத எல்லைகளில் நின்றிருக்கின்றது, எல்லைச் சாமிகளின் கூர்வேல். மேகக் கிரணங்களின் மெத்தைகளின் ஈரம் தேங்கி இருக்கும் தெருக்களின் மண் மேடுகளில் சகதிகள் உருக் கொள்ளத் தொடங்கி விட்டன.

வண்டுகளின் தேடலில் தலை கவிழ்ந்து தேன் சிந்துகின்ற வண்ண மலர்க் கண்களில் இருந்து நழுவி ஓடுகின்றது நாணம். குளிர்க் காற்றின் தீண்டலில் தலையாட்டுகின்ற செடிகளின் நுனிகளின் மலர் மொட்டுகள், இதழ் பிரியாமல் சிரிக்கின்றன.

மாலையின் நீட்சி நீண்டு தொட்டு அழைத்து இழுக்கும் இரவின் கரங்களை! பின் மெல்ல அதனுள் புதைந்து கொள்ள இரவின் கரும் இருள் ஆக்ரமித்துக் கொள்கின்றது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை!

சின்னச் சின்ன பொட்டுத் துளிகளாய் மீன்கள் எட்டிப் பார்க்கின்ற முன்னிரவின் மென் குளிர் பீடிக்கையில், மண் போர்த்திக் கொள்கின்றது பனியின் ஈரத்தை! மெல்ல வெண்ணிலவு எட்டிப் பார்த்து பாலமுதென பொழிகின்றது ஒளியை!

பகலின் வெம்மையைக் கைவிட்டு கொடுங்குளிருக்குள் தன்னை அடைக்கலமாக்கிக் கொண்ட பின், குளிர்க் கூடாரத்தின் போர்வைகளுக்குள் பத்திரமாய்ப் புகுந்து கொண்டு, சுகமாய் உறக்கம் கொள்ள முயல்கையில் சடசடவென பேயாய் பெய்யத் தொடங்குகின்றது, பெருமழை!

இந்த நிகழ்வுகளும், உணர்வுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன தீராத இரகசியங்களும், திகட்டாத அதிசயங்களுமாய்...!



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Wednesday, March 05, 2008

என்ன செய்யப் போகின்றான்?



சாதம் வைக்காத
மொட்டை மாடிகளால்
நிறைந்த பின்
நகரத்தின்
காகங்கள்
எங்கு சென்று
கரைந்தன?

கம்பிகள் அற்ற
தெருக்களில்
எந்தப் பாதையில்
அமர்கின்றன
சிட்டுக்குருவிகள்?

குப்பைகளால்
கட்டமைந்த பின்,
எந்தப் பச்சைப்புல்லைத்
தின்னும்
பசுக்கள்?

எல்லோரையும்
துரத்தி விட்டு
என்ன செய்யப் போகின்றான்
மனிதன்?