Monday, August 06, 2007

எனது அனுபவம் - செ.வ.ச.

ஞாயிறு அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே, சனிக்கிழமை இரவு படுக்கப் போகையில் (ஞாயிறு காலை) நேரம் 4 மணி..! விளைவு, எழுந்திருக்கையில், காலை எட்டு..!

அவசர, அவசரமாகக் குளித்துக் கிளம்பினால், வெளியே தூறல்..! குடை எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொன்டிருக்கையிலேயே தூறல் நின்று விட்டது. நல்லவேளை..! பிறகு யார் போய் குடையெல்லாம் கையிலேயே வைத்துக் கொண்டு இருப்பது..?

பின், பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, சரியாக 21L வந்து சேர்ந்தது. அநியாயம், 10ரூபாய் தீட்டி விட்டார்கள். இந்த டீலக்ஸ் பேருந்துகள் பற்றி தனியாகத் திட்ட வேண்டும். பேருந்திலேயே, ஒரு பதிவரது அறிமுகம் கிடைத்தது. நன்றாகப் பேசிக் கொண்டு வந்தார். ஆனால் அவரது தொடர்பு இல்லாமலேயே, மாலையில் பிரிய வேண்டியதாயிற்று. :-(

சென்னைப் பல்கலைகழக நிறுத்ததில் இறங்கி, வந்த வழியைத் திரும்பிப் பார் என்ற மகான் கவுண்டமணியின் கூற்றுக்கேற்ப, பின்னோக்கி நடந்தால், வாசலிலேயே வரவேற்புப் பேனர் பளிச்சிட்டது.

பின்பு உள்ளே சென்று, அட்டை வாங்கி, 'துன்றதுக்கு'ஆன அனுமதிச் சீட்டு வாங்கி, தரை அரங்கிற்குச் சென்றேன்.

அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அனைவரது, உரைகளையும், சில்லென்ற ஏ.சி.யில் அமர்ந்து கேட்டுக் கொண்டு, மதிய உணவை ஒரு கட்டு கட்டி விட்டு, மாலை கடற்கரைக்குச் சென்றேன். (பின்ன என்னங்க, நான் ஏதாவது சொல்லலாம்னு பார்த்தால், எல்லாவற்றையும் இவர்களே சொல்லி விட்டார்கள். எதுவும் மிச்சம் வெக்கல, மதியம் மிச்சமான சாப்பாடு போல்!)

வழமையான ஞாயிறுக் கூட்டத்தோடு மெரினா கடற்கரை களை கட்டியிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக கடற்கரைச் சாலை வரை வந்து விசாரித்து விட்டுப் போன அலை வீச்சு பற்றிய பயம் இல்லாமல், நிறைய கூட்டம்.!

6:30 மணி வரை சுற்றி விட்டு, மறுபடியும் அதே 21L பிடித்து வீடு வந்து சேர்ந்து, குப்புறப் படுத்துத் தூங்கியதில், மறுநாள் திங்கள் என்ற நினைவு மலரத் தொடங்கியது.

சந்திப்பில் கண்ட சுவாரஸ்யங்கள் :

1. சிவக் குமார் அவர்களிடம் சமாளிக்கும் திறன் காண முடிந்தது.

2.லக்கிலுக் இவ்வளவு சிம்பிளாக இருப்பார் என்று தோன்றியதேயில்லை. பாலகுமாரனுமில்லை, சுஜாதாவும் இல்லை என்று சொல்லிக் கொள்வது போலவே இருந்தார்.

3. பத்ரி, செல்லா, சிவஞானம்ஜி ஐயா, டோண்டு சார், மற்றும் பல பிரபலமானவர்களைக் காண முடிந்தது.

4.மாலன் அவர்கள் மிகப் பொறுமையாக நன்னெறி விதிகளைக் கூறினார்.

5.மதிய உணவு முடித்து, கீழ்த்தளத்தில் இருக்கையில், ஒரு இடதுசாரித் தோழருக்கும், உலகமயமாக்கம் வேண்டும் என்று அழுத்தமாக வாதிட்டவருக்கும் இடையே நடந்த வாக்கு மோதல் மிக, மிகச் சுவாரஸ்யம். அருகிலேயே அமர்ந்து, அவர்கள் பேசியதையே கேட்டுக் கொண்டிருந்தேன்.தோழர் இன்னும் வலையுலகத்திற்கு எட்டிப் பார்க்காததால், இதன் அரசியல், சுவாரஸ்யங்கள் தெரியவில்லை. மற்றவரோ நான் அதில் அதிக சுவாரஸ்யம் காட்டியதை உணர்ந்து என்னை உற்று, உற்றுப் பார்த்தார். 'இவன் ஏதாவது உள்குத்து ஆசாமியாக இருப்பானோ' என்ற சந்தேகம் அவர் முகத்திலேயே தெரிந்தது. செம காமெடிப்பா.முகம் காட்டாத 'அந்துமணி'யாய் இருப்பதில் (இந்த நேரத்தில் இப்படியொரு ஒப்பீடா?), இப்படி ஒரு வசதி.

6.ஒரு பெரியவர் குழந்தைப் பாட்டெல்லாம் பாடிக் காட்டினார். ஐயா, அதையெல்லாம் தயவு செய்து நீங்கள் வலையில் இடவேண்டும். அவரோடு, நிழல் போலவே அவரது துணைவியாரும் வந்திருந்தது, பலருக்கும், பல சிந்தனைகளைக் கிளறி விட்டிருக்க வேண்டும்.

7. கொரியாவிலிருந்து வந்திருந்த ரவி, யாரும் கிடைக்கவில்லை என்ற கோபத்தில், 'உபுண்டு' மக்களிடம் தன் கொலைவெறியைக் காட்டினார். 'இதில் வேர்டு டாகுமெண்ட் பார்க்க முடியுமா', 'இல்ல.. நீங்க ஆஃபீஸ் இதுல காட்டுங்களேன், பார்ப்போம்' என்று எல்லாம் தனது ஆர்வப் பாய்ச்சலைக் காடினார்.

8. அதியன் நீட்சி மூலம் எல்லாப் பெரும்பான்மை தமிழ்க் குறிகளை ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்ள முடியும் என்று அதன் வடிவமைப்பாளர் கூறியதும், பெரும் கரவொலி. அதற்கான டெமோவில் 'சானியா மிர்ஸா' படம் வந்ததும், 'கொலை வெறி'யுடன் 'என் அலுவலகத்தில் சானியா மிர்ஸா படம் சரியாக வருவதில்லை, என்ன செய்ய..?' என்று கேட்டார் ரவி.

9. மதிய உணவு கேப்பில், தனியாக உண்டு கொண்டிருந்த மா.சிவக்குமார் அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசினோம். உண்ட பின்பு, சாப்பிட்ட இடத்தை நீர் ஊற்றித் துடைத்தார். ஒரே அழுக்காக வந்தது.' நாம் வந்த பொழுது இருந்ததை விட, போகும் போது சுத்தமாக இருக்க வேண்டும்' என்று எப்போதோ ஒரு துறவி அவரிடம் சொன்னாராம். அதைக் கூறினார். அது மேலும் பல சிந்தனைகளைக் கிளறி விட்டது. நாம் போகும் போது, இந்தப் பூமியை, நாம் வந்த போது இருந்ததை விட, சுத்தமாக மாற்றி விட்டுக் கிளம்புவோமா? என்ற சிந்தனையே அது..!

10.உபுண்டு மக்களிடம் பேசிய போது, பணமாக கொடுப்பதை விட, மூளைசார் பங்களிக்க என்ன செய்ய வேண்டும் என் று கேட்டேன். அதைப் பற்றித் தெளிவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறினர். அக்குழுவில் சேரலாம் என்று முடிவு செய்தேன். சுயநலம் தான். இந்த சாக்கை வைத்து கொஞ்சம் லினக்ஸ் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?

11.இதுவரை சென்னையில் நடந்த எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல், இதில் கலந்து கொண்டது எனக்குப் பெரும் மகிழ்வு.

செய்துள்ள முடிவுகள்:

1. இனிமேல் எ-கலப்பை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று.! இதுவரை இந்த கருவியைத் தான் பயன்படுத்தியுள்ளேன், இப்பதிவு உட்பட..! இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

2. வெறும் கதை, கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் அடுத்த தளத்திற்குப் போகலாம் என்று சில யோசித்ததில், சில யோசனைகள் தோன்றியுள்ளன. தீர திட்டம் போட்டு விட்டு, அதில் இறங்கலாம் என்று உள்ளேன்.

3. கொஞ்சம் லினக்ஸ் படிக்கத் துவங்கலாம். பணி செய்யும் துறை அறிவைப் பயன்படுத்தி, லினக்ஸில் ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். உபுண்டே துணை..!

4.அடுத்த பயிலரங்கு நான் இருக்கும் இடத்தில் நடக்குமானால், கண்டிப்பாக ஏதேனும் ஒரு வகையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு.

5. சமூக உதவி என்ற தளத்தில் ஏதேனும் செய்யலாம் என்று தோன்றியதில், சில ஐடியாக்கள் வந்தன. அதையும் பார்க்க வேண்டும்.

இன்னும் பல பேர் வருவார்கள் என்ற நம்பிக்கையை இப்பயிலரங்கு தோற்றுவித்து உள்ளது. அதற்கு பாடுபட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்.

சாகரன் அவர்களின் நினைவு மலர் கண்களைப் பனிக்கச் செய்தது. இணைய யுகத்தில் தமிழ் முடங்கி விடாமல் இருக்க, எத்தனை பேர் எத்தனை, எத்தனை வகையில் பணியாற்றுகிறார்கள் என்று அறிந்ததில் வியப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளாக வந்த தமிழை அடுத்த தலைமுறையின் கைகளில், இன்னும் செழுமையாகச் சேர்ப்பது யார் பணி? தமிழர்களாகிய நமது பணி அல்லவா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

யோசிக்க வேண்டியது தான்.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. தினம் ஒரு மொழி வசந்தைத் தவற விட்டுட்டேனா.. பார்த்திருக்கலாமே..

இரா. வசந்த குமார். said...

அன்பு பொன்ஸ் அவர்களுக்கு... மிக்க நன்றிகள். தங்களது உரையும் நன்றாகவஏ இருந்தது..

Boston Bala said...

இந்தத் தொகுப்புக்கு நன்றி

இரா. வசந்த குமார். said...

அன்பு பாலா சார்... தங்களுக்கும் மிக்க நன்றிகள்...