Tuesday, February 13, 2018

நீலாம்பல் நெடுமலர்.30.


மானைப் பழிக்கும் இரு விழியலைவு;
தேனை இழிக்கும் ஆழிறங்கு முத்தம்;
வானைக் கிழிக்கும் மின்னலாய்த் தழுவல்;
நானை அழிக்கும் ஈருடல் இணைவு!

தணுமை நிறைந்த விரல்நுனி படுகையில்,
அணுக்கம் என ஒரு வாசனை நாசி தொடுகையில்,
மேலாடை விரிப்பின் ஒரு படலம் முகம் தழுவி விலகுகையில்,
அருகிருப்பதன் வெம்மை தீண்டும் திசைகளில் நிறைகையில்,
இந்நாள் இன்னும் நீளாதோ? இந்நொடி இப்படியே உறையாதோ?

விடியற்காலைச் செம்மை ஒரு கோபம்;
முடிமாலை அந்தி முயக்க பாவம்;
அடிவாரநதிக் கொப்பளிப்பு தீரா அணைப்பு;
முடியா உறவு பிறவிகள் தோறும்!

நாளும் இரவுமென காலம் கழிகின்றது;
கோளும் கிரகமுமென படுத்தும் வாழ்விது;
தாளும் வேலுமென நீ முன் வந்தணைக்கையில்,
நீளும் மோகவடிவில் உன்னில் புதைகிறேன்.

வேனில் மேகங்கள் நீர் காட்டல் போல் வந்தமைந்து துளி சிந்தாது காற்றில் கலைகின்றன;
உன் சொல்லா ஊடல் போல்!
மழைக்கால முகில்கள் வானாழி திறந்தாற்போல் கனமாய்ப் பெய்து முழுதுடல் நனைத்து நடுங்கச் செய்கின்றன;
உன் நில்லாக்கூடல் போல்!

நேரங்கழியாது;
நாள் நகராது;
காணா நொடிகளால் காலம் ஆகுகையில்.

பால் நுரையாலோர் ஆடை;
தீ அனலால் ஓர் அணிகலன்;
நீர் ஈரத்தில் ஒரு முத்தம்;
திடீர் மழையாய் ஒரு முழுதணைவு;
போதும் ஒரு பிறவி!

இன்னும் ஒரு சொல்!
இன்னும் ஒரு பார்வை!
இன்னும் ஒரு புன்னகை!
இன்னும் ஒரு நூறாண்டு!

No comments: