Friday, June 22, 2007

தூறல் போடும் மேகங்கள்.



டசடவென அடித்துப் பெய்கின்ற மழையில் நனைந்து நடந்திட ஆசை.

கிடுகிடுவென இடிக்கும் இடியின் ஒலி தீண்டுகையில், 'அர்ச்சுனா.. அர்ச்சுனா' என்று அரற்றிட ஆசை.

பெரும் பிரவாகமாய் சாலை ஓரங்களில் நிறைந்து ஓடும் பழுப்பேறிய நீரில், 'சலப்.. சலப்' என சத்தம் வர குதித்திட ஆசை.

கடைக்கண் பார்வையிடும் கன்னிக் கண்கள் போல், சாய்ந்து பெய்யும், நீர்த் தாரைகள், முகத்தில் அறைந்திட சைக்கிளை ஓட்டிச் செல்ல ஆசை.

மேற்குத் தொடரின் முகடுகளைத் தாண்டி வரும் கரும் மேகங்களின் வடிவங்களில், எதையெதையோ தேடித் தேடித் தேய்கின்ற நேரங் கழிக்க ஆசை.

கீழ்த் திசையில் கிளம்புகின்ற கோடி வெளிச்ச மின்னலின் கரங்களைப் பிடித்து, சுழித்தோடும் காவிரியில் இறங்கிட ஆசை.



துளி விழுந்ததும் தொலைந்து விடுகின்ற மின்சாரத்தைத் தின்னும் ஒற்றை மெழுகைப் பிடித்தவாறு தோட்டம் பக்கம் சென்று வர ஆசை.

காய்ந்த மண்ணெல்லாம் உறிந்து கொண்ட பின், சேறும், சகதியுமாய் நிறைந்திருக்கும் தோட்டம் முழுதும், 'சத.. சத' வென நனைந்து நடக்க ஆசை.



'பொட்டு ..பொட்டு'டென கொட்டிக் கொண்டிருக்கும் பெருந்துளிகளை சரிக்கட்டி, சரிந்து ஓடச் செய்யும், வீட்டின் ஓட்டின் மேலிருந்து ஊற்றுகின்ற நீர்த்தாரைகளை உள்ளங்கைகளில் ஏந்திக் கொள்ள ஆசை.

பகலின் வெம்மையை அணைத்துத் தன்னுள் கரைத்து, நனைத்துப் போகும் தெருவின் சாலைகளில் வழுக்கிக் கொண்டு விளையாட ஆசை.

சாலையின் பல்லாங்குழி மேடைகளின் குழிகளை நிரப்பிச் செல்லும் மழையின் குளங்களில் குதித்து தெறித்திட ஆசை.



பெருமழை பெய்து ஓய்ந்த பின், சாலையெங்கும் சிதறிய குப்பைகளைச் சாக்கடையில் தள்ளும் அம்மாவின் கைகளால் காபி குடிக்க ஆசை.

கடந்து விட்ட கதிரின் மிச்சத் துளிகளால் சுடரும், தள்ளுவண்டியில் சூடான பஜ்ஜி தின்ன ஆசை.

குடையோடு நனைந்து வீடு திரும்பிய பின், மனதில் பெய்கின்ற மழையில் நனைகின்ற ஒரு கனவுலகத்தில் கண் விழிக்க ஆசை.

2 comments:

PPattian said...

அந்த மூன்றாவது வீடியோ அப்படியே மனதை நனைத்து விட்டது. மழையை படம் பிடிக்கும் எண்ணம் அற்புதம். யார் எடுத்தது?

சின்ன சின்ன ஆசைகளை தெரிவிக்கும் உங்கள் வரிகளும் அருமை.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸார்... தங்கள் வருகைக்கு நன்றிகள்...

//
மழையை படம் பிடிக்கும் எண்ணம் அற்புதம். யார் எடுத்தது?
//

நானில்லை ஸார்... மழையின் அருமை தெரிந்த ஒரு மலையாள சகோதரர் எடுத்தது போல்... யூட்யூப்-ல் பயணித்த போது கிடைத்தது...

//
சின்ன சின்ன ஆசைகளை தெரிவிக்கும் உங்கள் வரிகளும் அருமை.
//

மிக்க நன்றிகள் ஸார்...