Thursday, January 25, 2007

நான் சென்ற நூல் அழகம்.


சென்னையில் இந்த ஆண்டு 30-வது நூல் அழகம் நல்ல முறையில் நடந்து நிறைவுற்றது. ஒரு நாளாவது போய் நூல்கள் அள்ளி வர வேண்டும் என்று நினைத்து, நினைத்து நாட்கள் ஓடிப்போயின. கடைசி நாள்(21.ஜன.2007) தான் போக முடிந்தது. அதைப் பற்றிய ஒரு சிறு பதிவு.

இம்முறை திடல் மிக நன்றாக பரந்து விரிந்து இருந்தது. மேலும் நிறைய ஸ்டால்கள் இருந்தன. எனவே நடந்து முடிக்கையில் கால்கள் போதும், போதும் எனக் கதறியன. விடுவோமா..? வாங்குகிறோமோ, இல்லையோ எல்லா ஸ்டால்களிலும் நுழைந்து விடுவது என்று முடிவு செய்து, அதன் படியே நடந்து கொண்டேன்.

சென்றாண்டு போலவே எல்லாக் கடைகளிலும் இருந்த சில நூல்கள். பொன்னியின் செல்வன், கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் தொகுப்பு, அக்னிச் சிறகுகள், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சேவாஸ் புத்தகங்கள், கவிதை நூல்கள் போன்றன.

இவ்வாண்டு நூல் அழகத்தில் நிறைய பொதுவுடைமை நூல்கள் கண்ணில் பட்டன. சென்றாண்டு நூல் அழகத்திற்கும் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் அவை கவனம் பெறாமல் இருந்திருக்கலாம். காரணம் சென்றாண்டு இறுதியில் தான் வலையுலகத்திற்கு வந்ததாய் இருக்கலாம்.

எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா (இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்), திலகவதி, தாமரை, 'நக்கீரன்' கோபால் ஆகியோரை வெவ்வேறு ஸ்டால்களில் காண முடிந்தது.

நான் வழக்கம் போல் சில தன் வரலாற்றுப் புத்தகங்களும், சுய முன்னேற்ற நூல்களும் வாங்கினேன். படிப்போமா இல்லையா என்பது வேறு. வாங்கி வைத்துக் கொள்வோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.

வழக்கத்திற்கு மாறாக பார்க்க முடிந்தவை சில. கலைஞர் கூடம். நன்றாக இருந்தது. அறிவியல் கூடம். பெரம்பூரில் உள்ள 'மாண்ட்போர்டு' பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு விளக்கம் கொடுத்தது நன்றாக இருந்தது. ஆனாலும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாம் குழந்தைகளை! மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அங்கு எடுத்த சில நிழற்படங்கள் இங்கே:

Sunday, January 14, 2007

உன் முகம் தொட்டு...!


உன் முகம் தொட்டு வழித்துக் கொண்ட வெட்கம் நிறைந்த என் கைகளை என்ன செய்வது? முத்தமிட்டு ஒற்றிக் கொள்! உன் உதடுகள் இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்!

உன் வழி பார்த்துக் கருத்த என் விழிகளை நான் என்ன செய்வது? எடுத்துப் பூசிக் கொள்! உன் கூந்தல் இன்னும் கொஞ்சம் கருக்கட்டும்!

காற்றோடு தேடிப் போய், என் காற்சட்டையில் நான் சேர்த்து வைத்திருக்கும் உன் கொலுசொலிகளை நான் என்ன செய்வது? உன் வார்த்தைகளுக்கு வர்ணமிட்டுக் கொள்! உன் குரல் இன்னும் கொஞ்சம் இனிக்கட்டும்!

என் கனவுகளில் வந்து கையசைத்துப் போன, உன் வளையொலிகளை நான் என்ன செய்வது? வந்து வாங்கிக் கொள்! என் கனவுப்பை காலியாகட்டும்!

உருத் தெரியா முன்னிரவில், உன் உள்ளங்கை ரேகைகளில், ஒளிந்து கொண்ட என் விரல்களை என்ன செய்வது? ஒடித்துக் கொள்! என் கைகளின் கொம்புகள் உடைந்துப் போகட்டும்!

உனக்காகப் பூத்திருக்கும் மலர்களைப் பூஜைக்கு அனுப்பாதே! தெய்வங்களும் துயர்படட்டும்!

வெயில் சாயுங்கால வேளையில், வானத்தின் சாயமாலையில், வர்ணங்களை எடுத்து, பூசிக் கொள்! மழையும் கொஞ்சம் நிறமிழக்கட்டும்!

உன் சிரிப்புகளால் நிறைந்திருக்கும் என் இதயத்தை வாங்கிக் கொள்! அது துடிப்பதிலிருந்து விடுதலை பெறட்டும்!

உனக்காகத் தள்ளி வைத்திருக்கும் என் இறப்பை, உடனடியாக உணர்ந்து கொள்! எது மறந்து போய் விடினும், என் நினைவாவது கொஞ்சம் இருக்கட்டும்...!

எழுதியது : 27.Sep.2004

உடைக்கின்ற செய்தி!


அழகுக் குயில் ஐஸ், Big B குடும்பத்தில் இணையப் போவதாக சில நாட்களாக வந்து கொண்டிருந்த செய்தி தற்போது உண்மையானது. ஆம்.. இன்று Big B இதை உறுதி செய்தார்.



நம்ம ஊர்ப் பெண் ஐஸ் பேபி, நல்ல முறையில் குடும்பம் நடத்தி பல குட்டி ஐஸ்களைத் தர வேண்டும் என்பதே ஒரு ரசிகனாகப் பலரது வாழ்த்தாக இருக்கும் என்று கேள்வி (!!).


காண்க.

Friday, January 12, 2007

குமுதம் - சிம்பு


"இந்த வாரம் குமுதம் இதழைப் பார்த்தீர்களா..?"

"என்ன ஸார்.. என்ன ஆச்சு..?"

"இதோ.. நீங்களே நல்லாப் பாருங்க..இது அநியாயம்..? அக்கிரமம்..?"

"என்ன சார்.. ஒண்ணுமே போடல.."

"உங்க புத்தி போற போக்க பாரு.. குமுதம் கையில எடுத்த உடனே நடுப்பக்கத்துக்கு பாஞ்சிடுவீங்களே..? அட்டையில பாருங்க.."

"அட... ஆமாம்.."

"கேட்க ஆளில்லைனு நெனச்சிட்டாங்களா....இல்ல.. நாம பாத்து வளர்ந்த பையன் தானேனு நெனச்சிட்டாங்களா..?"

"சரி விடுங்க ஸார்.."

நீங்களும் இதைப் பாருங்க.. கீழ சிம்பு படத்தைப் போட்டுட்டு, மேல தமிழ் நாட்டைக் குறிவைக்கும் தீவிரவாதிகள்'னு போட்டிருக்காங்க...



"ஏதோ கொழந்த அமெரிக்க எல்லாம் போயிட்டு வந்திருக்கு..."



"நயன் தாராவைப் பிரிஞ்ச சோகம் இருக்கும் தான்.. அதனால கொஞ்சம் கோக்கு-மாக்கா தலைக்கு எல்லாம் ப்ளீச்சிங் எல்லாம் பண்ணிட்டு வந்திருக்கு போல... அதை இந்த குமுதம் பயலுக இப்படியா நக்கலடிக்கிறது... பாவம்யா.. அவன் பச்ச மண்ணுய்யா... அதைப் போயி... என்னமோ போங்க மனசுக்கு தாங்கல.."

Thursday, January 11, 2007

எப்போதும்!


எப்போதும்
மூன்று
காலியிடத்துடன்
இருக்கிறது
ஆறு பேருக்கான
அலுவலகக்
கழிப்பறை.

இந்தக் கவிதை (?!) எங்கே தோன்றியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.