Friday, May 24, 2013

தமிழ் - இனமா, மொழியா?

மீபத்தில் தமிழ் மாநிலமெங்கும் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் இவ்வாறு கேட்டார். தமிழ் என்பது மொழியா, இனமா? அப்போதைக்கு ‘தமிழ் என்பது ஓர் இனத்தின் மொழி’ என்று பதில் கூறினேன். பின்பு சிந்தித்துப் பார்க்கையில் இவ்வாறு எளிமையாக முடிக்கக் கூடிய கேள்வியாக அது தோன்றவில்லை.

முதலில் இவ்விரு சொற்களின் வரையறையைப் பார்ப்போம்.

Race is a classification system used to categorize humans into large and distinct populations or groups by anatomical, cultural, ethnic, genetic, geographical, historical, linguistic, religious, or social affiliation. (wikipedia)

உடற்கூறு, கலாச்சார, மரபு, புவியியல், வரலாற்றியல், மொழி, மதம் மற்றும் சமூக வாழ்வியல் ஆகிய கூறுகளின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் ஒரு அமைப்பு முறையே இனம் எனப்படுகிறது. (ethnic என்றால் இனம் தானே?)

Language is the human capacity for acquiring and using complex systems of communication, and a language is any specific example of such a system. (wikipedia).

பொதுவாக மனிதர்கள் தமக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒன்று மொழி எனலாம். (ஓரளவான மொழிபெயர்ப்பு)

நாம் தற்போது ‘தமிழினம்’ என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது சரியாக எதை அல்லது எவரைக் குறிக்கின்றது?

1. தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றவர் (பேச மற்றும் எழுத மற்றும் படிக்க) தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. மேற்கண்ட பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்று செய்ய இயலாதவர் தமிழர் அல்லரா? உதாரணமாகப் பேச மற்றும் படிக்கத் தெரிந்து ஆனால் எழுதத் தெரியாதவர்.

ஆ. ஒருவர் மேற்கண்ட பயன்பாடுகளைச் செய்யத் தெரிந்தவர் என்று எந்த அளவுகோலைக் கொண்டு முடிவு செய்வது? உதாரணமாக ஆயிரம் சொற்கள் பேசத் தெரிந்தால் போதும் போன்று.

இ. தமிழ் மொழியில் பல வட்டார மொழிகள் உள்ளன. நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், ஆற்காட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், எழுத்து நடைத் தமிழ் போன்றன. இவற்றுள் எந்த மொழியைப் பேசுபவர் எல்லாம் தமிழர்? வட்டார மொழிகள் மட்டும் பேசத் தெரிந்த எழுத்து நடைத் தமிழ் தெரியாத மக்கள் தமிழர் ஆவரா, மாட்டாரா?

ஈ. தாம் பிறந்த சாதி மற்றும் செய்கின்ற தொழிலைப் பொறுத்துத் தமக்குள் தனிப்பட்ட தமிழ் மொழியைப் பல தலைமுறைகளாகப் புழங்கிக் கொண்டு வரும் மக்களை எவ்வாறு வகைப்படுத்துவது? உதாரணமாக பிராமணர் மற்றும் மீனவர்கள்.

உ. தமிழே இல்லாத மொழிகளைப் பேசுகின்ற பழங்குடியினர், நரிக்குறவர்கள் என்ன ஆவார்கள்?


2. தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் தமிழர். அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பு 1956-ல் ஏற்படுத்தப்பட்டது. அப்பகுப்பின் காரணமாக வேறு மாநில எல்லைக்குள் சென்று விட்ட, தமிழ் பேசுகின்றவர் தமிழர் ஆக மாட்டாரா?

ஆ. வரலாற்றின் வழியே பல காலகட்டங்களில் இன்றைய தமிழ்நாட்டின் பல நிலங்கள் வேறு மொழி பேசுபவரின் ஆளுகையின் கீழ் இருந்து வந்துள்ளன. எனவே தற்போதைய அரசியல் நில எல்லைகளைக் கொண்டு அவற்றின் கீழ் வருபவர் மட்டும் தமிழர் என்று சொல்லலாமா? உதாரணமாகக் குமரி மாவட்டம், முதலில் கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டுப் பின் பல போராட்டங்களின் பின் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அம்மாவட்டம் கேரளத்துடன் இருந்த காலத்தில் ‘தமிழ் நாட்டில் வாழ்கின்றவர் மட்டுமே தமிழர்’ என்று வரையருக்கப்பட்டிருந்தால், குமரி மக்கள் தமிழர் ஆகியிருக்க மட்டார்கள் அல்லவா? இக்கோணத்தை இன்னும் நீட்டித்தால், ஒருவேளை இன்றைய தமிழ்நாட்டு அரசியல் எல்லை மாற்றி அமைக்கப்பட்டு, சில பகுதிகள் வேறு மாநிலம் என்று ஆனால், அவர்கள் தமிழினத்தார் என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்படுவார்களா?

இ. தமிழ்நாடு என்ற அரசியல் பகுப்பில் பிறந்து தற்போது உலகமெங்கும் பறந்து பரந்து வாழ்பவர் தமிழினத்தார் ஆவாரா மாட்டாரா?

ஈ. தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வெளிநாட்டுக் குழந்தை, தமிழ்நாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் தமிழினத்தில் சேர்த்து கொள்ளப்படுமா?

உ. தமிழ்நாட்டில் வாழ்க்கை நடத்தும் வேறு மொழி பேசுபவர் தமிழினத்தார் ஆவாரா, மாட்டாரா?



3. தாய் மொழியாகத் தமிழைக் கொண்டவர் தமிழர், அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் ஆகிறார் என்று கொள்ளலாமா?

அ. ஒருவருடைய பெற்றோர் பேசும் மொழி தமிழ் என்றால் அவருடைய தாய்மொழி தமிழ் ஆகும். அதனாலேயே அவர் தமிழினம் ஆவாரா?

ஆ. பெற்றோர் தமிழ் மற்றும் வேறொரு மொழியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் எனில், குழந்தை தமிழினம் ஆகுமா?


4. பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்பவர் தமிழினத்தார்.

அ. பல தலைமுறை என்றால் எத்தனை?

ஆ. ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ஐந்து தலைமுறைக்கு முந்தைய முன்னோர் வரை வேறு மொழி பேசிக் கொண்டிருந்தவர்கள். காலப் போக்கில் தமிழ்நிலத்தில் வந்து பொருந்திக் கொண்டு தமிழ் பேசி வாழ்கிறார்கள். இவருக்கு இப்போது தமிழ் மட்டும் தான் தெரியும். இப்போது இவர் தமிழினம் ஆவாரா? நாளை இவருடைய முன்னோர் வாழ்ந்த பகுதிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் மோதல் வந்தால், இவர் யாருக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க வேண்டும்? (சமீபத்தில், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் வழங்கக் கூடாது என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தார் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்ப் பற்றே கிடையாதா என்று இவர்களைக் கடிந்து கொண்டார்கள் சிலர். தமிழ்நாட்டில் பிறந்து, வேறு மொழி பேசும் பகுதியில் வாழ்பவர்கள் எப்பகுதிக்குச் சாதகமாக நிற்க வேண்டும் என்பதை மாற்றுக் கோணத்தில் யோசிப்பது நல்லது.)

5. மொழி தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ’தமிழினம்’ என்று வரையறுக்கத் தேவை/ தேவையில்லை?

***

இது ஓர் அர்த்தமற்ற விவாதம் அல்ல. இன்றைய காலத்திற்குத் தேவையான ஒன்று. ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்ற கோட்பாடு உறுதி பெற்று வருகின்ற நேரத்தில் அக்கோட்பாட்டை முன்னிறுத்துவோர், யாரெல்லாம் தமிழர் என்ற வகைப்பாட்டில் வருவார் என்பதை வரையறுத்தாக வேண்டும்.

மேலும் விடுபட்ட பகுதிகளை நிரப்பி, குறைகளைக் களைந்து இவ்விவாதம் நீள்வது, தெளிவைக் கொடுக்கும்.

Tuesday, May 14, 2013

பக்கத்தில் சேராத உந்தன் வெட்கத்தை என் செய்வது?

லையாளத்தில் ‘ஓலங்ஙள்’ என்ற படத்தில் ‘தும்பி வா’ என்ற பாடல், தாய் குழந்தைகளை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கும். இசை இளையராஜா. அவர் அதே மெட்டில் ‘ஆட்டோ ராஜா’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு காதல் இணைப் பாடலை இசைத்திருப்பார். தமிழ்ப் பாடலைக் கேட்கும் போது, தாளத்திற்கும் சந்தத்திற்கும் இசைந்தாற் போல் சொற்களைப் பின்னியிருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதே மெட்டிற்கு மாற்று வரிகளை அமைத்துப் பார்ப்பது நெடுநாள் கனவாக இருந்தது. நேற்றிரவு நிறைந்தது.




பல்லவி:

பக்கத்தில் சேராத உந்தன்
வெட்கத்தை என் செய்வது?
வித்தைகள் கூறாத மொழியொடு
முத்தத்தை யார் எய்வது? - இதழ்ப்


சரணம் 1:

பெண்மைக்குள் பூக்கின்ற இளமை
கண்மைக்குள் கூர் தீட்டுதோ?
வான்மைக்குள் ஆகாய நிலவென
ஆணமைக்குள் சேர்ந் தாடவருதோ?

என்னுள்ளும்
உன்னுள்ளும்
வெள்ளைப்பூ மீதூறும் இரவில்
முல்லைப்பூ போலான ஈரிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 2:

முந்தைநாள் போய்விட்ட பழமை
இன்றேதான் நம் நர்த்தனம்
முந்திப்பாய் கொண்டாடும் உறவில்
முந்திப்பாய் கொண்டாடும் அழகை

அந்திப் போம் வரை
சந்திப் போம்

முன்னிற்கும் மெய்யென்ற மெய்யை
உன்வெப்பம் தீய்க்காத பூவிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 3:

நேரம் ஏன் வெண்மேக நதிபோல்
நேராக செல்கின்றது?

மேலாடை மூள்கின்ற பெரும்போர்
மேலாடும் காலத்தின் கரங்கள்

என் மேலும்
உன் மேலும்

தீண்டாமல் நீங்காத பொழுது
தீயாகும் நீர்மேனிச் சிவப்பிதழ்ப் (பக்கத்தில்)

Sunday, April 21, 2013

12 கோபக்காரர்கள்.

மீபத்தில் இணையத்தில் இருந்து தரவிறக்கிப் பார்த்த படங்களில் ஒன்று 12 angry men. சர்வதேசத் திரைப்படத் தரவுத்தளத்தில் (IMDB) பார்க்க வேண்டிய 250 படங்களில் ஒன்றாக இப்படம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1957-ல் வெளியிடப்பட்டது.

கதை, நீதிமன்றத்தில் ஜூரிகள் என்ற அமைப்பு இருந்த காலகட்டத்தில் நடக்கின்றது. ஒரு வழக்கின் தீர்ப்பில் தீர்ப்பை முடிவு செய்வதற்கு முன்பாக, ஜூரிகள் என்ற மேலும் சில தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளப்பட்ட காலம்.

தன் தந்தையைக் கொன்றதாக மகன் மேல் ஒரு வழக்கு. வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்பு, ஜூரிகள் 12 பேர் தம் விவாதத்திற்கு என ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று பேசி, ஒரு முடிவுக்கு வருவது தான் படம்.

படம் யூட்யூபில் முழுதாகக் காணக் கிடைக்கின்றது. :: http://www.youtube.com/watch?v=PNuSoK6g6VQ

முழுக் கதையும் விக்கியில். :: http://en.wikipedia.org/wiki/12_Angry_Men_(1957_film)

முதல் தளம்::

ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்க ஒரே ஓர் அறை இருந்தால் கூட போதும் என்பதை இப்படம் காணும் போது உணர்ந்தேன். ஜூரிகளின் அறை மட்டுமே தான் படம் முழுதும். வேறு எந்த வகையான ஜிகினா வேலைகளும் தேவையில்லை, கதை கேட்காத பட்சத்தில்.

இரண்டாம் தளம் ::

ஒரு சாதாரண கொலை வழக்கு விசாரணையை ஒரு செவ்வியல் திரைப்படமாக மாற்றியது இந்தத் தளம் தான் என்று நினைக்கிறேன்.

ஒரு முடிவை நாம் எப்படி, எதன் மேல் எடுக்கின்றோம்? ஒரு தீர்ப்பை எதைக் கொண்டு அல்லது எவற்றைக் கொண்டு முடிவு செய்கின்றோம்?

ஒரு லட்சிய மனிதன் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் எவ்வாறு செயல்படுவான்? முடிவெடுக்க வேண்டிய விஷயம் பற்றிய முழுமையான தகவல்களை வைத்தும், அவற்றுக்கான முழுமையான ஆதாரங்களை வைத்தும், கிடைத்த தகவல்களையும் ஆதாரங்களையும் முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு தம் பகுப்பைத் தொகுத்து ஒரு முடிவுக்கு வந்து சேர்வான்.

ஆனால், நடைமுறை வாழ்வில் நாம் இவ்வாறு ஒரு வழக்கில் அல்லது விவாதத்தில், முழுமையாகத் தன்னை விலக்கிக் கொண்டு வெறும் தகவல்களை மட்டும் வைத்தா ஒரு தீர்மானத்திற்கு வருகின்றோம்? இல்லை. பற்பல புற மற்றும் அகக் காரணிகள் தரும் நேர் மற்றும் எதிர் அழுத்தங்களும் நம் முடிவை பாதிக்கின்றன. இத்தகைய உளக் கோண அலசலே இப்படத்தில் நிகழ்கின்றது.

இந்த 12 ஜூரிகளும் ஆட்கள் அல்ல. ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குத் தகவல்களைத் தாண்டியும் நம் மனம் மற்றும் உடல் கொள்கின்ற காரணிகளே தான்.

ஒருவருக்கு நாளின் வெயில் தரும் எரிச்சல். மாலை செல்ல வேண்டிய ஒரு நிகழ்வுக்கு அவசரம். சீக்கிரம் இந்தக் கூட்டம் முடிந்தால் தேவலை.  - சொந்த வேலை காரணம்.

ஒருவருக்கு சேரிப் பையன்கள் என்றாலே குற்றவாளிகள் தான் என்ற கருத்து வலுவாக இருக்கின்றது. - முன் தீர்மானம்.

ஒருவருக்கு சளி பிடித்து இருமல் வந்து கொண்டே இருக்கின்றது. அந்த
எரிச்சலில் இருக்கின்றார். - உடல் தொந்தரவு எண்ணத்தைப் பாதித்தல்.

ஒருவருக்கு எல்லோரும் சொல்கிறார்களே, அப்படியானால் அது தான் சரியாக இருக்கும்.  - மந்தையில் ஓர் ஆடு. சிந்திப்பதற்கு சோம்பேறித்தனம்.

கொலை செய்யப்பட்டவரின் அருகில் இருந்த கத்தியைப் போல் வேறு எங்கும் தான் பார்த்ததில்லை. எனவே பையன் தொலைந்து விட்டது என்று சொன்ன கத்தி இது தான். அவன் பொய் சொல்கிறான். - தன் மைய சிந்தனை.

’நான் இத்தனை வருடங்களாக ஜூரியாக இருக்கின்றேன். நான் சொல்வது தவறாகுமா?’ - மிகை தன்னம்பிக்கை.

‘எல்லோரும் குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன். நான் சொன்னது, சொன்னது தான்.’ - அடம். ஈகோ.

’அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிகின்றதே’ - முன் தீர்மானம்.

தற்செயல்களுக்கும் வாழ்வில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளாத மனோபாவம்.

ஒரு சாதாரண வழக்குப் படத்தை இத்தகைய மனித உளப் பகுப்பாய்வுக் கோணத்தில் கொண்டு போய் பார்க்கின்ற முறையே இதனை செவ்வியல் வரிசையில் சென்று வைக்கின்றது.

சில தடவைகள் பார்த்த பின்பு மனதில் தோன்றிய மற்றும் ஓர் எண்ணம் : முதல் காட்சியில் மட்டும் தான் குற்றம் சாட்டப்பட்ட பையனைக் காட்டுவார்கள். அந்த பரிதாப முகமா குற்றவாளி என்று யோசிக்க வைத்தது. பிறகு சிந்திக்கும் போது தான் தெரிந்தது, அதுவும் ஒரு முன் தீர்மானம் தான் என்று! பால் வடியும் முகங்களும் குற்றவாளியாக இருக்கலாம். எனில், எப்படி உறுதி செய்வது? வெறும் தகவல்களை மட்டும் வைத்துத் தான் நாம் முடிவுக்கு வர வேண்டும். வேறு எத்தகைய காரணிகளும் நம் முடிவை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வதே, சிறந்த மற்றும் ஒரே வழி.

Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

Monday, March 04, 2013

ஹைதைக்கு வந்தேன்.

க்டோபர் ஏழாம் தேதி காலை. விரைந்த குளிர் ஏர்பஸ்ஸில் திரையை விலக்கி வெளியே பார்த்தேன். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்திலிருந்து பகலை அடைய, தூரத்து வீடுகள் துலங்கின. எதிர் வாகனங்கள் வேகமாய்க் கடந்தன. “சம்ஷாபாத்...சம்ஷாபாத்...” என்று முன்னிருக்கையிலிருந்து கூவினர். ஹைதராபாத் எல்லையை அடைந்தேன்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு பெங்களூருவில் வேலை இல்லை, ஹைதை செல் என்று அலுவலகம் சொல்லி விட்ட பிறகு வீட்டைக் காலி செய்து விட்டு, மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, அக் ஆறு சனிக்கிழமை இரவு மடிவாலாவில் ஏர்பஸ்ஸில் ஏறினேன்.

சம்ஷாபாத் என்பது ஹைதராபாத்தின் ஒரு நுழைவாயில். தெற்கிலிருந்து வருபவர்களுக்கான வாசல். இங்கே தான் நகரின் தற்போதைய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பன்னாட்டு நிலையம். பரந்து கிடக்கும் பொட்டல் வெளியில் வெயில் தாண்டவம் ஆடும்.

அங்கிருந்து கிளம்பி சற்று தொலைவிலேயே பி.வி.நரசிம்மராவ் மேம்பாலம் துவங்குகின்றது. நாட்டின் நீளமான மேம்பாலங்களில் இதுவும் ஒன்று. கீழே ஓவ்வொரு பகுதியாக விழித்துக் கொண்டே வர அவற்றை ஒரு பாலப் பார்வை பார்க்கலாம். பாலம் மேதிப்பட்டினம் என்ற பகுதியில் முடிவடைகின்றது. அங்கே இறக்கி விட்டார்கள். நகரங்கள் சில கண்டதனால், குழுமிய ஆட்டோவாலாக்களிடமிருந்து விலகிக் காத்திருந்தேன். அலுவலகமே ஆரம்பச் செலவுகளைத் தந்து விடும் என்பதால், மேரு கேப்ஸை அழைத்து டாக்ஸி பிடித்தேன்.

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு சர்வதேசிய கூட்டரங்கம் நடந்து கொண்டிருந்த நாட்கள் என்பதால், வழி முழுதும் காக்கிகள். மாதாப்பூரில் ஓர் ஏரிக்கரை ஓரமாக ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தது. அங்கும் சில அறைகளில் வெளிதேசத்தார். வாசலில் போலீஸ் பரவியிருந்தனர். அடையாள அட்டையைக் காண்பித்து அறைக்குச் சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அறை. இரண்டாள் மெத்தை. சுவர் தாங்கும் தொலைக்காட்சி. டாடாஸ்கை. குளியலறையில் கர்டைன். கண்ணாடிச் சுவர். ஜன்னல் திரைகளை விலக்கினால் மலையும் ஏரியும். அங்கே மெல்ல படகு ஒன்று அசைந்து கொண்டிருந்தது.

மாலையில் குளித்து விட்டு ஒரு நடை செல்லலாம் என்று வெலீயே வந்தேன். ஒரு கூரைக் கடையில் வறுத்த சோறு தின்று விட்டு மேடேரி முக்கிய சாலைக்கு வந்தேன். அது மாதாப்பூர் போக்குவரத்து சமிக்ஞைப் பகுதி. அங்கே தான் இப்பகுதிக்கான காவல் நிலையம் உள்ளது. பக்கத்திலேயே ஓர் அனுமார் கோயில். ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய பேர் வருகிறார்கள். நான் ஒரு முறை சென்றிருந்த போது புது காருக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. செருப்பு விடும் இடத்தில் சில பிச்சைக்காரர்கள்.

மாதாப்பூர் என்பது நகரின் தொழில்நுட்பப் பகுதி. இங்கே பல கணிணி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றின் அலுவலகங்கள். மர்றும் தேசிய நவநாகரீகத் தொழில்நுட்ப நிறுவனமும், சில்பராமம் எனும் அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையகமும் அமைந்துள்ளன.

2003-ல் கல்லூரி வழியாக சுற்றுலா வந்த போது இப்பகுதி ஒரு வெறும் மலை. சைபர் டவர்ஸ் என்ற ஒரேஒரு கட்டிடம் மட்டும் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும். மொட்டை வெயில் உக்கிரமாய்க் காய்ந்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் நுழைந்து சில நிறுவனங்களைப் பார்த்து விட்டு, கீழே உணவகத்தில் வாங்கிய உணவைக் கண்ணில் நீர் வழியத் தின்றோம்.

இப்போது டவர்ஸின் அருகிலேயே ஒரு மேம்பாலம் போகின்றது. கணிணியர்களை நம்பி இயங்கும் பேக்கரிகள், அவசர உணவகங்கள், ஹோட்டல்கள், ட்ராவல்ஸ்கள், நகைக் கடைகள், ஆஸ்பத்திரி, மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள், பூக்கடைகள், செருப்பு தைப்பவர்கள், டி.வி. விற்பவர்கள், பானிபூரி கூடையர்கள், பூமியைக் கொத்திக் கொண்டு எழும் அசுர கட்டிடங்கள், மால்கள், கேக் ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள். இவற்றின் நடுவே சாலையோர அரசு வெட்டி நிறுத்தி வைத்த ஓர் அரசு மரத்தின் அருகே, களைப்பான மாட்டின் பின்னே கவர் போட்ட கையை விட்டுப் பார்க்கும் ஒரு மாட்டாஸ்பத்திரி. அதன் ஓரங்களில் எப்போதும் ஒழுகியோடும் நகரவாசிகளின் சிறுநீர்த் தாரைகள்.

NIFT இருப்பதால் சில நூல், பேப்பர் கடைகள் உள்ளன. அழகான பையன்களும் அழகான பெண்களும் அங்கே வந்து ப்ராஜெக்டுக்கான இடுபொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊசி, பாசி, கண்ணாடி, கலர் காகிதங்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் சிறு மூட்டை சுமந்த இளமைகள் ட்ராவல்ஸ் வாசல்களில் காத்திருக்க, வேன்கள் வந்து அவர்களைக் கொத்திச் சென்று நகருக்கு வெளியே காத்திருக்கும் ஏர்பஸ்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

நிறைய ஹாஸ்டல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக. காலை வேளைகளில் அலையலையாக வந்து பேருந்து நிறுத்தத்தில் கம்பெனி வண்டிகளைப் பிடித்து கலைந்த பின், சாலை சாதாரணமாக, போக்குவரத்துக் காவலர் நிதானமாக நிழலில் ஒதுங்குகிறார்.

ஷேர் ஆட்டோ என்ற ஒரு கருத்து இன்னும் இங்கு வலுப்பெறவில்லை. ஏனெனில் சாதாரண ஆட்டோவே இங்கே ஷேர் ஆட்டோ அவதாரம் எடுக்கின்றது. பின்புறம் மூன்று முடிந்தால், எளியோரை வலியார் வாட்டினால் நான்கு பேர். முன்னே ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் பறவைகள் போல் இறக்கைகளைப் பொருத்திக் கொண்டு, துவாரபாலகர்கள் போல் அங்கும் இருவரை அடைத்துக் கொண்டு ஆட்டோ மொத்தம் ஏழு பேரோடு ஓடுகின்றது.

வியாழக்கிழமைகளில் ஒரு சாய்பாபா வண்டி நான் அலுவலகம் செல்லும் வழியில் வந்து விடுகின்றது. தெலுங்கா, மராட்டியா, இந்தியா என்று தெரியாத மொழியில் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பாகும். ஒரு பையன் தட்டேந்தி வருவான். கவனிக்காதது போல் தாண்டிச் சென்றால், ஸ்ரீசாய் பாலாஜி ஓட்டல் அருகே கிழிந்த ஆடையோடு பெண்ணும் அவள் மடியில் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு குழந்தையுமாக நம்மிடம் கையேந்துவார்கள்.

ஆதார் அட்டைக்காக எப்போதும் கூட்டம் நின்று கொண்டிருக்கின்றது. டவர்ஸ் அருகிலேயே ஒரு வெங்கடாஜலபதி கோயில். ஒருதடவை போன போது சுண்டல் கொடுத்தார்கள்.

ஒரு கேரள ஓட்டல் இருக்கின்றது. விலையெல்லாம் தென்னை உயரம். அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.

சமீப குண்டுவெடிப்பிற்குப் பிறகு இணையக் கடைகளில் இன்னும் கொஞ்சம் கண்டிப்பு. புகைப்படம், அடையாள அட்டை கண்டிப்பாக வேண்டும். 10H பேருந்து நிறைய ஓடுகின்றது. கொண்டாப்பூரிலிருந்து செகந்திராபாத் செல்கின்றது. இருமுறை செகந்திராபாத்தில் இருக்கும் ஸ்கந்தகிரிக்குச் சென்றேன். குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்கும் குமரக் கோயில். சுற்றி வர பிற சாமிகளும் இருக்கின்றார்கள். காஞ்சி காம்கோடி பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் கோயில் இது. சென்ற போது செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். மயிலாப்பூரிலிருந்து ஒரு கோஷ்டி வந்து ராம நாமம் சொன்னார்கள். மலைக்கு அடிவாரத்தில் கிரி புத்தக நிலையம்.

(தொடரும்)