Friday, February 01, 2013

பேரன்புடையவன்

பிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே?

மல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா?

மோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை?

ரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன!

பன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா?

துயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா?

அந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்? கிடையாது.

கடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.

இந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்?

இங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்?

பகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே ! இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே!

கரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.

No comments: