Friday, January 23, 2009

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - எஸ்.ரா.

ப்போது நான் மெட்ரிக்கில் படித்துக் கொண்டிருந்தேன். தெளிவான கிறித்துவப் பள்ளி. டை, இன் செய்த ஷர்ட், ட்ராயர் என்று ஒரு மாதிரி துரைத்தன ஆடைகள் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ, பேச்சுப் போட்டி என்று நினைக்கிறேன். முதல் பரிசாக ஒரு புத்தகம் கொடுத்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது. காரணம், புத்தகம் சாரதா தேவி பற்றியது. இராமகிருஷ்ண மடத்தின் ஒரு முப்பது பக்க ஜூ.வி. சைஸ் புத்தகம்.

பக்கம் முழுதும் ஒரு ஓவியப்படம் இருக்கும். கிடைத்த இடைவெளியில் அந்த சம்பவம் கலந்த கதை சொல்லப்பட்டிருக்கும். இர்ண்டாம் பக்கத்திலேயே கூமார்புகூர் கிராமத்தின் ஓவியம் வரையப்பட்டு, திண்ணையில் சாரதாவின் தந்தை பூணூல் அணிந்த, தொந்தி கொண்ட, ஹுக்கா பிடிக்கும் பிராமணராகவும் அவரது மனைவி இழுத்துப் போர்த்தி உள்ளே நின்று கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்து வழிப்போக்கருடன் பேசுவதாக இருக்கும். பின்புலத்தில் வரையப்பட்டிருந்த கிராமப் படம் ஒரு வித சிலிர்ப்பான நிலையைத் தந்தது.

ஆங்காங்கே ஒற்றைப் பனை மரங்கள்; சணல் வயல்; வானில் பறக்கும் நாரைக் கூட்டப் புள்ளிகள்; மஞ்சள் தீற்றல் அடிவானம்.

இன்றும் அப்படி ஒரு பரவச நிலையைத் தருகின்றது அந்த ஓவியம்.

பக்கங்களைப் புரட்டிப் படிக்கையில், சிறு வயது சாரதா புடவையைக் கட்டிக் கொண்டு மாதா வழிபாடு செய்வதும், இள பரமஹம்ஸரையே கணவராகக் கை காட்டுவதும், நோய் வாய்ப்படும் போது நீலக்காளி மாதா அவளை ஆதுரமாய்க் கோதுவதும், முதலையை மிதித்து விடுவதும், பஞ்சம் என வந்தவர்க்கு உணவிடும் காட்சியும் நினைக்க நினைக்க பூர்வ வங்காளத்திற்கே போய் விடுவது போல் தோன்றும்.

பதேர் பாஞ்சாலியில் சிறுமி துர்காவை அதே போன்ற புடவையில் காணும் போதும், தீம் இசையைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் அதே வங்காள நினைவுகள் காரணமின்றி என்னுள் தூண்டப்படுகின்றன.

சில வாரங்களுக்கு முன் பீமப்பள்ளியில் சி.டி. கடைகளுக்குச் சென்று சில உலக சினிமாக்கள் வாங்கி வந்தேன். City of God, Irreversible, Pather Panjali, The Color of Paradise மற்றும் சில.

ரே எடுத்திருக்கும் முதல் படமான பதேர் பாஞ்சாலி (சாலையின் பாடல்) ஓர் அழகான படம். வங்காள கிராமத்தின் ஒரு குடும்ப வாழ்க்கையைச் சொல்கிறது. துர்கா மற்றும் அபுவின் பரிசுத்த அன்பின் மேல் அவர்களது நிலைமையைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் எஸ். ராமகிருஷ்ணனைப் பலமாகப் பாதித்திருக்கின்றது. படத்தின் பல கூறுகளை அனுபவித்து எழுதி இருக்கிறார் இந்நூலில்!

படத்தில் எனக்குப் பிடித்தது எல்லோரையும் போல் இரயில் காட்சி! பிறகு துர்காவுக்கும் அவளது பாட்டிக்கும் இடையிலேயான குழந்தமை உறவு, அபுவின் அக்கா மேலான காட்சிகள்...!

கண்டிப்பாக எல்லோரும், ஓர் உன்னத அனுபவம் பெற இப்படம் பார்க்க வேண்டும். பின் மறக்காமல் எஸ்.இராமகிருஷ்ணனின் இப்புத்தகத்தைப் படித்து மீண்டும் அந்த அனுபவம் பெற வேண்டும்.

Train Sequence ::



Theme Music ::



புத்தகம் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்.

புத்தக வகை : அனுபவக் குறிப்புகள்.

ஆசிரியர் : எஸ்.இராமகிருஷ்ணன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்.

விலை : 90 ரூ.

2 comments:

குப்பன்.யாஹூ said...

useful post, will try to get that book soon

இரா. வசந்த குமார். said...

Dear Kuppan_Yahoo...

Thansks. wishes to get that book..!! :)