Wednesday, September 02, 2009

காமக் கடும்புனல். (A)



வ்வருட ஈரோடு நூல் அழகத்தில் வாங்கிய ஒன்று மகுடேசுவரனின் 'காமக் கடும்புனல்'. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணியாற்றுவதாகப் பின்னட்டை மடிப்பு சொல்கிறது. நாஞ்சில்நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

காமஞ் சான்ற பெருமகன் அல்லன்

அதன் நுண்ணியல் கலைகளில்
வல்லானும் அல்லன்

தனித்திருக்கும் எளிய கோழை
இக்கவிதைகளின் ஆசிரியன்

என்று சொல்லித் தப்பித்து துவங்குகின்ற இந்நூலின் அத்தனை கவிதைகளும் பாடுவது காமம் என்ற மெல்லிய ஓர் உணர்வு பற்றி. அது ஆக்ரமிக்கும் தனித்திருப்பவனின் மனதின், உடலின் வெக்கைகள் பற்றி; அது எழும் போது கட்டவிழ்த்துப் பாயும் பெரும் திராவக வெறி பற்றி; அது படர்வதில் துடிக்கின்ற இளமை பற்றி; அது மெல்ல மெல்ல விழித்து, கை கால்கள் நீட்டி, ஊளை இட்டு, கூச்சல் போடத் துவங்கி, வேகம் உணர்ந்து எழுந்து, துடித்து, கர்ஜித்து சக்தியையெல்லாம் திசையெங்கும் வெள்ளமென விசிறியடித்துப் பிறகு தளர்ந்து, அடங்கி, சுருண்டு அப்புறம் மெல்ல தூங்கப் போகும் அடிப்படை முயங்கலைச் சொல்கின்றன.

காமக் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
நீணாக நறுத்தண்டார் தயங்கப்பாய்த் தருளினாற்
பூணாக முறந்தழீஇப் போததற்கான் அக கைலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே
அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை பிண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இருலென ஏணி இழைத்திருக்குங்
கானகல் நாடன் மகன்!

என்ற குறிஞ்சிக் கலி 36-வது பாடலின் தலை வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டுள்ள இந்நூல் இத்தனை சிரமமாக இல்லாமல் எளிமையாகக் கேட்கிறது ::

வாய்யா வா
வரலாற்றறிஞரே வா

சரித்திரத்தின்
பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு

போர்க்களத்தில் வென்ற படை
தோற்ற தேசத்து மகளிரை
என்ன செய்தது?

*

ஒவ்வொரு முறையும்
வெளியேற்றப்படுகிறாய்
வைபவத்திற்கு முன்பாகவே

தளரா நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும் நுழைகிறாய்
விசேஷ அமுதைப் பருகும் வெறியில்

முன்னதாகப் போய்விடுகிறாய்
அல்லது தாமதித்துவிடுகிறாய்

எப்படியாவது
ராஜாவைக் கண்டுவிடு

அன்று
ராஜபோஜனம்தான்

சில, சமூக வழக்கில் வெகு பச்சையென சொல்லப்படும், ஆனால் அந்தரங்கத்தில் மிக மிக நெருக்கமானச் சிலவற்றைச் சொல்கின்றன.

மாணவர் விடுதி
திரைப் பெண்டிர் சுவரொட்டி

மங்கையர் விடுதி
வெள்ளரி முள்ளங்கி கத்தரி

*

மகளுக்குச் சிறு வயது
வந்திருப்பதும் தகுதி குறைந்த வரன்

மணம் முடித்துவிடவே
தீர்மானிக்கிறாள் தாய்

இரவில் உறங்காது புரளும் மகள்
போர்வைக்குள்
விரலால் நிரடிக் கொண்டிருப்பது
தெரிந்த பிறகு

*

பிரம்மச்சரிய அறை
மிட்நைட் மசாலா

எழுகுறி நோக்கிக்
கடிது விரையுது
உடையவர் கை

*

வியர்த்துப் போன முகங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவ்வப்போது தரையிறங்குகிறார்.

ஆருலே அது
என்ற காட்டுல உட்கார்றவ

சொக்கியா
செரிசெரி
பொறவு
சோளக்கொல்லைப் பக்கம்
வா

அவ்வப்போது கவிஞனுக்கேயுரிய சமூகக் கோபங்கள் தவிர்க்கவேயியலாமல் வந்து விடுவது எதிர்பார்க்காத முத்தங்கள்.

கவனித்திருக்கிறேன்

பெண்ணாசையால்
மிதமிஞ்சி ஆடியவர்கள்

பெண்தயவில்
மலஜலம் கழிக்க நேர்ந்ததை.

கோபம் வரச் செய்தது ஒரே ஒரு கவிதை.

பொதுத் தொலைபேசியகம்

அமர்ந்திருந்தவள்
பொது மகள் போலிருந்தாள்

அணுகி
'எவ்வளவு?' என்றேன்

'ஒரு தடவை பண்ணா
ஒண்ணே கால் ரூபா'

மிக மலிவாகத் தோன்றியது
எனக்கு

கடைசிக் கவிதை ஒன்றில் சரணடைந்து விடுகிறார்.

ஆசனத்தில்
சீழ் வடியும் புண்களுடன்
படுத்த படுக்கையாய் இருந்தேன்

செவிலிப்பெண் ஒருத்தியின்
கண் துஞ்சாத
கழிவு கண்டு முகம் சுளியாத
சேவகத்தால் நலமுற்றேன்

பெண்மையின் உயர்பொருளை
அன்று புரிந்துணர்ந்தேன்

இக்கவிதைகளை
அவளிடம் மறைக்க விரும்புகிறேன்.

களிப்பேருவகை(A)யில் பதுங்கிப் பதுங்கி எழுதும் எனக்கு, காமக் கடும்புனலின் துளிகள் பாக்கெட்டில் கல்கண்டுகள் போல் இனிக்கின்றன.

புத்தகம் : காமக் கடும்புனல்

புத்தக வகை : கவிதைகள்.

ஆசிரியர் : மகுடேசுவரன்.

கிடைக்குமிடம் : United Writers, 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 86.

பதிப்பகம் : United Writers.

விலை : 100 ரூ.

4 comments:

thamizhparavai said...

கலக்கல் கவிதைகள்..உங்கள் பார்வையும் பட்டும்படாமல் விமர்சித்தவிதமும் அழகு...
படிக்க வேண்டிய நூல்தான் போல...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல தொகுப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். முடிந்தால் இத்தொடுப்பைப் பாருங்கள்.

http://puththakam.blogspot.com/2007/03/19.html

-ப்ரியமுடன்
சேரல்

Karthik said...

செம விமர்சனம். :))

இந்த புக்க பிரேம் எனக்கு போனவருட சென்னை புக் பேர்ல காட்டினார். பார்க்க அழகாயிருந்தது. படிக்கவும் நல்லா இருக்கும் போல. :)

Karthik said...

செம விமர்சனம். :))

இந்த புக்க பிரேம் எனக்கு போனவருட சென்னை புக் பேர்ல காட்டினார். பார்க்க அழகாயிருந்தது. படிக்கவும் நல்லா இருக்கும் போல. :)