Wednesday, January 03, 2007

பன்னிரண்டாம் இரவு - ஷேக்ஸ்பியர்


ஆங்கிலத் துணைப்பாட நூலாக நாம் படித்த Twelfth Night என்ற நாடகம் பற்றி எம் ஆங்கில ஆசிரியர் திரு.விவேக் நமச்சிவாயம் அவர்கள் அருமையாக விவரித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது, நான் முன்பே படித்திருந்த அதன் தமிழ் மொழிபெயர்ப்பு.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், ஏதோ ஒரு போட்டிக்காக வாங்கிய பரிசு தான் அப்புத்தகம். பொற்கிழிக்கவிஞர் திரு. அரு. சோமசுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்தது. மூல நூல் ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியது.

கதை அனைவருக்கும் நினைவிருக்கும். இருப்பினும் நாளும், இரவும் கணிணி முன் கடுமையாக உழைப்பவர்கள் மறந்திருக்க வாய்ப்புள்ளதால் முன்கதை மட்டும் கூறுகிறேன். பின்னதை புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்துத் தெரிக அல்லது முழு நாடகமும் / கதைச்சுருக்கம்.

இரட்டையர்களான அண்ணன், தங்கை இருவரும் பயணித்த கப்பல் கடலில் கவிழ்ந்து, பயணித்த அனைவரையும் வேறோர் தேசத்தில் சேர்க்கிறது. தங்கையும், அண்ணனும் பிரிகின்றனர். தங்கை இருப்பியல் பிரச்னைகளால் ஆண்வேடம் புனைந்து, நாட்டு அரசனிடம் பணியாளாகச் சேர்கிறாள். மன்னன் அவளை தன் நேசிக்கும் அழகியிடம் தன் காதலைத் தெரிவிக்குமாறு சொல்கிறான். ஆனால் அரசனிடம் காதல்வயப்பட்ட தங்கை, ஆண் வேடத்தில் இருப்பதால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறாள். ஆயினும் அழகியிடம் தன் மன்னனின் காதலைத் தெரிவிக்கிறாள். தடால் திருப்பமாக மன்னனின் காதலை நிராகரித்த அழகி, ஆண் வேடத்தில் இருக்கும் தங்கையின் மேல் காதல் கொள்கிறாள்.

அழகியின் மேல் மன்னன் கொள்ளும் காதல். அழகிக்கோ தூதன் மீது காதல். தூதன் வேடத்தில் இருக்கும் பெண்ணிற்கோ மன்னன் மீது காதல், ஆனால் ஆண் வேடத்தில் இருப்பதால் தன் காதலைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறாள்.

இப்படியாகச் செல்லும் பாக்யராஜ் டைப் கதை, கடலில் விழுந்த அண்ணனைத் தான், தான் காதலித்தவன் என்று நினைத்து அழகி காதலை வெளிப்படுத்துகையில், சூடுபிடித்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கிறது.

மொழிபெயர்ப்பாளருக்கு எதனால் 'பொற்கிழிக் கவிஞர்' என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள், அவர் இந்தப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை உணர்வர். இனிய மொழியாக்கம். சில உவமைகள், நாம் தினசரி வாழ்வில் உபயோகிப்பவை.

முன்பே பலமுறை இந்த தமிழாக்கத்தைப் படித்து விட்டதால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில், பன்னிரண்டாம் இரவு துணைப்பாடம் மனனம் செய்வதற்கு, இயல்பாகச் சிந்தித்துப் பதிலுரைத்தலுக்கு, முக்கியமாக பாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு மிக்க உதவி புரிந்தது.

இனி, அந்த நாடகத்திலிருந்து, ஒரு பகுதி. ஆண் வேடத்திலிருக்கும் தங்கை, தன் மன்னனின் காதலை அழகியிடம் உரைப்பதற்குச் செல்கிறாள்/ன் (அப்போதெல்லாம் இந்தப் பாழாய்ப் போன பாலியல் தேர்வு இல்லை போலும்).அவ்விடம் நடக்கும் உரையாடல்.

களம் - 1 காட்சி - 5

இடம் : ஒலிவியா நங்கையின் வீடு

..................

மால்வாலியோ : அம்மா! அங்கே நிற்கும் வாலிபன் உங்களோடு பேச வேண்டும் என்று உறுதியாக நிற்கிறான். நீங்கள் பிணிவாய்ப்பட்டிருப்பதாகச் சொன்னேன். நம்ப மறுத்தான். தூங்குகிறீர்கள் என்றும் சொன்னேன். அதையும் தூக்கி எறிந்து விட்டான். அவனே வரப் போகிறான். இனி நான் என்ன சொல்லட்டும்? என்ன சொன்னாலும் ஏற்க மறுக்கிறான்.

ஒலிவியா : அவனோடு பேச முடியாது என்று சொல்.

மால்வாலியோ : சொல்லி விட்டேன். அவன் நீதிபதி வீட்டு வாசலில் தூண் போலவும், நாற்காலி கால் போலவும் நிற்பதாகவும், தங்களுடன் பேசாமல் நகர முடியாதெனவும் சொல்கிறான்.

ஒலிவியா : அவன் எப்படிப்பட்டவன்?

மால்வாலியா : மனிதனைப் போன்றவன்!

ஒலிவியா : எத்தகைய மனிதன்?

மால்வாலியா : கெட்ட மனிதன்! அவன் தங்களுடன் பேசாமல் போக மாட்டான். நீங்கள் பேசுவீகளா? மாட்டீர்களா?

ஒலிவியா : அவன் தோற்றம் எத்தகையது? வயது என்ன?

மால்வாலியா : மனிதன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வயதானவனுமில்லை; பையன் என்று சொல்லக் கூடிய அளவிற்குச் சிறியவனும் இல்லை. அவன் காயுமில்லை; பழமுமில்லை; வெள்ளமுமில்லை; பொய்கையுமில்லை; மனிதனுமில்லை; பையனுமில்லை; அவன் பார்க்க அழகாகவும், பட்டிமன்றப் பேச்சாளனாகவும் இருக்கின்றான். அவன் பால்குடி மறக்காத பாலகன் என்று பார்த்தவுடனேயே சொல்லி விடலாம்.

ஒலிவியா : அவன் வரட்டும். வேலைக்காரியை அழையுங்கள்.

மால்வாலியா : வேலைக்காரியே! அம்மா உன்னை அழைக்கிறார்கள். (போகிறான்)

[மேரியா மீண்டும் வருகிறாள்]

ஒலிவியா : எனது முகத்திரையைத் தா... வா.. அதனை என் முகத்தின் மேல் மூடு. ஆர்சினோ மன்னனின் தூதனை மீண்டும் சந்தித்து அவன் வார்த்தைகளைக் கேட்போம்.

[வயோலாவும், அவனது பணியாளர்களும் வருகின்றனர்.]

வயோலா : இந்த அரண்மனையில் ஆட்சிக்குரிய மங்கையர் யார்?

ஒலிவியா : என்னிடம் பேசுங்கள். அவளுக்காக நான் பதில் சொல்வேன். உங்களுக்கு என்ன வேண்டும்?

வயோலா : தண்ணொளியும், தன்னிகரில் அழகும் தவழக் காண்கிறேன். சொல்லுங்கள். உங்களை மன்றாடிக் கேட்கிறேன். இந்த மாமனையின் அழகுத் தேவதை நீங்கள் தானா? சரிவரத் தீட்டப்பட்டு உள்ள திரை ஓவியத்தைக் கண்டதும் என் வார்த்தைகள் அடங்குகின்றன. இந்த ஓவியத்தை மனனம் செய்யப்பெரும் பாடு பட்டுவிட்டேன். அழகின் எல்லை! நான் உணர்ச்சிவசப் படுகிறேன். அதனால் உளறிவிடலாம்.

ஒலிவியா : நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?

வயோலா : நான் அறிந்ததற்கு மேல் யாதொன்றும் சொல்ல மாட்டேன்.அம்மணி! நீங்கள் தான் இந்த மனையின் மாண்புமிக்க தலைவி என்று கூறுங்கள். அதன்பின் நான் பேச்சைத் தொடர்கிறேன்.

ஒலிவியா : நீங்கள் ஒரு நகைச்சுவைப் பேச்சாளரா?

வயோலா : இல்லை. நான் விளையாடவில்லை. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உறுதியாகப் பேசுகிறேன். நீங்கள் தான் இந்த இல்லத்தின் தலைவியா?

ஒலிவியா : என்னுடைய உரிமையை நானே பறித்துக் கொள்ளாவிட்டால், நான் தான் இந்த இல்லத்தின் தலைவி!

வயோலா : நிச்சயம்! நீங்கள்தான் தலைவியானால் உங்கள் உரிமையை நீங்களே பறித்துக் கொள்கிறீர்கள். கொடுக்க வேண்டிய உங்கள் உரிமையை நீங்கள் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது என் கடமை, உங்களைப் புகழ்வேன். பிறகு நான் கொண்டு வந்துள்ள செய்தியைக் கூறுவேன்.

ஒலிவியா : முக்கிய செய்தியைக் கூறுங்கள். புகழ்ச்சியை மன்னிக்கிறேன்.

வயோலா : கடவுளே! அதை உணர மிகவும் அரும்பாடுபட்டேன். அது கவிதையாக அல்லவா இருக்கிறது!

ஒலிவியா : அது கற்பனை! அதை வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டு வாசலில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக அறிந்தேன். கட்டாயப்படுத்தி உள்ளே வந்தீர்கள். அதன்மூலம் உங்கள் வார்த்தைகளைக் கேட்பதைவிட உங்களைக் கண்டு ஆச்சரியப்படும்படி நடந்து கொண்டீர்கள். உங்களுக்குப் பைத்தியம் இல்லாவிட்டால் போய் விடுங்கள்; பகுத்தறிவு இருந்தால் சுருக்கமாகச் சொல்லுங்கள். வசனம் பேசுவதற்கு வான நிலவு தவழும் நேரமல்ல இது!

மேரியா : அய்யா! பாய்மரத்தில் பாய்கள் பறக்கட்டும்! உங்கள் நடையைக் கட்டுங்கள். இதுதான் பாதை....

வயோலா : முடியாது. கப்பலைத் தூய்மைப்படுத்துபவளே! நான் இன்னும் சற்று நேரம் இங்கு மிதக்க வேண்டும். தலைவியாரே! உங்களது குட்டித் தேவதையைச் சற்று அமைதிப்படுத்துங்கள். உங்கள் மனதைச் சிறிது வெளிப்படுத்துங்கள். நான் ஒரு தூதுவன்.

ஒலிவியா : உண்மை தான். நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லலாம்.

வயோலா : நீங்கள் மட்டும் அதைக் கேட்க வேண்டும். அது ஒன்றும் போர் பற்றிய திட்டமன்று; புகழத்தக்க மரியாதையினை எதிர்பார்க்கும் செயலுமன்று. நான் அமைதிச் சின்னத்தை (ஆலிவ்) கையில் வைத்திருக்கிறேன். என் வார்த்தைகள் சமாதானம் பற்றியவை.

ஒலிவியா : இருந்தும் நீங்கள் ஆரம்பித்த முறை கடுமையானவை. நீங்கள் யார்? உங்கள் விருப்பம் என்ன?

வயோலா : உங்கள் சேவகர்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதால் நானும் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. நான் யார்? நான் சொல்ல வந்து என்ன? எல்லாம் தங்களிடம் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

ஒலிவியா : மற்றவர்கள் போகலாம். இவர் சொல்லும் புனிதமான வார்த்தைகளைக் கேட்கப் போகிறேன். (மேரியாவும், மற்ற பணியாளர்களும் செல்கின்றனர்) ஐயா! நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம்.

வயோலா : அழகும் இனிமையும் வாய்ந்த நங்கையே!

ஒலிவியா : அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வர்ணிக்கலாம். நீங்கள் சொல்ல வந்த செய்தி எங்கே இருக்கிறது?

வயோலா : ஆர்சினோ மன்னரின் இதயத்தில் இருக்கிறது!

ஒலிவியா : அவருடைய இதயத்திலா? அப்படியானால் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது?

வயோலா : முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.

ஒலிவியா : ஓ! அதை நான் படித்திருக்கிறேன். அது பொய்! வேறொன்றும் சொல்ல வேண்டியது இல்லை.

வயோலா : அம்மணி! உங்கள் முகத்தை நான் பார்க்கலாமா?

ஒலிவியா : என் முகத்தைப் பார்க்குமாறு உங்கள் தலைவர் ஆணையிட்டாரா? உங்கள் தூதுக்கு இது அப்பாற்பட்டது! இருந்தாலும் முகத்திரையை நீக்கி ஓவியத்தைக் காட்டுகிறேன். பாருங்கள்...முகம் நன்றாக இல்லையா?

[முகத்திரையினை நீக்குகிறாள்]

வயோலா : கடவுள் அற்புதமாகப் படைத்திருக்கிறார்.

ஒலிவியா : அது இயற்கை! அது காற்றையும், காலத்தையும் கடந்து நிற்கும்!

வயோலா : அழகின் அற்புதக் கலவை! இயற்கையின் எழிற்கரங்கள் சிவப்பையும், வெள்ளையும் வியப்புறத் தீட்டியிருக்கின்றன. அம்மணி! உயிர் வாழ்பவர்களில் நீங்கள் மிகவும் கொடூரமானவர்கள்! நீங்கள் தனித்து வாழ்ந்து, தாயாகாமல் உங்கட்குப் பின், உங்களைப் போன்ற அழகிய பிரதியினை (குழந்தையை) உலகத்திற்கு வழங்காமல் போனால் நீங்கள் கொடுமையானவர்கள் தான்!

ஒலிவியா : ஐயா! நான் அவ்வளவு கொடிய இதயம் கொண்டவள் அல்லள். நான் என் அழகைக் கணக்கிட்டுப் பட்டியல் போட்டு வைப்பேன். செம்பவள உதடுகள் இரண்டு, மூடிய இமையோடு கருவிழி இரண்டு, கழுத்து ஒன்று, முகவாய் ஒன்று, இவ்வாறெல்லாம் உயிலில் எழுதி வைப்பேன்...என்னைப் புகழ்வதற்காகத் தான் நீங்கள் இங்கு அனுப்பப் பெற்றீர்களா?

வயோலா : நீங்கள் யார் என்பதைக் காண்கிறேன். நீங்கள் மிகவும் கர்வம் பிடித்தவர்கள். நீங்கள் பிசாசாக இருந்தாலும் பேரழகு படைத்தவர்கள். என் தலைவர் உங்களை நேசிக்கிறார். அவரது அன்பு பரிசளிக்கப்பட வேண்டியதாகும். நீங்கள் ஈடு இணையற்ற அழகி என்று முடிசூட்டப் பெற்றாலும் அவரது நேசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒலிவியா : அவர் என்னை எவ்வாறு நேசிக்கிறார்?

வயோலா : சபதங்கள் செய்தும், கண்ணீர் வடித்தும், இடியெனப் பெருமூச்சு விட்டும், நெருப்பென உயிர்த்தும் உங்களை நேசிக்கிறார்.

ஒலிவியா: உங்கள் மன்னர் என் மனதை அறிவார். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் உயர்ந்த பண்பாடும், பெருந்தன்மையும், வளமிகு சொத்தும், இளமை எழிலும், கனிந்த குரலும், கல்வியும், வீரமும், தோற்றப் பொலிவும் பெற்றிருந்தாலும் நான் அவரை நேசிக்க முடியாது. அவருக்கு என் முடிவு முன்பே தெரிந்ததே!

வயோலா : என் தலைவரைப் போல நானும் உங்களை நேசித்திருந்தால், அவ்வளவு துயரங்களை அனுபவித்து நடைப்பிணமாக மாறியிருந்தால், உங்களது மறுப்பின் அர்த்தத்தைக் காண முடியாது, அதை என்னால் புரிந்து கொள்ள முடியாது.

ஒலிவியா : ஏன்? நீங்கள் என்ன செய்வீர்கள்?

வயோலா : உங்கள் வாசலில் இழந்த காதலின் சின்னமாக என்னை நிறுத்துங்கள். என் ஆன்மாவை (ஒலிவியாவை) வீட்டிற்குள் அழையுங்கள். புறக்கணிக்கப்பட்ட காதலைப் பற்றிக் கவிதை எழுதுங்கள். அவற்றை நள்ளிரவில் உரக்கப் பாடுங்கள். எதிரொலிக்கும் மலையடிவாரங்களில் "ஒலிவியா" என்ற உங்கள் பெயர் விண்ணுக்கும் மண்ணுக்கும் எதிரொலிக்கட்டும். நீங்கள் ஓய்வு கொள்ளக் கூடாது. ஆனால் என்மீது நீங்கள் இரக்கப்பட வேண்டும்.

ஒலிவியா : நீங்கள் நிறையச் செய்வீர்கள். உங்கள் பெற்றோர் யார்? என்ன செய்கின்றார்கள்?

வயோலா : என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்.

ஒலிவியா : உங்கள் மன்னனிடம் சொல்லுங்கள். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் இனித் தூதர்களை அனுப்ப வேண்டாம். அவர் என் பதிலை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதை நீங்களே வந்து என்னிடம் சொல்லலாம். வணக்கம். நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு நன்றி. செலவிற்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்.

வயோலா : அம்மணி! நான் பொருளுக்கு அமைந்த தூதன் அல்லன். பரிசோ, அன்போ தங்களிடம் வேண்டுவது என் மன்னரே ஒழிய நான் அல்லன்; நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவரது இதயத்தைக் காதலானது பாறாங்கல்லாக்கட்டும். என் மன்னரைப் போல நீங்களும் தோல்வியில் துவள வேண்டும். அழகிய கொடிய நங்கையே! வருகிறேன்.

[போகிறான்]

ஒலிவியா : உங்கள் பெற்றோர் யார்? "என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்" என்றெல்லாம் கூறினாரே! நீங்கள் உண்மையிலேயே நல்லவர்தான்! உங்கள் நாக்கு, உங்கள் முகம், உங்கள் கை, உங்கள் செயல், உங்கள் உணர்வு முதலியன உங்கள்து பெருந்தன்மையை அறிவிக்கின்றன. பெருவேகம் இல்லை. மென்மை! மென்மை! இவரே தலைவராக இருப்பாரோ! இவ்வளவு விரைவில் நேச உணர்சசியை ஒருவர் தூண்ட முடியுமா? இவரது முழுமை என் கண் வழிப் பாய்ந்து இதயத்தைக் கவர்ந்து விட்டது. இருக்கட்டும். வா மால்வாலியோ! (மால்வாலியோ வருகிறான்)

மால்வாலியோ : அம்மா! என்ன செய்ய வேண்டும்?

ஒலிவியா : முடிமன்னனின் தூதுவனாக வந்து முணுமுணுத்துச் சென்ற இந்த இளைஞனின் பின்னே ஓடு. அவனது இந்த மோதிரத்தை நான் விரும்பினேனோ இல்லையோ, போட்டுப் போய் விட்டான். அதனால் எனக்குப் பயனில்லை என்று அவனிடம் சொல்லிவிடு. அவனது மன்னருக்கு எந்த நம்பிக்கையும் ஊட்ட வேண்டாம் என்றும் சொல். நான் அவரை விரும்பவில்லை. இந்த தூதன் நாளை இந்தப் பக்கம் வந்தால் அதற்குரிய காரணத்தைச் சொல்வேன். போ. மால்வாலியோ!

மால்வாலியோ : அம்மா! அப்படியே செய்கிறேன்.

[போகிறான்]

ஒலிவியா : (தூதன் மீது காதல் உணர்வு கொண்டு) நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கண்கள் என் இதயத் தீர்மானத்தை இடித்து நொறுக்கிவிட்டன என்று அஞ்சுகிறேன். விதியே உன் வலிமையைக் காட்டு! நாம் நினைத்தபடி எது நடக்கிறது? எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். இதுவும் அப்படியே நடக்கட்டும்.

[போகிறாள்]

புத்தகம் : பன்னிரண்டாம் இரவு.

புத்தக வகை : மொழிபெயர்ப்பு. மூல நூல் : Twelfth Night - ஷேக்ஸ்பியர்.

ஆசிரியர் : 'பொற்கிழிக் கவிஞர்' அரு.சோமசுந்தரம்.

பதிப்பகம் : பொன்முடி பதிப்பகம், 123, முத்துபட்டினம் IIIst, காரைக்குடி - 623 001.

No comments: