Monday, January 12, 2015

மரணத்தின் பனிமலர்.

தியொன்றின் இடைவிடாப் பெருக்கில் மூழ்கியே இருக்கும் வழுவழுப்பான வடிவமற்ற கல்லொன்றை எடுத்து முகர்ந்து பார்த்தது போன்ற வாசத்தில் மரணம் என் அருகிலேயே அமர்ந்திருக்கின்றது. துயரையும் கண்ணீரையும் போல் என்னைப் பிரியாது என்னுடனே அலைகின்றது. சுவர்க்குருவியின் நள்ளிரவுக் கூவலைப் போல, யாரும் எதிர்பாராத கணமொன்றுக்காகக் காத்திருக்கின்றது, என்னைத் தொட. அதன் குளிர் ஸ்பரிசம் தோல் மேலே பனிக்கட்டியின் பாரம் போல் மெல்ல ஊடுறுவும். வெளியே கரைந்து கொண்டே இருந்து, உள்ளே ஒரு கூர்நுனி ஊசி போல் இறங்கிக் கொண்டே நரம்புகளில் படர்ந்து உள்ளுருக்கும்.

சுருண்ட இலைச் சருகுகள் மிதக்கும் நதி உடல் மேலே. அடியாழத்தில் காலத்தின் கூழாங்கற்களைப் போல அசைவிலாது அமிழ்ந்திருக்கும் மரணத்தின் காலடிச் சுவடுகள். ஈரமான மண்ணில் பிடித்து வைத்த உருவங்களை அக்காலச் சுழல் தன்னுள் கரைத்துக் கொள்ள அனுப்பும் நுரையிதழ்களே இறப்பின் கண்ணிகள்.

கரைகளில் படியும் குளிரின் பொழுதுகளில் கால்களைச் சுருக்கிக் கொண்டு அமர்ந்து நதி போகும் பாதையைப் பார்த்திருக்கிறேன். நிறைந்த பெருங்காமத்தில் நிரம்பி வழிந்த மதுரம் போல பெரும் ஆவேசத்துடனும் பெரும் வியப்புடனும் பேரிரைச்சலுடனும் நீராழி பொங்கிப் பிரவாகித்து ஓடும் பேராறு அடங்காப் புரவிகளின் கட்டற்ற கூட்டத்தின் தழுவல்களாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிடரிமயிர் சிலிர்க்கப் புணரும் நீலக் குதிரைகள் பீய்ச்சும் வெண்ணுரைகள் கரைகளெங்கும் படிந்து படிந்து ஓதம் பரப்பும் மணல்வெளிகளில் மரணம் தன் விஷக்கைகளில் வலை ஒன்றைப் பின்னிப் பின்னி வைத்துக் கொண்டிருக்கின்றது.

நதியின் மேலே நடனமிடும் பொற்கதிரின் புலரிக் கணங்கள் வானெங்கும் பிரகாசிக்கும் கோடி கோடி பொன்னூசிகளால் நதியைத் துளித்துளிகளாக உறிஞ்சி உறிஞ்சி தன்னை நிரப்பிக் கொண்டு மாலைகளில் உதிரமுகில்களாக விட்டுச் செல்கின்றன. கருஞ்சிமிழைத் திறந்து வெளிவரும் வெள்ளித்துளி நறுவாடை புனைந்து நகரந்து செல்லும் இரா நேரங்களில் குளிர் வரும் தெருவில் முக்காடு போட்டுக் கொண்டு அவன் காத்திருக்கிறான்.

No comments: