Monday, November 28, 2016

நீலாம்பல் நெடுமலர்.4.

போதுமே என்கிறாய் போதுமா என்கிறேன்
வேண்டாமே என்கிறாய் வேண்டிய மட்டும்
பொறுமையாய் என்கிறாய் போதையே என்கிறேன்
போகட்டும் என்கிறாய் போகாதே என்றால்
இருக்கிறேன் என்கிறாய் போல்.

வருகிறாய் வந்தபின் வேனிலில் நீர்போல்
தருகிறாய் தண்மைக் கருணை - கருக்கலில்
பொற்கதிர் போலநீ தோன்றிடும் வேளையில்
சொற்களைத் தேடுவேன் நான்.

அழகே அமுதே அணியே அருளே
தழலே தனியே வருக - சுழலே
சுகமே தருமே முழுமை முகமே
அகமே அணைப்பின் இதம்.

வானமே கானமே நாணமேன் நேரிலே
பானமே பௌர்ணமி மேகமே - தானமே
தந்திடும் முத்தமே தங்கமே தாமரை
முந்திட முன்வரும் நாம்.

கடல்சூழ் கியூபா கடமைசூழ் கோவாய்
திடம்சூழ் திறத்தில் வலியை - இடத்தின்
இடம்நிறுத்தி எல்லார்க்கும் எல்லாமும் என்றார்
தடம்சூழ் நடப்பார் தவறாது வாழ்த்தும்
பிடல்காஸ் டிரோவைப் புகழ்.

மொட்டாகிப் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகி
எட்டாத செங்கனியாய் காயாகும் - கிட்டாத
தென்றான தேதுமில்லை நில்லாமல் எய்தாலே
வென்றாக வேண்டுங்கூர் வில்.

No comments: