Monday, June 28, 2010

மீண்டும்..!


சில்க் போர்டில் சோளத் தோல்கள் அலைபாய்கின்றன. மதுக்கோப்பைகளை வரிசையாக நட்டு வைத்தது போன்ற தூண்களின் மேல் மேம்பாலங்கள் சறுக்குகின்றன. ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், தெருமுனைகளிலும் கண்ணாடித் தள்ளுவண்டிகளில் பானிபூரிகள் நொறுக்கப்படத் தயாராய் இருக்கின்றன. கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க, மரங்கள் குறைந்து கொண்டிருக்கும் நகரின் இயக்கம் மெளனமாய்த் தெரிகின்றது.

மீண்டும் பெங்களூருக்கு வந்திருக்கிறேன்.

முதன்முறை 2003-ல் வந்தேன். லால்பாக் அருகே கஸின் வீட்டில். பனீர்கட்டா சாலையில் ஆரக்கிள், ஐ.பி.எம். துவங்கி, கோரமங்களா முழுக்கச் சுற்றி, இன்னர் ரிங் சாலை முழுக்க நடந்தேன். அப்போது பேருந்து நிறுத்தம் எதுவும் கிடையாது என்று தெரியாததால், நடந்து கொண்டே சென்று ஆர்மி பயிற்சிகளைப் பார்த்தேன். தொம்லூர் சிக்னலைத் தொட்டபின் தான் மறுபடியும் ஊருக்குள் வந்தது போல் இருந்தது.

பெங்களூரிலேயே பல இடங்களில் தங்கியிருக்கிறேன். கோடிஹள்ளி, லால்பாக், இந்திராநகர், திப்பசந்திரா. இப்போது கக்கதாசபுரா ரெயில்வே கேட் அருகே.

இரண்டாம் முறை 2006-ல். குறைந்த காலமே இருக்க முடிந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வாக அப்போது தான் வலைப்பதிவு எழுதத் தொடங்கினேன். பிறகு சென்னைப் பயணம், திருவனந்தபுரத்தில் இரண்டரை ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது மீண்டும் பெங்களூருக்கே திரும்பியிருக்கிறேன்.

இந்த தடவை பெங்களூரையும், கர்நாடகத்தையும் சுற்றலாம் என்ற ஐடியா இருக்கின்றது. போதாக்குறைக்கு நிறைய நண்பர்களும் இப்போது இங்கே இருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலம் இந்தூரில் பாவ்பாஜி, சப்பாத்திகளூக்கிடையே வாழ்ந்த தமிழ்ப்பறவை சிறகு விரித்துப் பறந்து, இப்போது வெல்லச் சாம்பார் இட்லியும், புதினாச் சட்னியும் கொள்ள ஐ.டி.பி.எல்.லை அடைந்திருக்கின்றது.

இனி பயணப் பதிவுகள் பெங்களூர் மற்றும் சுற்றுப்புறங்கள் சார்ந்து வரலாம்.

***

Image Courtesy :: http://phanimitra.files.wordpress.com/2007/07/bangalore-techie.jpg

6 comments:

ச.முத்துவேல் said...

ஆர்வமளிக்கும் புகைப்படம். பார்த்ததும் சிரித்துவிட்டேன்.இதுதான் இந்தியா.

ஆயில்யன் said...

பெண்களூர் வந்து ரீச்சாகியாச்சா பாஸ்!

வாழ்த்துக்கள் :) கலக்குங்க!

ஆயில்யன் said...

//மீண்டும் பெங்களூருக்கு வந்திருக்கிறேன்///


திருவனந்தபுரத்திலிருந்து மீண்டு அல்ல? :)

யெப்படிப்பட்ட ஊரை விட்டுட்டு ஹம்ம்ம்ம்ம்ம்ம்! :)))

thamizhparavai said...

welcome

ஆயில்யன் said...

// தமிழ்ப்பறவை said...

welcome//


பாஸ் எவ்விடயானு நீங்க? :) [மலையாளம் கொஞ்சும் கொஞ்சும் கம்மும்]

பார்த்து பல தேதிகள் ஆகுது நலமா?

ராம்ஜி_யாஹூ said...

நடைபாதையில் மடி கணினியில் இணைய அரட்டை

இந்தியா உண்மையிலயே ஒளிர்கிறது தான்