
இப்பதிவில் மகாத்மா காந்தி பற்றி 'தேசத் துரோகி' என்று கூறியுள்ளார்கள்.
http://seithivimarshanam.blogspot.com/2008/01/blog-post_31.html
எப்போது இங்கு தேசம் என்று ஒன்று இருந்தது? எல்லோரும் குட்டி குட்டியாய் சமஸ்தானங்களை வைத்துக் கொண்டு ராஜாங்கம் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் தானே? ஒரு நாடாக என்று இருந்து வந்தது? ஆன்மீகமும், இந்து மதமும் மட்டுமே இமயம் முதல் இலங்கை வரை இணைத்து வைத்திருந்ததே ஒழிய, அரசாங்கமாக எக்காலத்தில் அத்தனை நாடுகளும் ஒன்றாய் இருந்தன?
குப்தர் காலத்திலும், மெளரியர் காலத்திலும், இராஜேந்திரன் காலத்திலும், மொகலாயர் காலத்திலும் பெரும்பாலான 'பகுதி'களை மட்டுமே பிடிக்க முடிந்தது. என்று ஒரே நாடு என்ற எண்ணம் வந்தது?
பிரிட்டிஷார் வந்து அத்தனையும் ஒன்றாக ஆட்சி செய்யத் தொடங்கிய பின் தானே ஒரே குறிக்கோளோடு எதிர்க்கத் தொடங்கிய பின் தானே இறுதியில் ஒரே தேசம் என்ற எண்ணத்தில் ஒரு நாடாக மாறின சமஸ்தானங்கள்?
இல்லாவிடில் நீங்கள் இன்று பெங்களூர் சென்று வேலை பார்க்க முடியுமா, பாஸ்போர்ட் இல்ல்லாமல்? வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா, இலகுவாக? ஐரோப்பா போல் குட்டி குட்டி நாடுகளாக உடைந்திருந்தால் என்னவாய் இருக்கும்? மீண்டும் போர். ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு, பழைய சரித்திரம் திரும்பும்.
அப்படியொரு தேசம் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவரான மகாத்மா காந்தியை 'தேசத் துரோகி' என்ற பட்டத்தில் கொண்டு வருவது சரியல்ல. வேண்டுமானால் அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்று கூறி விட்டுப் போங்கள்.
ஒருவர் இருக்கையில் இல்லாத ஒன்றுக்கு அவர் துரோகம் செய்தவர் என்பது நகைப்புக்குரியது.
பில் கேட்ஸ், மைக்ரோசாப்டை உருவாக்கி லினக்ஸுக்கு துரோகம் செய்து விட்டார் என்பது போல் இருக்கிறது, நீங்கள் காந்தியை 'தேசத்' துரோகி என்பது..!