Monday, June 01, 2009

இரவுகளைக் கடத்தினேன்.1.

நியூயார்க்கில் ஆரக்கிளில் பணிசெய்யும் அத்தை பையன் அமெரிக்காவிலேயே ஓர் அழகிய இள நங்கையின் மனம் கவர, திருச்சி - 2, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வாசலுக்கு எதிரில் இருக்கும் அலமேலு மண்டபத்தில் சென்ற வாரம் வியாழக்கிழமை ஏழு முதல் ஒன்பதரை மணி நல்ல நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்டனர். விழாவிற்குச் செல்ல செய்த பயணங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல விருப்பம்.

27.May.2K9

னந்தபுரி எக்ஸ்ப்ரஸ் பின்மாலை 16:20க்கு இங்கிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை 7:00 மணி சுமாருக்கு எழும்பூரைச் சென்றடைகின்றது. அதில் டிக்கெட் ரிசர்வ் செய்து வைக்கப் பார்த்தால், புதன் வரை வெய்ட்டிங் லிஸ்ட் 59ஐக் காட்டிக் கொண்டிருந்தது. முகூர்த்தத்திற்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எனவே டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜெனரல் பெட்டிக்குள் அடைக்கலம் தேடிப் போக, எஞ்சின் அறைக்கு உடன் அடுத்த பெட்டியில் கீழ்த்தளம் அத்தனையும் ஃபுல். மேல் தளம் கொஞ்சம் உயரத்தில் இருந்தது. எனவே ஏறுவதற்குச் சிரமம் கொண்ட பெரியவர்கள் கீழேயே நின்றிருக்க, டார்ஜான் மச்சான் போல் சரசரவென ஏறி பையை ஒரு முனைக்கு எறிந்து, கைகளை ஊன்றிக் குப்புறப் படுத்து, பின் திரும்பி, வான் நோக்கிப் படுக்க, கம்பிகளுக்குள் அடைபட்டிருந்த ஃபேன்கள் சுற்றத் தொடங்கின.

எனக்கு எதிரே ஒரு சின்னப்பையன், 11 வயது இருக்கலாம். சரியாக கவனிக்கவில்லை. இந்தப் பயணத்திற்கு அவன் முக்கியமானவன் என்பதை அப்போது நான் உணரவில்லை.

எதிரே கீழே ஜன்னலோரமாகக் கிழவர்; அருகில் அவர் மகர். ஒரு வெண்தாடி ஜீனியஸ் கெட்டப் தாத்தா; இவர் என்ன சொன்னாலும் 'ஆமாம்' போடும் ஓர் ஆசாமி. லுங்கி கட்டியிருந்தார். இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதை நெற்றி அடையாளம் காட்டியது. பக்கத்தில், விளிம்பில் அரைவாசியாக உட்கார்ந்து ஒரு சாதாரண மனிதர்.

எனக்கு கீழே ஒரு குடும்பம். மதுரையில் கெமிக்கல் எக்ஸ்கியூட்டிவாக இருப்பவரின் ஒரு மத்திய குடும்பம். அம்மா; இரு குழந்தைகள்; மூத்தவள் பெண் குழந்தை; ஜன்னலை விட்டுத்தர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டே வந்த குட்டிப் பையன்; மனைவி; மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறார். வயிறும், கைகளும் நிரம்பியிருக்கின்றன. கண்களைச் சுற்றி களைப்பு வளையங்கள். கூந்தல் கலைந்திருக்கின்றது. காலையில் வைத்ததைச் சொல்லும் காய்ந்த மல்லிச் சரம் தொங்குகின்றது.

ஏனோ களைப்பு. நாகர்கோயில் வரும் வரை நீட்டிப் படுத்து தூங்கிக் கொண்டே வந்தேன். அதற்குள் இந்த தரைத்தள மனிதர்களுக்கிடையே ஒரு பெயர் தெரியாத ஸ்நேக உறவு மலர்ந்து, கிழவரை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லி, அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். குட்டிப் பையன் கத்திக் கொண்டே வந்தான். அவ்வப்போது கர்ப்பிணி அம்மா மடியில் வந்து, வந்து ஒட்டிக் கொள்ள முயல, மாமியார் அவனை ஒதுக்குகிறார். மகனுக்கு மறுக்கவும் விரும்பாமல், புது உயிருக்கு வலிக்கவும் கூடாமல் அந்தப் பெண் சமாளிக்கிறார்.

நாகர்கோயிலில் ஓர் அரைமணி நேரம் ஹால்ட் அடிக்கப்படுகின்றது. எஞ்சின் எங்கள் பக்கமிருந்து உருவப்பட்டு, எதிர்த் திசையில் உருட்டப்பட்டு, அந்தக் கடைசியுடன் இணைக்கப்பட்டு, எங்களை கடைசிப் பெட்டியாக்கி விடுகின்றது. நிற்கும் இந்த குறுகிய காலத்தில் கொஞ்சம் இறங்கி நிற்கலாம் என்று நின்றால், அதற்குள் ஓர் அப்பா, பையனுடன் வந்து இடத்தை அபகரிக்கும் உத்தேசத்துடன் அவரது பையை பரப்ப, அவசர அவசரமாக ஏறிப் படுத்துக் கொண்டேன். அங்கு உட்காரவும் முடியாது. ரொம்பவும் உயரத்தில் இருப்பதால், உட்கார்ந்தால், கேள்விக்குறியாகி விட வேண்டும் முதுகு.

எதிர்ப் பையனைச் சமாளித்து பையனைத் தூக்கி அங்கே போட்டு விடுகிறார். பையனிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாய் என்று கேட்க வேண்டாம். பையனை எங்கு வாங்கினார்கள் என்று தான் கேட்க வேண்டும். அப்படி ஒவ்வொரு பாகமும் உருண்டு, திரண்டு இருந்தான். அவனை பந்து போல் உருட்டி அங்கே உட்கார வைத்து விட்டு, அப்பா கீழேயே நின்று கொண்டு என்னை விரோதிப்பார்வை பார்த்துக் கொண்டார்.

சடாரென மொத்தக் கூட்டமும் என்னை வில்லன் போலவும், பெருந்தன்மை அற்றவனாகவும், கொடூரனாகவும் பார்வை வீசி விட்டு, அவரிடம், 'கவலைப்படாதீங்க சார்! இங்கே உட்காருங்க!' என்று சொல்லாமல், என்ன சொன்னார்கள் தெரியுமா? 'நீங்க கவலைப்படாதீங்க்! எப்படியும் தின்னவேலி வந்தா அவனை எழுப்பி உக்கார வெச்சிருவாங்க..!'. ஆஹா..!

வண்டி போகப் போக கீழே ஒரு சுவாரஸ்யமான, காலத்திற்கும் தீராத சந்தேகக் கேள்வி விவாதம் நடைபெற்று, மதுரை வரும் வரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், ஆர்க்யூ செய்து கொண்டே வந்தார்கள். 'சாமி இருக்கா..? இல்லையா..?'

முஸ்லீம் மனிதர்கள் எந்தச் சாமியும் கிடையாது என்று அடித்துப் பேசிக் கொண்டு வர, எதிர் விவாதம் பண்ணியது யார் தெரியுமா? கெமிக்கல் எக்ஸிக்யூட்டிவ் அல்ல. அவரது கர்ப்பிணி மனைவி. அவர் பி.எஸ்.ஸி. நர்சிங் படித்தவராம். மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை.

விவாதம் போன போக்கைக் கவனிப்பதை விட, அவர்களுக்கிடையேயான ஸ்ட்ரேடஜி முறைகள், மனிதர்களின் முக வேறுபாடுகள், எழுதுபவனாக எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

முஸ்லீம் கிழவர் மென் ரோஸ் பைஜாமா, வெண்மையான காற்றில் பறக்கும் தாடி, அறிவுஜீவி சின்னம் போன்ற ஒருவித கண்ணாடி, ஒரு ப்ளாஸ்டிக் பை, கையில் உருதோ, அரபியோ தெரியவில்லை, அதில் ஒரு புத்தகம் வைத்து அவ்வப்போது ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த மற்றொருவர் சாதாரண சட்டை (முதல் ஒரு பட்டன் திறந்து, பனியன் தெரிந்தது), வேட்டி, வழுக்கையாக இருந்தார்.

பேச்சு ஆரம்பிக்கும் போது கிழவர், சரிக்குச் சமமாய்ப் பேசுவது பெண் என்ற நினைப்பில் சாதரணமாக ஆரம்பித்து (எல்லாம் நிறுவனம்... கோயிலோ, மசூதியோ.. எல்லாம் நம்மைக் கொள்ளையடிக்கிறதுக்கு நடத்தறாங்க... கடவுள் நம்மகிட்ட தான் இருக்கார்... etc) அப்படியே மேலே மேலே கொண்டு போனார். பக்கத்தில் இருந்தவர் அவ்வப்போது வில்லுப்பாட்டு போல், 'ஆமாம்.. ஆமாம்..'!

'பார்..! நான் எவ்வளவு படித்திருக்கிறேன். உனக்குச் சமமாகப் பேசுகிறேன். என் பேச்சைக் கேள் பெண்ணே..' என்ற தொனி அதில் தெரிந்தது. அந்தப் பெண் ஒத்துக் கொள்வாள் என்ற நினைப்பிலேயே அவர் பேச்சு போய்க் கொண்டிருந்தது. போகப் போக பெண் சாதாரணம் அல்ல; படித்தவள் என்று தெரிந்து போன பின்பு யுக்தி மாறியது. இன்னும் புரியாத ஐன்ஸ்டீன், இயற்பியல், காலக்ஸி, அணு, எலெக்ட்ரான் என்றெல்லாம் எடுத்து விட ஆரம்பித்தார். அவர் சொன்னவற்றில் இருந்த ஓட்டைகள் தெரிந்தாலும், ஜாலியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கும் பக்கத்து வேட்டி ஆசாமி, வழுக்கையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, ஜால்ரா தட்டினார்.

அந்தப் பெண்ணும் சாமான்யப்பட்டவர் இல்லை போல் தெரிந்தார். 'ஐயா, அப்படி கடவுள் இல்லைனாலும் ஆத்ம திருப்திக்காக அப்படி ஒருத்தர் இருக்கர்னு ஒத்துக்கறதுல என்னங்க தப்பு இருக்கு..? தப்பு செஞ்சா கண்ணைக் குத்துவார்னு சொன்னாத் தானே குழந்தைங்க கொஞ்சம் கட்டுப்பாடா இருப்பாங்க..' என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன், பேஸ்தடித்துப் போன (முகங்களில் தெளிவாகத் தெரிந்தது..!) இவர்கள் உடனே வியூகம் மாற்றினார்கள்.

அந்தப் பெரியவர் சட்டென மெளனமானார். கையில் வைத்திருந்த பத்திரிக்கையை மடித்து பைக்குள் போட்டுக் கொண்டார். கண்ணாடியை உறைக்குள் வைத்தார். பின்னாடி நன்றாகச் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டார். முகத்தில், 'ஆண்டவரே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். மன்னியுங்கள்' என்பது போன்ற பாவம். இப்போது களத்திற்கு வந்தார் துணை அன்பர்.

அவர் மொழி வேறு. பெரியவரின் தளத்திலிருந்து தடாரென கீழே ஐம்பது அடிக்கு குதித்து, லோக்கல் பாஷையில் பேசினார். 'ஏங்க, கடவுள் இருந்த இப்படியெல்லாம் நடக்குமாங்க..?' வகை. அவர் பேச்சு பிறகு சுற்றிச் சுற்றி ஒரு விஷயத்தைத் தொட்டது. 'இவர் எவ்வளவு பெரியவர். அவரே அமைதியாகிட்டார். உங்ககிட்ட இனி என்ன பேசறது? பேசறதுனால என்ன உபயோகம், அப்படிங்கறமாதிரி வெறுத்து சைலண்டாகிட்டார். போங்கம்மா..!' இந்த உத்தியில் பேசி, எதிராளியை ஒரு தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி, தம் கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளச் செய்யும் முறை.

அந்தப் பெண்ணா மசிந்தார்? ஒருமுறை தெரியாத்தனமாக அந்த அன்பர் பீமப்பள்ளியில் இருக்கும் 'எங்காளுங்க' என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான்! அந்தப் பெண் அதை அப்படியே பிடித்துக் கொண்டு, 'பாத்தீங்கள்ல.. நீங்க இவ்ளோ தூரம் சொன்னப்புறமும், உங்க அடிமனசில அந்த மதப் பாசம் இருக்கு..'. அன்பரால் சமாளிக்க முடியவில்லை. முகம் முழுக்க துடைத்துக் கொண்டு, ஏதேதோ சொல்லிப் பார்த்து, அந்தளவிற்கு வலிமை இல்லாமல், ஒதுங்கிக் கொண்டார்.

தோல்வியை ஒத்துக் கொள்ளாத அந்த இருவர் கூட்டம், அடுத்து எடுத்த அஸ்திரம், 'ஆணாதிக்கம்'.

மதுரையில் இறங்கும் போது, தாம் ஒரு என்விரோன்மெண்டலிஸ்ட் என்று விசிட்டிங் கார்டு கொடுத்தார். யாரிடம்? அந்தப் பெண்ணின் கணவரிடம். அர்த்தம் என்ன? செமத்தியாக மூக்குடைத்து விட்ட பெண்ணிற்கு கொடுக்க வேண்டாம். அமைதியாக ஆர்க்யூமெண்ட்களைக் கவனித்துக் கொண்டு வந்த ஆணிடம் கொடுக்கலாம். ஒரு வணக்கம் மட்டும் பெண்ணிற்குச் சொல்லி விட்டுச் செல்ல, இந்தக் குடும்பமும் வேறு வழியில் சென்று மறைந்தது.

து ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் இன்னொரு கதை நடந்தது. அதையும் கவனித்த போது மனம் வலித்தது.

- தொடரும்.

3 comments:

வினோத் கெளதம் said...

தல அது என்ன அடுத்த பார்ட்..

இரா. வசந்த குமார். said...

ஊருக்குச் செல்ல வேண்டிய வேலை இருப்பதால், இந்தப் பதிவு திங்கள் இரவில் நீட்டப்படும்.

:)

இரா. வசந்த குமார். said...

வந்திட்டே இருக்கு...!