Monday, September 11, 2006

லாந்தர் விளக்கு.

May 16, 2006.
15:35.


சென்னையின் ஒரு மந்தமான மதியம். காற்றே துளியும் வீசாத, பிற்பகல். வெளியே வந்து மேற்கே பார்த்தேன். கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. உறுதியாய் இன்று மழை வரும் என்று தோன்றியது.

"பூரணி..இன்னிக்கு கண்டிப்பாய் கோவை போயாகணுமா..?" கேட்டேன்.

" நல்லாயிருக்கே கேள்வி. என் சித்தி பையனுக்குக் கல்யாணம். எனக்குத் தம்பி முறை. கல்யாணத்துக்குப் போகணுமானு கேக்கறீங்க. அபி, இவரை என்னன்னு கேளு.." பெட்ரூமிலுருந்து பதில் வந்தது.

"அப்பா.. அம்மா உன்னை என்னனு கேக்கச் சொன்னாங்க.." ஓடி வந்து தாவிக் கொண்டாள், என் சின்னப் பெண் அபிராமி. சரியான் வாலு. அம்மாவுக்குத் தப்பாம பிறந்த குரங்குக் குட்டி.

இந்த தொந்தரவு எல்லாம் எனக்குத் தெரியாது, என்பது போல் டிஸ்னியில் ஆழ்ந்திருந்தது மூத்த பையன், வினோத்.

உங்களுக்கே புரிஞ்சிருக்கும். இவ சித்தி பையனுக்கு 18-ஆம் தேதி, கோவையில் திருமணம். அப்படியே 19 லீவ் எடுத்து விட்டு, சனி, ஞாயிறு ஊட்டி சென்று வருவதாக ப்ளான். நாலு நாட்கள் லீவ் எடுத்ததில் குழந்தைகளுக்கு குஷி தான். எனக்கும் தான். எல்லாரும் ரெடியாகி விட்டது. வழக்கம் போல் அம்மன் அலங்காரம் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது, ரொம்ப நேரமாய்.

"இல்லம்மா.. நல்ல மழை வரும் போல் இருக்கு. அதுதான் கேட்டேன்."

" நீங்க ஏன் கவலைப் படறீங்க. நான் வேணா கார் ஓட்டறேன்.." என்றபடி வந்தாள். வினோத் திரும்பினான்.

"ஆமாப்பா.. இன்னிக்கு அம்மா ஓட்டட்டும். நீங்க ஏதாவது கதை சொல்லிட்டு வாங்க. நீங்க தான் நல்லா கதை சொல்லுவீங்க. அம்மா எப்பப் பார்த்தாலும் நாங்க என்னமோ சின்னப் பசங்க மாதிரி,அதே பாட்டி வடை கதை தான் சொல்லுவாங்க" என்றான்.

"அப்பா, பெரிய மனுஷா.. இனிமே உங்க அப்பாகிட்டயே கதை கேட்டுக்கோ. இனிமேல் என்கிட்ட கதை கேட்டு வந்த.." என்று விரலை உயர்த்திக் காட்டினாள்.

"சரி..சரி. சண்டை போடாதீங்க. இன்னைக்கு நான் கதை சொல்றேன். அம்மா வண்டி ஓட்டட்டும்." என்று தீர்ப்பு வழங்கினேன். நான் தான் நன்றாக கதை சொல்கிறேன் என்று, டிஸ்னி ரசிகரே சொல்லிவிட்டதில், அதைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.

அப்படி, இப்படி என்று பொறுமையாக கிளம்பியதில், நாலு மணிக்கு, மாருதியைக் கிளப்பி விட்டோம். நானும், அவளும் முன்புறமும், அபியும், வினோத்தும் பின்புறமும் அமர்ந்து கொள்ள பயணம் தொடங்கியது. சைதையைத் தாண்டுவதற்குள் தூறல் விழத் தொடங்கியது. வாகன நெரிசலிலிருந்து மீண்டு, தாம்பரத்தைத் தாண்டிய பின், பூரணி சீராக ஓட்டத் தொடங்கினாள்.

"அப்பா..அப்பா.. இப்ப கதை சொல்லுங்கப்பா.." என்று சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்தவாறே வினோத் கேட்டான்.

வானம் மேலும், மேலும் இருண்டு கொண்டே வந்தது. சரக்கு லாரிகளும், தொலைப் பேருந்துகளும் மட்டும் சென்று கொண்டிருந்தன. நெடுஞ்சாலையில் இருந்த வாகனப் போக்குவரத்தை, ஓரங்களில் ஒதுக்கித் தள்ளி, மழை சலசலவெனப் பெய்யத் தொடங்கியது.

"இப்ப நான் சொல்லப் போற கதை, நான் உங்க வயசுல இருந்த போது, எங்க பாட்டி சொன்னது. இது கதை கிடையாது. நிஜமாலுமே நடந்ததுனு எங்க பாட்டி சொன்னாங்க. நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம்." பெரிய பீடிகையுடன் தான் தொடங்கிவிட்டேன் போலும். பூரணிகூட கொஞ்சம் மெதுவாக ஓட்டத் தொடங்கினாள்.

நான் சொல்லத் தொடங்கினேன்.

May 02, 1980.
19:15.

"ம்பி எங்க கிளம்பிட்ட..?" நான் எங்க போனாலும், எங்க போற, எங்க போறனு கேட்டுத் தொளச்சு எடுத்திடுவாங்க என் பாட்டி.

"பாட்டி..! மத்தியானம் ஊர் சுத்திட்டு இருக்கும் போது, அய்யனார் கோயில் பக்கத்துல ஒரு மாந்தோப்பு பாத்தேன். மாங்கா அடிக்கலாம்னு பாத்தா, ஒரு காவல்காரன் அங்கயே சுத்திட்டு இருந்தான். அதான், இப்ப போய், கொஞ்சம் மாங்கா பறிச்சிட்டு வரலாம்னு நினைக்கிறேன்.."

பாட்டி பதறி விட்டாள். என் கைகளைப் பிடித்து சொன்னாள்.

"ராசா..! நீ இப்போ லீவுக்கு வந்திருக்க. உங்க அப்பா வந்து கேக்கும் போது, உன்னை பத்திரமாத் திருப்பி அனுப்பணும். அதனால, பாட்டி ஒண்ணு சொல்லுவேன் கேப்பியா..?"

"சொல்லு பாட்டி.." என்றேன்.

"பகல்ல பரவால்ல. பொழுது சாஞ்சி, ஆறு மணிக்கு மேல மாந்தோப்பு பக்கம் போகக் கூடாது. என்ன..?"

"ஏன் பாட்டி..?"

"அங்க தான் வேலம்மாவோட ஆவி முன்னூறு வருஷத்துக்கு மேல சுத்திட்டு இருக்கு...ம். அது ஒரு பெரிய கதை" பெருமூச்செறிந்தாள் பாட்டி.

"அந்த கதை சொல்லு பாட்டி.." மாங்கா திங்கும் ஆசை அதற்குள் போய் விட்டது.

"உனக்குச் சொல்றேன். அப்ப தான் போகாம இருப்ப.." என்று ஆரம்பித்தாள் பாட்டி.

"முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி, இந்த நெல்லிக்கவுண்டன்பாளையம் மாதிரி முப்பது பாளையங்களை ஒரு திவான் ஆண்டு வந்தாரு. அவரு பேரு கண்ணப்பவேல பாளையக்காரரு. அவருக்கு ஒரு தம்பி இருந்தாரு. அவரு பேரு மதனராஜ பாளையக்காரரு. இதுல அண்ணன் ரொம்ப நல்லவரா இருந்தாரு. ஆனா தம்பி இருக்காருல்ல, அவரு வந்து பேருக்கேத்த மாதிரி, தான் நடந்துக்குவாரு. ஊருல இருக்குற பொண்டு, புள்ளைங்களை இவரு வந்து ரொம்ப தொல்லை பண்ணுவாரு. தம்பி தகராறு பண்ண, அண்ணன் அதுக்கு மன்னிப்பு கேட்டு பைசல் பண்ண, இப்படியா நாளும், கெழமையும் போய்க்கிட்டு இருந்துச்சு.

இப்ப கேரளானு சொல்ற மா நிலம் அப்ப சேர தேசம்பாங்க. இந்தக் காலத்துல, அந்தப் பக்கமா ஒரு பெரிய பஞ்சம் வந்துச்சு. நெலமில்ல, நெலமிருந்தாலும் வெவசாயம் பண்ண சொட்டுத் தண்ணியில்ல. சனமெல்லாம் அப்படியே சுருங்கிப் போச்சு. இருக்கற கொஞ்ச, நஞ்சம் நெல்லுமணி, ஆடு, மாடெல்லாம் எடுத்துக்கிட்டு எல்லாரும், செதறின நெல்லிக்கா மூட்ட மாதிரி தெசைக்கொருத்தரா பிரிஞ்சாங்க. அப்படி, நம்ம ஊரு பக்கமா கொஞ்சம் பேரு வந்து சேந்தாங்க. அதுல ஒருத்தி தான் பூவாயியும், அவ பொண்ணு வேலம்மாவும். ரெண்டு தலமுறைக்கு முன்னாடி, எல்லாம் இங்கிருந்து போனவங்களாம். அதனால தமிழ்ப் பேரு தான்.

இதுல வேலம்மா இருக்கால்ல, அவ அப்படியே செப்பு செல மாதிரி இருப்பாளாம். மீனு மாதிரி கண்ணு, பவளங் கணக்கா உதடு, பாம்பு மாதிரி சடைனு அப்படியே விக்ரகம் மாதிரி இருப்பாளாம். அதுவும் சாதாரண விக்ரகம் இல்ல, பண்டிகைக்கு தேருல உலா வர்ற அலங்கரிச்ச அம்மன் மாதிரி இருப்பாளாம்.

ஆத்துல குளிக்கும் போதெல்லாம், கூட குளிக்கற பொண்டுகள்லாம், இவ பொண்ணு தானா, இல்ல சேர தேசத்து மாந்திரீகத்துல அனுப்பி வெச்ச மோகினியானு தொட்டுத் தொட்டுப் பாப்பாங்களாம். இவ அதப் பாத்துச் சிரிப்பாளாம். அப்போ அவங்க சந்தேகமெல்லாம் தீர்ந்து, இவ மோகினியே தான் முடிவே பண்ணிக்குவாங்களாம். அப்படி ஒரு வசீகரமான சிரிப்பாம், வேலம்மாவுக்கு.

பொம்பளைங்களே இப்படி மயங்கறாங்கனா, ஆம்பளங்களைக் கேக்கவா வேணும்? வேலம்மா கூட பேசணும், அவ கூட பழகணும்னு மீச நரைச்ச பெருசுகளிருந்து, மீசயே மொளைக்காத சிறுசுக வரைக்கும் ஆசப்பட்டாங்களாம்.

மொசக்குட்டி எங்க உலாத்துதுனு, வேட்ட நாய்க்கு தெரியாதா..? அதுவும் அது கோட்டைக்குள்ளயே இருக்கும் போது..? சின்ன பாளையக்காரருக்கு மூக்கு வேர்த்துருச்சு. உடனே வேலம்மாவைத் தன்னோட அரண்மனைக்கு இழுத்துக்கிட்டுப் போயிடணும்னு நெனச்சிக்கிட்டாறாம்.

வெசாரிச்சுப் பாத்ததுல, இவளோட மாமங்காரன் ஒருத்தன் நாகப்பட்டினம் வரைக்கும் போயிருக்கானாம். அவன் வந்து ஆத்தாவையும், மகளையும் சீக்கிரத்துல கூட்டிட்டுப் போயிருவான்னு தெரியவந்தது. சின்னவரு சீக்கிரம் வேலம்மவக் கடத்திடணும்னு முடிவு பண்ணினாரு. ஆத்தாளும், மகளும் அரசல், புரசலா சின்ன பாளையக்காரரு பத்திக் கேள்விப்பட்டாங்க. அதனால உஷாரா இருந்திருக்காங்க.

அப்ப தான் அய்யனாரு நோம்பி வந்துச்சு. ஊர்க் காரங்க எல்லாரும் அய்யனாரு கோயிலுக்குப் போயிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் அசலூருங்கறதால, வீட்டோட இருந்திருக்காங்க. அப்பத் தான் சின்னவரு வந்து, ஆத்தாவை வீட்டோடப் பூட்டி வெச்சிட்டு, வேலம்மாவத் தொரத்திருக்காரு. வேலம்மாளும் வுழுந்தடிச்சு ஓடி, அய்யனாரு கோயிலுக்கே வந்திருக்கா. சின்னவரும் வந்திட்டாரு.

வேலம்மா கண்ணீர் பெருக, எல்லார்கிட்டயும் கெஞ்சியிருக்கா." உங்களை நம்பி வந்தேன். என்னைக் காப்பாத்துங்க. இல்லாட்டி என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க...என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க."னு கத்திக் கதறியிருக்கா. ஆனா சின்னவரைப் பகைச்சிக்க முடியாத சனம், கையாலாகாம இருந்திருக்கு.

ஆத்திரமான வேலம்மா, நம்பி வந்தவளைக் காப்பாத்தாத ஊர்ல இருக்கறத விட சாகலாம்னு கத்திட்டே பக்கத்துல இருந்த கிணத்துல குதிச்சுச் செத்திட்டா. அன்னையில இருந்து, அந்தக் கிணத்து தண்ணிய யாரும் குடிக்கப் பயன்படுத்தறதில்ல. அதே மாதிரி, ஆறு மணிக்கு மேல, யாரும் அந்த கிணத்துப் பக்கமா தனியா போனா, "என்னை உங்ககூட கூட்டிட்டுப் போங்க. என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க."னு சத்தம் கேக்குதாம். ,ஒரு லாந்தர் விளக்கைப் பிடிச்சிக்கிட்டு, "என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க"னு அங்க போறவர்றவங்ககிட்ட எல்லாம் கேக்குதாம், இன்னும் சாகாம, இப்ப கெழவியாகிட்ட அந்த வேலம்மா.

அதனால தான் சொல்றேன், தனியா, ராத்திரி, அந்தப் பக்கம் போகாதனு. புரிஞ்சதா..?" என்று முடித்தாள் பாட்டி.

May 16, 2006.
21:18.


நான் சொல்லி முடிக்கவும், பூரணி வண்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினாள். வினோத்தும், அபியும் திகிலடித்துப் போன கண்களோடு, முன்புறம் பார்த்தார்கள். நான் மெல்ல முன்புறம் திரும்பினேன். 'நெல்லிக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து உங்களை வரவேற்கிறது' என்ற போர்டு எங்களை வரவேற்றது. அந்த போர்டின் கீழே....

ஒரு லாந்தர் விளக்கு...!

ஒரு லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு யாரது..?

பேய்க்காற்று அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. வெளிச்சம் என்பதே துளி கூட இல்லை. புளியமரங்கள் எல்லாம் பெரிய மழையோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எங்கள் காரில் மட்டுமே வெளிச்சம். வைப்பர் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. Headலைட்டின் ஒளியை வெட்டிக் கொண்டு, வேகமாய் மழை பெய்து கொண்டிருந்தது. யாரது அங்கே யென்று பார்த்தோம்.

நீல நிற சேலை. ஒட்டிய உடம்பு. நோய் வந்த கோழி போல உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. எண்ணெயே காணாத பறட்டைக் கேசம் போல. மழையில் பறந்து அடித்துக் கொண்டிருந்தது.ஒரு கிழவி.

"பூரணி.. கொஞ்சம் முன்னாடி போய் நிறுத்து.."

"என்னங்க.. எனக்குப் பயமாயிருக்குங்க.." நடுங்கியவாறு சொன்னாள்.

"ஆமாப்பா.. பயமாயிருக்குப்பா. போயிடலாம்ப்பா. அது வேலம்மா ஆவி தாம்ப்பா" என்றாள் அபி.

"என்ன பூரணி... நீயே இப்படி பயந்தா.. குழந்தைகளும் பயப்பட மாட்டாங்களா.. இந்த இண்டர்னெட் காலத்துல போயி பேயி, பூதம்னு பயந்துட்டு இருக்க.. நான் இருக்கேன்ல.. போய் பக்கத்துல நிறுத்து. பாவம் பாட்டி, மழையில நனைஞ்சுக் கஷ்டப்படறாங்க.."

போர்டின் அருகில் போய் நிறுத்தினாள். பாட்டி அருகில் வந்தார்.

"என்ன பாட்டி.. தனியா நிக்கறீங்க..? என்ன வேணும் உங்களுக்கு..?" என்று கேட்டேன்.

பாட்டி அருகில் வந்தார்.

அருகில்...

வெகு அருகில்...

தீர்க்கமான பார்வை.

நெருக்கமாய் வந்து நின்று கேட்டார்.

"என்னை உங்ககூட கூட்டிட்டுப் போங்க. என்னை எங்க ஊருக்கே அனுப்பி வெச்சிருங்க. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"

"ஆ..........ஆ.........."

நான்கு குரல்கள்.

May 16, 2006.
16:02.

"என்னலே இப்போ பஞ்சாயத்து..?"

"ஐயா.. இதோ இங்க நிக்கறாளே.. பொன்னம்மா கிழவி, இவ நம்ம ஊரு, குளத்துல இருந்து தண்ணிஎடுத்துக் குடிச்சிருக்கா. ஒரு தாழ்த்தப்பட்டவ, ஊர்க்குளத்துல இருந்து தண்ணிஎடுத்துக் குடிக்கக்கூடாதுனு தண்டோரா போட்டிருந்தும், இவ அத மீறியிருக்கா. அதுக்கு, சாட்சி, இதோ இங்க நிக்கறானே, பாண்டி. இவன் தான்.."

"என்னடா பாண்டி சொல்ற..?"

"ஆமாஞ்சாமி.. நான் ஆடு மேய்க்க, காட்டுப் பக்கம் போகயில, இந்தக் கிழவி கொளத்துல தண்ணி மொண்டுக் குடிச்சத ரெண்டு கண்ணால பாத்தேனுங்க. உடனே கணக்குப்புள்ள அய்யாகிட்ட வந்து சொன்னேனுங்க.."

"ஏ.. கெழவி..உம்மேல சொல்ற குத்தத்த ஒத்துக்கறயா..?"

"ஐயா.. தாகம் தீக்க கொஞ்சம் எடுத்தேங்க ஐயா.. லொக்..லொக்.."

"பொன்னம்மாக் கிழவி ஊர்க் கட்டுப்பாட்ட மீறிட்டதால, அவள ஊர விட்டே ஒதுக்கி வெக்கிறேன். ஆனா வயசான கெழவிங்கறதால அவள அவ மக வாக்கப்பட்டுப் போன ஊருக்கே அனுப்பி வெக்கணும்னு உத்தரவிடறேன்.
இனிமேல இந்த ஊரு இந்தக் கிழவிக்கு சொந்த ஊரு இல்ல. அவ மக ஊரு தான் சொந்த ஊரு. ஊர் எல்ல வரைக்கும் அவள பத்திரமா கொண்டு போய் பாண்டிப்பய விடணும். அதுக்கப்புறம் அவ விதிப்படி ஏதாவது வண்டி வந்து நின்னா ஏறி, மக ஊருக்கே போய்ச் சேர வேண்டியது. திருப்பி ஊருக்குள்ளாற வந்துறக் கூடாது. இது இந்த நெல்லிக்கவுண்டன்பாளையத்து பஞ்சாயத்தோட தீர்ப்பு...!"

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

4 comments:

Raji said...

ரொம்ப நல்லாயிருக்கு...
நல்லா எழுதியிருக்கிங்க
வசந்த்..

பழூர் கார்த்தி said...

வெவ்வெறு பகுதிகளாக எழுதி, அதை இணைத்திருக்கும் விதம் அழகு.

வாழ்த்துக்கள் !!

***

இயல்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

***

"ரெண்டு தலமுறைக்கு முன்னாடி, எல்லாம் இங்கிருந்து போனவங்களாம். அதனால தமிழ்ப் பேரு தான்." போன்ற ஜஸ்டிபிகேஷன் வரிகளை
வாசகர்களேயே ஊகிக்க விட்டு, தவிர்த்திருக்கலாம்....

முரட்டுக்காளை said...

சூப்பர் கதை. ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...

Veera said...

அருமை . :)