Wednesday, September 12, 2018

முழுப் பைத்தியமாவதற்கு முன்...1.

ன்றெழுந்தது. இன்றுமிருப்பது. என்றும் சொற்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்ணிலவில் ஒரு பாதயாத்திரை போய் வந்தால் என்ன? காவியங்களில் காலடி வைத்து நடக்கும் பேற்றை விரும்பார் யார்? ஆம், அவளிடம் கருங்குழிகளும், மென் சேற்றுப்புதைவுகளும் இருக்கும். தடம் பதித்து மிதந்து, காலூன்றி, தடுமாறி, விழுந்து, உருண்டு, புரண்டு, கையூன்றி, எழுந்து, நின்று மீண்டும் அந்த ஒளியுடலில் பரவுதல் என்பது தான் இவ்வுடலின் நோக்கமாய் இருக்கலாம்.

தேர்ப்பூக்களும் சரம் கலைந்த மாலைகளாய் தேவி தோளிலேறி கல் மார்புகள் மேல் படிந்து பூத்து மணந்த வெண் மலர்களும் செம்பூக்களும் கோர்த்த கனமான அவை, இதோ தெரு மூலைகளில் எறியப்படும். அல்லது, நுரை சுழித்தோடும் ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் தூக்கி வீசப்படும். எவரெவர் தோட்டத்திலோ முளைத்துப் பூத்த ஒவ்வொரு மலரும் இவ்வூரின் நதிச்சுழலில் மிதந்து எவ்வூரின் மண்ணிற்கோ சென்று சேர்ந்து உரமாகும். அதன் விதி வாழ்க.

சாலைகள் மறந்த நதிகள் பொங்கிப் பெருகி ஓடும் கடுமழைக்காலத்தில், கனமான தார் ஆடைகளுக்கு அடியில் இன்னும் உயிர்ப்பைத் தக்க வைத்துக் காத்திருக்கும் செம்மண் பூமி, விதைகளை வீசும் அந்த உறுதியான விரல்களுக்காக இனி காத்திருக்கும். ஊழிப் பிரளயம் நடந்து முடிந்து பூமிப்பந்து புரட்டிப் போடப்பட்ட பின்பு, மேற்பரப்புக்குக் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் தீக்குழம்பு பிரவாகித்து, எங்கும் கொப்பளித்து அடங்கிய பின், குளிர் மழை யுகயுகங்களாய்ப் பெய்து மண்ணின் அசுரம் தணிந்த பின், முதற்புல் முளைப்பது எப்புள்ளியில்? இன்று அங்கு எவர் நடந்து கொண்டிருப்பர்?

சன்னல் கம்பிகள் மேல் எப்போதும் வந்தமரும் அந்தச் சின்னக் குருவியை இன்னும் காணோம். கையளவு அரிசிக் குவியலை எடுத்து வைத்துக் காத்திருக்கிறேன். அதன்நெல்மணிக் கண்கள், சாம்பல் வண்ணக் குறுஞ்சிறகுகள், வேலிக்காத்தான் முள்ளென அலகு.. இன்று அதற்கு வேறு எவரேனும் உணவிட்டு விட்டார்களா, அல்லது வேறு எவருக்கேனும் அது உணவாகி விட்டதா என்று தெரியவில்லை. இரவுகளில் மட்டும் நடைபயிலும் அந்த உருண்ட பூனையை ஐயப்படுகிறேன். வெருண்டு உற்று நோக்கும் அதன் சொல்லற்ற கரும் கண்களின் கீழே விடிகாலைக் கதிர்க் கோடு போல் நீளும் கூர்மீசைமேல் குருதித்துளிகளைக் காணலாம் இன்று. குருவிகள் குருதி கொண்டிருக்குமா என்ன?

பாறைகள் கிடந்தன. இணைந்து மலைகளாயின. மலைகள் முளைத்துக் காடாகின. காடுகள் அழிந்து ஊராகின. ஊர்கள் இணைந்து நகராகின. நகர்கள் இணைந்து பெருநகரங்களாகின. நாடுகளாகின. நாடுகள் எல்லை கொண்டன. கோடுகளுக்குள் திசைகள் அறியாது திரிந்து கொண்டிருந்த விலங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கூண்டுக்கம்பிகளுக்கு உள்ளே அடைத்து வைத்து , ஆயிரம் அடையாளங்களோடு அலைகின்ற மனிதர்களுக்குக் காட்டின. விட்டு வந்த பாறைகளையும், நீர் கழித்து தம் எல்லை எனச்சுட்டிய பெருங்காடுகளையும் மறக்காத மிருகங்கள், மிருகக்காட்சி சாலைகளிலும் தமக்கென எல்லைகளைக் கட்டி வைத்து தூங்கிக் கொண்டே இருக்கின்றன. 

1 comment:

Anonymous said...

Play the Coin Casino Online - Casinowed.com
The Casino is the first to offer a fully functional online casino for 인카지노 beginners to 제왕 카지노 enter the 메리트 카지노 고객센터 online gambling realm. At Casinoworld.com,