Friday, June 29, 2018

வா..வா..காமா..




சென்றெதிர் கொள் இப்பனி இரவு முழுதையும்!
குளிர் நீர் துளைக்கும் எலும்புகள் நடுங்க, மூழ்கி அடி காண்!
மென்மல்லி மணம் முகர்ந்தறி!
பிறை வளைவு தடவி பிறவிப் பலன் அடை!
முள் காட்டில் முன் சென்று குருதித்துளி பூத்திடு!
கூம்பிய தாமரை மொட்டு மலர்த்தி மகரந்தம் சுவை!
பின்னலிட்ட கிளைகளைப் பிரித்து சிற்றிலைக் கீழ் உருண்ட சிறு செங்கனி கடி!
வான் நிறை மீன்களை எண்ணி முடி!
வாடைக்காற்று தூண்டும் சூட்டைத் தணி!
நடுங்கிக் கொண்டே நில்லாது நகர்!
கணுக்கால் ஊன்றி மாடத்து விளக்கை அணை!
மழையென்றொன்றைப் பெய்து உலர் தரை நனை!
திரண்ட முகில்கொத்துகளை ஈரம் சுரக்கச் செய்!
பேரரவு ஊரும் தடம் பதி!
வெயில் அருவிக் கீழ் வேர்த்த சுனை ஆகு!
திரை விலக்கி நாடகம் உணர்!
திசைகள் தெரியா தீ எழுந்தெரிக்கப் புணர்!


Tuesday, June 12, 2018

நீலாம்பல் நெடுமலர்.38.



செங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல்.

பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட்டி இறங்கி மண் ஊறிற்று. தென் திசைக் குளிர்த்தென்றல் கிளைகளைக் குலுக்கி உலுக்கி உதிர்த்த முன்மலர்கள் பாதைகளில் பூத்துப் பழுத்து இதழ் சுருட்டி கூம்பிச் சரிந்து இரவின் வருகைக்குப் பாதை இட்டன.

தேவி, நின் சுயம்பிழம்பென செந்நெருப்பிட்ட கோலத்திருவுரு பூமியில் ஒரு கால் வைத்து அண்டப்பேரண்டமெங்கும் தீக்குழல் பரப்பி விரித்து எண் திசைகளிலும் கரம் நீட்டி மயக்குறு இரு விழிகளிலும் அமுது வடிய ஜகம் நிலைகொண்டாய். நீ நிற்கும் இவ்வோர் காலடி சூரிய சந்திரர்களை நிறுத்தியது. வாயு திகைத்து பாதம் பணிந்தான். வருணன் நீராட்டினான். அக்னி சிகை ஏறினான். பேரொளி சுமக்கும் ஆகாயப் பொற்கோலம் நின்புன்னகை தருவித்த மதுர கணம்.

பிறவி ஏழிலும் துணை வரும் பேரன்புப் பெரு விழியே! நீங்கா நிழலென நின் தீண்டல் என் ஆயிரம் பாதைகளிலும் தொடர்ந்து வருகின்ற செம்மையே! வானாயிர மீன்களிலும் இல்லா இரு மீன் உருளும் தவிக்கும் மயக்கும் கொஞ்சும் கெஞ்சும் துஞ்சும் விழியே! நீலப்பீலி ததும்பும் மென்மாலைப்பொழுதில், நீரலை உந்தும் கரைநுரை போல் மனம் நிரம்பும் பேரன்புப் பெருங்கனியே! தீதென்றும் நன்றென்றும் இரண்டிமை எனைத் தீண்டாப் பூங்கரம் நினதல்லவா! பேசாப் பூஞ்சுழலே! வெறும் திசைகள் சூழ் இவ்விரவின் கனம் எனையழுத்தி நொறுக்கித் துகளாக்க முயல்கையில், மென்கீற்று மின்னல் போல் ஒளிர்ந்து காத்தாய், மதுமலி செந்துறைக் கரைச் சிறு காம்புத் தீஞ்சுவை அமுதே!

மைத்துளி தீட்டித் தீட்டி வரைந்தெடுத்த பொட்டுச் செம்பொன் ஒளி சிதறும் எழில் சிலையென, நீ ஒசிந்து நிற்கும் கோலமதில், கிளை விட்டெழுந்த சிற்றிலை சுழன்று சுழன்று காற்றில் கிறுக்கும் முடியாப் பெருங்காவியம் தீராமல் எழுதுகிறேன்.

பகலும் இருண்மையுமாய் நாளுமிரவுமாய் வெயிலும் குளிருமாய் மழையும் காற்றுமாய் எழுதலும் அடங்கலுமாய்க் காலம் பெருக்கெடுத்துப் போகின்றது. தேவி, ஒளி நிறைக் கலம் ஒன்றை ஏந்தி செம்பூ பூத்த கொத்தொன்றைச் சூடி, அனல் பட்டு ஆடை அணிந்து வலக்கால் எடுத்து வைக்க நுழைவழைப்பு இது! சிறுமனக்குளம் கலங்க அலைகள் தளும்ப நீராடி மூழ்கிக் கரையவா!


Sunday, May 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.37.


சாய்ந்தாடும் மன ஊஞ்சல்.

ரு பார்வை விதைந்தது உள். ஓராயிரம் கிளைகளுடன் வானோக்கி விரிகின்றது பூமரம் ஒன்று. வேர் முதல் கிளை நுனிக் கொழுந்து வரை தேன் துளிகள் சொட்டும் இந்த இனிப்பு மரத்தைச் சொற்களால் அள்ள முடியுமா என்ன? வழியில் கடந்து செல்கையில் மெல்லிய இலைகள் குவிந்து குவிந்து மலரென ஆவது போல் செம்பூவிதழ் குவித்து காற்றைத் தீண்டும் விரல்களால் ஏதோ ஒரு இசை மீட்டி தூரம் செல்கிறாய். நீ விட்டு வைத்த நிழலுருவம் என்னைக் கட்டிக் கொண்டு அதிலிருந்து அகலாதிரு என்கிறது.

ப்ரேமையின் பொன் முகில் ஒன்று என் வனத்தின் மீது மிதந்து நிற்கிறது. வானை அண்ணாந்து பார்த்து பொழியும் நேரம் கணிக்க, புருவங்கள் மேல் கை வைத்து நோக்குகிறேன். செந்தீ எரிவது போல், காலை நதிக் கரைசல் போல், கனிந்த சுளை மேனி போல் என் ஆகாயம் முழுதும் ஜொலிக்கின்ற மேக மென்மையே, என்று என்மேல் பொழிந்து என்னையும் பொன்னாக்குவாய்?

தினம் நூறு முறை அலகுகள் கோர்த்து உரசிக் கொள்ளும் இப்பறவைகள் இப்பிறவியின் மிச்ச கணங்களில் பகிர மறந்த முத்தங்களை எத்தனை பிறவிகளில் எப்படிக் கொடுத்து தீர்க்கும்? இறகுகளில் கோதிக் கொண்டும், மணி விழிகளால் உலகுறிஞ்சியும், பஞ்சுப் பொதி போன்ற கையளவு மென் மேனியை எப்படிக் கொண்டு செல்லும் அங்கு?

கல் தேர் காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்றது. அதில் நின்று பவனி வரும் அம்மன் போல் நீ இடை ஒசிந்து இரு விழி நிமிர்ந்து சொல் ஒன்று தத்தளிக்கும் உதடுகளை இறுக்கி நிற்கிறாய். அத்தேர் இழுத்து வீதியுலா வரும் வெறும் பக்தன் போல், மேலே பார்த்து வணங்குகிறேன்.

உதிரி மல்லி போல் சொற்களைக் கோர்த்துக் கோர்த்து ஒரு பாடல் மாலை செய்கிறேன். அவை வாடிப் போகும் முன் எடுத்து அணிந்து கொள்ள மாட்டாயா? அவை ஒவ்வொன்றும் எழுப்பும் மணம், கூம்பித் தீண்டும் மென்னுடல் சிலிர்க்க, தேவி, சிகையெடுத்து கழுத்தில் சூடிக் கொள். நிழலும் அறியட்டும் நிஜம் கொள்ளும் நிறங்கள் என்ன வென்று.

பொன்னாரம் ஒன்றைச் செய்வித்து பூங்கழுத்தில் அணிவித்துப் பித்தாக்கச் செய்யும் மென் புன்னகையைத் தவழ விடுகிறாய். ஆரம் பொலிவிழந்தது. ஆகாயம் பூ நிறைந்தது.

மதுரமலரென கவிமொழி ஒவ்வொரு சொல்லிலும் சொன்ன பின் வர்ணவிற்களால் திசைகள் நனைந்தன. வேனிற்கால மழை என ஒவ்வொரு எதிர்பார்ப்பிலும் குளிர்விக்கிறாய். விதை தீண்டும் ஈரமாய் ஒவ்வொரு பார்வையும் முளைக்க வைக்கிறாய். மேட்டு நிலம் தேடி ஊரும் சிற்றெறும்பாய் வெள்ளக் காலத்தில் தத்தளிக்க வைக்கும் வாசத்தில் திணறடிக்கிறாய். யக்‌ஷியாய் என்னைப் பிணைந்து ஒவ்வொரு குருதிக்குழாயையும் உறிஞ்சி உயிரள்ளிக் குடிக்கிறாய். சாயங்கால வெயில் போல் வெம்மையில் எம்மைக் காயும் தீண்டல் செய்கிறாய்.

Thursday, May 17, 2018

நீலாம்பல் நெடுமலர்.36.


ந்த மழைக்குப் பின் வரப்போகும் குளிருக்கு இதமாக இந்த கணப்புக்கு அருகில் அமர்ந்து நாம் இருவரும் என்ன செய்வது? நூல் கண்டுகளைப் பிரித்துப் பிரித்து இரவில் ஒளிந்து கொள்ள ஒரே ஒரு குளிர்ப் போர்வையை நெய்வோமா? பாதி படித்து மடித்து வைத்த அந்த இரவின் புத்தகத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிப்போமா? இரவின் வானம் நிரம்பித் தளும்பும் அத்தனை நட்சத்திரங்களின் வெண்ணொளி பொழியும் அந்தக் கூரைக் கண்ணாடித் தடுப்பின் கீழ் அமர்ந்து ஆடைகளற்று நனைவோமா?

ரோஜாப் பூக்கள் மலர்ந்து நிரம்பியிருக்கும் இந்த அறைக்குள் உன் வாசம் மட்டும் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் சுற்றிக் கொண்டிருக்கின்றது. ரகசியமான ஒரு சொல் போல் அந்த மூச்சுக்காற்று என் காதோரம் ஒலிக்கும் அந்த கணங்கள் மட்டும் நிரம்பிய இந்த இரவில், நீ மூடி வைத்த மற்றுமொரு அறையைத் திறக்கிறாய். பழுத்துக் கனிந்த முன்னூறாண்டு பழைய மதுக்குப்பி போல் ஒரு இனிக்கும் முத்தம் ஒன்றை இடும் போது, நேற்றைப் போல் இந்த நிமிடமும் கனவென கரைந்து நிகழ்கின்றது.

வனம் இதன் நடுவில் குளிர்ந்திருக்கும் மரக்கூரையின் கீழ், நீல விளக்கொளி நடுங்கும் பின்னிரவில், காட்டுக்குருவிகள் சில்லிடும் ஓசை மட்டுமே எழும்பிக் கொண்டிருக்கும் ஈர நேரத்தில், இந்த கண்ணாடி ஜன்னலின் பின்னே பசுமை ஒரு பேரருவி போல் நிற்பதாய்க் காட்டிச் சரிந்து கொண்டிருக்க, மெழுகின் ஒளி மட்டும் இத்தனிமையின் சுவர்களில் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்க, தொலைந்து போவதன் தணுமையை எவ்வரிகளால் எழுதுவது?

சாரல் மழை மட்டும் மிஞ்சிப் பெய்து கொண்டிருக்க, அந்தி ஒளி மட்டும் அங்கே பூத்திருக்க, இரவு ஒரு நதி போல மென்மையாக வந்தணைக்கின்ற ஆகாயத்தின் பொன் கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் போல் அலகுகளால் கோதிக் கோதி, மென்மயிர்ப்பிசிறுகள் வர்ணக் குழைசல் காட்ட, பயறு விழிகளால் முட்டி முட்டி இள வெம்மை தீட்டிக் கொண்டு கூட்டிக் கொண்டு அலகிலா நெடுங்காலம் யுகங்கள் போல் நீண்டு சென்று கொண்டேயிருக்கின்றன.

எரிந்தெரிந்து அணைந்து விட்டு மடிப்பு மடிப்பாக சரிந்திருக்கும் மெழுகு விளக்குகள் மெளனித்திருக்கையில், பனி வந்து அப்பிக் கொண்ட கூரை மீது அமர்ந்து சேவல் கூவுகையில், கிழக்கின் வாசலுக்கு தினம் வரும் தேவன் வந்து கதவைத் தட்டுகையில், இலைகளில் இறுகிக் கட்டிய உறைபனி உருகிச் சொட்டுகையில்,  ஜன்னல் திரைகளில் மெல்லிய வெயில் ஊடுறுவிச் சிவக்கையில், ஓரிரவு கரைந்து வழிந்து சென்று விட்டதை உணர்ந்து எழுகிறோம்.

Saturday, April 21, 2018

நீலாம்பல் நெடுமலர்.35.

தீராப்பிறை.

சிறு இதழ் பிரித்து உள்நுழையும் பொன்வண்டு தேமதுரத்துளிகளை அள்ளித் திளைத்துக் கொண்டிருக்கையில் மலரின் இதழ்கள் மெல்ல சுருண்டு அதை உள்ளே சிறைபிடித்துக் கொள்ளும். இனித்து இனித்து மரணிக்கின்ற வண்டு, மலர் காய்த்துக் கனியாகி முழுக்கச் சுவையாகுகையில் மிதக்கின்ற மணமாகவும் வழிகின்றாக செழுஞ்சாறாகவும் திகட்டுவது உள் அமிழ்ந்து கரைந்த வண்டின் அமுதமே அல்லவா?

தேவி, நீங்கா இரு கழல்களாகவும் தூங்கா இரு விழிகளாகவும் தீரா இரு கலங்களாகவும் குன்றா அருள் கரங்களாகவும் நீ நின்றிருக்க, என் உளமின்றி வேறிடம் இருக்கின்றதா உனக்கு? செருக்கடித்து ஆணவ மலம் நிரம்பி துயர்க் குளமாய்த் தேங்கி நின்று புழுத்து சீழ்ப்புண்ணென நாறும் என் மனதில் நீ கால் பதிக்கவும் ஒரு செந்தாமரை அங்கே உதிக்காமலா போய் விடும்? மண் தொடாத சிவந்த உள்ளங்கால்கள் முத்துக்கள் கோர்த்த மணிச்சரங்கள் சப்திக்க இரு பாதங்களை எடுத்து வைத்து நீ அகம் புகும் அக்கணத்தில், அம்மலர் விரிந்து ஆயிரம் தசகோடி இதழ்களால் பூத்து குவிந்து, நிறைந்த அழுக்குகளை அள்ளி அகற்றித் தள்ளி விடாதா?

ஆடல் சலங்கைப் பரல்கள் தெறிக்கத் தெறிக்க விரல் மகுடமென விளைந்த கூர் நகங்கள் குத்திக் கிழித்து குருதி பொங்கிக் கொப்பளித்து உன் பாதங்களைச் செம்மை நிறம் பூசிக் கொள்ளச் செய்யும் ஆடற்களமென அமைய என் அகங்காரமின்றி வேறிடம் உனக்கேது? ஒன்றில் வாளும் ஒன்றில் சூலமும் ஒன்றில் முள் சாட்டையும் ஒன்றில் வேலுமாக நாற்கரங்களில் கொல்லாயுதங்கள் ஏந்தி, கீறி வெட்டிக் குத்திக் குதறிக் கிளறித் தாண்டவமாட, பராசக்தி உனக்கு, இறுகிக் கெட்டித்தட்டிப் போய் பாறையென ஆகி உலர்ந்து வறண்டு கிடக்கும் கடுவீச்செழும் இருண்ட என் ஆழ்மனம் போதாதா?

செந்நெருப்புச் சுடர் எண் திசைகளிலும் காய்ச்சும் உன் விழித்தீ சுட்டுப் பொசுக்க, செவ்வுழவு செய்து புரட்டிப் போட்டு ருத்ரவிழிப்பு கொள்ள ஆழ்ந்துறங்கிக் கனவுகளிலும் சோம்பல் களிப்பிலும் சுருண்டு செயலின்மையின் செம்மதுவில் ஊறிக் குருதியெங்கும் போதையும் நரம்புகளெங்கும் அலட்சியமும் ஊற்றுப் பெருக்கி ஓடும் இத்தேகம் போல் உகந்த நிலம் எங்கு கிடைக்கும் உனக்கு?

வந்து நில்; வந்து அமர்; வந்து எரி; வந்து அணை; வா.

தேவி, வீணை கொண்டு வருக. நாதம் எழுப்பி எரிந்து கரியும் உள்ளைக் குளுமை செய்க. வெண் மலர் ஏந்தி வருக. சுகந்தம் கரையும் காற்றாய் சுவாசத்தை நிரப்புக. சிம்மம் ஏறி வருக. பிடரி பறக்கும் திசைகள் அதிரும் அதன் பெரும் பிளிறலால் யுக யுக உறக்கம் கலைந்து, கூர் அகிர்களால் பேரறை வாங்கி இப்பேதைமை கலைந்து அழிக்க. குழலேந்தி வருக. மூங்கில் கம்பாய் இவ்வீண் உடலை ஆக்குக.

அரம்பையராய் வருக. அழகியராய் வருக. அன்னையராய் வருக. குழவிகளாய் வருக. ஆனந்தப்பேரொலி எழுப்பும் பெருஞ்சங்கம் ஊதி நடமிடும் பெரு மண்டபமாய் இப்பிறவியை நிரப்புக.