Sunday, February 19, 2017

செஞ்சுடராழித்துளி.



ப்ரியவதனி,

தேன் துளிர்த்திருக்கும் பல்லாயிரம் மலர்களில் எம்மலர் உன்னைச் சுமந்து கொணர்ந்து சேர்க்கும் என்னிடம்? ஈரம் குளிர்ந்திருக்கும் பலநூறு மேகங்களில் எவ்வொன்று உன்னைக் குளிர்விக்கும்? மனதேவதையே, உன் சிறகுகளில் பொத்தி வைத்திருக்கும் மெல்லிய கதகதப்பில் என்னை இழுத்தணைத்துக் கொள்வது எப்போது? மதுர மொழி பேசும் உன் அதரங்களில் ஆழ்ந்து அணைவது என்று?

தண்ணூறும் கேணியில் நீர் சேர்ந்து விளிம்பில் தளும்பும் சரத்கால முகில்களில் மென் மின்னலைக் கோர்த்து நீ உதறும் வெள்ளித்துளிகளில் நனைவது எந்நாள்?

பொன்மான் கொம்புகளில் சிக்கிக் கொள்ளும் மல்லிகைக் கொடியில் நிறைந்திருக்கும் சிறுமொக்கு மலர்களின் மணம், கொம்பு துழாவும் திசைகளெல்லாம் தன்னைப் பரப்பித் தானும் நிறையும் போல், உன் சொற்களில் என்னை அழைத்து பெயருக்குப் பொருள் தருதல் எக்காலம்?

இல்லையென ஒரு நாளும் உள்ளதென ஓர் இரவும் இப்புடவியைத் திருப்பித் திருப்பி விளையாடல் போல், பார்வையைத் திருப்பியும், பார்த்தலைத் தவிர்த்தும் புரட்டிப் போடுகிறாய். குளிர்க் குருதியில் குறுமுட்கள் குத்திக் கிழிக்கும் பொழுதுகளில் உன் படுக்கையில் நீ கவலையின்றி உறங்குகின்றாய்.

நதியின் ஆழிருளில் பாசிகள் வளரும் பாறைகள் யுகயுகமாய்க் கிடத்தல் போல், மனக்குடிலின் கூரை மேல் உன் விழிகள் பதியன் போடும் புள்ளிகளில் எல்லாம் தேன்பூச்சிகள் சுற்றுகின்றன.

பெய்யும் பெருமழைக்கு கரும்பாறைக்கடியில் குடைபிடித்து அமர்ந்து கொண்டு, வெறுங்கை நீட்டிக் குவித்துச் சிறு துளிகளைச் சேகரித்து தாகம் தணிக்கிறேன்.

பனிக்காற்றுக்குப் பதுங்கிக் கொள்கின்ற வெண்கரடி உள்ளம் உனது; தேடித் தேடிக் கொணர்ந்த வர்ணக் குடையை விரித்துக் கொண்டு நீர்க்கரைகளில் காத்திருக்கிறேன், உன் காலடித்தடங்களை மஞ்சள் பூக்களால் அலங்கரித்து.

(PIC: http://data.whicdn.com/images/22354922/original.jpg)

No comments: