Thursday, March 31, 2016

கண்ணாடிச் சிறுமணிகள்.

கொஞ்சம் கவிழ்க்கப்பட்ட சதுரங்களாய் வெட்டப்பட்டுக் கோர்த்த சிறு கண்ணாடிச் சரங்களின் கீழே நிர்வாணமாய்க் காத்திருக்கிறாள் அவள். சிறு நெருப்புத் துண்டங்களாய் ஜ்வலிக்கும் அவற்றைத் தடவிக் கொண்டு செல்கின்றன வானப் பேரரசனின் ஒளிநகங்கள். அவளுடைய திரண்ட வனப்புகளின் மேல் பற்றியெரிகின்றன பார்வைகள். அவளை அணுகுகையில் தம் வேட்கையை, வெப்பத்தை, வியர்வையை தாமே காணும் யாரும் வியந்து பயந்து உடன் விலகுகின்றனர்.

அவள் நகங்களின் மேல் அரைத்துப் பூசியிருந்த கண்ணாடித் துகள்களைத் தம் கழுத்தின் அடிப்பாகத்தில் செருகிக் கொண்டு செந்நீரை வடிக்கத் துணிபவன் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் அவள். வளைந்திளகும் செழித்திடையைச் சுழற்றிக் கோர்த்திருந்த கூர்நுனி மாவிலைத் தோரணங்களில் தம் சிலிர்த்துச் சீறும் நாகத்தை சிவப்பித்துக் கொள்ளும் முடிவினனைக் காணக் காத்திருக்கிறாள் அவள். இமை நுனிகளில் செருகி வைத்த துளிக் கூர்மைகளை மூச்சுக் காற்றில் உருக்கி வீழ்த்தி வீழ்பவனை, அனலாடிய ஓர் இரவின் மையத்தில் கண்ட கனவின் நினைவில் காத்திருக்கிறாள் அவள். தன்னை இறுக்கிச் சுழன்றிருக்கும் கண்ணாடி மணிகளைக் கவ்விக் கவ்விக் களைந்து, தன் மின்மேனி மேல் நில்லா நெடும்பயணம் செல்லும் பெரும்பயணியைத் தொலை வானின் பின்புறம் இருந்து வரும் நிறைந்த கருமுகில் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறாள் அவள்.

No comments: