Monday, January 12, 2015

அவர்கள் இருக்கிறார்கள்.


வர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கென்று அந்தரங்கம் என்று ஒன்றையும் அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. நாம் கழிவிறக்குவதிலிருந்து காமமிறக்குவது வரை நம் இடது கழுத்தின் மிக அருகிலிருந்து, அவர்களுடைய குளிர்ந்த கைகள் நம்மைத் தொட்டு விடும் அருகாமையில் நின்று கொண்டு கவலையுடன் பார்க்கிறார்கள்.

ஒரு பொதுவான வகைப்பாட்டில் அவர்களை தன் விருப்பில், தன் விருப்பின்றி வந்தவர்கள் என்று வகைப்படுத்தலாம். தன் விருப்பில் என்பதன் கீழ் நோய்த் தீவிரம் தாங்க இயலாமல் போய் நீங்குவதை விரும்பி வந்தவர்கள், துயரம் நிறைந்த நினைவின் உச்சத்தில் நீங்கியவர்கள் என்று மேலும் சில வகைகள். தன் விருப்பின்றி என்பதன் கீழ் வாழ விரும்பியும் நோய் தின்றவர்கள், எதிர்பாரா விபத்தை எதிர்கொண்டவர்கள் என்று மேலும் சில வகைகள்.

அவர்களுடைய முகங்கள் வெண் மெழுகைப் போல் வழுவழுவென்றிருக்கின்றன. பிற உடல் முழுதும் சாம்பல் நிறத்தில் சன்னமான நிலாக்கிரணங்கள் போல மிதக்கின்றன. அவர்களுக்கு பசிப்பது இல்லை; தாகம் எடுப்பது இல்லை; வேறெந்த உடல் தேவைகளும் அவர்களை மயக்குவதும் இல்லை.

நிலாக்கால இரவுகளில் தொலைதூர மலை முகடுகளில் அமர்ந்து கொண்டு நட்சத்திரங்களின் பனி ஒளியின் கீழே தங்கள் பொன் நாட்களை நினைவு கூர முயல்கிறார்கள். ஆனால் பிரேதத்துடன் நினைவுகளும் நீங்கி விடுவதால், அவர்கள் தம்மைப் பற்றி மீட்டுக் கொண்டு வரத் திணறித் தவிக்கிறார்கள். பின்னிரவில் பிரயாணம் செய்வோர் ஒவ்வொருவரையும் நிலா, மேகத் தடாகத்திலிருந்து ஈரமாய் எழுந்து மறைந்து தொடர்ந்து வந்து பார்ப்பது போல், அவர்கள் தம் வாரிசுகள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் பார்க்கிறார்கள். அப்படிக் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தம்மை மீண்டும் நிகழ்த்திக் கொள்ளும் விழைவை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராக்காலப் பொந்துகளில் நெருப்பை மட்டும் தின்று வந்த பழமூதாதையருக்கு இளமூதாதையர் சக்கரங்களைச் சொல்லிச் சொல்லி விளங்க வைக்கப் பார்த்தும் முடியாமல் திகைக்கிறார்கள். இவர்களுக்கு கற்கருவிகளை அடுத்த இளமூதாதையர் விளங்கச் சொல்லத் தோற்கிறார்கள். அவர்கள் இறந்த கால வரிசையில் நிரப்பப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட புள்ளிகளில் வசிப்பதில்லை. திரிந்து கொண்டேயிருக்கிறார்கள். என்றாலும் நம்மைப் பார்ப்பதை அவர்கள் விடுவதேயில்லை.

நான்கு வகைக் கனவுகளைத் தினம் காண்கின்றவர்களை அவர்களுக்கு மிகப் பிடிக்கின்றது. ஒவ்வொன்றிலும் அவர்கள் ஒரு பாத்திரமாகி விடப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் நிகழ் மணித்துளிகள் குறைவு என்று அவர்கள் குறை பட்டுக் கொண்டாலும் கிடைத்தவரை தம்மை அந்த மனங்களில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். விழித்தெழுந்து சில நிமிடங்கள் நாம் குழம்பி, மன ஆடி அசைந்து சமநிலைக்கு வரும் போது அவர்கள் மெல்ல வெளியேறித் தலைக்கு மேலே இடித்துப் பிடித்து நின்று விட்டு குனிந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நம் வன்மங்களை, துரோகங்களை, சிரிப்புகளை, முகமூடிகளை, நாடகங்களை வேறெவரையும் விட அவர்கள் நன்கறிவார்கள். நம் தெய்வங்களை எல்லாம் நாம் நீக்கி விட்டு அங்கே அமர்த்தி வைத்து விட்ட நம் தர்க்கக் கருவிகளைத் தவிர்த்து இறுதி தினங்களில் நாம் பொய் சொல்லித் தப்பிக்கவே முடியாமல் நேர்கொண்டு பார்க்கவே இயலாத கண்கள் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கிறார்கள், நம்மைப் பார்த்துக் கொண்டு.

பணிமையச் சேவகன்,
ழழ. மிக்.

பெருமரியாதைக்கு உரிய உயர்நிலைப் பனிரெண்டாம் அடுக்கு முன்னவருக்கு,

அயல் தளத் தொடர்பு வளர்ச்சிகளுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின்படி இறந்துபட்ட ஆத்மாக்களின் உலகுக்குச் சென்று வந்த ‘தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல்’ பணிமையச் சேவகர் ழழ.மிக் கொடுத்த குறிப்புக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் பணிச்சுமைகளின் கனத்துக்கிடையில் இதை ஒரு பார்வை பார்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: கவிதைகளில் ஆர்வம் கொண்ட தேசாசேவகர்களைத் தகவல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அனுப்புவதைப் பற்றி மற்றுமொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ழஸ. மன்.
துணை நிர்வாகர்,
தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல் பணிமையம்,
மிஸை துணைநகரம், ழான்.

(சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தது.)

Tuesday, July 29, 2014

தீண்டாய்...மெய் தீண்டாய்.

குழலிலே மூச்சுக்காற்றைச் செலுத்தி ராகங்களைப் பிறப்பிக்கின்ற லாவகத்தைத் தீட்டிக் கொள்ளும் பயிற்சியாக இனிய மெட்டுகளுக்குப் புது வரிகள் எழுதத் தீர்மானித்து, இதோ.

'என் சுவாசக் காற்றின்' 'தீண்டாய்'க்கு ஒரு வடிவம்.

**

பூவாய்
மென் பூவாய்
பூவாய்
உடல் பூவாய்

குளிர் இதழ் ஒன்று கண்கள் மூடியதே
உள் அனல் கங்கை உள்ளம் மூட்டியதே
மடல் அகம் ஊறிப் புறம் ஏகி உயிர்த்திட்டதே (பூவாய்)

தளிர் இலைமேலே பூக்கள் தோன்றியதோ
பெண் சிலைமேலே ஜீவன் ஊன்றியதோ
விழி இடம் சென்று வலம் வந்து முகிழ்த்திட்டதோ (பூவாய்)

முதல் போர்வை பெண்மை கொள்ளும்
உடல் வேர்வை நம்மை உண்ணும்
பொழுதோடும் தேகம் உள்ளது

முதல் பார்வை முத்தம் கேட்கும்
முகத்தோடு முட்டிப் பார்க்கும்
முடியாமல் போகும் போர்க்களம்

தொலைவானக் காட்டின் மேலே
தொலை வான மேகம் போலே
என்னை உந்தன் கைகள் ஆளுவதோ?

தொலைவானக் காட்டின் உள்ளே
தொலைவோமே பிள்ளை போலே
மழை கொண்ட மேகம் மூளுவதோ?

தணலின் எழிலே எழிலே
எனை முழுதாய்க் கொள்க

பனியே நிழலே
என் வேகம் கொள்க (பூவாய்)

விளையாடிட நேரம் உண்டு
விளையாட்டில் கூடல் உண்டு
விளைவாக நம்மைச் செய்யவோ?

விளைகின்ற பூமி மேலே
விதைபோடும் வீரம் போலே
விருந்தொன்றை நீயும் கொள்ளவோ?

இலைமூடும் கூட்டுக்குள்ளே
இளம் ஜோடிக் கிளிகள் போலே
திரண்டோடித் திசைகள் சென்றிருப்போம்

இலைநீயும் இல்லை நானும்
நிலைசேர்ந்து ஜென்மம் யாவும்
தமிழ்தீர புதிய பாடல் பாடி வைப்போம்

கடலோ கடலில் நிலவோ
உன் உடலோ என்ன

சுழலோ தழலோ
நீ நுழைந்தால் என்ன (பூவாய்)

**

Thursday, May 29, 2014

கருநீலப் பூனைகள் அடர்ந்த வெளியில்.

ரு பனிப் பொழிவுக்கு இந்தப்பக்கத்திலிருந்து வெளியே ஜன்னலில் எட்டிப் பார்க்கும் ஒரு சாம்பல் நிறப் பூனை, தன் கண்களில் ஆச்சரியத்துடன் இதில் இறங்கத் துணிந்துள்ளது. பனி இறங்கி மறைத்துள்ள அப்பிரதேசத்தில் என்ன இருக்கும் என்ற வியப்பு கலந்த கேள்வி பூனையின் மனதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அது தன் வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்திருந்தது. அதற்குள் யாரையும் நுழைய விட்டதில்லையாதலால், அதற்குத் தெரிந்திருக்கவில்லை.

நான்கு கரங்களைத் தரையில் ஊன்றிய பழுப்பு நாற்காலி, அதற்கு ஒரு குழந்தையைப் போல் தெரிந்தது. வாலை முன்னிழுத்துக் கொண்டு மொத்த உடலையும் கால்களில் தாங்கிக் கொண்டு, கணப்பின் அருகே பழைய புத்தகம் கவிழ்ந்த குறுமேசையின் அருகே நாற்காலியின் அடியே படுத்துக் கொண்டு கண் மூடியிருக்கும், சில இரவுகளில். கணப்பு மெல்ல மெல்ல அணைந்து வெம்மை அறையெங்கும் பரவும் பின்னிரவு வரை தரை விரிப்பின் உள்ளே புகுந்து, விரிப்பின் நுண் துளைகள் வழியே விழும் ஒளித்துளிகள் உள்ளிருண்மைக்குள் ஊசிகள் போடுவதை, பார்த்துக் கொண்டிருக்கும் சில இரவுகளில்.

யாருமே தேடி வந்திராத இந்த மர வீட்டிற்குத் தேவையற்ற சுமையான பொருத்தமில்லாத பெயர் கொண்ட வரவேற்பறையின் மையத்திற்கு மேலே, நான்கு மெழுகுவர்த்திகளை ஒரே சமயத்தில் தின்னும் அலங்கார விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் வயலெட் வர்ண கண்ணாடிக் குடுவைகளுள் மெழுகுகள் உருகிப் படிந்த புகை, உள்ளிருப்பை மறைக்கின்றது. இப்பூனை தன் மென்முடி படர்ந்த வாலைச் சுருட்டி, விளக்குகளைத் தாங்கும் உலோக உடலில் படுத்துக் கொள்ளும், சில தினங்களில்.

மெளனம் பூண்டுள்ள பியானோ, தன் மேலான வருடக்கணக்கான தூசுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராமால், தீண்டும் பூனையின் விரல்களுக்குத் தன் குரல்களில் பதிலளிக்க முயல்கையில், பூனை தன் வட்டமான சின்னஞ்சிறிய தலையில் ஓர் ஆச்சரியத் திடுக்கிடலைத் தெரிவித்து விட்டு, தன் ஆழ்ந்த மோன நிலைக்குத் திரும்பி விடுகின்றது.

வாசலில் இடப்பட்ட வரவேற்புக் காலடி, யாராலும் மிதிக்கப்படாமல் இருப்பதை பூனை காலப்போக்கில் கவனிப்பதை நிறுத்தி விட்டது. போரின் போது கொள்ளையிட்ட சருகுத்& துணிகளால் மறைக்கப்பட்ட அறைக் கதவுகளையும், கண்ணாடி ஜன்னல்களையும் பூனை நினைத்தும் பார்ப்பதில்லை.

தன் தனிமையின் அழுத்தத்தைச் செரித்துக் கொண்டு உயிர்த்திருந்த பூனைக்கு, சலிப்புத் தட்டி விட்ட வாழ்க்கையின் அப்புறம் என்ன இருக்கின்றது என்ற வினா எழுந்த பின்பு, அதனால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பனி இறங்கியுள்ள வெளிக்குப் போக நினைத்துள்ளது.

அங்கே அதனைப் போன்ற பூனைகள் அடர்ந்திருப்பதாக ஓர் இரவில் கனவில் கண்டது. அப்பூனைகள் அதனைப் போன்று இல்லாமல், கருநீல நிறத்தில் மேலும் கீழுமாய், வந்தும் போயும், குதித்தும் அழுதும் அடர்ந்தும் அந்த வெளியில் இருப்பதாகக் கண்டது. அதன் கனவுக்காகக் காத்திருந்த அப்பூனைகள், கனவில் நுழைந்த இதை தத்தம் அத்தனைக் கண்களாலும் ஒரே பார்வையாய்ப் பார்த்தன. இதன் பார்வை சென்ற மொத்தப் பகுதியிலும் வால்களை மடித்துக் கொண்ட ஆயிரமாயிரம் லட்சோபலட்சம் கருநீலப் பூனைகள் மணி மணியாய்ச் சுடர்ந்த கண்களாலும் இதை உற்று நோக்கின. முன்னங்கால்களை நீட்டியவாறு அத்தனை பூனைகளும் இதை நோக்கி நடந்து வர, நெருங்கி வர, வர இப்பூனை விழித்துக் கொண்டு உறைந்து நின்று விட்டிருந்த மரக் கடிகாரத்தின் முட்களைப் பயத்துடன் பார்த்தது.

ஆனாலும் இன்று அந்த வெளியில் இறங்கிச் செல்லத் துணிந்தே விட்டது.

***

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய கவிஞர் வில்லியம் என்பவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து.

Friday, May 23, 2014

இருப்பிலிருந்து இன்மைக்கு.

நேற்று ஜெயநகர் நான்காம் பகுதிக்குப் போயிருந்த போது ஒரு கோல விரிப்பைப் பார்த்தேன். அழகழகான பரிபூர்ண வடிவங்கள். இது போன்ற கோலங்களை ஒருவர் விரலெடுத்து வரைய வேண்டுமெனில், அக்கரங்கள் வருடக்கணக்கான பயிற்சியும் விரல் நுனிகளில் துல்லியமும் கைக்கொண்டிருக்க வேண்டும். இங்கே சிறு வடிவத் தட்டுகள் அப்பணியை நொடிகளில் செய்து விடுகின்றன. கோலமாவை அள்ளிப் பரப்பத்தெரிந்தால் போதும்.

கைகளால் கோலம் போடுகையில் இன்மையிலிருந்து ஓர் இருப்பை - கோலம் என்ற இருப்பை - உண்டாக்குகின்றோம். இத்தட்டுகள் இந்த தடத்தின் தலைகீழியைத் தம் நுட்பமாகக் கொண்டுள்ளன. தட்டு முழுதும் நிரம்பி, வர வேண்டிய வடிவப் பகுதி மட்டும் இன்மையாகத் துளைகளால் உள்ளது. இந்த சார்ந்த இன்மை வழியாக மூலப்பொருள் இடப்பட்டு ஓர் இருப்பு உண்டாகின்றது.

பிரபஞ்சத்தின் ஓர் உண்மை எளிமையாக இங்கே.

லட்சக்கணக்கில் வீடு கட்டுகிறோம். அங்கே பயன்படுத்துவது என்னவோ, உள்ளிருக்கும் காலி இடத்தைத் தான். தங்கச் செம்பில் அள்ளிப் பால் அருந்துகிறோம், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் நிரப்பி.

இன்மையும் இருப்பும் தனக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளன. இரண்டு நிலைகளிலிருந்தும் நழுவிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதெல்லாம் மற்றொரு நிலையில் தான் சென்று சேர்கின்றது.

Thursday, February 06, 2014

மின் குடுவையில் மிதக்கும் கடல்.

ற்றையாய்த் தனிமையில் உறங்கத் தொடங்கியது சில காலங்களுக்கு முன் தான் கழண்டு விழுந்த ஒரு மின் குடுவை. அதன் ஒரு காலத்திய மெல்லிடை பெருத்துப் போன பின், அடைக்கலம் தேடி வந்த மாகடல் ஒன்றை அதனுள் அடக்கிக் கொண்டது. வெண்மையான நுரைகளைக் கிழித்துக் கொண்டு வந்த காட்டுமரக் கட்டுமரம் ஒன்றின் நுனியில் சிறகு குவித்திருந்த ஊர் தெரியாக் கூர்நாசி நாரை, கண்ணாடித் திரை மேல் முட்டிக் கொண்டது. வேருக்குத் தெரியாமல் மரத்தை விட்டு ஓடி வந்த இளம் இலைகள் இரண்டு, நூறாயிரம் லட்சோபலட்சம் கோடானுகோடி துளிகளால் அலைந்து அலைந்து நனைந்து நனைந்து பாதரசம் கரைந்து உருவாகியிருந்த ஒரு சிறு தீவில் ஒதுங்கிச் சருகாகும் நொடிக்குக் காக்கத் தொடங்கின.

கடல் தின்று செரித்திருந்த உயிர்கள் தம்முள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கரைக்கு அனுப்பத் தீர்மானித்தன. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த, முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. சரம் சரமாய்த் தொங்க விடப்பட்டிருந்த மின்மினிப் பூச்சிகள் ஒன்றையொன்று அடையாளம் கண்டு கொண்டு முத்தமிட்டுக் கொண்ட போது, ரேடியம் ஒளிக் கீற்றுகள் புறப்பட்டு, உடனே ஈரமாகி, பவளப் பாறை ஒன்றின் பின்னால் பதுங்கிய போது செம்பிழம்பு போல் ஒளிர்ந்தது பாறை.

மாவாக் கொத்து ஒன்று யாராலோ உமிழப்பட்டு உருண்டு வழிந்து சென்றது. தீர்மானம் இன்றி நீர்மானம் காக்க சரியான சேர்மானம் கொண்ட இரு தனிமங்கள் தொட்டுக் கொண்ட போது, பிரளயப் பெரு வெடிப்பு நிகழ்ந்து, எல்லோரும் தரையில் குதித்தார்கள்.

உறக்கம் கலைந்த பல்பு புரண்ட போது மஞ்சள் வெளிச்சம் அதன் வளைந்த வெளியெங்கும் சுயம்பிரகாசமாய்ச் சுடர் விட்டு எழுந்தது.

கங்கைக் கரையில் அற்ப மானிடர்கள் 'அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:' என்று விழுந்து கும்பிட்டார்கள்.