Monday, February 04, 2008

மதுரச் சிற்பம்.



ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்திருந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றன.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொன்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு பட்டு நூலாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் சிந்தித் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிறைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் இரவெல்லாம் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது. உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன் பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்.

கரில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது..! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது.

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! கோகுலத்தின் இல்லங்களின் வெண்ணெய்ப் பானைகளின் வேந்தே! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை.."

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

4 comments:

Anonymous said...

ப்படி வசந்த் இப்படி வார்த்தைகள் அருவி போல தானாக கொட்டுகிறது .வார்த்தைகள் பேனாவில் இருந்து வரவில்லை. புல்லாங்குழலில் இருந்து கொட்டுவது போல் மிகவும் இனிமையாக வுள்ளது congrats.simply superb.

இரா. வசந்த குமார். said...

அருமை அனானி... மிக்க நன்றிகள். நாம எங்கு எழுதுகிறோம்.. எல்லாம் மேலிருந்து வருகிறது.. நாம வெறும் பேனா தானே..?

Anonymous said...

வசந்த்,

//கோகுலத்தின் இல்லங்களின் வெண்ணெய்ப் பானைகளின் வேந்தே///

என்னவோ இதைப் படிச்சு ரொம்ப சிரிப்பு வந்துச்சு...:))

உங்க description & அந்தப் படம் ரொம்ப அழகு...

இப்படி படங்களுக்கு தனி தனி விவரிப்புகள் எழுதுவதைவிட, இதையே ஒரு தொடர் / கதையைப் போல எழுதலாமே?? ..சும்மா தோன்றியதை சொன்னேன்...:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை..

/*
//கோகுலத்தின் இல்லங்களின் வெண்ணெய்ப் பானைகளின் வேந்தே///

என்னவோ இதைப் படிச்சு ரொம்ப சிரிப்பு வந்துச்சு...:))
*/
ஆமாங்க.. இப்ப நீங்க சொன்னதுக்கப்புறம் பார்த்தா, அது கொஞ்சம் காமெடியாத் தான் இருக்கு...

/*
உங்க description & அந்தப் படம் ரொம்ப அழகு...
*/

இதுக்கு தனியா நன்றி தான் சொல்லணும்..

/*
இப்படி படங்களுக்கு தனி தனி விவரிப்புகள் எழுதுவதைவிட, இதையே ஒரு தொடர் / கதையைப் போல எழுதலாமே?? ..சும்மா தோன்றியதை சொன்னேன்...:)
*/

தோன்றும் போது தான் இந்த மாதிரி எழுத வருகிறது. ஏதும் ப்ளான் பண்ணி, இது போல் எழுதுவதில்லை. எனவே ஒரு தொடராக எழுத அமர்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 'இது ஒரு காதல் கதை..?' என்று ஒரு தொடர் எழுத ஆரம்பித்து, நேரமே கிடைக்காததால், அப்படியே அநியாயமாக முடிக்க வேண்டியதாய்ப் போயிற்று.. ;-((