Saturday, July 14, 2018

காலணி திருத்துனர்.

டைபாதையில்
காலணி திருத்துனர்
கால் மடித்து
எப்போதும்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறார்.

கடந்து செல்பவர்களின்
கால்களை மட்டுமே
கவலையுடன்
பார்க்கிறார்.

அறுந்து போன வார்கள்,
கிழிந்த தோலணிகள்,
ஊக்கு குத்தியவை,
ஓரம் விடுபட்டவை,
சேற்றிலூறி வாய் பிளந்தவை...

பிழைகளை ஏந்தி
அப்பிழை ஏந்தி வரும்
கால்களை மட்டுமே
அவர் தேடுகிறார்.

வெறும் கால்களை
மட்டும்
கொண்டவர்களை
அவரும் கூட
விரும்புவதில்லை.

தையல் போட்டுப் போட்டு
நூல் கண்டாய் மட்டும்
தோன்றும்
அவ்விரு இணைக் காலணிகளுக்கு
மட்டும்
இலவசமாய்
இன்னுமொரு
தையல்
இட நினைக்கிறார்.
வயிற்றனல் விடுவதில்லை.

இளமென் சிவப்பு நிறத்தில்
மையத்தில் மலர் சேர்த்து
இரு
பிள்ளை செருப்புகளைத்
தைத்து
நெடுங்காலமாய் வைத்துள்ளார்.
தன் பெயரென்ன,
தான் உணவு உண்டேனா
என்று கேட்கும்
முதல் குரலுக்குப்
பரிசாய்க் கொடுக்க.

அவரிடம் வீசுமுன்
காலால் எத்தும் முன்
விரைவுபடுத்து முன்
கொஞ்சம் புன்னகையையும்
அவரிடம் வீசலாம்,
குறைவில்லை.

1 comment:

Yarlpavanan said...

அருமையான எண்ணம்
சிறந்த கைவண்ணம்