Tuesday, September 11, 2018

பூனைகள் நடக்கின்ற இரவுகளில்...

முன் மதியம் ஒன்றில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ கைப்பிடித்து வைத்த செம்மண் கொத்துகள் இறுகிக் கெட்டிப்பட்டு மலைகளாகச் சூழ்ந்த வெளுத்த  நிலப்பரப்பில் யாருமே இல்லை. வானுக்கும் மேலே பிசிறு மேகமும் இன்றி கூசச்செய்யும் ஒளி நீலம். முகடுகளில் கழுகுகளும் வல்லூறுகளும் அனல் நதியில் உருகி வழிந்து விழும் பிணங்களை, வியர்வை படர்ந்த அவர்களின் மேல் கோட்டுகளில், கலைந்த தாடியில்,புழுதி படிந்த தொப்பிகளில், மண் ஊறிய தோல் காலணிகளில் தளர்ந்து விழுகின்ற ஜீவனை, அங்கே உச்சிகளில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும். இன்று அவைகளும் இல்லை. காற்றில் அடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த புதர்களின் அடியே வளை தோண்டி பதுக்கி வைத்திருக்கும் கொட்டைகள், பூக்கள், களி மண் உருண்டைகள் உடைந்து, வெடித்து சிலந்திப் பூச்சிகள் தின்னக் கொடுத்து எங்கோ தப்பித்துப் போய் விட்டன மலை எலிகள். சபிக்கப்பட்ட இச்சாலையில் தலைக்கு மேலே பல லட்சம் கொடும் வாட்களுடன் தணல் அலைகளைப் பரப்பி வியாபித்துள்ளான் பாலை அரசன். கானல் பிழைகள் மினுங்கும் மேடு பள்ளங்களில் வெக்கை புழுங்கிக் கொண்டிருந்தது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் இக்கறுப்பாற்றில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

இவ்வழியே முன்பு பல காலங்களாய், பல தலைமுறைகளாய்ப் பலர் நடந்து சென்றிருக்கிறார்கள். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சுகளை முதுகில் கட்டிக் கொண்ட அன்னையர், முதுமையடைந்து, உடலோடு குடலும் எலும்புகளும் ஒட்டிப் போன பெரிய கண்கள் தளர்ந்து போய், ஒவ்வொரு காலாய் எடுத்து வைப்பதற்குத் தடுமாறித் தடுமாறி நடை குலைந்து நடக்கும் வயதான குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து நடக்கும் கிழவர்கள், அவர்களுடைய தோல் பாக்கெட்டுகளில் மனக் கட்டுப்பாட்டுடன் சேகரித்து வைத்த வேர்க்கடலைகள், வழியில் சந்திக்க நேரும் பாம்புகளை எதிர்க்கத் துப்பாக்கிகள், பழைய காலணிகள், சுருக்கங்கள் நிறைந்த கிழவிகள். மின்னும் கூர்நுனிகள் கொண்ட வேல்களை இறுக்கமாகப் பிடித்துப் பழுப்புக் குதிரைகள் மேல் அமர்ந்து படை படையாய் வரிசைகள்.

இப்பாதையைப் பற்றிய நாடோடிப் பாடல் ஒன்று உள்ளது.

இன்னும் நெடுங்காலத்துக்கு முன்பு ஓர் அக்காவும் ஒரு தம்பியும் இப்பாதை வழியே நடந்திருக்கிறார்கள். அவள் பெயர் மினா என்றும் அவன் பெயர் மிசி என்றும் நாடோடிப் பாடல் ஒன்று சொல்கின்றது. உயிர்களே அற்றுப் போன வெளியானாலும் காற்று இருக்கும் வரை எவனோ ஒருவன் பாடி வைத்த பாடல்கள் இங்கே உலவிக் கொண்டேயிருக்கின்றன. மினாவும் மிசியும் ஒரே ஒரு குடைக்குள்ளே ஒண்டிக் கொண்டே வெயில் தளும்பிய வேளையொன்றில் நடந்திருக்கின்றார்கள்.  மினா பனிரெண்டு வயதிலும் மிசி எட்டு வயதிலும் ஊரில் மவுண்ட் என்ற துறவி கொடுத்த வெண்ணிறக் குடை ஒன்றில் அடைந்து வந்தார்கள். வறண்ட பாறைகள் மட்டுமே விழுந்து கிடந்த மண்பாதையில் அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். மிசிக்கு கேட்பதற்குக் கேள்விகள் நிறைந்திருந்தன. ஏன் இங்கே யாருமே இல்லை? ஏன் வானம் இவ்வளவு அமைதியாய் இருக்கின்றது? ஏன் காற்றில் இத்தனை புழுக்கம்? ஏன் நம் எதிரே யாருமே வரவில்லை? கேள்விகள் நிரம்பித் தளும்பும் சிறு மூளை கொண்டவனாய் நடந்தான். மினாவுக்குச் சொல்வதற்கு பதில்கள் ஒன்றும் இல்லை. அவளுடைய மனம் அங்கே நீலவெளியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அங்கே எண்ணங்களே இல்லை. மதியத்தில் வீசிய காற்றில் இதழ்கள் உதிர்ந்து போய் காலியான ஒரு மலரைப் போல அவள் நடந்தாள்.

அவளுடைய சிறு விரல்களில் எப்போதோ பறித்த மஞ்சள் பூக்கள் கொத்தாக சரிந்திருந்தன.

வெகுதூரம் அவர்கள் நடந்து வந்த பின்பு ஒரு இறுகித் தாளிடப்பட்ட பழைய வீடு ஒன்றை முள்வேலி சூழப் பார்த்தார்கள். வேலி மேலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. வீட்டின் வாசலில் தூக்கில் ஏற்றப்பட்ட எலிக்குஞ்சைப் போன்ற ஒரு விளக்கு தொங்கியது. அதன் திரி கருகியிருந்தது. கூரையின் மேல் புகைக்கூண்டிலிருந்து கரும்புகை ஒரு துணி உதறலைப் போல வெளிவந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். மினி வேலியின் கதவை மெல்லத் தள்ள, அவர்கள் நுழைந்தார்கள். வேலிக்கதவு சாத்திக் கொண்டது. மண் படர்ந்த மரப் படிக்கட்டுகளில் தாவி மேலே சென்று கதவைத் தட்டினார்கள். 

No comments: