Tuesday, January 13, 2015

தனித்து ஒரு பாடல்.

ழை நகர்ந்த பின் வந்த மாலையில் அவன் மட்டும் பூங்காவில் அமர்ந்திருந்தான். விளையாடிய பையன்கள் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுடைய சின்னஞ்சிறு கூச்சல்கள் மட்டும் இன்னும் சுற்றி வந்தன. நகரம் செயற்கை ஜொலிஜொலிப்புகளால் போர்த்தப்பட்டிருந்தது. இருண்டு கொண்டு வந்த வானத்திற்கு மேலே அகண்டாகாரமான இருள்வெளி மெளனமாய் உறைந்திருந்தது. மேலிருந்து ஒரு தேவன் பார்த்தாலும் தனித்துத் தெரியுமளவுக்கு பூங்காவில் கழுவப்பட்டிருந்த பசிய இலைகளின் நடுவே, சேற்றுமணம் நிரம்பிய காட்டுக்குள் தனித்திருந்தான்.

சின்னச் சின்னப் பூச்சிகள் கிளம்பி, அந்தக் குளிர் இரவை நிரப்பத் தொடங்கியபின் அவன் சட்டைப்பையில் கொண்டிருந்த மவுத் ஆர்கனை வாய்க்குச் சூடினான். அவன் நெஞ்சில் கெட்டிப்பட்டிருந்த சோகக் கதுப்புகளை, மூச்சின் வெப்பத்தால் கரைத்து, உருக்கிக் கரைத்து, மென்னீராக்கி, இன்னும் வெப்பம் கொடுத்து ஆவியாக்கி, வெளித்தள்ளிய அனல்காற்றின் ஜதி, ஆர்கன் வழியாக மென்சூட்டில் துயரப்பாடல்களாகி வெளிவந்தன.

"மரங்களோ புதர்களோ பறவைகளோ பூக்களோ
மறந்திடாதீர் என்னையே...

பனிகளோ குளிர்களோ தளிர்களோ இலைகளோ
புதைத்திடாதீர் என்னையே..."

என்று அவன் பாடிக் கொண்டே பூங்காவை விட்டு வெளியேறினான். இனி அவன் அங்கு திரும்பப் போவதில்லை.

நகரம் தன் விருப்பங்களை மர்மங்களின் மேடையின் படுதாவுக்குள் நிகழ்த்தி இரவின் புதைகுழிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்க, மஞ்சள் தெரு விளக்குகள் கவிழ்ந்த நீர்த் தேக்கங்களைக் கலைக்காமல் அவன் செல்லத் துவங்கினான்.

அவனை அந்நகரம் அறிந்ததில்லை. அல்லது, அவனைப் போன்ற பல்லாயிரம் பேரை அது அறிந்திருந்தது; அழித்திருந்தது; மறந்திருந்தது. அவன் இருமை சரிந்திருக்கும் குறுக்குச் சந்துகளிலும், மேம்பாலங்களின் திரட்சியான பாதங்களிலும் சாய்ந்து நிற்கவில்லை. அவன் பாதை அவன்முன் செல்கின்றது. அவன் தன் வாத்தியத்தையும், வாத்தியமான உடலையும் சுமந்து கொண்டு நகரின் இரா வீதிகளில் இறுதி உயிராய் உலா சென்றான்.

அவனை யாரும் தடுப்பதில்லை; அவனால் யாருக்கும் தொல்லையுமில்லை. அவன் தன் பாட்டுக்குப் பாடுகின்றான். பனி வந்து போர்த்திக் கொண்டபின் அடைக்கப்பட்ட ஜன்னல்களுக்குள், சாத்தப்பட்ட கதவுகளுக்குள், மூடப்பட்ட கூரைகளுக்குள் அணைப்பின் சூட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நகரத்தில் அவன் பாடலை யாரும் கேட்பதுமில்லை. அவன் கேளாக் காதுகளை நம்பி நிறுத்தவுமில்லை. அவனுக்குத் திறந்திருக்கும் சாலைகளையும் காலியான தெருக்களையும் கொடுத்து விட்டு, நகரம் ஒதுங்கி வழிவிட்டபின், அவன் யாரையும் நினைத்துக் கொள்ளாமல் தன் பாடலை இசைத்துக் கொண்டு வெளிரிய வீதிகளில் சென்றான்.

மழையில் ஊறிப் போன காகிதங்கள் நகரத்தின் சுவர்களில் அழுக்காய் ஒட்டிக் கொண்டிருந்தன. கருப்புநதிச் சாலைகள் குளிர்ந்திருந்தன. பெருநகரத்தில் எங்கோ ஓரிடத்தில் பாதாளம் செல்லும் வழியைக் காவல் காத்திருக்கும் மூடி ஒன்று யாராலோ திறக்கப்பட்டிருக்கும். அவன் அதை நோக்கியே தான் பாடலைப் பாடிக் கொண்டு சென்றான். கீழ்மையின் அத்தனை அழுக்குகளும், கழிவுகளும் கொடும் நாற்றத்துடன் சீறிப் பாய்ந்து ஆக்ரோஷமாய் அடித்து ஓடும். அந்த பாதாள அனல்நதியின் படித்துறையில் அவன் தன் பாடலுடன் இறங்கினான். அடியாழத்தில் அவன் மூழ்கிப் போனான். அவனுடைய பாடல் மட்டும் நறுமண சுகந்தத்துடன், அந்த இருள் பாதையில் தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

No comments: