Thursday, January 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.12.


குறுவாளின் நுனிநாணும் விழிகொண்டு வந்தாய்!
குறுந்தோகை நனிகாணும் நிறம்கொண்டு வந்தாய்!

சிறுமுருங்கை மரம்போலே தோள்கொண்டு வந்தாய்!
சிவப்பான பழம்போலே முகம்கொண்டு வந்தாய்!

வளைந்தாடும் மலைபோலே இருபுருவம் கொண்டாய்!
வளையாத வாள்போலே ஒருநாசி கொண்டாய்!

கலையாத கனிபோலே இருகன்னம் கொண்டாய்!
களியூறும் செழிப்பாலே இருவிதழ்கள் கொண்டாய்!

சறுக்காத வழிபோலே பனிக்கழுத்து கொண்டாய்!
சலிக்காத மதயானை இருமார்பு கொண்டாய்!

முளைக்காத கொழுந்தாக இருகூர்மை கொண்டாய்!
முழுதாகச் சுவைக்காத இருவமுது கொண்டாய்!

(வேறு)

சரியாத பெரும்பாறைச் சிலையொட்டி நிற்க
சரியாகக் குறும்பாறை அதன்மேலே நிற்க
வரையாத இருவட்டக் குமிழ்நுனியோ நிற்க
வனையாத தழல்மூச்சு அதைச்சுற்றி நிற்க

இணையாத ஒருபாதை இடையினிலே ஓட
இணையான இருமதலை இறுக்கங்கள் கூட
இனிமைத்தீ அனலோடு அருகினிலே வாட
இனிக்காத எச்சில்நதி தீராது நாட

(தொடர்)



பிறக்காத நிழல்களுக்குள் பதுங்கி வந்த இருள் நீ!
பிதற்றாத மொழிகளுக்குள் மிதந்து வந்த பொருள் நீ!

திறக்காத கதவுகளைத் திறக்க வந்த கரம் நீ!
திகட்டாத உதடுகளைச் சுரக்க வந்த சுரம் நீ!

இமையாத இரவுகளில் இணைக்க வந்து படர் நீ!
அமையாத உறவுகளில் அணைக்க வந்த சுடர் நீ!

மதுப்பார்வை உருக்க வந்த ஒரு கள்ளிமலர் நீ! என்
மனப்பாறை பிளக்க வந்த சிறு மல்லிச்செடி நீ!


No comments: