Sunday, August 19, 2007

தனியனாய்த் தரையில் விழ...

ரு நாளின் மழைப் பொழுது.

மெல்லிய தூறல்களின் பிடியில் நனைந்து கொண்டிருந்தது சாலை. இறக்கிய ஷட்டர்களின் மேனியெங்கும் இறங்கிப் பெய்தன சின்னத் துளிகள். மேற்றிசையில் இருட்டிக் கொண்டிருந்த கருமேகங்கள், உன் காதோரத்துச் சுருண்ட முடி போல் அலையாடிக் கொண்டிருந்தன.

மேகங்களின் கருப்பின் மேல் துளித்துளியாய்ப் பறக்கின்ற வெண்நாரைகள், இப்போதைய சோக நினைவுகளின் மேல் அவ்வப்போது பூக்கின்ற உன் தும்பை நினைவுகள் போல் வெளுத்திருக்கின்றன.

தூறிக் கொண்டிருந்த சின்னத் தூறல்கள் வழியே ஒளிச் சிதறல்கள் தெறித்துக் கொண்டிருந்த விளக்குக் கம்பத்தின் மேல் சாய்ந்து நிற்கின்றேன்.என் உயிர் தின்னும் உன் வார்த்தைகள் போல், தன் உடல் தின்னுகின்ற நெருப்பிடம் சேர்ந்து சாம்பலாகின்ற சிகரெட்டைப் புகைக்கிறேன்.

"ருண்... ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்களா..?"

"பின்ன என்ன..? டூ அவர்ஸ்! இந்த வெய்ட்டர் வேற ரொம்ப நேரமா என்னையே முறைச்சுப் பார்த்திட்டு இருக்கான். எனக்கே டவுட் வந்திடுச்சு.. இங்க யார் வெய்ட்டர்னு, நானா இல்ல அவனானு.."

"ஸாரிப்பா! மேனேஜர் கடைசி நேரத்தில ஒரு பக் வந்திடுச்சு. டீபக் பண்ணிட்டு போயிடுங்கனு சொல்லிட்டார். அதைச் சரி பண்றதுக்குள்ள லேட்டாயிடுச்சு.."

"நான் தான் ரொம்ப நாளா சொல்றேன் இல்லையா..? வேலையை விட்டுடுனு. எனக்குனு சொந்த பிஸ்னெஸ் இருக்கு. அதுலயே உனக்கு மேனேஜ்மெண்ட் வொர்க் குடுக்கிறேன்... நீ தான் மாட்டேங்கற.."

"நான் இல்லைனு சொல்லவே இல்லையே.. மேரேஜ் ஆகறவரைக்கும் வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.. அப்புறம் நம்ம கம்பெனி தான்.."

".."

"என்ன ஸார், கோபமா..? உங்க கோபத்தை எப்படி துரத்தறதுனு எனக்குத் தெரியும். பேரர்..! 3 கப் வெனிலா கொண்டு வாங்க.."

ஸ்ஸ்...! கையைச் சுட்டு விட்ட சி.... கைநழுவ விடுகிறேன். மெல்ல சாலையின் ஓரத்திலேயே நடக்கிறேன். துளிகளிலிருந்து பெருகி விட்ட பெருமழையின் கல் துளிகளில் இருந்து விலகிச் செல்ல, அணிந்த கருப்புக் குடையின் மீது பட்டுத் தெறிக்கின்றன.

"இந்த மழை என்ன சொல்லுது, தெரியுமா..?"

"ம்ம்.. ஒண்ணும் தெரியலயே.. நீங்க தான் கவிஞராச்சே.. நீங்களே சொல்லிடுங்க.. நானும் போனாப் போகுதுனு கைதட்டிடறேன்.. ஆனா ரெண்டு தடவை தான் தட்டுவேன்.. ஓகேவா..?"

"ஓகே. நான் சொல்றதைக் கேட்டு அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ. ஆனா கைதட்டு வேணாம்.. என் கன்னத்துல தட்டுனா போதும்.."

"அதுக்கு கஷ்டப்பட்டு கவிதை சொல்லணுமா? இப்பவே தட்டிடறேன்.."

"வெய்ட்.. வெய்ட்.. கையால இல்லை. உன் உதடுகளால்.. ரெண்டு தடவை தட்டுனா போதும். இப்ப ஓகேவா..?"

"ஹை.. ரொம்பத் தான்.. முதல்ல சொல்லுங்க.. அப்புறம் பார்க்கலாம்."

"ஒரு நாள் வானத்தில இருக்கிற கருமேகங்கள் எல்லாம், கடவுள்கிட்ட போய் சொன்னாங்களாம். 'இந்த சூரியன் வரும் போதெல்லாம், எங்க உண்மையான நிறம் போய் வெள்ளை நிறத்துக்கு மாறிடறோம். நாங்க எந்த நிலையிலும் எங்க நிறத்தை இழக்கக் கூடாது. அப்படி ஒரு வரம் கொடுங்க'னு வேண்டிக்கிட்டாங்களாம். கடவுள் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொன்னாராம். "சரி. நீங்க சொல்ற மாதிரி செய்றேன். அதுக்கு முன்னாடி, நீங்க எனக்காக, கொஞ்ச நாள் பூமிக்குப் போய்ட்டு வாங்க. அப்புறம் நான் செய்றேன்'. அது மாதிரி, மேகங்கள் எல்லாம் கரைஞ்சு தண்ணியாய் மாறி பூமிக்கு வந்தாங்களாம். பச்சைப் பசேல்னு இருக்கின்ற மலைக் காடுகளில் விழுந்து ஓடும் போது, அதெல்லாம் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தாங்க. அப்புறம் பேரிரைச்சலோடு அருவியாய் விழும் போது மல்லிகை மாதிரி வெண்மையா மாறியிருந்தாங்க. சமவெளிக்கு வந்ததுக்கு அப்புறம், கரிசல் காட்டிலும், வயற்காடுகளிலும் ஆறாய், வாய்க்காலாய், சிற்றோடையாய் ஓடும் போது பச்சை நிறத்துக்கு மாறினாங்க. கடைசியில் பெருங்கடலோடு சேர்ந்து இருக்கும் போது பார்த்தால், நீல நிறத்துக்கு மாறி இருந்தாங்க. மறுபடியும் ஆவியா மாறி, மேகமா மாறினதுக்கு அப்புறம், பழையபடி கருப்பு நிறமா மாறி இருந்தாங்க. கடவுள் கேட்டாராம்,' என்னப்பா, உங்க உண்மையான நிறம் என்னனு இப்ப தெரிஞ்சுதா. இதுல எந்த நிறம் உங்களுக்கு வேணும்'னு. மேகங்கள் எல்லாம் ஒண்ணுமே பேச முடியாம் நின்னுச்சாம். கடவுள் கருணை பொங்கற குரல்ல சொன்னாராம்,' வெளியே தெரியற நிறம் எல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள்ள நீங்க என்னவா இருக்கீங்க, அது தான் முக்கியம்.' எப்படி கதை..?"

"முதல்ல வலது கன்னமா.. இடது கன்னமா..?"

"ங்கிள்.. பார்த்து, பார்த்து.."

குரல் கேட்டு குனிந்து பார்க்கிறேன். காளான் போல் குடை பிடித்த சின்னஞ் சிறு மலர் ஒன்று என் விரல்களைப் பிடித்து இழுத்தது.

"அங்கிள்.. அந்தப் பக்கமா போகாதீங்க. அங்க ரொம்ப வழுக்குதுனு போர்டு வெச்சிருக்காங்க. நீங்க பார்க்கலியா? ஓகே.. மம்மி கூப்பிடறாங்க. பை அங்கிள்.."

"ண்ணம்மா.. என்னை விட்டுப் போய்டாதே.. ப்ளீஸ்... நீ பொழச்சுக்குவடா.."

"பொய் சொல்றீங்க அருண்.. டாக்டர் சொன்னதை நான் கேட்டுட்டேன். இன்னும் மேக்ஸிமம் ஒன் ஹவர் தான்.. அருண்..."

"ப்ளீஸ் அழாத..."

"அருண்.. உங்க கூட இல்லாம போகப் போறேன்னு நெனச்சாலே, எனக்கே வலிக்குது.. உங்களால எப்படி அருண் தாங்க முடியும்..?"

"அந்த லாரி டிரைவரை என்ன பண்றேன் பார்.."

"அவன் மேல எந்தத் தப்பும் இல்லை, அருண்.. நான் தான் இண்டிகேட்டர் போடாம ரைட் கட் பண்ணிட்டேன்... அருண்.. மயக்கம் வர்றா மாதிரி இருக்கு.. உங்க கையைப் பிடிச்சுக்கட்டுமா.. கொஞ்சம் குடுங்களேன் அருண்.. நம்ம.. நம்ம... குழந்தைக்குப் போடறதுக்காக மோதிரம் பண்ணி வெச்சிருப்பீங்களே அருண்.. அது.. அது.. இது தானே.. அதைப் பிடிச்சுக்கறேன் அருண்... கொஞ்சம் உங்க மடியில படுத்துக்கட்டுமா அருண்..ப்ளீஸ்.. இருட்டிட்டு வருது அருண்.. அருண்...அ..."

"ஸார்..அந்தப் பக்கமாப் போகாதீங்க.. மழை பெஞ்சுட்டு இருக்கறதுனால ரொம்ப வழுக்கும். பள்ளத்தாக்குல விழுந்திடுவீங்க.. போகாதீங்க.. ஐயோ விழுந்திட்டாரே.."

தொலைவின் டீக்கடைக்காரரின் குரல் தேயத் தேய...

தனியனாய்த் தரையில் விழத் தொடங்கினேன்.

2 comments:

Anonymous said...

இந்த சிறுகதையின் முடிவு ரொம்ப சோகமா இருக்கு...:(

டச்சிங்-டச்சிங்..:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

/*
இந்த சிறுகதையின் முடிவு ரொம்ப சோகமா இருக்கு...:(

டச்சிங்-டச்சிங்..:)
*/

ஆமாங்க.. எனக்கே ரொம்ப சோகம் தாங்கல... த்சொ.. த்சொ..