பிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே?
மல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா?
மோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை?
ரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன!
பன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா?
துயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா?
அந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்? கிடையாது.
கடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.
இந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்?
இங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்?
பகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே ! இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே!
கரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.
Friday, February 01, 2013
அன்புள்ள மரணத்திற்கு
அன்புள்ள மரணத்திற்கு,
நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.
பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.
உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.
நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?
குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?
உன் வயது என்ன?
நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!
உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.
ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.
உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?
***
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.
நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.
பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.
உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.
நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?
குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?
உன் வயது என்ன?
நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!
உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.
ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.
உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?
***
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.
Friday, December 28, 2012
...மற்றும் சில லிமெரிக்குகள்.
பறந்த பறவையை விலகி ஒரு சிறகு
மிதந்த காற்றுடன் அதற்கோர் உறவு
நீரில் நிழல் போல நீந்தி
வெளியின் நுண் கரங்கள் ஏந்தி
நிலம் தொட்ட சில நாளில் ஆனது ஒரு சருகு.
***
நிழல் கரும் இருளின் தூதன்
நீங்காமல் வரும் உடலின் மீதன்
ஒளி தடவினால் தெரியும்
எதிர்த் திசையிலே சரியும்
அருகாமை விளக்கடியில் பூதன்.
***
மேகம் தொட்டு ஒளிர்ந்தது ஒரு மின்னல்
முட்டி மோதிச் சுழன்றது மின் பின்னல்
தெருவெல்லாம் நீராகும்
செம்பழுப்புச் சேறாகும்
முன்னம் அடைந்தன சில ஜன்னல்.
***
போகாத பாதை காணாத காட்சி
பார்த்தபின் எதற்கு மனை மாட்சி
கேள்விகள் பிறந்தன
கதவுகள் திறந்தன
புத்தனாய் ஆனபின் சொன்னது மீட்சி.
***
சமுத்திரப் பேரொலி சிறு சங்கில் கேட்கும்
சாம்ராஜ்ய சந்தோஷம் வங்கில் கேட்கும்
ஈராயிரப் பண்பாடு
ஈந்த ஈந்த நற்பாடு
குறளெனும் இருவரிச் சொல்லில் கேட்கும்.
வங்கு :: பெருச்சாளி பூமியில் பறித்து வசிக்குமிடம்.
ஒரு sevenling:
ஆகாயத்தில் மிதக்கின்றன
நிலா, வலசைப் பறவைகள்
ஒரு உள்நாட்டு விமானம்.
கைகளில் கவிதைக் காகிதம்,
வரவேற்புப் பூங்கொத்து,
கடன் விவரங்கள்.
எது முதலில் விழுமோ?
Monday, November 26, 2012
இராதா மது.
மலைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது? தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ?
என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?
தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?
உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?
எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?
கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?
சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?
கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.
குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.
காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.
காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.
இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?
என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?
தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?
உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?
எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?
கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?
சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?
கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.
குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.
காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.
காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.
இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?
Thursday, September 20, 2012
மேற்கில் பொழிந்த நதி! (A)
மூடுமேகங்கள் விரைந்து செல்கின்றன. வனத்தின் பச்சைப் பந்தல்களில் முன்மாலைப் பனித்துகள்கள் போர்வையிடுகின்றன. நிலா முற்றத்தில் வெட்கிச் சரியும் தாவணிப் பெண்கள் போல் எட்டிப் பார்த்து மறைகின்றது. தொலைதூர நட்சத்திரங்கள் தங்கள் கள்வெறி குடித்து மாந்திய கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி வர்ணஜாலம் காட்டுகின்றன. கூடடைந்த சின்னஞ்சிறு பறவைகள் தத்தம் சிறகுகளின் கதகதப்பில் காய்ந்த புற்கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அணைக்கின்றன.
முன் நெற்றியில் வந்து விழுந்த ஒற்றைப் புல் கேசம் விழிகளை மறைக்க முயன்று காந்தள் மலர் விரல்களால் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டன.
புகைப்படலம் எழும்பிப் பரவும் வீடு கொண்ட நங்கை, பாறை மீது மோதி மோதி விலகி விலகிச் செல்லும் நதியின் நுரை போல் தெறித்து அணைந்த வேளையில் சருகுகளின் மேல் தென்றலும் மெல்ல நடை போடுகின்றது.
Subscribe to:
Posts (Atom)
