Friday, June 15, 2007

கைபேசிக் காதல்.



தொட்டால்
சிணுங்கும்
உனைப் போலின்றி,
தொடச் சொல்லி
சிணுங்குகிறது
உன் கைபேசி...!

தனித்து விடுகையில்,
எடுத்துக் கொள்ளச்
சொல்லி
அழுகின்ற
குழந்தை போல்,

அடிக்கடி
அழுது,
உன்னை அழைக்கிறது.

அன்பாய் அள்ளிக் கொண்டு,
மென் கன்னங்களில்
நீ
உரசிப்
பேசத் தொடங்குகையில்,

பட்டன் பற்கள்
எல்லாம்,
மினுமினுக்கச்
சிரிக்கிறது.

யுகம் யுகமாய்ப்
பேசியும்
தீராத
வார்த்தைகள்
கொண்டு
நாம் பேசும் போது,

மின்நரம்பின்
ஊடாகக்
கடந்து
பாய்கின்றது,
நம் அன்பு!

முன்னொரு நாள்
நாம்
சேர்ந்திருக்கையில்,
கனைத்து
நமக்குள்ளிருந்த
வெட்கத்தை
வெளிக் கொணர்ந்தது.

பின்னொரு நாள்
நாம்
பிரிந்திருக்கையில்,
கதறி,
நமக்குள்ளிருந்த
காதலை
நமக்கே காட்டியது.

No comments: