Friday, December 21, 2007

திருப்பாவை.

/*** ***/

சில பதிவர்கள் உரைக்கும் திருப்பாவைப் பதிவுகள். (கண்ணில் பட்டவரை.) ::

http://bhakthi.wordpress.com/

http://balaji_ammu.blogspot.com/

திருவெம்பாவை ::

http://thiruvempavai.blogspot.com/

/*** ***/

ந்த விளக்கங்களைப் படித்தவுடன் நாணமுற்றேன். இதுவரை எழுதி வந்த எனது மொக்கைகளை - விளக்கம் என்ற பெயரில் - பொறுத்துக் கொண்ட அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.

இந்தத் தொடர் இத்துடன் ஏறக் கட்டப் படுகின்றது.

நமது கைவரிசையை சொந்தக் கற்பனையிலேயே எடுத்து விடலாம் என்று முடிவு. ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளார்கள். அதைப் போய் தொல்லை கொடுப்பானேன்? ஆண்டாள் பார்த்தால் தலையிலேயே அடித்துக் கொள்வார் என்று தோன்றியது, இந்த பதிவுகளைப் பார்த்த பின்பு..!

எனவே... Anyway அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, December 19, 2007

ரங்கநாதனின் பாதம் வந்தனை செய்யடி..!

இன்று வைகுண்ட ஏகாதசி.

இந்த பாடலைக் கேட்போம்.





திருப்பாவை :: பாடல் இ.



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


ரவின் மெல்லிய கரங்கள் தாலாட்டும் நேரம்.

கொட்டிலில் இருந்து தாய்ப்பசுவும், கன்றுகளும் துள்ளி எழுந்து நடக்கத் துவங்குகின்றன. அந்த வைகறைப் பொழுதில் அருகில் இருக்கும் காட்டுக்கு மேயப் போனால், பின் பொங்கிப் பெருகும் பால் கிண்ணங்கள்.

இராதை மேலும் கூறுகின்றாள்.

"விண்ணையும், மண்ணையும் ஈரடியில் அளந்து விட்டு, மூன்றாமடிக்கு முடி சூடிய மன்னன் சிரசைக் கொண்டவன் அந்தப் பெருமான்.அந்த உத்தமன் பேர்பாடி, நாம் நம் பாவை நோன்பு மேற்கொள்ள என்னவெல்லாம் நற்காரியங்கள் நடைபெறும் தெரியுமா?

துளியும் பெய்யாமல் இரக்கமற்றோர் நெஞ்சம் போல் நிலத்தை வறண்டு விடச் செய்யாமலும், அளவின்றி பெய்து பெருமானை நிந்திப்போர் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் போல் நிலத்தை நீர்மயமாக்காமலும், அள்வோடு மாதம் மும்மாரி பெய்யும்.

அதனால் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் நிரம்பியவாறு விளைந்திருக்கும். அந்த வயல்களின் இடையே நீர் தேங்கியிருக்கும். அவற்றுள் மீன்கள் துள்ளி விளையாடும். அத்தகைய நீர்த் தேக்கத்தில், குவளை மலர்கள் பூத்திருக்கும். அந்த குவளை மலர்களின் நிரம்பி வழிந்தோடும் தேனை அருந்துவதற்கு வண்டுகள் அங்கே ரீங்காரமிட்டு இருக்கும்.

அது மட்டுமா?

பசுக்களின் மடி முழுதும் பால் நிறைந்து இருக்கும். அத்தகைய செல்வ நிலையை அடைவோம்.

இந்த நோன்பினால், குறிஞ்சி மலைக் காடுகள் செழிப்பாக விளைந்திருப்பதால், மழை நன்றாகப் பெய்யும். முல்லை நிலக் காடுகளும் அதனால் செழிப்படையும். மருத நில வயல்வெளிகள் பயிரோடு நிறைந்திருப்பதால், இந்த வயல்வெளிகளின் தெய்வங்களான பசுக்கள் மடியோடு மனமும் நிறைந்து பால் கொடுக்கும். அத்தோடு நெய்தல் நிலச் செல்வங்களான மீன்களும் துள்ளியாடும்."

...(தொடரும்)

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Tuesday, December 18, 2007

திருப்பாவை :: பாடல் ஆ.


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


யர்பாடி அமைதியாக இருக்கின்றது.

மேற்றிசையில் திரண்டிருந்த கரும் முகில்கள், குளிர்மழையைப் பொழிவதற்குத் தயாராக இருந்தன. சிறு சிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற, நீர்க் குளத்தில் தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருந்தன மேகங்கள்.

இணை இணையாகப் பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், நீர் நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி, உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் கூட்டத்தில் வெண்மணி அரிசித் துகள்களை அள்ளித் தெறிப்பது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரிய மேகத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு , அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க, கிளைகிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கின்றது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த , மஞ்சள் பூக்கள், படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்குகின்றன. பின்னே அவற்றால் என்ன செய்ய முடியும்? அமைதியாக வீசிக் கொண்டிருக்கின்ற தென்றல் காற்று அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வருகையில், பூக்களும் அந்தத் திக்கைக் கொஞ்சம் திரும்பித் தான் பார்த்தாக வேண்டும் அல்லவா?

ன்னும் கண்கள் மூடிப் படுத்திருக்கின்ற தம் தோழியரிடம் தாங்கள் செய்ய வேண்டியவற்றை அவள் கூறுகின்றாள்.

ஆகா..! அவளுக்குத் தான் கோபம் யார் மீது..? பாவை நோன்பு இருக்கலாம் என்று சொல்லி இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கின்ற தம் தோழியர் மீதா? இல்லை, அந்த மாயக் கண்ணன் புகழைப் பாடாமல், அவனது நினைவை மறந்து உலக நினைவுகளில் மூழ்கி விட்டு, தம் உண்மை நிலையை அறியாமல், உணராமல் உறங்குகின்ற இந்த உலகத்தில் உள்ளோர் மீதா?

" உலகத்தில் வாழ்வீரே..! கேளுங்கள்..! நாங்கள் நம் பாவைக்குச் எய்யும் வழிபாட்டின் முறைகளைக் கேளுங்கள்.

பாற்கடலில் இலகுவாக உறங்குகின்ற அந்தப் பரந்தாமன் புகழ்பாடியபடி நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த ஆயர்பாடியுள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்ற நெய்யும், பாலும் எடுத்துக் கொள்ள மாட்டோம். பிரம்ஹ முகூர்த்தத்தில் நீராடுவோம்.

கண்களுக்கு மையிட்டு எழுத மாட்டோம். ஏனெனில் அந்தக் கார்வண்ணக் கண்ணனே நமது கண்ணில் உள்ளதால், அந்த வண்ணமே நம் கண்களுக்கு மையிட்டெழுதியது போல் இருக்கும்.

ஈரக் கூந்தலில் மலரிட்டு நாங்கள் முடிய மாட்டோம். ஏன் வைக்க வேண்டும்? அந்த மாயவன் தானே எங்கள் நெஞ்சமெனு மலரை மலர வைத்து விட்டானே? இன்னும் இந்த ' காலை அரும்பாகி, பகலெல்லாம் போதாகி, மாலை' உதிர்கின்ற இந்த நிலையற்ற சிற்றின்பம் தரும் மலரை நாங்கள் ஏன் அணிந்து கொள்ள வேண்டும்?

செய்யக் கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம். எவையெல்லாம் செய்யக் கூடாதன தெரியுமா? அந்தப் பரந்தாமன் புகழ்பாடாத செயல்கள் அனைத்தும் தாம். தீயன சொல்ல மாட்டோம். அவையாவன யாவையெனில் கண்ணன் புகழ் கூறா மொழிகள் தாம்.

இவ்வாறு செய்து உய்யுவோம், வாருங்கள்.."

அடர்ந்த காட்டின் இருளுக்குள், ஒற்றைக் குரல் போல் ஊர்ந்து நகர்கின்ற குழலின் நாதம் போல், அவளது குரல் ஒற்றையாய் பரவுகின்றது.

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Monday, December 17, 2007

திருப்பாவை :: பாடல் அ.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!


மெல்லப் பனி பெய்து கொண்டிருக்கின்றது.

பச்சை இலைகளால் தன்னை மூடிக் கொண்டிருந்த பல விருட்சங்களும் குளிர் தாங்காமல் இன்னும் தம்மை இறுக்கிக் கொள்கின்றன. அந்த சலசல்ப்பில் விழித்துக் கொண்ட சின்னச் சின்னக் குஞ்சுகளைத் தாய்ப் பறவை தம் சிறகுகளால் அணைத்துக் கொள்கிறது.

அந்த தாயின் கணகணப்பில் இன்னும் சுகமாக பறவைக் குஞ்சுகள் சுகமாக உறங்கத் தொடஙுகின்றன.

கரும்பச்சை இலைகளின் நரம்புகளின் மீதெல்லாம் நனைத்தவாறு உருண்டு, புரண்டு, ஓடி கீழே விழுகின்றன பனித் துகள்கள்.

சற்று தொலைவில் யமுனை நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அக்கரையிலும் இக்கரையிலுமாக மினுக்கிக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் நிழலைத் தன் ஆடையாக அணிந்து கொண்டிருக்கின்றது. காற்றில் அசைந்தாடுகின்ற அந்த மஞ்சள் தழல்களின் அசைவைத் தன் மேல் அணிந்து கொண்டது மட்டிலும் திருப்தியுறாத யமுனை, மேலே பார்க்கின்றது.

பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் மேனியெங்கும் சிணுங்கிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான, பல கோடிக்கணக்கான வெண் வைரப் பொறிகளை அள்ளி தன் மேல் வாரி இறைத்துக் கொண்டது, யமுனை நதி.

மஞ்சள் சரிகை மேல் பொறித்த கண்ணாடித் துகள்கள் போல் வண்ண ஆடை அணிந்த பின் தான் நதி பெரு மகிழ்வெய்தியது. அந்த பேரழகை தன் தாயான கடலன்னையிடம் காட்டிட வேண்டும் என்ற பேராவலோடு, நகர்ந்தது.

அதன் கவலை அதற்கு..! இன்னும் சற்று நேரம் சென்றால், அவளது மனம் கவர்ந்த காதலனான கதிரவன் வந்து விடுவான். இவள் இவ்வளவு நேரம் அணிந்து அழகு பார்த்த இந்தப் பேரெழிலான ஆடையை அகற்றி விடுவான். நாணமடைகின்ற நதிப்பெண் என்ன செய்வாள்? அந்தக் கதிரவனின் செந்நிறத்தைத் தான் பூசிக் கொள்ள வேண்டும்.

அத்தோடு விடுவானா அவன்? அவளது நாணத்தைக் கண்டு பெருமிதம் கொள்வதோடு விட்டு விடுகிறானா, என்ன? இல்லையே! அவளுக்கு நாணத்தைத் தந்தவனே, அதை எடுத்துக் கொள்கிறான். பின் அந்த பேதைப்பெண் என்ன தான் செய்ய முடியும்? தனது ஆவியோடு கலந்த நாயகனை ஆவிரூபமாகச் சென்று அடைகின்றாள்.

கல்பகாலமாக நடந்து வருகின்ற இந்த காதல் நாடகத்தை எண்ணி, எண்ணி ஆயர்பாடிக் கரையின் யமுனைப் பெண் புன்முறுவல் பூத்தவாறு நகர்ந்து செல்கின்றாள்.

ஆயர்பாடி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அங்கே நடக்கும் நாடகங்கள் தாம் எத்தனை?

ண்ணனின் நினைவாகவே வாழ்கின்ற இராதையின் கண்களில் உறக்கம் சிறிதும் இல்லை. அவளது எண்ணமெங்கும் நிறைந்து வழிவது கண்ணனின் நினைவுகளே! அவனோடு விளையாடிய கணங்கள், அவனது கைகளைப் பற்றி யமுனை நதியில் குதித்துக் கும்மாளமிட்ட நேரங்கள், அந்த மாயவனின் கரு நிறத்து விரல்களைப் பிடித்துக் கொண்டு காட்டில் சிறுவயதில் ஆடுமாடுகளோடு அருகில் அமர்ந்திருந்த காலங்கள், அந்த மாதவனின் செந்நிற இதழ்கள் தடவித் தடவி அவன் மூச்சுக் காற்றை நிரப்பி நிரப்பி தன்னை வெளிப்படுத்தும் குழலின் நாதம் கேட்டுக் கொண்டு பேரானந்தப் பெருவெளியில் கரைந்து போனது...

என்று எத்தனை நினைவுகள்..!

எப்படி அவளுக்கு உறக்கம் வரும்? அவள் கண் திறந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த மாயக் கண்ணனின் திருவுருவம் அல்லவோ வந்து நிற்கின்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்வெளிகள் அவனது 'பச்சை மாமலை போல் மேனி'யை அல்லவா காட்டுகின்றது? சலசலத்து ஓடுகின்ற நதியும், அகண்டு விரிந்துள்ள வானமும் அவனது நீலவண்ணத்தை அல்லவா நினைவூட்டுகின்றது? மேற்றிசையில் வந்து சூழ்கின்ற கருவண்ண முகில்கள் மட்டும் சும்மாவா செல்கின்றது? அவனது சுருள் சுருளான கருங்குழலை அல்லவா சொல்லிச் செல்கின்றது?

எதுவும் காண வேண்டாம் என்று கண்களை மூடிப் படுத்தாலோ, அந்த மாயன் சும்மா விடுகின்றானா? அவளது கண்களுக்குள்ளும் வந்து காதல் புரிகின்றானே, அவள் என்ன செய்வாள்?

இருந்தாலும் குடும்பத்தினர் கவலையுறுவரே என்று உறங்குபவள் போல் நடிக்கின்றாள்.

அவளது குடும்பத்தினர் மட்டும் அவளை, அவள் நிலையை அறியாரா? அவர்களும் அதனை அறியாதது போல் நடிக்கின்றனர்.

அது மட்டுமா? ஆயர்பாடியுள் இருக்கும் ஒவ்வொருவரும் இத்தகைய நாடகம் அல்லவா நடித்து வருகின்றனர்.

த்தகைய ஒரு மார்கழி மாதம்.

சிலுசிலுக்கின்ற ஈரக்காற்றின் ஊடாக ஒரு மெல்லிய ஆடையாக பாய்ந்து பொழிந்து கொண்டிருக்கின்றது வெண்ணிலா. தன் அமுதக் கிரணங்களால், யமுனை நதியை அந்தப் பரமன் உறையும் பாற்கடல் போலவே வெண்மையாக்கிக் காட்டுகின்றது. பரந்தாமனின் பேரன்பில் நனைந்த அடியவர்களது முகத்தில் ஜொலிக்கின்ற தேஜஸ் போல் வெண்ணிலா நிறைந்த வான்.

அத்தகைய ஒரு நன்னாள் இது.

இன்றைய அதிகாலை நேரத்தில், இராதை எழுந்து விட்டாள். தனது மனையின் கதவுகளை மெல்ல அணைத்து விட்டு வெளியே வருகின்றாள்.

சென்ற இரவில் பேசிக் கொண்ட படி தோழிகள் வந்திருப்பார்கள் என்று பொதுவிடம் சென்று பார்க்கின்றாள். அந்தோ! பேரிரவின் ஒற்றை வெண்ணிலா போலவும், பெரும் பகலின் ஒற்றைக் கதிரைப் போலவும், தோட்டத்தின் மரங்களின் இடையில் ஊடுறுவி வருகின்ற குளிர்க்காற்றுக்குத் துணையாகத் தனிமையாக அவள் மட்டும் நிற்கின்றாள்.

ஒவ்வொருவரின் மனையாகச் சென்று அழைக்க முடிவெடுக்கிறாள்.

பாடுகிறாள்.

" செல்வம் கொழிக்கின்ற ஆய்பாடியின் சிறுமிகளே! கண்ணனின் நினைவைச் சுமந்து சுமந்து கவலையில் சோர்வுற்றதால், கைகளில் இருந்து கழன்று விழுந்து விட்ட கருவளையங்களை எடுத்து கண்களைச் சுற்றி அணிந்து கொண்ட இளம் கன்னியரே! வாருங்கள் நீராடச் செல்வோம்.

பசுமாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் காமதேனுவைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் நந்தகோபனின் செல்வக் குமாரனும், தன் மகனைப் போன்றே நிறம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்களைச் சுற்றி மையிட்டு மையிட்டு கருவிழிகளைப் பெற்ற யசோதையின் இளம் மகன் அந்தக் கண்ணன்.

அவனது மேனி எத்தகையது? பொழியப் பொழியத் தீராத கருமுகில் போன்ற நிறத்தது அவன் மேனி. அவன் கண்களோ சிவந்த நிறமுடையது. அவன் கண்கள் எதனால் அப்படிச் சிவந்து போயிற்று? நீங்கள் அறிவீர்களா?

ஒருமுறை நமது ஆடைகளை அவன் எடுத்துக் கொண்டு நம்மிடம் விளையாடினானே? அப்போது கூச்சத்தால் நாம் நாணி நின்றோமே , அந்த நமது நாணம் தான் அப்படி அவன் கண்களில் அப்பிக் கொண்டது.

அவன் முகமோ மதிய நேரத்தில் நகர்ந்து வருகின்ற கதிரைப் போன்றது. அத்தகைய ஜொலிப்பும், தேஜஸும் ஒளிர்கின்ற தெய்வீக முகம் அது.

அந்தக் கண்ணன் வேறு யாருமல்ல. பாற்கடலின் அலைகளின் மேல் படுத்துக் கொண்டு அலகிலா விளையாட்டு ஆடுகின்ற நாராயணனே!

அவனே நமக்கு வாழ்வும், வளமும் தருவான். வாருங்கள் இந்த உலகத்தில் உள்ளோர் எல்லோரும் உணர்ந்து கொள்ள பாடிப் பரவுவோம்..!"

...(தொடரும்)

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

Sunday, December 16, 2007

நாளை துவங்கும் மார்கழி...!



மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரமாத்மா கீதையில் கூறியுள்ளார். அத்தகைய பேரும், புகழும், பீடும் உடைய மார்கழி மாதம் நாளை முதல் துவங்குகின்றது.

உறைய வைக்கின்ற குளிர், விசுவிசுவென்று வீசிக் கொண்டிருக்கும் ஊதல் காற்று, பால் மழையென அமுதைப் பொழிந்து கொண்டிருக்கும் வெண்ணிலா, ஈரக்காற்றெங்கும் பனித்துகள்கள் மிதந்து வருகின்ற அதிகாலை, ஊரெங்கும் உறக்கத்தின் பிடிக்குள் இறுகிக் கிடக்க...

தூரக் கோயிலின் தூண்கள் எல்லாம், ஒளி விளக்குகளால் நிரம்பி இருக்கும். அது மட்டுமா, இளம் சிறுமிகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரின் பக்திப் பாடலாலும் நிரம்பி இருக்கும் திருக்கோயிலின் மண்டபங்கள்...!

அந்த திருநாட்களால் அமையப் பெற்ற மார்கழி மாதம் நாளை பிறக்கின்றது.

சுடச்சுடப் பொங்கலும், புளியோதரையும் மணமணத்துக் கொண்டிருக்கையிலும், மனம் அதன் பக்கம் செல்லாமல் கார்மேகவண்ணன், மணிவண்ணன், குழல் நாயகனின் திருப்பாதங்களை எண்ணி, கண்களில் அவனது திருக்கோலங்கள் நிறைந்திருக்க, வாய் திறந்து அவன் மேல் கொண்ட காதலை , அன்பை, பாசத்தை, பக்தியை ஆண்டாள் மொழிந்த மொழிகளில் நாமும் பாடப் பாட.... ஆஹா.. அந்த இன்பம் என்ன..? ஆனந்தம் என்ன..?

வாருங்கள்.. நாமும் அந்த தெய்வீகக் காதலின் மாகடலின் அலைகளில் நீராடுவோம்.

பெரும் அலைகள் வந்து மோதுகையில், பெரும் பாறைகளின் விளிம்புகளில் எல்லாம் பட்டு, தெறிக்கின்ற நுரைகளின் மேல் பயணம் செய்யும் இலைகள் போல், அந்த ஆண்டாள் பாடிச் சென்ற உயர் காதலின் வரிகள் மேல் நாமும் பயணிப்போம்.