Saturday, April 28, 2007

போறவளே பொன்னுத்தாயி...!


கொத்துக் கொத்தாய்க் காய்ச்சிருக்கு மஞ்சக் கொல்லை - உன்னைப்
பொத்திக் பொத்தி வெச்சுக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள!
முத்து முத்தாய்ச் சிரிச்சிருக்கு தென்னம்புள்ள - வந்து
முத்தம் எல்லாம் கொடுத்துவிட்ட சின்னப்புள்ள!

தேடித் தேடிக் காலெல்லாம் கருப்பாச்சு - உசுரத்
தேடித் தேடி உடம்பு உருக்குலைஞ்சாச்சு!
உண்ணாம உறங்காம கண்ணு நெருப்பாச்சு - அழகு
உருவம் பாத்தபொறவு உறக்கம் தொலஞ்சாச்சு!

சிரிச்சு சிரிச்சு நீ மனசுக்குள்ள வந்தாச்சு - உன்
சிரிப்பு சத்தம் கேட்காம காதுக செவுடாச்சு!
வெடிச்சு வெடிச்சுப் போகும் பருத்தி குரலாச்சு - காய்ச்ச
வெண்டக்கா வெளஞ்சு நிக்கும் வெரலாச்சு!

தொட்டுத் தொட்டுப் போகும் நுரை ஆத்தோடு - உன்னத்
தொட்டுத் தொட்டுப் பேச வரவா மூச்சுக் காத்தோடு!
பட்டுப் பட்டுத் துணியெல்லாம் எதுக்காக - உம்மேல
பட்டுப் பட்டு வரும் தென்றல் எனக்காக!

சிந்த சிந்த வார்த்தையெல்லாம் பொறுக்கிக்கிட்டேன் - நீ
சிந்தாத எழுத்துக்கென்னை உருக்கிக்கிட்டேன்!
நீ நனஞ்ச மழைக்காக குடையாவேன் - நீ
நனயாத இரவுகளில் உடையாவேன்!

நீ சிரிக்கும் போதெல்லம் எங்கோ சறுக்கறேன்!
உன் சிதறி விட்ட புன்னகையைப் பொறுக்கறேன்!
என் பேனா மை தீரும்வரை கிறுக்கறேன்!
உன் பெண்மை எனக்காகும் வரை இரவைக் குறுக்கறேன்!
28.June.2004

Charisma.

பொடிப் பசங்க எல்லாம், தலைவர் கிட்டயே வர முடியாது என்று தெரிந்தும், பஞ்ச் டயலாக் அடிப்பது, காற்றிலேயே பறந்து பறந்து அடிப்பது, கேமராவைப் பார்த்து எச்சரிப்பது என்று காமெடி,, கீமெடி பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்து வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்து விட்டு, அந்தக் கொயந்தப் பசங்க எல்லாம், இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு தலைவர் CHARISMA வை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.





இந்தோ - சீனம்.

ன்னெடுங்காலத்தின் தேசங்கள். ஆசியாவின் மணிமகுடங்கள். பல்லாயிரம் ஆண்டுகால நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் உறைவிடங்கள். விலை மதிக்கவியலா இளம் மனிதவளத்தின் நாடுகள். பனிப் பூ பூக்கும் இமயத்தின் இரு குழந்தைகள். காலம் கூறவியலா, கலை ஞானத்தின் செல்வங்கள். வாழ்க்கையை ஒவ்வொரு துளித் துளியாக இரசித்து, உருசித்து வாழ்ந்து வந்த தலைமுறையினர்.

அன்னியர்கள் இடையில் சிக்கிச் சிலகாலம் வாழ்ந்தவர்கள்.

புதிய நூற்றாண்டிற்கான எழுச்சியுறும் ஆசியாவின் பிரம்மாண்ட இளம் சிங்கங்கள்.

இந்தியா. சீனா.

சீனாவின் வீரம் பொங்கும் டிராகனும், பாரதத்தின் சாந்தமும், பெருந்தன்மையும், வலிமையும் நிறைந்த யானையும் எழுச்சியுற்று விட்டன.

இனி உலகை ஆளும் ஆசியா.

பாருங்கள் :

பாரதம் :



வந்தே மாதரம் :



சைனத்திற்கு வரவேற்கிறோம் :

Friday, April 27, 2007

யார் சொல்வது?


ந்தக் கேணியில் ஊறிய நீர் என உனைச் சொல்வது?
எந்தச் செடியில் பூத்த பூ என உனைச் சொல்வது?
பூமியின் எந்தச் சுற்றில் பிறந்தாய் என யார் சொல்வது?

மேகப்பூ தெளிக்கும் மழைத்தேன் என உன் வார்த்தைகளை யார் சொல்வது?

உறைய வெட்டிய வாசப் பன்னீர்த் துளிகளென உன் ஸ்பரிசங்களை யார் சொல்வது?

சிரித்து பேசிய பொழுதுகளில் வரித்துக் கொண்ட அர்த்தங்களை யார் சொல்வது?

கூர்வாள் நுனிகள் உன் கண்களில் வந்தது என்று என்று யார் சொல்வது?

பின்பொரு நாள், விஷப் பூச்சு படர்ந்த வார்த்தைகளை நீ தெளிக்கையில் நான் இறந்து போனேன் என்பதை உனக்கு யார் சொல்வது?

பயணம் - 2.

கொடுங்கனல் எரிகின்ற உள்ளம்! நெடும்பொழுது தனிமையின் நீள் அலைகள் எழும் காட்டாற்றின் கரையில் அமர்ந்திருக்கிறேன்! வெள்ளைப் பனி நிலவு வழிந்து ஊற்றுகின்ற பச்சை இலை மரங்களின் அடியில், உதிர்ந்து விட்ட சருகாக இருக்கிறேன்!

நீள் இரவுகளின் நெடும்பாதையெங்கும் நிற்காமல் பயணிக்கிறேன். உறக்கம் தொலைத்த விழிகள், இமைகள் இழந்து உலையில் கொதிக்கின்ற மீனாகிறேன்.

உள்ளே எரியும் நெருப்பொன்று உருக்கிடும் உயிர்த்துளிகள் உன் பேரைச் சொல்லிச் சொல்லி உதிரும். உறைந்திருக்கும் பாதையில் உன் பாதச் சுவடுகளின் பதிவுகளில் தயங்கித் தயங்கி நிற்கின்றேன்.
கடும்புனல் ஆழி வெள்ளத்தின் கரை காணா பரப்பின் மேல் பேரலைகளால் எறியப்படும் நுரைத் துளியாகிறேன்.

நிலை மாறும், திசை மாறும் பேரண்டத்தின் பயங்கரக் காற்றின் மேல், பெய்யும் பெருமழையின் சிதறும் செம்மண் துளிகள் மேல், கோடானு கோடி வைரத்துகள்கள் ஒட்டியிருக்கும், கரும் இருள் படலத்தின் கீழ், வெம்மை சூழ், பெருவேகப் புவி உருண்டையின் மேல் ஆரோகணிக்கின்றேன்.

தடதடவென், படபடவென இடியிடிக்கும் பேரிடி முன், கீழ்வானெங்கும், கிழித்தெறியும் பெருவெள்ளை ஆயிரங்கர மின்னலின் முன், நடக்கிறேன்.
நெடுங்கதிரின் நீள்விழி எரித்திடும் பார்வையெங்கும் துளைக்கின்ற சுடு நிழலின் சுழல் ஒன்றின் உள், சூன்யத்தின் வெற்றுவெளியின் சுயத்தின் உள், சூறாவளிப் பெரும்புயலின், பேயாட்டம் போடும் சூழலின் முன் எல்லாம் பயணிக்கிறேன்..!
23.FEB.2005.

யார் நாம்?


நிலமாய் நான்!
கடலாய் நீ!

உன்னுள் நானா,
என்னுள் நீயா,
உணரவியலா இயல்பில்
நாம்!

மேலே இயக்கம்
கொண்டாலும்,
உள்ளுள்
அமைதியின் அமைவிடம்
நான்!

அலையிலாப்
பரப்பானாலும்
ஆழத்தில்
ஆயிரமாயிரம்
இயக்கங்கள் நீ!

பின்னிரவுப் பொழுது...!


ச்சகட்டமாக இணைந்து விட்டு, இரண்டு மணி இறந்து விட்டதை, கடிகார முட்கள் முனகின பின்னிரவுப் பொழுதில் விழித்துக் கொள்கிறேன். என் போர்வையைக் குட்டிப் பூனைக்குப் போர்த்தி விட்டு பேகனாகிறேன். ஜன்னலோரம் வந்து, கம்பிகளின் வெளியே என் கண்களைப் பிய்த்து எறிகிறேன்.

பனித்துகள்கள் எல்லாம் பாதைகளில் பந்தல் போட்டுக் கொண்டிருக்கின்றன. பச்சை ஆல்பைன் மரங்களின் இலைகள் வெள்ளைப் பனியால் நிறைந்து இருக்கின்றன. சாலைகளின் ஓர விளக்குகள் சிறு நெருப்புக் குமிழ்களில் சிரிக்கின்றன. கம்பளித் தோலணிந்த சிலர் நடக்கின்றனர்.

பூவிதழ்கள் தென்றலில் மிதப்பது போல், பனித்துகள்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இரவின் மெளனப் போதையில் ஆழ்ந்திருக்கின்றது நகரத்தின் இயக்கமற்ற இருப்பு!
சலனமற்று நகர்கின்ற நதியின் கரைகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கின்றன. அழகான ஒரு படலமாக நதியை நனைத்திருக்கும் பனியின் கீழே, அசைந்து கொண்டே இருக்கும் நீர்..!

விடியலின் விதைகள் விண்ணில் இன்னும் விழாத நிலையில், இருளின் பேராட்சியில் நிசப்தமாய் அமிழ்ந்திருக்கின்றது நகரம். பாலத்தின் மேல் தடதடக்கும் இரயிலின் ஓசையே நகரத்தின் குறட்டையாகத் தோன்றுகின்றது.
வெள்ளை நிலவும் வெள்ளி மீன்களும் நீந்துகின்ற பேரண்டத்தின் பெருவெளியெங்கும் நனைய நனையப் பொழிகின்றது பனிப்பொழிவு!
மஞ்சள் பூக்கள் சிரித்துக் கொண்டிருக்கும் வாசலின் முகங்கள் பனித்திருக்கின்றன. என்னோடு கூடவே வந்து படுத்துக் கொள்கிறது குளிர்!

உறங்குகிறோம்!

பொழிந்து கொண்டே இருக்கின்றது பனி!
நனைந்து கொண்டே இருக்கின்றது நகரம்!

நிழல் நேரம்.


ன் தொலைந்து போன இதயத்தின் சதைத் துணுக்குகளை உன் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டதாக கண்டுவந்த காகங்கள் சொல்லிச் சொல்லிக் கரைந்தன.

என் கண்களைக் கடந்து போன உறக்கத்தை, உன் விழிகளில் கண்டதாகக் கண்டு வந்த சுவர்ப் பல்லி, சொல்லிச் சொல்லி அழுதது.

எனது விடியா பகல் பொழுதுகளை, முடியா இரா நேரங்களை, உன் வீட்டு முற்றத்தில் கண்டதாக கண்டுவந்த வெடைச் சேவல் சலித்துச் சலித்துக் கூவியது.

உன் மேல் அனுப்பிய பார்வைகளை, உன் வீட்டுத் தோட்டத்தின் ஆட்டுக்குட்டிக்கு உணவாய் இட்டாய் என்று உண்டு வந்த குட்டியாடு குழறலாய்க் கூறியது.

உனக்காக நான் செதுக்கிய வார்த்தைகளை, உன் வீட்டுச் செவலைக் காளைக்கு, கழனி நீரோடு கலக்கிக் கொடுத்ததாக , குடித்து வந்த காளை கூறி விட்டுப் போனது.
உனக்காக நிரப்பி வைத்திருந்த கனவுகளை, உன் தோட்டத்தின் ரோஜாச் செடிக்கு உரமாக வைத்தய் என்று, பூத்திருந்த பூ, வாசத்தோடு ஊரெங்கும் பரப்பியது.

உனக்காக நான் மிச்சம் வைத்திருந்த வாணாளை, உன் தோட்டக் கிணற்றடியில் ஊற வைத்த துணிகளோடு, உறைய விட்டாய் என்று, நுரை நுரைத்த நீரில் கலந்திருந்த என் இரத்தத்தின் சிவப்பு சிதைந்திருந்து சிதறியது...!
28.SEP.2004

Monday, April 23, 2007

ஒரு மழை நாளின் இரவில்.


ம் நிழல்கள் மட்டும் பின்னிப் பிணைந்து இருக்கும் மழையிருள் பொழுதில், நீ தூரத்தில்.


நிலவு வெள்ளைப் பொழிவின் பின்புலத்தில் அசையும் தென்னங் கீற்றுகளெல்லாம், மெளன சாட்சிகளாய் நிற்கின்றன. இலேசான குளிர் கலந்த தென்றல் வந்து, ஆடையையும், தோலையும் ஊடுறுவி, எலும்பு வரை கொக்கிப் போடுகின்றது.


காதலோடு கால் வரை வந்து கழுவி விட்டு, நாணத்தோடு நழுவிச் செல்லும் காவிரியின் ஈரம், உடைந்த நீர்க்குழாயின் விரிசலில் தெறிக்கும் துளிகளாய், உன் கண்ணீர் என் கன்னத்தில் பட்டுத் தெறித்த, அந்த நாளை நினைவூட்டிச் செல்கின்றது. ஒளிச் சகதியாய் உயிர் தின்னும் தூரப் பிணத்தின் பிம்பம், நம் இறந்து போன நாட்களை ஞாபகப்படுத்துகின்றது.


தூரத்தில் எங்கோ பெய்யும் மழை கிளப்பும் வாசனை, உன் கரங்களை முகர்ந்த போது, சமீப மருதாணிச் சுவடுகளையும் மீறி அறிந்த, உன் வாசனையை உணர்த்துகிறது!


ஒரு பொழுது, பூங்காவில் அருகில் அரவம் கேட்டு, அரவம் கண்ட போது, உன் பின்னங்கழுத்தில் உதித்த வியர்வைத் துளிகள் இங்கே பூக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பூத்திருக்கின்றன.


நீரால் கனத்த கம்பளிப் போர்வையாய்ப் போர்த்தியிருக்கும் இந்த இருள் என்னை அழுத்திக் கொண்டு எழ முடியாமல் செய்கின்றது.


சோம்பலான மஞ்சள் வெளிச்சத்தில் குளிக்கும் பாலம், கரைகளின் கைகுலுக்கும் கரங்களாய் உள்ளது. பேரிரைச்சலோடு சுழித்துச் செல்லும் நீரோட்டம் ஈரத் தவளைகளின் கரகரப்பைத் தன்னுள் கரைத்துச் செல்லும்!


சுழி அறியுமா என் மனதின் இரைச்சலை?


பின்புற நகரின் வெளிச்சப் புள்ளிகளின் தெறிப்பில், விளிம்புகளை நனைத்து, இருள் பூதங்களாய்ப் பரவி நிற்கின்ற தொடர் மலைகள்! கிளியோபட்ராவின் கடைசிப் பாம்பாய், மலைகளின் மேனியில் தழுவிச் செல்லும் இரயிலின் தடதடக்கும் பெட்டிகள்!


பரவியிருக்கும் பனிப்புகையோடு, விரவிச் செல்லும் இரயிலின் கரும்புகை, ஊர்ந்து போகும் வெளிச்சப் பூரானின் பாதையைக் காட்டுகிறது.


கைகளையும், கால்களையும் இறுக்கக் கட்டிக் கொள்கிறேன். என் மூச்செல்லாம் புகையாய்ப் புனைகிறது, இரயிலின் புகையோடு போட்டியிட்டு!


நமக்கிடையே உறைந்து விட்ட மெளன ரசத்தை உருகச் செய்யும், உன் பார்வைத் தகிப்பின் சூடு தேடி சுருண்டு கிடக்கிறேன்! என் விண்ணப்பங்கள் எல்லாம் விழல் நீராய் விட்ட பின், என் விடியலைத் தான் தூது அனுப்புகிறேன்!


பதிலிடும் வரை,


படுக்கையாய் இருளைக் கொள்கிறேன்!


பார்வையாய் உன் குரலைச் சொல்கிறேன்!


20.FEB.2004

மஞ்சள் பாதை.


ஞ்சள் பூக்கள் நிரம்பி வழிகின்ற பாதையின் நடுவே நாம் நடக்கிறோம். மாலை நேரப் பொன்னொளி இலைகளின் இடுக்குகளில் நுழைந்து நிறைக்கிறது.

எங்கிருந்தோ வருகின்ற , மெல்லிய தென்றல் நம்மையும் தடவிச் செல்கின்றது. லேசான குளிர் அடிக்கின்ற நேரத்தில் கோர்த்துக் கொண்ட விரல்களோடு நடக்கிறோம்.

உன் ஆடையின் நுனிகளிலிருந்து சொட்டுகின்ற மென்னொளியைக் குடித்துக் கொண்டே நடக்கிறது, என் நிழல்.
நம்மிடையே பூத்திருக்கும் மெளனப் பானையை கொத்திக் கொத்தி உடைக்கின்றன, சிட்டுக்குருவிகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள்.
சற்றே காலாற நடப்போம், வருகிறாயா?

முற்றுப்புள்ளியை அழித்து விட்டு, முடிவிலாப் பெருவெளியின் மூலைப்புள்ளிகள் வரை நடப்போம்.

கடற்கரையோர மணலில் கால்கள் புதைய,
கரும்பச்சைக் காட்டின் சருகுகள் நொறுங்க,
உலக உருண்டையின் மேல் குதித்து நிலா போவோம்.
உடையாத நிலாவின் மேல் உலா போவோம்.
நம் பாத ரேகைகளில் பதிந்து செல்லும் பாதைகள், நாடுகளின் எல்லைகளை நகர்த்திச் செல்லட்டும். காலச் சக்கரத்தின் காலடியில் நசுங்கி காணாமல் போவதற்கு முன், காண வேண்டிய எல்லைகளைக் கண்டு கொள்வோம்.

எனதா, உனதா ?


'மது'
என்பேன்
என எதிர்பார்த்து,
'இந்த இதயம் எனதா, உனதா'
என
நீ கேட்ட கேள்விக்கு,
'உனது' என்றேன்,
எனது என்று
எதுவும்
இல்லை
என்றான பின்பு.

காதலுக்குள்.


விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
நத்தைக் கூட்டைப் போல்
நான்
உன் காதலுக்குள்.

நீ..?


கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா
நீ..?

கருணை கொள்ள காரணம் தேடுகிறீர்களா..?


Dont let the emptyness
causes you to be missed!

Dont let a word
shows the joyness of speech!

Dont let a silence
breaks the eternity of relation!

Dont let a war
shows the value of peace!

Dont let a shadow
shows the presence of light!

Please, dont let a death
shows the present of life!

Are you searching for a reason
to be kind...?*

Look Around...!


***
*Are you searching for a reasonto be kind...? - These lines are taken from ARR's new album.

வசந்த்.

Sunday, April 22, 2007

கவித.

















காகம்
கல்லைப் போட்டுத்
தண்ணீர்
குடித்தது..!

னிதன்
கள்ளையே
தண்ணியாய்ப்
போடுகிறான்!!!


ஆஹா கவித...! கவித..!

பயணம் - 1


றைந்து போன காலத்துளிகளின் காட்சிகளின் இடையே, கடக்க வேண்டிய பொழுதுகளில் கண் தொலைக்கிறேன். மஞ்சள் ஒளி நனைத்து வழிகின்ற பச்சை இலைகளின் விளிம்புகள் எங்கும், நுரைத்துப் பொங்கும் வெயிலின் வெம்மையில் அசையாக் காற்றைச் சுவாசித்து நடக்கிறேன்.

உயர்ந்து நிற்கும் பூதங்களாய், ஆயிரம் கரங்களாய்க் கிளைகளால் ஆர்ப்பரிக்கும் விருட்சங்களின் இடைவெளியெங்கும் புகுந்து, புகுந்து நடக்கிறேன்.

ஈரப்பட்டைகள் உதிர்ந்து, உறிந்து நிற்கும், பழுப்பு நிறச் சட்டைகளின் உள்ளே ஊறுகின்ற, கோடி கோடி எறும்புகளின் ஊர்வலத்தால் நிரம்பிக் கிடக்கின்ற பெருமரங்கள் என்னை வரவேற்கின்றன.

சமீப ஊழிக் காற்றின் ஊர்த்துவத் தாண்டவத்தால் உருக்குலைந்து போன மொட்டை மரங்கள் உதிர்த்த சருகுகளின் உடலெங்கும் மிதிக்க மிதிக்க நடக்கின்றேன்.

தொடர்மழையின் பெய்தல் எங்கும் பொறித்து விட்டுப் போன, மின்னலால் பொறிந்த, கருங்காட்டின் நிழல் எங்கும், கருமை போர்த்திய கருக்கல் பொழுதில், நிசப்தமான அமைதியைக் கலைத்துக் கலைத்து நடக்கின்றேன்.

படம் உதவி : http://mjgradziel.com/pct/rain_forest.jpg