Saturday, April 25, 2009

இராஜ விஷம் போலொரு முத்தம்.

க்ரில் கதவைத் தள்ளி திறக்கும் போது, கழுத்து சங்கிலியைத் தாண்ட முடியாத 'வள்' கேட்டது. ஆனந்த் கையை இறுக்கினேன். தோளில் தொங்கி கொண்டிருந்த பயணப் பையில் இருந்த துணிகள் அழுத்தின. வீடு கொஞ்சம் உள்ளே இருந்தது. இடைப்பட்ட பிரதேசத்தில் ஈஸி நாற்காலியில் கை வைத்த பனியன், நைட் பேண்ட்டில் சாய்ந்து படித்து கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார். மேலே, ரொம்ப மேலே இருந்து கொஞ்சம் நிலா வெளிச்சம் வந்தது. வீட்டு வாசலின் நெற்றிக்கு மேலே பாம்பு போல் வளைந்திருந்த குடைக்குள் குண்டு பல்பு ஒன்று மெல்ல கூவிக் கொண்டிருந்தது. காம்பவுண்ட் எல்லைகளை ஒட்டி கிளைத்திருந்த செடிகள் இருட்டாக இருந்தன. நேற்றைய மழையின் ஈரத்தில் உற்பத்தியான 'கொரக்..கொரக்..' சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அரை கி.மீ.யில் தள்ளி கிடக்கும் ரெயில்வே ட்ராக்குக்ள் நீளமாய் தேய்படும் ஒலிகள் கேட்டன.

"அங்கிள் நான் தான் ஆனந்த். ஸ்டீஃபன் ஃப்ரெண்ட். ஸ்டீஃபன் இருக்கானா..?" கேட்டுக் கொண்டே முன் செல்ல, தொடர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. சத்தியமான வெறுப்பு முகத்தில் 'உங்களைப் பிடிக்கவில்லை' என்று அழுத்தமாகப் பதிந்து, பத்திரிக்கையில் புதைந்தார்.

கதவு திறந்தது. ஒரு பையன் வந்தான்.

"வாடா..! உள்ள வா. இது தான் உன் கஸினா..? வா.." என்றான்.

அவன் தான் ஸ்டீஃபனாக இருக்க வேண்டும். வெளியே ஓர் ஆள் இருந்ததையோ, அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்போ இல்லாமல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டான்.

வீட்டு வாசலில் ஒரு காலடி மிதி இருந்தது. அதில் இருந்த 'welcome'ஐ மிதித்து, திரைச்சீலையை விலக்கி உள்ளே போனேன். நைட் லேம்ப் உமிழும் வெளிச்சக் கீறுகள் அறையெங்கும் வியாபித்திருந்தன. ஆங்காங்கே ஆணிகள் அடித்து இரத்தம் சொட்டும் தேவகுமாரன் படங்கள், ஆணியடித்து தொங்கின. கருணை வழியும் கண்கள் கொண்ட மேரி மாதா சிலை முன் ஒரு மெழுகு கரையலாமா, அணையலாமா என்ற யோசனையில் இருந்தது. ஒரு சோபா செட் இருந்தது. அதன் வயிற்றுக்குள்ளிருந்து தேங்காய் நார்கள் பிதுங்கி வந்து, உள் ஸ்ப்ரிங்குகளைக் காட்டின. ஜன்னல்களில் கட்டியிருந்த ஸ்க்ரீன்களில் பூக்கள் எம்ப்ராய்டரி. ஸ்டேண்ட் தலை மேல் உட்கார்ந்திருந்த டயனோரா முகத்தை ஒரு திரை மறைத்திருந்தது. அதன் மேல் ரெண்டு பக்கமும் சின்ன ப்ளாஸ்டிக் பூத் தொட்டிகள் இருக்க, நடுவில் இருந்த ஒரு ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் முதுகில் ஒரு வாலால் சாய்ந்திருந்தது. அதில் ஒரு பெண் இருந்தாள். இயல்பாய், வானம் பார்த்து சிரித்து, கண்கள் அகன்ற அற்புத கணத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு சுருள் முடி பரவியிருக்க, அதன் இடைவெளிகளுக்குள் ஒரு மச்சம்.

"இது தான் என் ரூம். இங்க வாங்க." என்று கதவைத் தள்ளி ஒற்றை அறைக்குள் அமர்த்தினான். ஒவ்வொருத்தருக்கும் ஓர் அறையா? ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

அவன் படுக்கை மேல் பிறழ்ந்திருந்த தலையணைகளோடு போட்டி போட்டுக் கொண்டு பருமனான புத்தகங்கள். ஒரு மூலையில் சுருண்டிருந்த போர்வை.

"சாப்பிட்டீங்களா..?"

"ஆச்சுடா. வீட்ல இருந்து கிளம்பும் போதே சாப்ட்டு வந்திட்டோம். நீயும் சாப்டயில்லடா..?" ஆனந்த் என்னைக் கேட்டான். தலையாட்டினேன்.

"எத்தன மணிக்கு ட்ரெய்ன் வருது..?"

"நைட் ரெண்டரைக்கு..!"

"நீ இங்க படுத்துக்கோ. நானும் ஸ்டீஃபனும் மாடில படுத்துக்கறோம். லேசா தூங்கு. நல்லா தூங்கிடாத. ரெண்டு மணிக்கு எழுந்துக்கணும். பாத்ரூம் போகணுமா?" ஆனந்த் கேட்டான். ஏதோ தயக்கத்தில் வேண்டாம் என்று தலையாட்டி விட்டேன். சொன்னவுடனே போகணும் போல் இருந்தது. எரிந்த குழல் பல்பை சட்டென நிறுத்தி விட்டு, நீல சிமிட்டியை ஏற்றி விட்டு, கதவை சாத்தி அகன்றார்கள்.

எழுந்து வெளியே நோக்கும் ஜன்னல் வழியாக பார்க்க, அவர்கள் இருவரும் வெளிக்கதவைத் திறந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. நிச்சயம் சிகரெட்.

படுக்கையில் படுத்துக் கொண்டு போர்வையால் கண்கள் தவிர்த்து மூடிக் கொண்டு அறையைப் பார்த்தேன். அலமாரியில் புத்தகங்கள். ஏராளம். ஏராளம். கண்ணாடிக் கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருந்தன. டேபிள் லேம்ப் ஒன்று இருந்தது. டேபிள் மேல் தலைகீழாக கவிழ்ந்திருந்த புத்தகம். பென்சில்கள். பேனாக்கள். சுவரில் ஒரு பெண் அழுத்தமான முதுகு காட்டி இடுப்பு வரை ஓவியமாய் நின்றாள். அவள் கைகள் அவசியம் இல்லாமல் முன்பக்கம் மறைக்க முயன்றிருந்தன. அவள் மெல்லத் திரும்பி கண்ணசைத்தது போல் இருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சட்டென போட்டோவில் பார்த்த பெண் யாராய் இருக்கும் என்று தோன்றியது. ஸ்டீஃபன் தங்கையாக இருக்கக் கூடும். மூக்குகள் கூர்மை, 'ஆம்' என்றது. எங்கே அவள்..?

இப்போது வீட்டில் நானும், அந்த வெட்டவெளிக் கிழவரும், ஒரு நாயும், கொஞ்சம் பொருட்களும், துடிக்கும் அஜந்தா வால் க்ளாக்கும், வெகுவாய் அமைதியும் மட்டும் இருக்கின்றோம் என நினைத்தேன்.

இல்லை.

மூன்று மணி நேரத்தில் சனிக்கிழமை திறக்கிறது. கிழக்கில் விடியல் கோடுகள் விழும் போது கோவை சென்றிருக்க வேண்டும். அங்கே தலை வால் மாற்றப்பட்டு, திசை மாறி ஓடும் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் காலை மேட்டுப்பாளையம் சேர்ந்திருக்க வேண்டும். பின்னிரவு ரெண்டரைக்கு ஈரோடு ஜங்ஷன் வரும். ஊரிலிருந்து அப்போது கிளம்புவது பஸ்ஸின்மையால் அசாத்தியம். எனவே இரவு ரயில் நிலைய ஒதுக்குப்புறத்தில் சிதறியிருக்கும் பல வீடுகளில், ஒன்றில் இருக்கும் தன் நண்பன் வீட்டில் இராத்தங்கி விட்டு, நேரமாய்ப் பிடிக்கலாம் என்ற திட்டம், ஆனந்துடையது. நானும் ஒட்டிக் கொண்டேன்.

பாத்ரூம் போக வேண்டும் போலவே இருந்தது. கதவைத் தாழ்ப்போட்டு போனார்களா என்று தெரியவில்லை. இழுத்துப் பார்க்கலாமா? மெல்ல தூக்கம் வந்தது. தொலை தூரத்தில் இருந்து ஊளைகள் கேட்டன. தெரு நாய்களாக இருக்கும். இறங்கி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க வெளிக்கிழவரைக் காணவில்லை. ஈஸி நாற்காலியில் அந்த பத்திரிக்கை காற்றில் அலையடித்தது. எங்கே போயிருப்பார் கிழவர்? வாசலின் குண்டு பல்பு தெளித்த வெளிச்ச வட்டம் குறைவான எல்லைக்குள் குறுகி விட, தெரு விளக்குகள் கொஞ்சம் கொஞ்சம் பொட்டு வைத்த பூஞ்சை ஒளித் துளிகள் தவிர்த்து, மிச்சம் முழுதும் இருள் இராஜ தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

சட்டென மின் செத்துப் போக, கறுப்பு பாய்ந்து வந்து கவ்விக் கொண்டது. லேசாக காற்று விசிறியடித்துக் கொண்டிருந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டேன். ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் உருளத் தொடங்கியது. காதுகள் மேல் ரீங்கார கொசுக்கள். கழுத்தோரம் நசநசத்தது. தூங்கலாமா, வேண்டாமா? கொஞ்ச நேரத்தில் பழகிப் போன கருமைக்குள் கடிகாரம் காண, உச்ச இணைவுக்கு பெரிய நீளமான முள் அழகிய சின்ன முள்ளை நிமிடக்கணக்கில் நெருங்கிக் கொண்டிருந்தது.

அறைக்கதவு லேசாகத் திறக்கும் சத்தம் கேட்டது. திடுக்..திடுக்.. நெஞ்சோடு, கதவின் சின்ன இடைவெளியில் கசிந்த நிலவொளியைப் பார்த்தேன்.

ஒரு பெண். அடையாளங்கள் உறுதிப்படுத்தின. கட்டிலின் அருகில் வந்து நின்றாள். ஜரிகை நனைத்த தேன் போல் ஒரு சுகந்த வாசம் அவளைச் சுற்றி மிதந்தது. நுரையீரல்கள் பெருக்க பெருக்க உள்ளுறிஞ்சிக் கொண்டேன். உற்றுப் பார்த்தாள். அசையவேயில்லை நான். இறுக்கி பிடித்துக் கொண்ட பொம்மை போல். மூலையில் ஒண்டியிருந்த நெடும் பீரோ காதைப் பிடித்துத் திருகி, திறந்து என்னென்னவோ எடுத்து, கையோடு கொண்டு வந்த பெட்டியில் அடுக்கினாள். அவ்வப்போது சிணுங்கும் சத்தம் வந்தால், என்னை பார்ப்பாள். மூச்சு விடவில்லையே நான்!

பீரோவை மூடி, பெட்டியைப் பூட்டி எடுத்து விலகிச் சென்று... இல்லை, திரும்ப வந்தாள். கட்டில் நுனியில் மெல்ல அமர்ந்து, என் முகத்தை நெருங்கினாள். முகத்தில் குபுகுபுவென்று பொங்கிக் கொண்டே வந்தது வியர்வை. இதயத்துடிப்பு தடதடவென்றானது. ட்ராக்கில் கடந்த ரயில் சத்தம் போல்.

மெல்ல போர்வையை விலக்கி, என் முகத்தை நெ..ரு..ங்..கி...ஓர் ஆழ்ந்த முத்தமிட்டாள், உதடுகளில்...!!

when i was young
we did it again

when i was young
we did it again

when i was younger
you did it first

then,

i keep you in the hall
you keep me on the wall

you come near
i come near
we come out of fear

you catch my hips,
then
you smooch my lips

you smooch my lips
you smooch my lips

we search of what thro tongues
omg, i fly by waving wings

i hear your heartbeat
you feel my heart

you pour your words in mine
i swallow them as shivering wine

i fill in yours my heat
you burn as you are meat

i smooch your lips
i smooch your lips

the sugaratic smell and taste, hmmm...
gimme now gimme now, i sure have rum

why we close eyes like mouths, baby
returning from moon, its our hobby

heaven, heaven..where are you
here, here... i am in you

oh... for me the time stopped and i feel eternity
perhaps, einstein may tell, i travel in light velocity

you smooch my lips
i smooch your lips
you and i smooch our lips
like, we have none except lips

when depart, a 'cling' sound in my throat
the shyness returns and i land by my foot

still your hands on my hips like you dont want to miss
as i want, i need, i like, i love like this, a STRONG kiss.

திருப்பூர் தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது ப்ளூமவுண்டன். ரிசர்வ்ட் கோச்சுகள் இருட்டாய் இருக்க, எல்லைகளில் மட்டும் துவாரபாலகர்கள் போல் சிறைப்பட்ட வெளிச்சங்கள். திசைக்கொன்றாய் திரும்பியிருந்த காற்றாடிகள் யாருக்கோ காற்று தந்தன. ஒன்றின் மேல் செருப்புகள். ஜன்னல்கள் வழி காட்சிகள் வேகமாய் மாறிக் கொண்டிருந்தன. மிடில் பெர்த்தில் போர்வை இழுத்துப் போர்த்தியிருந்த பெண்ணின் கால்களின் கொலுசுகள் மட்டும் மறைய முடியாமல், மினுமினுத்தன. கீழே செருப்புகள் ரேண்டம் கோணங்களில் திரும்பியிருந்தன. லேசான குறட்டை 'கொர்' எங்கிருந்தோ கிளம்பி வந்தது. ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. 'கூஊஊஊ..........' நீளப் பிளிறல் ஒலித்த ரயிலின் சத்தம் தீண்டாத நினைப்பில் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த எனக்குள் இரண்டு கேள்விகள் மிச்சம் இருந்தன.

யார்..? யாருக்கான முத்தம் அது..?

No comments: