Monday, January 08, 2007

காதல் படிக்கட்டுகள் - ஜூ.வி.

மல்லிகை, சாமந்தி, செவ்வந்தி, ரோஜா, முல்லை இப்படி பல பூக்களை ஒன்றாகத் தொடுத்து , பட்டு நூலால் நார் செய்து அழகாக மாலை ஆக்கினால் எப்படி இருக்கும்? அதுவும் அந்த பட்டு நூல் முழுதும் பன்னீர் தெளித்து வாசம் பெருகினால்....!

இந்த நூலைப் போல் தான் இருக்கும்.

எத்தனை விதம் விதமான பிரபலங்கள்..! அவர்களின் தனித்த தனித்த பார்வைகள்..! இவர்களின் எழுத்துக்களைப் படிப்பதே இனிமையாய் இருக்கும்.. அதுவும் அத்தனை பேரும் காதல் பற்றி எழுதினால்...!

எழுத்தாளர், ஓவியர், திரை பிரபலம், அரசியல்வாதி... யாராய் இருந்தாலும் நிறைவேறாத காதல்கள் நிறைந்த முன்னிளமைப் பருவம் ஒவ்வொருவருக்கும் இருந்திருப்பதைக் காண்கையில், யாரேனும் இயற்கையின் திருவிளையாடல்களிலிருந்தும் தப்ப முடிவதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

எத்தனையோ காரணங்கள்...! யதார்த்தத்தின் கரங்களில் தான் எத்தனை விதமான அழிப்பான்கள்..! இளமையில் மனம் வரைந்து வைத்து காண்கின்ற கனவுகளை அழித்து விடுகின்றன. பொருளாதார நிலை, பயம், சமுதாயம் பற்றிய பயம், குடும்ப நிலை, இடமாறுதல்.. காரணங்களுக்கா பஞ்சம்... அவை ஏற்படுத்தும் ரணங்களுக்கும்...!

ஒவ்வொருவரும் நெஞ்சின் அடியில் புதைத்து வைத்திருக்கும் ஈர நினைவுகளைத் தூண்டி விட்டுப் போகின்றன, இவை. வாழ்கின்ற நடைமுறை வாழ்வின் தினப்படி சருகுகளின் கீழே மறந்திருக்கும் நினைவுகளை மெல்ல மழைத் துளிகள் போல் நனைத்து விட்டுப் போகின்றன.

எனது சிறிய ஆசை..

அடுத்த பதிப்பிலாவது, புத்தகத்தின் கடைசியில் நான்கு வெற்றுப் பக்கங்களாவது வைக்க வேண்டும்.

புத்தகம் வாங்குவோர் தம் நினைவுகளைப் பதிந்து கொள்வதற்கு...!

இனி சிலரது எனக்குப் பிடித்த வரிகள்.

ட்ராட்ஸ்கி மருது:
என்னை உலுக்கிய ஒவ்வொரு கணமும் இன்னும் இருக்கின்றன!

காதலை மட்டுமல்ல, உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வாழப் பிடிப்பதற்கு அதுவேதான் ஆதாரம்.

காயங்கள், இழப்புகள், பிரிவுகள்... யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்?

பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும்... வாசம் உண்டு.

மேகங்கள் எத்தனை கடந்து போனாலும்... வானம் உண்டு.

வாழ்க்கையும் தான்!

இராஜேஷ்குமார்:
இப்போதெல்லாம் தினசரி நாளிதழ்களைப் புரட்டிச் செய்திகளைப் படிக்கும்போது ஏதாவது ஒரு மூலையில் 'கள்ளக்காதலர்கள் வெட்டிக் கொலை' என்கிற தலைப்புச் செய்தி கண்ணில் படும்போது - என் இதயத்துக்குள் ஒரு 'திக்' உற்பத்தியாகும். அவர்களுடைய பெயர்களை ஞாபகப்படுத்திக்கொண்டு செய்தியைப் படித்துப் பார்ப்பேன். அது அவர்களைப் பற்றிய செய்தியல்ல என்று தெரிந்ததும் ஒரு நிம்மதி மனசுக்குள் பரவும்.

வண்ணதாசன்:
விலைச்சீட்டுப் போல் பெயர் தொங்கவிடப்படாத, வரையறுக்கப்படாத ஓர் ஆண் ஆண் எனவும், ஒரு பெண் பெண் எனவும், அவரவர் மேல் உள்ள அதிகபட்ச சி நேகத்துடனும், மரியாதையுடனும் சந்தித்து, அப்பால் போய் மறுபடி சந்திக்க முடிகிற அல்லது சந்திக்க முடியாமலே போய்விடுகிற நல்ல உறவுகளுக்கு என்ன பெயரிடுவது? அந்தக் கவிதைத் தொகுப்புப் போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம். சொல்லாமலே கூட இருக்கலாம்.

இப்படிச் சொல்லாமலே என்னையும் யாரேனும் நினைத்திருப்பார்கள். நானும் யாரையேனும் நினைத்திருக்கத்தான் செய்வேன்.

' கரையெல்லாம் செண்பகப்பூ' இருக்குமோ என்னவோ?

'ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம்..'- இருக்கும்.

பூக்கத்தானே செடி.

'பூக்கவும்தானே...' என்பது இன்னும் சரியாக இருக்குமோ..?

பிரகாஷ்ராஜ்:
ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் ஏதாவது ஒண்ணு சாதிக்கணும். பதிவு பண்ணிட்டுப் போகணும்தான். ஆனா, அது காதல் மட்டுமே இல்லை!

காதலின் அருகாமை, முத்தம், அந்த நேசம், அந்த நினைவுகள் எல்லாமே கல்லெறிந்த குளம் மாதிரி காலமெல்லாம் கிடக்கும். அந்த மென்சோகமும் சந்தோஷமும் எப்பவும் இருக்கும்.

காதல் - கல்யாணத்துக்கான ஒத்திகை இல்லை.

காதலோடு உலகம் முடிந்துவிடுவதில்லை.

இன்னும் சொல்லப்போனா, இப்படியெல்லாம் பேசுற விஷயமில்லை காதல்...

It is an act!

கி.ராஜநாராயணன்:
ஆயிற்று.

இப்போது நாற்பத்தாறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே வந்த வாசகர்களுக்கு இது எத்தனாவது படிக்கட்டு என்று கணக்குத் தெரிந்திருக்கும். எனக்கு எண்ணிக்கை தெரியாது; கணக்கில் நான் மக்கு!

ஒரு வரியுடன் முடிக்கிறேன்.

இதில் சொன்ன விஷயங்களைவிட, சொல்ல மறந்த - சொல்லாமல் விட்ட விஷயங்கள்தான் அதிகம்!

ராசி அழகப்பன்:
காதல்! ஒரே ஒருமுறை வருகிற விஷயமில்லை! அது அக்கினி நட்சத்திரமுமல்ல.. வால் நட்சத்திரமுமல்ல.. வளர்ந்துகொண்டே இருக்கிற நட்சத்திரம்!

ஏனெனில், காதலுக்கு விளக்கம் காதலர்கள் அல்ல.. வாழ்க்கை!

புஷ்பவனம் குப்புசாமி:
'புளியமரத்துக் கிளி
பூவெடுக்கும் சின்னக்கிளி
என்னைப் பிரிஞ்ச கிளி
எப்ப வரும் சால வழி'னு சோகப் பாட்டுகதான் பாடுறதே.

'கொக்கு பறக்குதடி
கோணவாய்க்கா மூலையிலே
பக்கத்திலே நீயிருந்து
பழகுனதை ஏன் மறந்தே'ன்னு
புலம்பல் ரேஞ்சுக்கு வந்துட்டேன்.

சுபா:
எவ்வளவு பேச்சுகள்!

- நல்லா இருக்கே தோடு. அட,இந்தச் செயின் கூட!

- அதுக்காகத் தொட்டுப் பாக்கணுமா?

- தொடக்கூடாதா?

- தொடலாம்ம்ம்ம்.

- பின்ன என்னவாம்?

- உங்களுக்கு என்ன புடிக்கும்?

- ஒன்னை.

- ஐயோ, சாப்பாடுல என்ன புடிக்கும்?

- இப்பப் போய் சாப்பாடா? அப்படியே இரேன். இந்தப் புடவை எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? ஏய்!

- ம்?

- உன் மூஞ்சில வந்து விழற ஒரே ஒரு முடி எனக்குள்ள என்னவோ பண்ணுது!

- என்ன பண்ணுது?

- கவிதை எழுதச் சொல்லுது.

- ம்க்கும்.நெஜம்னா?

- பொய்யி!

- சத்தியம்.உன் கர்ச்சீப்பைக் குடு.மூஞ்சியைத் துடைக்கணும்.

- உங்ககிட்ட இல்லையா?

- அதுல ஒன் வாசனை இல்லியே.குடு. குடேன்.

பூமா.ஈஸ்வரமூர்த்தி:
உனக்காக
இல்லையென்றாலும்
அடர்ந்த ரோஜா வர்ணங்களில்
என் முத்தங்களை தெருவெங்கும்
வாரியிறைத்துவிட்டுத் தான் போவேன்.

பழனிபாரதி:
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?

உடைந்த
வளையல் துண்டுகளையாவது
கொடுத்துவிட்டுப்போ.
கலைடாஸ்கோப்பில்
உன்னைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்.

பாக்யராஜ்:
நேத்து உங்களுக்கு என்ன நடந்ததோ அதெல்லாம் எனக்கும் நடந்தது. இருந்தும், இன்னிக்கு ஒரு வாழ்க்ககி இருக்கு. காதலை நான் காயப்படுத்தியிருக்கேன்;

காதல் என்னைக் காயப்படுத்தி இருக்கு. ஆனா, அதே காதல்தான் என் காயங்களைக் குணமாக்கியிருக்குனு நான் ஏன் சொன்னேன்னு இப்போ புரிஞ்சிருக்குமே!

லிவிங்ஸ்டன்:
ஒரு வாரம்.. ஒரே வாரம்...

செம சோகத்துல திரிஞ்ச நான், பஸ்ல ஒருத்தியைப் பார்த்தேன். இன்ன பிகரும்மா அது.. பர்ஸ்ட் லுக்லயே சரண்டராயிட்டேன். அதுக்கப்புறம் அவமேல லவ் வந்தது. ஆமா, அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன். ஏன் தெரியுமா..? என்னோட முதல் காதலியோட பேரும் இவ பேரும் ஒண்ணு!

சிரிப்பு வருதா..? எனக்கும் இப்போ சிரிப்புதான் வருது. ஆனா, இதுதான் நடந்தது!

சாலமன் பாப்பையா: பெருமழை பெய்யறப்போ மழைத்தண்ணி 'ஓ..'ன்னு அடிச்சுப் பொரண்டு பொறப்பட்டு வருமே... வழியில கிடக்குற அத்தனையும் அள்ளிக்கிட்டு உற்சாகமா கலங்கடிச்சுகிட்டு வருமே அது சின்ன வயசுச் சேட்டைக மாதிரி. அதுக்கு நிதானம் தெரியாது.

ஆனா, மழை வடிஞ்ச மறு நாளு அதே ஓடை கண்ணாடியைக் கரைச்சு ஊத்துன மாதிரி மெள்ள சலசலக்கும் பாருங்க.... அந்த நல்ல தண்ணி நடந்து வர்ற அழகு மாதிரி இருக்கணும்யா வாழ்க்கை!

கலைஞர் மு.கருணாநிதி:
அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் - எப்போதோ பார்த்த ஞாபகம் - எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள் - ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டுமென்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

புத்தகம் : காதல் படிக்கட்டுகள்.

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : பலர்.

விலை :ரூ.75/-

பதிப்பகம் : விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

5 comments:

Anonymous said...

Ungal ennal enakku magizchiayai thanthathu. Ovvoru puthakathilum 4 verumaippakkangal enbathu ennakuvialin vasal. Vazthukkal. Vanakkam.

Ramalingam
Coimbatore

thamizhparavai said...

’காதல் படிக்கட்டுகள்’ புத்தக அட்டைப்படமே கொள்ளை அழகு.
வெகு,வெகு நாட்களுக்கு முன் படித்திருக்கிறேன். பள்ளிப்பருவத்திலெனெ எண்ணம்.
உங்களைப் போல வார்த்தைகள் இப்போது ஞாபகம் இல்லை.
ஆனால் அந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த காதல் அனுபவம் ரகுவரனுடையது.அப்போது அது எனக்கு மிகப் பிடித்திருந்ததற்குக் காரண்ம் , இன்னும் விளங்கவில்லை.
பாரதிராஜாவின் காதலும் நினைவிலிருக்கிறது.
காதல் அரும்பும் வயதில் படித்தது. இப்போது மறுபடியும் படிக்க வேண்டும்.
போனஸ் செய்தி: ‘கூடல்நகர்’ திரைப்படத்தில் அழகுக்கிளி பாவனாவின் காதலுக்கு அதுதான் தூது.கையில் காதல் படிக்கட்டுகள் புத்தகத்தோடு, கற்பனையில் சாய்ந்து நிற்கும் பாவனா அழகோ அழகு..

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

Unknown said...

இளமைகாலங்களில் மிகவும் விரும்பி படித்த புத்தகம்.... இப்போது அப்புத்தகம் வாங்கிப்படிக்க ஆவல்... எங்கு கிடைக்கும்? விபரம் அளிக்கவும்...

Unknown said...

அசோகன், சேலம், 9443344322