Thursday, July 12, 2018

நரகுசூழ் பாதை.

சிரிப்புகளாலும் மகிழ்ச்சிகளாலும்
நிரப்பப்பட்டிருக்கும்,
தன்னால் வெல்லப்பட
முடியாதவர்களின்,
தன்னை வென்றவர்களின்.

நுரைத்து நுரைத்தெழும்
ஆனந்தப் பேரலை
அடித்துக் கொண்டிருக்கும்,
தன்னை இகழ்ந்தவர்களின்,
வாயிலில் நிறுத்தித்
துரத்தியவர்களின்.

திருவிழாக்களும்
திசையெங்கும் வண்ணங்களும்
திரண்டிருக்கும்,
தினம் எண்ணிப் புகைப்போர்க்கும்,
கணம் கூட மறவாதோர்க்கும்.

கெடுநாற்றமும்,
வேகும் நெருப்புக் கொந்தளிப்பும்
மழைச்சாணிக் குழைசலும்
கூர் நுனிமுட்களும்
நிரம்பிய
புராணப் பாதைபோல்
இருக்கலாமெனில்,
அது மேலல்லவா,
வருந்திச் சிந்தக் கண்ணீரும்
தோள் வருடி ஆறுதலிக்க
இரு கரங்களும்
கூட கேள்!

சிலுவையிலிருந்து
பிய்த்தெடுத்து
வழிகுருதி துடைத்து,
நீட்டித் துயர் துடைப்பான்,
அவன்.

No comments: